Monday 13 February 2017

இம்மையிலும் மறுமையிலும் நீயே!

காலங்கள் எவ்வளவு சென்றாலும், தலைவனிடம் (காதலன்/கணவன்) தலைவி மாறாமல் சொல்லும் வசனம் இது "எத்தனை பிறவி எடுத்தாலும் நீயும் நானும் சேர்ந்தே இருக்கனும்". அது ஏன் தான் இதைச்சொல்வதில் தலைவிகளுக்கு அவ்வளவு பேரின்பமோ தெரியவில்லை. இதோ விருமாண்டி படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்.

"உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

என்ன கேட்குற சாமிய?
நூறு சென்மம் உன் கூட போதுமா?
நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய"

இதுவாவது பரவாயில்லை, சாகா வரம் கேட்டு தன்னுடன் இருக்க விரும்பும் தலைவனோடு நூறு சென்மம் வேண்டும் என்கிறாள். சங்ககாலத்தில் தலைவிகள் அதற்கும் ஒருபடி மேலே சென்றிருக்கிறார்கள்.

தலைவனை தலைவி விளிக்கிறாள். எப்படி? " அணிலின் பல்லைப் போன்ற முட்களைக் கொண்ட கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையுடைய தலைவனே!"

"கண்ணா! கணவா!" என்று அழைக்காமல் இப்படியாக தலைவி சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறாள்?
என்ன தான் கூரிய முட்களை கொண்டிருந்தாலும் அழகிய பூக்களையும் உடையது இந்தக் கழிமுள்ளிச்செடி. அது போலவே, என்ன தான் வெளித் தோற்றத்தில் காதல் இல்லாதவராகத் தோன்றினாலும் உள்ளத்திலே அவள் மீது பேரன்பு கொண்டவன் அவளது தலைவன் என்று சொல்ல விளைந்து சுற்றி வளைக்கிறாள் தலைவி.

தலைவனிடம் அவள் கேட்பது ஒன்று தான் " இந்தப் பிறவி முடிந்து மறுபிறவியே எடுத்தாலும், நீ தான் என் கணவன், உன் உள்ளத்தில் வாழ்பவள் நானாக மட்டும் தான் இருப்பேன்". சுருக்கமாக "எத்தனை பிறவி எடுத்தாலும், உனக்கு நான், எனக்கு நீ". இங்கு அலைப்பாயுதே படப்பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

"உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே"

இதோ தலைவி இப்படியாக உருகும் குறுந்தொகைப்பாடல் இது தான்.


குறுந்தொகை  49,  அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

பதவுரை:
அணில் பல் அன்ன - அணிலின் பல்லினைப் போன்ற
கொங்கு- தேன்
முண்டகம் - கழிமுள்ளிச்செடி.
கேழ்- கோடு
மாநீர் - கடல்
இம்மை மறுமை - இப்பிறப்பும் அடுத்த பிறப்பும்.

விளக்கம்:
அணிலின் பற்களைப் போன்ற முட்களை உடைய கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையும், மணிகள் எழுப்பும் நீலவண்ணக்கோடுகளை ஒத்த நீலவண்ணக்கடலையும் கொண்ட நாட்டுத் தலைவனே! இப்பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுத்தாலும் நீ தான் என் கணவன், நான் தான் உன் நெஞ்சில் வாழ்பவள். (இங்கு கடலும் கடல் சார்ந்த நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது நெய்தல் நிலமெனக் கொள்க)

ஆனால் இதில் நோக்க வேண்டியது என்ன தெரியுமா? இத்தகைய தலைவியை விடுத்து பரத்தியர் வீடு சென்று திரும்புகிறான் தலைவன், அதையும் தாண்டி அவனைக் காதலிக்கிறாள் தலைவி. (இந்த கெட்ட பசங்கள காதலிக்கிற பொண்ணுங்க அப்பவே இருந்துருக்காங்க போல). யார் கண்டது வீடு திரும்பிய கணவன் மேல் கோபத்தில் இருந்த தலைவி " பார்த்து நடந்துக்கோ, நான் மட்டும் தான் உன் நெஞ்சுல குடியிருக்கனும்" என்று கோபமாக சொன்னாளோ என்னவோ தெரியவில்லை...


Friday 3 February 2017

கடவுளர் எத்தனை பேர்?

அண்ணன் இராஜராஜன் இப்படி ஒரு கேள்வியை பதிவிட்டிருந்தார். நியாயமான கேள்வி. ஆமாம் கடவுளர் எத்தனை பேர்?
கொஞ்ச நூற்றாண்டுகள் வரை "நீ பெருசா நான் பெருசா" என்று சண்டையிட்டுக் கொண்டிருந்த இரண்டு மதங்கள் சைவமும், வைணவமும். மகாபாரத இராமாயணக் கதைகளைக் கேட்கும் போதெல்லாம் எனக்கு தோன்றியது ஒன்று தான், இரு கதைகளிலும் சிவ வழிபாடு செய்யப்பட்டவர்கள் அரக்கர்களாக சித்தரிக்கப் பட்டிருக்கிறார்கள். இறுதியில் காக்கும் கடவுள் விஷ்ணு வெல்கிறார். ஆனால் இன்று இந்த இரண்டு மதங்களையும் ஒற்றைக் குடையின் கீழ் அடக்கிவிட்டார்கள். கூடவே, மழை கொடுத்த மாரி, மக்களைக் காத்த காளி என அனைவருக்கும் இந்து மதத்தில் அக்கா, தங்கை, பெரியம்மா என்று பதவிகள் கொடுத்துவிட்டனர். எங்கள் குலதெய்வக்கோவில் புனரமைக்கப்பட்ட பின் ஆங்காங்கே முளைத்தது விஷ்ணு பிரம்மா சிலைகள். அப்பொழுது புரிந்தது எனக்கு, நான் எப்படி இந்துவாக மதம் மாற்றப்பட்டேன் என்று. கூடவே போனால் போகுது என்று வீரப்புச்சி எங்க அப்புச்சி என்று இருந்த மூதாதையர் சிலைகளும் இந்துவாக மதம் மாற்றப்பட்டனர். ஆக ஒதுக்கி வைக்கப்பட்ட நாட்டார் மக்களின் தெய்வங்களும் இந்து மதத்தில். அது மட்டுமா, பௌத்த மத இசக்கிகளையும் சேர்த்துக்கொண்டார்கள், அவ்வளவு ஏன் புத்தனே இந்து தான், விஷ்ணுவின் அவதாரம் தான் என்று சொல்லும் கூட்டமும் உண்டு. இன்னும் ஒருபடி மேலே சென்று ஏசு தான் கிருட்டிணன் என்பாரும் உளர். கிரேக்கத்தில் இருந்தது இந்து மதம் என்று சொல்பவர்களையும் பார்த்திருக்கிறேன்.

ஆக நான் சொல்ல வருவது என்னவென்றால், கடவுளர் எத்தனை பேர் இருந்தால் என்ன அவர்கள் அனைவருக்கும் இந்து மதத்தில் இடமுண்டு. முப்பது முக்கோடி தேவர் தொடங்கி, ஐயனார் புத்தர் வரை அனைவருக்கும் இடமுண்டு. அமெரிக்கா போல் விசா பிரச்சனை எல்லாம் வராது. இந்து மதத்தில் நாத்திகருக்கே இடமுண்டு என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இது ரொம்ப நல்லா இருக்கே என்று நினைக்கிறீர்களா? அது தான் இல்லை. என்ன தான் அனைவரையும் உள்ளிழுத்துக்கொண்டாலும் இங்கே அனைவரும் சமம் இல்லை. இந்து மதத்தின் வேத நூலாக பல இந்துக்களால் கொண்டாடப்படும் நூல்களில் அவற்றிற்கு இடமில்லை. நீங்கள் சிலரைவிட கொஞ்சம் என்ன ரொம்பவே கீழே தான் இருக்க வேண்டும்.

பி.கு: கடவுள் எத்தனை பேர் என்ற தர்க்க/ அறிவியல் ரீதியான கருத்துக்களை  நான் முன்வைக்கவேயில்லை. அதற்கு கடவுள் யார் என்ற கேள்வி வரும். ஆனால் கடவுள் எத்தனை பேரானாலும் அவர்களுக்கு இங்கே இடமுண்டு.   I swear upon all old Gods, New Gods, the Seven, Red God, Drowned god, Deep ones and more.... :P