Friday 31 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 4

கேள்வி: குரங்கிற்கு அறிவு வளர்ந்து மனிதன் ஆவது தானே பரிணாம வளர்ச்சி? (அ) பரிணாம வளர்ச்சி என்பது ஒரு உயிரினம் தன்னை அறிவிலோ உடலமைப்பிலோ மேம்படுத்திக் கொள்வது தானே?
பதில்: பரிணாமக் கொள்கையைப் பற்றிய மிகத்தவறான புரிதல்களுள் இதுவும் ஒன்று. குரங்குகளுக்கும் நமக்கும் உள்ள அறிவு வேறுபாட்டிற்குக் காரணம் நாம் பரிணமித்து மேம்பட்டவர்கள் ஆகிவிட்டோம் என்பதல்ல, அவையும் நாமும் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு விதமாகக் கிளைத்துச் சென்றுவிட்டோம் என்பது மட்டுமே.
பரிணாம வளர்ச்சி என்பது நாம் மேம்பட்ட உயிர்கள் என்று கருதக்கூடியவற்றை உருவாக்குவதை நோக்கியே என்பது தவறான புரிதல்.
பரிணாம வளர்ச்சி என்பது எப்போதுமே சிக்கலான உடலமைப்பைக் கொண்ட உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ அறிவில் தேர்ந்த உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ நகர்வது அல்ல. அறிவுள்ளவை பிழைக்கும்; வலியவை பிழைக்கும்; திறமையானவை பிழைக்கும்; என்றெல்லாம் இல்லை. தக்கது தான் பிழைக்கும். அதாவது புறச்சூழலுக்கு எந்த உயிரினத்தால் தாக்குக் கொடுக்க முடிகிறதோ, இனப்பெருக்கம் செய்து தன் வாரிசுகளை விட்டுச் செல்ல முடிகிறதோ அவற்றால் மட்டுமே பிழைக்க முடியும்.
"கண்ணில்லாத உயிரனத்திற்கு கண் கிடைப்பதும், மூளையில்லா உயிரனத்திற்கு மூளை வளர்வதும் தானே பரிணாம வளர்ச்சி" என்று நம்புவீர்களானால் அது மிகவும் தவறு. குகைமீன்கள் (Cavefish) பரிணாம வளர்ச்சியின் போது தங்களது கண்களை இழந்துவிட்டன. காரணம் இருட்டில் அவற்றிற்கு கண்களால் எந்தப் பலனும் இல்லை. அதே போல நிறமிகளையும் இழந்துள்ளன. இருட்டில் கண்களுக்கும் நிறமிகளுக்கும் வேலையில்லாத போது அவற்றால் நன்மைகள் எதுவும் இல்லை, மாறாக அவற்றால் ஆற்றல் தான் விரயமாகும். உணவுத் தட்டுப்பாடு உள்ள ஓரிடத்தில் ஆற்றலை விரயமாக்கும் சிக்கலான உடலுறுப்புகளை இழக்கும் உயிரினங்களே பிழைக்கும் நெருக்கடி இருப்பது தான் அம்மீன்கள் கண்களையும் நிறமிகளையும் இன்னும் சிலவற்றையும் இழந்ததற்குக் காரணம்.
சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு உயிரனத்திற்குப் போட்டியோ தேர்வழுத்தமோ குறைந்திருக்கும் காலத்தில் தான் அது சிக்கலான அதிக ஆற்றல் எடுக்கும் மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என்று கருதுகிறார்கள். அந்த உயிரனத்திற்குத் தீங்காக அமையக் கூடிய அல்லது பயன் தராத சில சடுதி மாற்றங்கள் களையப்படாமல் பரவ வாய்ப்பு அதிகம். அப்படிப் பரவி அந்த உயிரனத்தின் உடலமைப்பையும் செயற்பாட்டையும் சிக்கலாக்கலாம் (மனிதர்களின் கண்ணுக்கு இந்த complexity மேம்பாடாகத் தெரியலாம்).
ஆனால் தேர்வழுத்தம் அதிகமாக இருக்கும் காலத்தில் இது போன்ற வேண்டாத சடுதி மாற்றங்கள் களையப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் எளிமையை நோக்கி ஒரு உயிரினம் பயணிக்கும் வாய்ப்பதிகம்.
இதையும் பார்க்கலாம். உணவுப் போட்டியும்  இரையாடிகளின் அச்சுறுத்தலும் குறைந்த பப்புவா நியூ கிணா தீவில் வாழும் பறவைகள் இணையை ஈர்க்க மட்டுமே பயன்படும் உடலமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் பலவற்றைக் கொண்டுள்ளன. இதை மேலே சொன்ன மீன்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புலப்படும்.
மனிதர்கள் மேம்பாடு என்று எதைக் கருதுகிறார்களோ அதை நோக்கி பரிணாம வளர்ச்சி பயணிப்பதில்லை. இந்தப் புரிதல் சரியாக இல்லாத காரணத்தால் தான் 'இன்றைய குரங்கிலிருந்து மேம்பட்ட version தான் மனிதர்கள். இன்றைய குரங்குகள் பரிணமிப்பதை நிறுத்திவிட்டன, பரிணமித்தவை மனிதர்களாகிவிட்டனர்' போன்ற சில தவறான கருத்துகள் நிலவுகின்றன.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

No comments:

Post a Comment