Sunday 8 September 2013

தமிழர்களுக்கு ஏன் "last name/sur name" இல்லை ?

தமிழர்களுக்கு ஏன் "last name/sur name" என்று சொல்லப்படும் குடும்ப பெயர் இல்லை ? ஒவ்வொரு முறை படிவம் நிரப்பும் போதும் எனக்கு எரிச்சல் வரும். சுபாஷினி, இவ்வளவு தான் என் பெயர். இதில் middle name, last name எல்லாம் கேட்டால் எங்கு போவது?  இல்லாத ஒன்றை எப்படி சேர்ப்பது? அந்த இடத்தை நிரப்பாமலும் விட முடியாது. அதற்காக என் அப்பாவின் பெயரை பின் சேர்த்துக் கொண்டேன்.

எனக்கு மட்டும் இல்லை. பெரும்பாலான தமிழர்களுக்கு இதே நிலை தான். இதற்குக் காரணம் என்ன. இந்த குடும்பப் பெயர் சேர்க்கும் வழக்கம் நம் மொழியில் இல்லை. பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் தான் இருந்திருக்கிறது. இன்னாரின் மகன் இன்னார் என்று தான் சொல்லியிருக்கின்றனர். உப்பூரி குடி கிழான் மகனார் உரித்திரசன்மர், மதுரைத் தமிழாசிரியர் மகனார் பூதஞ்சேந்தனார் (இதில் பூதம் தந்தை பெயர்), பெருங்கோழி நாய்க்கன் மகள் நக்கண்ணை. ஆக பெற்றோர் பெயரை தன் பெயருக்கு முன் சேர்த்து அவர்களுக்கு மரியாதை கொடுக்கும் வழக்கு தான் இருந்திருக்கிறது. அரசர்கள் பட்டத்திற்கு வரும் போது தங்கள் பெயரோடு தங்கள் அரச வம்சத்தின் பெயரை சேர்த்திருக்கின்றனர். இப்படி பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் பதினெட்டாம் நூற்றாண்டிலும் இருந்திருக்கிறது. அன்று எழுதப்பட்ட ஆவணங்களிலும் தந்தை அவரின் தந்தை என பெயர்களை முன் சேர்த்தே எழுதியுள்ளனர். சமீபத்தில் கூட ஒருவர் மறுபதிவு ஒன்றில் "என் பெயருக்கு முன்னால் உள்ள எழுத்துக்கள் என் குடும்பத்தின் நூறாண்டு வரலாற்றைக் குறிக்கும்" என்று சொன்னார், இப்படி பெற்றோர் பெயரை முன் சேர்க்கும் வழக்கம் இப்பொழுதும் இருக்கிறது என்பது அவர் வாயிலாக அறியலாம்.
தங்கள் சாதிப் பெயரை பின் சேர்க்கும் வழக்கும் பிற்கால வட மொழி ஆதிக்கத்திலிருந்த வந்திருக்க வேண்டும். எனினும் அதை குடும்பப் பெயர் எனக் கொள்ள முடியாது.
முன் என் அப்பா பெயரை சேர்க்காமல், எழுத்தை மட்டும் சேர்த்து, பின்னர் அதையும் பின்னால் இட்டு, இப்பொழுது இந்த உலகமயமாக்கலால் அப்பா பெயரை பின் சேர்த்தது வேதனையாகத் தான் உள்ளது.

Thursday 22 August 2013

சிலம்பு கழி நோன்பு

ஒரு பையனும் பொண்ணும் வீட்டு விட்டு ஓடிப் போறாங்க... இப்பவா இருந்த அத பார்க்கறவங்க அரசியல் பிரச்சனை ஆக்கி இருப்பாங்க.
ஆனா சங்க காலத்தில அவங்க படும் துயரத்த பார்த்து பரிதாப பட்டுருக்காங்க.

"வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னி யோரே."

குறுந்தொகை பாடல்-7, பெரும்பதுமனார், பாலை திணை- கண்டோர் சொன்னது.

(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)

விளக்கம்:
வாகை மரங்களின் நெற்றுகள் (முதிர்ந்து காய்ந்த காய்) நிறைந்தது அந்தப் பாலைப் பகுதி. அதிலே நடக்கும் போது அந்த நெற்றுகள் உடைந்து சத்தம் எழுப்புகின்றன. அந்த ஒலியானது ஆரியக் கூத்து ஆடுபவர்கள் கயிற்றின் மீது நடக்கும் போது அடிக்கும் பறையைப் போன்று இருக்கிறது.
அந்தப் பகுதியிலே தலைவி தலைவனுடன் உடன் போக்கு மேற்கொள்கிறாள். ஆனால் அவர்கள் இருவருக்கும் மணம் ஆகவில்லை. அதனைத் தலைவி பெற்றோர் தனக்கு அணிவித்த காற்சிலம்பைக் கழற்றாமலேயே இருக்கிறாள் என்பதைக் கொண்டே பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். தலைவனோ வில்லை உடைய வீரக் கழல் அணிந்த ஆண்மகன், தலைவியோ மென்மையான அடி எடுத்து நடப்பவள். அவளால் அந்த பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும்??? அவர்களைப் பார்த்த நல்லோர் (முக பாவங்களைக் கொண்டு அவர்கள் படும் துயரை அறியக்கூடியவர்கள்) இந்த இருவரும் யாரோ என்று இரங்குகின்றனர்.

பின் குறிப்பு:

மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லி னெவனோ... பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’ (ஐங்.311) என்பதனால் அந் நோன்பு மணத்திற்கு முன்பு செய்யப்படும் என்று தெரிகின்றது.
ஆரியர்-ஆரிய நாட்டில் உள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும்கூத்து ஆரியக் கூத்து எனப்படும்; 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்’ என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்; விலக்குறுப்பின் வகையாகிய பதினான்கனுள் ஒன்றாகிய சேதமென்பது இரு வகைத்தென்பதும் அவ்விரண்டினுள் ஆரியக் கூத்து ஒன்று என்பதும் சிலப்பதிகார உரையால் அறிந்த செய்திகள்; "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்’’ (சிலப்.3:12-25,அடியார். மேற்.) அக்கூத்தர் கழையை நட்டுக் கயிறு கட்டி அக்கயிற்றின் மேல் ஆடுவர். "ஆடியற் பாணிக்கொக்கு மாரிய வமிழ்தப் பாடற், கோடியர்’’ (கம்ப. கார்காலப்.33) என்று கம்பரும் இக் கூத்தரைப் பற்றிக் கூறியுள்ளார்.

உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன் என்பவனது கையில் இருந்த வில் முதலியவற்றைப் பெற்றுச் சென்றானென்றும்,பின் தன்னை வளைத்த சவரர் புளிஞரை அவற்றால் வென்றான் என்றும்பெருங்கதையிற் காணப்படும் செய்தி இங்கே அறியற்பாலது. கழல,் வீரத்திற்கும் வென்றிக்கும் தனித்தனியே கட்டப்பட்டனவாதலின் காலனவென்று பன்மையாற் கூறினார்; போர்தோறும் வென்று கட்டின என்பது மாம்; “காலன புனைகழல்” (புறநா. 100:1, விசேடவுரை); " கெழுதகையம்பர் கிழவோன் சேந்தனில், விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய, கழலே யாடவர் கான்மிசை யணிவடம்’’ என்பது திவாகரமாதலின், கொடையின்பொருட்டும் வீரத்தின் பொருட்டும் புனைந்த கழல்கள் என்றலுமாம்.

சொற்பொருள் விளக்கம்
வில்லோன்-வில்லையுயை தலைவன், காலன கழலே- காலில் அணிந்துள்ளது கழல், தொடியோள்- தொடியணிந்த பெண், மெல்லடி – மென்மையான, மேலவும் சிலம்பே - மேலே இருப்பது சிலம்பு, நல்லோர் – நல்லவராய் இருப்போர், யார்கொல் – யாரோ? அளியர் தாமே – இரங்கத்தக்கவர்களே, ஆரியர்-ஆரியர், கயிறாடு பறையில்- கயிற்றில் ஆடுகின்றபோது அடிக்கின்ற பறைபோல, கால்பொரக் கலங்கி – காற்று அலைப்ப நிலை கலங்கி, வாகை வெண் நெற்று – வாகை மரத்தின் வெண்மையான நெற்று, ஒலிக்கும் – ஒலி எழுப்பும், வேய்பயில் - மூங்கில்கள் நெருங்கிய, அழுவம் – பாலைநிலம், முன்னியோரே – முற்பட்டு எழுந்தோர்.

Monday 19 August 2013

Mahabharatha vs LOTR

மஹாபாரதப் போர் முடிந்ததும் தர்மர் ஒரு நாள் நகர்வலம் போனாராம். அப்ப ஒரு விவசாயி அவரோட கலப்பையை பத்திரம வீட்டுக்குள்ள எடுத்து வச்சத பார்த்து "இது என்ன டா புது பழக்கமா இருக்கே, இவ்வளவு நாளும் மக்கள் யாரும் இப்படி செய்யலயே" அப்படினு நினைச்சுட்டே விவசாயி கிட்ட காரணம் கேட்டாராம். திருடர்கள் பயம்னு அவர் சொன்னத கேட்டு தர்மருக்கு வியப்பு. இதே போல பல இடத்துல மக்கள் தங்கள் பொருட்களையெல்லாம் என்னைக்கும் இல்லாம இப்ப பாதுகாக்கறத பார்த்து அவருக்கு கலியுகம் ஆரம்பம் ஆகிடுச்சு. இனி நாம, தேவர்கள் எல்லாம் இங்கு வாழ முடியாது, சொர்க்கதுக்கு போயிடனும்னு முடிவு செய்து எல்லாரும் கிளம்பிட்டாங்க. இது சின்ன வயதில் நான் படித்த மஹாபாரத துணைக் கதைகளில் ஒன்று.

After the War of the Rings the Frodo accompanied by Bilbo, Gandalf and Elves sails from the Grey Havens west over the Sea to the Undying Lands leaving the middle earth for men... and thus ends the Third age of Middle earth..
I couldnt stop wondering about the similarities between the stories..

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தருமம் மறுபடி வெல்லும்.... வென்றுவிட்டு அமைதி தேடி வேறு இடம் செல்லும்... 

Sunday 18 August 2013

தாராசுரம் கோவில் புகைப்படங்கள்...
















தாராசுரம் கோயிலின் சுற்று மண்டபத்தில் அமைந்த ஒரு படிக்கட்டில் அமைந்த சிற்பம் இது. ஒரு சிங்கம் யானையை விழுங்குவது போன்ற காட்சி. யானையை கொல்லும் அளவு பெரிய சிங்கமா?? ஒருவேளை வள்ளுவர் சொன்ன
"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்."
என்னும் குறளில் வரும் புலியைப் போல ஊக்கமுடைய அரிமாவாக இருக்கும். இந்த சிற்பம் அமைத்த காரணம் அதன் அடிப்படையில் அமைந்த சாராம்சம் எல்லாம் மறைந்தே போய்விட்டது. Dan Brown புதினங்களில் வரும் Robert Langdon போன்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து அதன் காரண காரியங்களைத் தேடிக் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இருந்தும் ஒரு நான்கு படி கொண்ட படிக்கட்டின் கைபிடியில் எவ்வளவு நேர்த்தியான சிற்பம். ஆனால் சிற்பங்கள் எல்லாமே சற்று சிதிலமடைந்து தான் காணப்படுகின்றன. சிதிலமடைந்த நிலையிலேயே இவ்வளவு அழகாக இருக்கும் போதும், செதுக்கிய ஆண்டில் பார்க்கக் கண் கோடி தேவைப்பட்டிருக்கும்.



Saturday 17 August 2013

தமிழ் மொழி பற்றி அறிஞர் பெருமக்களின் கருத்து.

முன் குறிப்பு:
பதிவு முழுவதையும் படியுங்கள். இதில் தமிழ் மொழி பற்றி பல அறிஞர்கள் கூறியது. நம் தமிழின் பழமை கண்டு பெருமை கண்டு கர்வம் கொள்ள வேண்டியது. இதில் தனிப்பட்ட எங்கள் கருத்து எதுவும் இல்லை. பெருமக்கள் சொன்னதன் தொகுப்பே இது. இந்தப் பதிவைக் கற்பனை சோடித்து பூதமாக்கி கடலில் இருந்து தமிழைக் கண்டெடுத்தேன் என்று கட்டுக்கதைகளை விட வேண்டாம்.  உள்ளதை உள்ளபடி உள்ளம் உவந்து உண்மையைப் பிறர்க்குப் பகிர்வோம்.

தமிழைப் பற்றிய பிற மொழியார் கருத்துக்கள்:


Tamil in its poetical form is more polished and exact than Greek and in both dialects with its borrowed treasure, more copious than Latin. - Dr.Winslow

Tamil Language is extraordinary in its subtlety and sense of Logic. - Dr.G.Slater

No human speech is more close and philosophic in its expression as an exponent of the mind than Tamil. - Perceival

The mode of callocating Tamil’s words follows the logical or intellectual order, more so than even Latin or Sanskrit. - Dr.Schmidt

In one department, at least, that of ethical epigrams Sanskrit has been outdone by Tamil. - Dr.Coldwell

Tamil is perhaps the only example of an ancient classical tongue, which has survived as a spoken language for more than 2500 years, with its basic structure, almost unchanged. - Encyclopedia Brittanica.

Tamil has been described as "the only language of contemporary India which is recognizably continuous with a classical past" and having "one of the richest literatures in the world". Tamil literature has existed for over 2000 years. The earliest epigraphic records found on rock edicts and hero stones date from around the 3rd century BCE. - Wikipedia

தமிழ்மொழி பற்றித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களில் சிலவும் தமிழறிஞர் சிலரின் கருத்துக்களும் கீழே காண்க:

என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்! - பெரியபுராணம்.

நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்! – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?
– திருவிளையாடற் புராணம்

கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்? - மதுரைக் கலம்பகம்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன். - தமிழ்விடு தூது.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ். - தண்டியலங்காரம்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
- மனோன்மணீயம்

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் - புறநானூறு

ஆடல் பாடல் இசையே தமிழே - சிலப்பதிகாரம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்! - பாரதியார் பாடல்கள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்! – பாவேந்தர் பாடல்கள்

தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும்… தமிழ் வடக்கே போய் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறியது. அந்த ஆரியத்திலே ஒருபகுதியினர் கிரேக்கத்திற்கு இனமான ஒருமொழி பேசிய ஒருதொகுதி ஆரியர் இந்தியாவிற்கு வந்தனர். - தேவநேயப்பாவாணர்

தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும். – பி.டி. சீனிவாசஅய்யங்கார்

இங்கிருந்து (பழந் தமிழகத்திலிருந்து) போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள். – இராமச்சந்திரதீட்சிதர்.


தமிழ் மொழி வரலாறு பற்றிக் கூறும் நூல்கள்:

(நன்றி: மொழியும் இனமும் - முனைவர் மலையமான்)

‘தமிழகம் மக்கள் இனத்தின் தொட்டில்’ என்று செருமானிய அறிஞர் எக்கல் கூறியுள்ளார்.
1913-இல் தமிழ் உலகின் முதன்மொழி என்ற கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்திகேயனார் கூறினார்.
1920-ஆம் ஆண்டளவில் இதே கருத்தை அறிஞர் கா.சுப்பிரமணியனார் மொழிநூல் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் என்ற நூலில் கூறினார்.
1930-40ஆம் ஆண்டுகளில் ஈழத்து நல்லூர் ஞானப்பிரகாச அடிகளார், ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என்ற நூலில் இந்த உண்மையை அறிவித்துள்ளார்.

ஞால முதல்மொழி ஒன்றிருந்தது என்று ‘மாரிசு சுவாதசு’- Origin and Development of Language -என்ற நூலில் கூறினார்.
இதையே ‘கிரீன் பெர்கு’, ‘மெர்ரிட்ருகுலன்’ ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
அந்த மூலமொழி தமிழ் என்று தேவநேயப்பாவாணர் தம் ஆய்வு நூலான Primary Classical Language of the World –இல் கூறினார்.
அறிஞர் இளங்குமரனார், மதிவாணன் போன்ற இக்கால ஆய்வாளர் பலரும் தமிழே உலகின் முதன்மொழி என்கின்றனர்.

‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலில் ஆபிரகாம் பண்டிதர், தமிழே உலக மொழிகளின் தாய் என்றார்.
மயோரிகளின் மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை மவ்லானாவும், பி.இராமநாதனும் கண்டு கூறினர்.
சுமத்ராவில் காரோபட்கு இனத்தவரின் மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன.
கொரியா-திராவிடமொழி ஒப்பாய்வு நடத்திய எச்.பி.கூபர் என்பவர் கொரிய மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று கூறினார்.

தமிழுக்கும் சீனமொழிக்கும் தொடர்புள்ளது என்று மாகறல் கார்த்திகேயனார் கூறியதை கடிகாசலம் நிறுவியுள்ளார்.
சப்பான் நாட்டு ‘கடகானா’ எழுத்துமுறை தமிழிலிருந்து பெறப்பட்டது என்று தி.நா.சுப்பிரமணியம் என்ற ஆய்வாளர் (கலைமகள் இதழில்) தெரிவித்தார்.
சப்பான் மொழியில் 500க்கும் மேல் தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சுசுமுஓனோவும் பொற்கோவும் இணைந்தாய்ந்து கூறினர்.
வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கணா நாட்டுக் கணா மொழியில் 27 விழுக்காட்டுச் சொற்கள் தமிழ் என்று ஆய்வாளர் கூறினர்.
அய்ரோப்பாவின் அங்கேரி மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஆய்ந்து முத்துக்குமாரசாமி ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் எழுதினார்.
கிரேக்க இலத்தீன மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஞானகிரி(நாடார்) நூலாக வெளியிட்டுள்ளார்.

இசுபெயின் நாட்டின் ‘பாசுகு’ மொழி தமிழுடன் ஒற்றுமை உடையதாயிருக்கின்றது. தமிழின் இடப் பெயர்களின் ஈறுகள் பல காணப்படுகின்றன.
அம்மா என்ற சொல் அதே வடிவிலும் திரிந்தும் 50க்கும் மேற்பட்ட மொழிகளில்வழக்கில் உள்ளதாக ப.அருளி ‘பெற்றோரைப் பற்றி’ நூலில் விளக்கினார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்ட கி.மு. 2000-கி.மு.1200 காலத்திய பிணக்குழிப் பொருள்கள் பாலத்தீனம், சைப்பிரசு, கிரீசு ஆகிய நாடுகளின் பிணக்குழிகளிலும் காணப்பட்டதை கே.கே.பிள்ளை ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலில் எழுதினார்.
‘ஒரடோட்டசு’ என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் ‘கிரீட்’ தீவில் வாழ்ந்த மக்களைத் ‘தெமிலி’ என்றார். ‘தெமிலி’ என்பது தமிழரைக் குறிக்கும் என்று ந.சி. கந்தையா ஆய்ந்து எழுதினார்.
சிந்துசமவெளியில் கிடைத்த பழந்தமிழ்க் குறிகள் சுமேரியா, கிரீட், ஈசுடர் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டன.
தென் அமெரிக்காவின் ‘மாயன் நாகரிகம்’ தமிழ்நாகரிகத்துடன் தொடர்புடையது என ந.சஞ்சீவி தெரிவித்தார்.

ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பழந்தமிழே வழங்கியது என்று சுனீத் குமார் சட்டர்சி ‘வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் எழுதினார்.
‘ஒரு காலத்தில் வடந்தியா முழுவதும் திராவிட (தமிழ்) மொழி பேசப்பட்டது’ என்று அம்பேத்கர் untouchables என்ற நூலில் எழுதினார்.
தென்னிந்தியாவே திராவிடரின் தமிழரின் வலிமைப்புலமாக இருந்தாலும் மொழியாலும் பிறவற்றாலும் அவர்கள் பலுசித்தானம் முதல் வங்காளம் வரை பரவியிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்றார் எசு.கே.டே.
குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய நிலப்பகுதி திராவிடரின் (தமிழரின்) ஆட்சியின் கீழிருந்தது என்று மராத்திய அறிஞர் முனைவர் கட்ர Introduction to Modern Indian Linguistics என்ற நூலில் எழுதினார்.
சிந்தி மொழியில் 2000க்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று ஆய்வறிஞர் பர்சோ கித்வானி கூறினார்.
வங்க மொழியில் பல தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சாந்தி நிகேதனத்தின் பேராசிரியர் முத்தையா ஆய்ந்துரைத்தார்.
தொடர் அமைப்பில் வடமொழியும் மற்ற இந்திய மொழிகளும் தமிழை ஒத்துள்ளன என்று சுனீத் குமார் சட்டர்சி கூறினார்.
இந்தி தொடர் அமைப்பைப் பற்றிக் கூறிய அறிஞர் மு.வ., ‘இந்தி ஆரிய உடை அணிந்த தமிழ்ப்பெண்’ என்றார்.
அரப்பா, மொகஞ்சதாரோ மக்களின் மொழி தமிழே என்றார் திருத்தந்தை ஈராசு.


பின் குறிப்பு.
இணையத் தேடல் வழி சேகரித்தத் தகவல். இணையத்தில் தமிழ் மொழி தொடர்பான தகவல் பகிரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

Monday 5 August 2013

ஒரு செய்யுளும் அதனைச் சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்

"நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்."

இப்படியாகத் தொடங்கி அச்சு மாறாமல் அதே வரிகளைக் கொண்ட பதிவுகளை வெவ்வேறு படங்களுடன் தினமும் முகப் புத்தகம், வலைப்பூ என ஆதாரமற்ற பல இணையத் தளங்களில் காண்கிறோம். அதில் சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள். அவை அனைத்தும் ஒரு செய்யுளின் கரு, அதைத் தான் கற்பனை சோடித்துத் தங்கள் மதியை மயக்குகின்றனர்.
அந்தச் செய்யுள் இடம் பெற்ற நூல் இறையனார் களவியல் / இறையனார் அகப்பொருள் நூல். உரை எழுதியவர் தான் நக்கீரர், இந்த நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய சங்ககாலப் புலவர் நக்கீரரும் ஒருவர் அல்லர்.

அடுத்து. இந்த நூல் எழுதப்பட்டது 7-8 ஆம் நூற்றாண்டு.

ஆக 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு நூல் மட்டுமே நாம் 20,000 ஆண்டு பழமையானவர்கள் என்று கூறுவதற்கு உள்ள ஒரே ஆதாரம். பகிரும் முன் சற்று யோசியுங்கள். கல்வெட்டுக்களோ, இன்ன பிற சான்றுகளோ இல்லாத ஒரு செய்தியைப் பரப்பி, தமிழனை வெட்டிப் பெருமை பேசுபவன் என்று உலகம் ஏசச் செய்கிறார்கள். அந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்தியை சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த நூல் என்ன கூறுகிறதோ அந்த நூல் சொன்னதாக அதை அப்படியே இவர்கள் சொல்லலாம். கற்பனைகளையும் தவறான கருத்துக்களையும் உள் நுழைக்க வேண்டாம்.

Friday 12 July 2013

கொங்கு மண்டல வட்டார வார்த்தைகள்

சில வார்த்தைகள் தமிழ்நாட்டில், தமிழில் பிறந்து தமிழிலேயே வழக்கொழிந்து போகின்றது. ஆங்கிலம் வருவதற்கு முன்பிருந்தே இவை இங்கு வழக்கில் இருந்தன. அப்படி வட்டார வழக்கில் இருக்கும், இருந்த வார்த்தைளில் சில இங்கு.

1. யேனம் - சமையல் பாத்திரங்களை இப்படிச் சொல்வார்கள்.
2. வட்டல் - உணவு சாப்பிடும் தட்டை மட்டும் வட்டல் என்பார்கள். மற்ற வட்ட வடிவில் அமைந்த எந்த தட்டுகளையும் இப்படிச் சொல்வதில்லை.
3. தாட்டிவிடு - அனுப்பிவை என்பது இதன் பொருள். ( தாட்டிவிட்டேன் - அனுப்பிவைத்தேன்)
4. சேந்துதல் - கிணற்றில் நீர் எடுப்பதை இப்படி சொல்வார்கள் (தண்ணீர் சேந்துனேன்)
5. மாட்டுதல் - சண்டை போடுதல், திட்டுதல் ( அம்மா என்ன மாட்டுவாங்க, திட்டுவாங்க என்ற பொருளில் இது வரும்)
6. சந்தகை - இடியாப்பம்.
7. கோசாப் பழம்- தர்ப்பூசனி.
மீண்டும் சில வார்த்தைகளோடு வருகிறேன்.

Thursday 11 July 2013

நான் << மலர் .

















கூட்டத்தில் பெண்ணொருத்தி கூடையோடு நின்றிருக்க
தோட்டத்துப் பூவதில் மாலையாக வந்திருக்க
ஓடாத எண்ணங்களை அதுபார்த்து ஓட்டிவிட்டேன்
தேடாத பொருள் தேடியெங்கோ தாட்டிவிட்டேன்...

பேரம் பேசிவிட்டு போவார் பலரே
ஓரமாய் வேடிக்கை பார்ப்பரும் உளரே
வாங்கி வைக்கும் மக்கள் சிலரே
ஏங்கி நிக்கும் மற்ற மலரே....

விலையேது இன்று விக்காத மலருக்கு ???
கலையிழந்த கண்ணாய் ஒதுங்கியே வீற்றிருக்கு....
பூவாகப் பூத்திருந்தால் அந்தியும் வந்திருக்கும்
நோவாகிப் போகும்முன்னே வாழ்க்கை முடிந்திருக்கும்....

மந்தையில் மனிதனாகப் பிறந்துவிட்டேன்- உலகச்
சந்தையில் விலைபோக மறந்துவிட்டேன் - ஏனோ
காலத்தின் கட்டாயமென கட்டுண்ட காற்றாய்
ஞாலத்தில் வாழுகின்றேன் ஞானத்தைத் தேடுகின்றேன்.

Friday 5 July 2013

இயல்பை மாற்ற வேண்டாம்

இதுவும் எங்கள் பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. என்னை பாதித்தவைகளில் ஒன்று.

பாம்பு ஒன்று ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வந்தது. அந்த வழியாக யார் சென்றாலும் அவர்களைக் கொத்துவது அதன் இயல்பு. அந்தப் பாம்பிற்கு பயந்த மக்கள் அந்த வழியைத் தவிர்த்தனர். அதனிடம் ஒரு பயமும் மரியாதையும் வைத்திருந்தனர். அந்த வழியாய் ஒரு துறவி சென்றார், பாம்பு அவரையும் தீண்ட வந்தது. அவர் அதனிடம் " நீ எவ்வளவு உயிர்களைப் பலி கொண்டாய் உன்னால் ஒன்றையேனும் திருப்பிக்கொடுக்க முடியுமா, அதனால் இனி யாரையும் தீண்டாதே" என்று சொன்னார். அதனை அந்த பாம்பும் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கொத்துவதை விட்டு விட்டு சாதுவாக மாறியது. கொஞ்ச நாளில் பாம்பு யாரையும் கொத்துவதில் இல்லை என்ற செய்தி மக்களிடம் பரவியதும் அந்த வழியை மக்கள் பயன்படுத்தினர். இன்னும் சில நாட்கள் செல்ல செல்ல அந்தப் பாம்பை கல்லால் அடிப்பது, வாலை இழுப்பது போன்ற செயல்களை செய்து துன்புரித்தினர். மீண்டும் ஒரு முறை அதே துறவி அந்த வழியாக வந்த போது அந்த பாம்பு மிகவும் அடிபட்டு சாகும் தருவாயில் இருப்பதைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டார். " இவ்வளவு நாட்களும் கடித்துக்கொண்டிருந்தேன், மதித்தனர். உங்கள் பேச்சைக் கேட்டு, இப்பொழுது யாரையும் தீண்டுவதில்லை, அமைதியாக இருக்கிறேன், அதனால் எனக்கு சக்தியில்லை என்று எண்ணி என்னை சாகும் நிலையில் கொண்டுவிட்டனர்" என்று அந்த பாம்பு பதிலளித்தது.

அதற்கு அந்த துறவி " உன்னை தீண்ட வேண்டாம், உயிரைக் கொள்ள வேண்டாம் என்று மட்டும் தான் சொன்னேன். அதற்காக உன் உயிரை மாய்த்துக் கொள்ள சொல்லவில்லை, சீறு அவர்கள் பயப்படுவார்கள், ஆனால் அவர்களாய்த் தீண்டாதே, உன் இயல்பை பிறரைத் துன்படுத்தாத அளவு மட்டும் மாத்திக்கொள், ஆனால் பிறர் உன்னைத் துன்பப்படுத்த இடம் கொடுக்காதே."

Thursday 4 July 2013

துன்ப மூட்டை

இது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.

" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர்,  அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, " உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் " உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து " எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்..."

என்னை ஆழமாக பாதித்த கதை இது... உண்மையும் கூட....

Friday 24 May 2013

தாராசுரம் கோயில் படங்கள்


இந்தப் படங்கள்


தாரசுரம் ஐராவிதேசுவரர் கோயிலில் எடுக்கப்பட்டது...

மரத்திலும் உலோகத்திலும் சின்னதாய் ஒரு சாளாரம் செய்யவே பல சிரமும் உண்டு. ஆனால் கல்லில் சாளரம் அமைத்தது நம் தமிழகத்தில் மட்டும் தான் சாளாரம் கல்லில் செய்தனர்... இல்லை இல்லை அதனை கல்லில் செதுக்கினர்... கல்லிலே கலை வண்ணம் கண்டார்..

குறிப்பு: சாளரம்=ஜன்னல்.






Thursday 23 May 2013

தஞ்சைபெரியகோயிலும் அரிய தகவலும்-2 (நந்தி)















பெரிய கோயிலில் பக்தர்கள் இப்போது தரிசிக்கும் மகாநந்தி, இராசராசன் காலத்தியது அல்ல. அந்த நந்தி இப்போது தென்மாளிகைச் சுற்றில் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறது. இப்போது இருக்கும் நந்தியை கி.பி. 1550 களில் நாயக்க மன்னர்களான செவ்வப்ப நாயக்கரும், அவர் மகன் அச்சுதப்ப நாயக்கரும் இணைந்து எழுப்பியுள்ளனர்.

பதினாறு கால் மண்டபத்தில் மாபெரும் உருவமாக அமைந்துள்ளது இந்த நந்தி. துல்லியமாக பத்தொன்பதரை அடி நீளமும், எட்டே கால் அடி அகலமும், பன்னிரெண்டடி உயரமும் உடைய மகாநந்தி ஒரே கல்லில் செதுக்கப்பட்டது என்பது தனிச்சிறப்பு.

Sunday 19 May 2013

தஞ்சை பெரிய கோவிலும் அரிய தகவல்களும்-1, (அறிஞர் ஹீல்ஷின் பங்கு)


200 ஆண்டுகளுக்கு முன்பு வரைத் தஞ்சைப் பெரிய கோவிலைக் கட்டியவர் யாரென்றே தெரியாத நிலை நிலவியது. 'கிருமி கண்ட சோழன்' எனப்படும் கரிகாலன் குஷ்டநோயால் தவித்ததாகவும், இந்தக் கோயிலைக் கட்டி, இங்குள்ள சிவகங்கையில் நீராடியதால் அவனுக்கு இருந்த குஷ்டநோய் நீங்கியதாகவும் 'பிரகதீஸ்வர மகாத்மியம்', 'தஞ்சைபுரி மகாத்மியம்' ஆகிய நூல்கள் சொல்லுகின்றன. இது போதாதென ஜி.யு. போப்பும் தன் பங்கிற்கு 'காடுவெட்டிச் சோழன்' என்பவனே பெரிய கோயிலைக் கட்டியவர் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

1888 இல் தான் ஹீல்ஷ் என்ற ஜெர்மானிய அறிஞரை இக்கோயிலில் உள்ள கல்வெட்டுகள் பற்றி ஆய்வு செய்வதற்காக நியமித்தது சென்னை அரசாங்கம். கல்வெட்டுகளைப் படியெடுத்துப் படித்த அவர் தான் "இக்கோயிலைக் கட்டியவன் மாமன்னன் இராசராசன்" என்று அறிவித்தார்.

Friday 17 May 2013

கடைசி நாள் கல்லூரி... GCT !!!


















GCT !!!
சிறகுகள் முளைக்கக் காத்திருந்தேன்
பறக்கக் கட்டளையும் வந்ததும்...
சிறகுகள் ஏனோ சுமையானது...
பிரிவின் பாரமோ இது???
தாங்காத போதிகளுடன் மனம்
தள்ளாடி நகர்கிறது...
தெரிந்த முடிவு...
தெரிந்தும் தாழவில்லை...
நினைவுகள் மட்டும் நிலைத்திருக்க
நாளையோடு எல்லாம் வேறாகிப் போகும்...

கடைசி நாள் கல்லூரி...
பேருந்தின் ஜன்னல் நனைக்கும் மழைத்துளி..
கண்களின் ஓரம் ஏனோ நீர்த்துளி...
முன்நோக்கி நகரும் தினத்தில்,
பின்நோக்கி நகருது மனது....

இங்கு மீண்டும் ஒருமுறை பயில்வேனோ,
பக்கங்களைத் திருத்தி எழுத முயல்வேனோ,
முடியாமல் போகுமின் அமைதியில் துயில்வேனோ??

பிடிபடாத எண்ணங்கள் சிறைபிடிக்க
பிடிவிலகிப் போகிறேன் நான்....
கூடுடைத்து சிறகொடிந்த பட்டாம்பூச்சியாய்
படபடத்து செல்கிறேன் நான்...

அணுவெல்லாம் காதல்...(ATOMIC LOVE)

இதயத்தில் அணு அளவும் இடமில்லயே
என் அணுவில் கூட இடமில்லயே..

போசோன்கள் லெப்டான்கள் துரத்திவிட்டாய்
நியூட்ரான் எலெக்ட்ரான் இடை
வெற்றிடம் கூட நிரப்பிவிட்டாய்..
என் அணுவில் கூட இடமில்லயே..

ிச்சயமில்லா கொள்கை அதனாலும்
என் காதலை விளக்கிட முடியலயே..
ியூட்டன் ஐன்ஸ்டைன் விதிகள்
எதுவும் இங்கே பொருந்தலயே..

உனை பார்க்கையிலே உயிருக்குள்
போட்டான்கள் பிறக்கிறதே..
ாறிலி எல்லாம் மாறியதே..
கடவுள் துகள் கூட
ாற்றில் இப்போ தெரிகிறதே...

நீ பார்கையிலே, எனக்கு
ஒளியின் வேகம் குறைகிறதே
காலங்கள் யாவும் நீள்கிறதே
என் காதல் விசையினிலே
வெளியும் இங்கே வளைகிறதே...

ெண்ணே! அடி பெண்ணே!
அணு ஆயுதம் நீ தானோ??  உன்
சோதனைக் கூடம் நான் தானோ??

காதல் என்னும் பெயரினிலே
அணுப்பிளப்பு என்னுள் நிகழ்கிறதே...
ஆற்றல் யாவும் இழந்தேனே..
பௌதிகம் முதலிய மறந்தேனே..

விழுந்துவிட்டேன் உன் விழியாலே
விளக்கிவிட்டேன் அதனை மொழியாலே..
என் அணுவில் கூட இடமில்லயே..
உன்னைத் தவிர எதுவும் நினைவில்லையே..

-சுபாசினி.

Sunday 12 May 2013

என்னோடு நீ வேண்டும்...


என்னோடு நீ வேண்டும்...

என் மலருக்கு மரமாக
மரத்துக்கு வேராக
என்னோடு நீ வேண்டும்...

என் அம்புக்கு வில்லாக
வில்லுக்கு நாணாக..
என்னோடு நீ வேண்டும்...

என் வானத்து மழையாக
மழைக்குக் குடையாக..
என்னோடு நீ வேண்டும்...

என் நகரத்து ஆறாக
ஆற்றுக்கு நீராக
என்னோடு நீ வேண்டும்...

என் நாவுக்கு மொழியாக
மொழிக்குத் தமிழாக
என்னோடு நீ வேண்டும்...

என் கவிதைக்கு சொல்லாக
சொல்லுக்குப் பொருளாக
என்னோடு நீ வேண்டும்..

என் வாழ்க்கைக்கு மெய்யாக
மெய்க்கு உயிராக..
என்னோடு நீ வேண்டும்..

சுபாவிற்கு நினைவாக
கலையாத கனவாக..
என்னோடு நீ வேண்டும்...


Monday 6 May 2013

திருக்குறள் சொல்லும் நாகரிகம்


நாகரிகம் என்பது என்ன??
திருக்குறளில் நாகரிகம் என்னும் சொல் வரும் இடம் இதுதான்.

"பெயக்கண்டு நஞ்சுண் டமையவர் நயத்தக்க
நாகரிகம் வேண்டு பவர் " - குறள் 580
அதிகாரம் 58. கண்ணோட்டம்.


நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் - எல்லாராலும் விரும்பப்படத்தக்க நாகரிகப் பண்பாகிய கண்ணோட்டத்தை வேண்டுபவர்; நஞ்சு பெயக்கண்டும் உண்டு அமைவர் - தம் நண்பர் தமக்குத் தம் கண்முன் நஞ்சிடக் கண்டும் அதை மறுக்காது உண்டு பின்னும் அவரொடு அன்பாகப் பொருந்துவர்.

இதனை இக்காலாத்திற்கு பொருத்திப் பார்ப்போம் ஆயின் இப்படி எடுத்து கொள்ளலாம். ஒரு குழந்தை பிறந்த தினத்திற்கு இனிப்பு கொண்டு வருகிறது. நமக்கோ நீரிழிவு நோய். இனிப்பைத் தவிர்க்க வேண்டும். ஆனால் வேண்டாம் என்று சொல்லாமல் அந்த குழந்தைக் மனம் மகிழ வேண்டும் என்பதற்காக அதனை எடுத்து உண்கிறோம். இனிப்பு எனக்கு நஞ்சு என்று தெரிந்தும் பிறர் மனம் நோகக் கூடாது என்று எண்ணி உண்கிறோமே அது தான் நாகரிகம். (பர்வீன் சுல்தானா அவர்கள் அரசினர் தொழில்நுடபக் கல்லூரி, கோவை, சங்கமம் விழா பட்டிமன்றத்தின் போது ஆற்றிய உரையிலிருந்து கொள்ளப்பட்டது)

சான்றோர் விளக்கம்:
'நயத்தக்க நாகரிகம் 'என்றதனாலும் , 'அமைவர் ' என்றதனாலும் , நஞ்சிட்டவர் நண்பர் என்பது உய்த்துணரப்படும். திருவள்ளுவர் தம் நூலை எல்லார்க்கும் பொதுவாக இயற்றியதனால் , இப்பொருட்பாலில் அரசர்க்குரியவற்றோடே ஏனையர்க் குரியவற்றையுஞ் சேர்த்தே கூறியுள்ளாரென்றும், இவ்வதிகாரத்தின் இவ்விறுதிக் குறள் தனிப்பட்ட சான்றோர் ஒழுக்கம் பற்றிய தென்றும் , அறிந்து கொள்க. நண்பரிட்ட வுணவாதலால் அது அவர் அறியாதிட்ட நஞ்சென்றும் ,நட்புப் பற்றிய கண்ணோட்டத்தாலேயே அது உண்ணப் பெறுமென்றும் , அதுவும் இயற்கைக்கு மிஞ்சியதாதலால் 'நயத்தக்க ' என்னும் அடைபெற்றதென்றும் , அறியப்படும் . அறிந்திட்ட நஞ்சாயின் அது நண்பர் செயலாகாமை அறிக. நயத்தகுதல் பகைவராலும் பாராட்டப் பெறுதல்.



நாகரிகம் என்பது இங்கு அகநாகரிகமான பண்பாட்டை , கண்ணோட்டம் பண்பாட்டுக் குணமாதலின் நாகரிகமெனப் பட்டது.

"முந்தை யிருந்து நட்டோர் கொடுப்பின்
நஞ்சு முண்பர் நனிநா கரிகர்"

என்பது நற்றிணை(355).பெய்தும் என்னாது 'கண்டும் 'என்றதனால் , உம்மை உயர்வு கலந்த எச்சமாம்.

Saturday 30 March 2013

புதுக்கவிதை

இயைபும் மோனையும் இழுத்தடிக்க
எதுகையும் முரணும் முகஞ்சுழிக்க
பாவகை நாலும் பறந்தோட
கருத்தும் எங்கோ கட்டவிழ
கிடைத்த சொல்லில் கிறுக்கிவைக்க
புதுக்கவிதை என்றும், அதனை
ஹைக்கூ என்றும், அய்யோ
போற்றுது மக்கள் மனமே!!!!

Wednesday 27 March 2013

விக்கல்....

விக்கல் வரும் போதெல்லாம் 
உன் நினைவு...

என் தலையைத் தட்டி
நீ தண்ணீர் குடித்த நினைவு...

அதிர்ச்சி வைத்தியம் என்று
அசட்டுத்தனம் நீ செய்த நினைவு...

"நினைக்க நான் இருக்க
நினைத்தது யார் உன்னை??"
என்று நித்தமும் நீ சண்டையிட்ட நினைவு...

இன்று...
நினைத்தது நீ இல்லை... தெரிந்தும்
நினைத்திருக்க மாட்டோயோ... என
ஏங்குகிறேன்.. 
விக்கல் வரும் போதெல்லாம்...

(நினைத்து நினைத்து எழுதியது
சுபாசினி. :P)

Wednesday 6 March 2013

சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?"


சுஜாதாவின் "கடவுள் இருக்கிறாரா?" நூலைப் படித்தேன். uncertainity principle, quantum theory, E=mc2 அனைத்தும் படித்தது தான். இருந்தும் அவர் காட்டியது புதிய கோணம். எதற்கு என்று தெரியாமல் சேர்த்த பள்ளிக் கல்வித் துறை, மதிப்பெண்ணிற்கு விரட்டிய பள்ளி, அறிவியல் கோட்படிகளின் பின்னனி தெரியாமல் நடத்திய ஆசிரியர்கள்... இப்படியே படித்து பழகிய விதிகளை அவர் விளக்கிய விதம் அருமை. ஒரு வாசகன் என்பதைத் தாண்டி ஒரு பொறியியல் மாணாக்கரின் மனதில் இடம்பிடிக்கும் நூல். கடவுள் இருக்கிறாரா??? It depends....

Monday 25 February 2013

Sunday 24 February 2013

மாடக்குழி

நாட்டார் வழக்கில் இருந்து இதோ ஒரு அழகிய தமிழ் சொல்.. "மாடக்குழி". shelf என்னும் ஆங்கில சொல்லுக்கு பல மொழியாக்கங்கள் இருக்கின்றன. அலமாரி என்று அகராதிகள் சொல்லும் போதும், அலமாரி தமிழ் சொல் இல்லை, கிழக்கிந்திய நிறுவனங்கள் நம் நாட்டுக்கு வந்த பிறகு அவர்களோடு வந்த சொல். 'அடுக்கு' என்றும் சொல்லலாம். இது கூட ஆங்கில மொழிபெயர்ப்பே அன்றி, இணையான தமிழ் சொல் என்று கொள்ள முடியாது. எனவே யூரோப்பிய மொழிகளின் வருகைக்கு முன் தமிழர்கள் அதை எப்படித் தான் வழங்கியிருப்பர்?? இதோ இப்படியும் வழங்கியிருக்கின்றனர். "மாடக்குழி".. விளக்கு மாடம், திண்ணை மாடம் என்னும் வரிசையில் இதுவும் இருந்திருக்கின்றது

Thursday 21 February 2013

இணையமும் படாத பாடுபடும் தமிழ் மொழியும்

தமிழ் ஆர்வளர்கள் இடையே புலக்கத்தில் இருக்கும் மற்றொரு பிற மொழிச்சொல் "நாவல்". நாவல் பழம், மரம் எல்லாம் தமிழ் தான், ஆனால் குறுங்காவியத்திற்கு "புதினம்" என்பதே தமிழ்ச் சொல். ஆங்கிலம் நங்கு தெரிந்தவர்கள் அதனை ஆங்கிலச் சொல் என்று தெரிந்தும் அதற்கு இணையான தமிழ்சொல் தெரியாத காரண்த்தினாலோ என்னவோ அதனைப் பயன்படுத்துகின்றனர். இதைக்கூட ஒருவாறு ஏற்றுக்கொள்ளலாம். ஆனல் தமிழ் புதினங்களைப் பற்றி தூய தமிழில் ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய பலரும் "நாவலை" ஏதோ தூய தமிழ்ச்சொல் போன்று பயன்படுத்தியது தான் எரிச்சல் ஊட்டுகிறது. குறைந்தபட்சம் தூய தமிழ்க் கட்டுரைகளிலாவது அந்த சொல்லைப் பயன்படுத்தாதீர்கள். 

இணையத்தில் தமிழைப் பற்றி எவ்வளவு தெரிந்து கொள்ளலாமோ அதைவிட அதிகமாக தமிழ் மொழி சார்ந்த தவறான தகவல்களையும் பரப்பலாம். அப்படி இன்று நான் கடந்து வந்த ஒரு தகவல் தமிழின் வரலாற்றுப் புதினங்கள் பற்றியது. வர்ணனைக்காக அப்பட்டமாக தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 'பொன்னியின் செல்வன்' என்று சோடித்திருந்தனர். பெரும்பாலனோர் படித்த ஒரே வரலாற்றுப் புதினம் அது மட்டும் தான். அதற்காக அதற்கு முன் வரலாற்றுப் புதினங்கள்இயற்றப்படவேயில்லை என்று கூறக் கூடாது. கல்கியின் முதல் வரலாற்றுப் புதினம் "பார்த்திபன் கனவு". தமிழின் முதல் வரலாற்றுப் புதினம் 1895 ஆம் ஆண்டில் இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்த த. சரவணமுத்துப்பிள்ளை என்பவரால் எழுத்தப்பட்ட "மோகனாங்கி" என்னும் நூலே ஆகும். இணையத்தில் தமிழை வளர்க்கும் நண்பர்களே, குறைந்தபட்சம் விக்கிப்பீடியாவிலாவது தேடுங்கள்....

Wednesday 20 February 2013

திருக்குறளும் அரும்பதங்களும்-1 (எழிலி)


 திருக்குறள் நூலை புரட்டும் போது நமக்கு நன்கு தெரிந்த குறள்களில் கூட நமக்கு தெரியாத ஒரு சொல் ஒழிந்திருக்கும்.

      அப்படி ஒரு சொல் "எழிலி". மங்குல் போல் இதற்கும் மேகம் என்று பொருள். இந்த சொல்லை வான் சிறப்பு அதிகாரத்தில் காணலாம்.

குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.

பொருள்: பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.

எழிலி-மேகம்.

Thursday 14 February 2013

கலாச்சாரம் தமிழ்ச்சொல்லா???


கலாச்சாரம் தமிழ்ச்சொல்லா??? தமிழ் அகராதிகளைப் புரட்டியவரை அதற்கு இணையான தமிழ்ச்சொல் பண்பாடு எனக் காண்கிறோம். இருப்பினும் எல்லா தமிழ்ப் பக்கங்களும் தமிழ் "கலாச்சாரத்தயே" பேசுகின்றனர். பள்ளி கல்லூரிகளும் தமிழ்க் "கலாச்சாரப்" போட்டிகளைத்தான் நடத்துகின்றனர். அவர்களிடமும் இதே கேள்வியைக் கேட்டபோது, "ஏன், கலாச்சாரம் தமிழ்ச்சொல் தானே.. அப்ப அது தமிழ் இல்லையா???" என்று என்னை திரும்ப கேட்கின்றனர். நான் அறிந்த வரை கலை+ஆச்சாரம்=கலாச்சாரம். ஆச்சாரம் எப்படி தமிழ் ஆகும்? நாகரிகம் பண்பாடு என்ற சொற்கள் இருக்கின்றனவே.. ஒரு பிரபல கல்லூரி நடத்திய 'அழகிய தமிழ் மகன்' என்ற போட்டியில் "நாகரீகம்" என்று எழுதியிருந்தனர். இது வேறு புது சொல்லா?? தமிழர் பண்பாட்டில் இவ்வளவு குழப்பங்களா??? குறைந்தபட்சம் இந்த ஒரு வேற்று மொழிச்சொல்லயாவது விட்டொழிக்கலாமா? பெரும்பாலும் தமிழ் தமிழ் என்று பேசுபவர்கள் தாம் இந்த "கலாச்சாரத்தை" பயன்படுத்துகின்றனர். அது தமிழ்ச்சொல் தான் என்பதற்கு விளக்கம் இருந்தால் அதனை கேட்க செவிமடுக்கிறேன். இல்லையேல் இந்த சொல்லை விட்டொழிக்கலாம்.
 நன்றி.
 இவண்,
சுபாசினி.

Tuesday 12 February 2013

சகோதரி வினோதினிக்காக


தில்லியில் பிறந்ததிருந்தால் உனக்கு
கண்ணீர் அஞ்சலியும், தலைவர்கள்
இரங்கல் அறிக்கையுமாவது கிடைத்திருக்கும்
மாதாவம் செய்த தமிழ்மங்கயே!
அமிலம் வீசியவன் பிழைத்திருக்க
அழகு தமிழச்சி நீ மறைந்தாயே..
பெண்ணுரிமை பேசிய என் மக்களுக்கு
உன்னைப் பிழைக்க வைக்க வழியில்லை..
எங்கோ நடந்திருந்தால் கொடி பிடித்திருப்போம்..
கண்முன் நடந்ததனால் உன்னைக்
கண்டு கொள்ள மறந்துவிட்டோம்...
காலன் வந்து கொண்டுவிட்டான்
கண்ணிரண்டும் கலங்குதம்மா...
கண்ணே உன்னை நினைக்கயிலே...
மௌனம் சாதித்திருப்போம், உன் வரிசையில்
நாங்களும் நாளை நிற்கும்வரை...
மீளாது அங்கு நீ தூங்க
ஒரு தங்கை இங்கு எழுதுகின்றேன்...













(இயலாமையில் இதை மட்டும் தான் செய்ய முடிந்தது
:( சகோதரி வினோதினிக்காக சுபாசினியின் அஞ்சலி)

Tuesday 5 February 2013

வகுப்பறையில் நான்.

ஒரு கண் நெகிழ
ஒரு கண் நீர்க்க
நான்கு ஆண்டு தனிமை,
முடியப் போகும் நேரம்..
நான்கு ஆண்டை தனிமையில்
முடித்து விட்ட சோகம்...
என்னிரு விழிக்கும் போராட்டம்..
மூளைக்கு எட்டாத வாஸ்து
மூலையில், வகுப்பறையில் நான்.
எழுத வைத்த நாட்கள்
எழுதித் தீர்த்த தூவல்..
எல்லாம் கானல் நீராய்
எந்திர உலகத்தின் எச்சமாக
என் கிறுக்கல்கள் மட்டும்
எஞ்சி நிற்க... எழுதுகிறேன்.
...
சுபாசினி.

மழை


மழை

















என்னே இந்த மழையின் அருமை..
வெளுக்க வைத்தது,
வெளியுலகின் சாயங்களை அல்ல
என்னுடன் பழகியவர்கள்
உளமதன் சாயங்களை... ஏனோ
அழுது அழுது தீர்ந்தபின்னும்
இந்த குளிர்கால இரவுகள் எல்லாம்
கண்ணீரின் கதகதப்பிலேயே விடிகின்றன...

-சுபாசினி.

ஆட்டுக்கல்

குடிமிப்பிடி சண்டை
குழாய் அடியில் இல்லை
ஆட்டுக்கல்லோடு... மின்வெட்டு

காற்றாலை


Sunday 6 January 2013

பாத்திரம் அறிந்து பிச்சையிடு கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு


"பாத்திரம் அறிந்து பிச்சையிடு கோத்திரம் அறிந்து பெண்ணைக் கொடு"
இந்த பழமொழிக்கு நாம் பொதுவாக ஒரு பொருள் கொண்டிருப்போம். ஆனால் இதனை எப்படி பொருள் கொள்ள வேண்டும் தெரியுமா..
பா+திறம்- பாத்திறம். இது மருவி பாத்திரம் என்றானது. (பா என்றால் பாடல்/ செய்யுள் என்று பொருள்)
கோ+திறம்- கோத்திறம். இது மருவி கோத்திரம் என்றானது. (கோ என்றால் அரசன் என்று பொருள்)
ஆக, ஒரு அரசன் புலவரது பாடலைக் கொண்டு அவரது திறத்தை அறிந்து பொருள் கொடுக்க வேண்டும்.
தன் மகளை ஒரு அரசனின் திறத்தை ஆராய்ந்து பின்பே மணமுடித்துத் தர வேண்டும்.
கருத்தில் உதவி சோபனா.