Sunday 2 June 2019

பரிணாமக் கொள்கை - கேள்வி பதில் 5

கேள்வி: உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்துமே இன்னொரு உயிரினத்திலிருந்து பரிணாம வளர்ச்சி அடைந்தவையா?

பதில்:
ஆம். தற்போது உலகில் இருக்கும் உயிரினங்கள் அனைத்துமே இன்னொன்றிலிருந்து பரிணமித்தது தான். சுருக்கமாக சொல்லப் போனால் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் ஒற்றை மூதாதை ஒன்று உண்டு.

ஏற்கனவே ஒரு பதிலில் நமக்கும் இந்தியாவில் இன்று வாழும் குரங்குகளுக்கும் எவ்வளவு தலைமுறை தள்ளி உறவு என்பதை எழுதியிருந்தேன். நாமும் சிம்பான்சிகளும் ஒன்று விட்ட சகோதரர்கள், அதாவது காலத்தில் பின்னோக்கிச் செல்லும் போது இவர்களுடைய  ஒருகட்டத்தில் இவர்களுடைய மூதாதை தான் நமக்கும் மூதாதை.  

இப்படி நமக்கும் அவர்களுக்குமான கடைசி பொது மூதாதை இருந்த இடத்தை சந்திக்கும் புள்ளி (Rendezvous point) என்கிறார்கள். நமது இனத்தில் இருந்து பின்னோக்கிப் போனால் ஒன்றாம் புள்ளியில் சிம்பானிசிகளோடு இணைகிறோம். இதே போல இன்னும் பின்னோக்கிப் போனால் ஐந்தாம் புள்ளியில் இந்தியாவில் இன்று வாழும் குரங்குகளோடு இணைகிறோம். இது கிட்டத்தட்ட 25 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு.

இதே போல பின்னோக்கிப் போகும் நாப்பதாம் புள்ளியில் உலகில் உள்ள அனைத்து உயிரினங்களோடு இணைகிறோம். அதாவது அங்கு தான் உலகில் வாழும் அனைத்து உயிரினங்களின் கடைசிப் பொது மூதாதையை பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு பார்க்கிறோம். இன்று உலகில் இருக்கும் அனைத்து உயிர்களுமே அந்தப் பொது மூதாதையின் வாரிசுகள் தான். அதாவது உலகில் இன்று உள்ள அனைத்து உயிரினங்களுமே கிட்டத்தட்ட 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒற்றைச் செல்லில் இருந்து பரிணாம வளர்ச்சி பெற்று கிளைத்து உருவானவையே.

உயிரினங்களை மூன்று பெரும்பிரிவுகளாகப் பிரிக்கின்றனர் ( Archaea, Bacteria, Eukarya). 23 வகைப் புரதங்கள் இம்மூன்று பிரிவுகளில் உள்ள அனைத்து வகை உயிரினங்களிலும் காணப்படுகின்றன. இம்மூன்று பிரிவுகளுக்கு இடையே மரபணு தொடர்வரிசையில் (DNA sequence ) சிறு சிறு மாற்றங்கள் இருந்தாலும், இந்த 23 புரதமும் இம்மூன்று பிரிவிற்கும் பொதுவானவையே. இந்த 23 புரதமும் தான் செல்களின் அடிப்படைச் செயல்களான மரபணு பிரதியெடுத்தல் போன்ற உலகின் அனைத்து உயிர்களுக்கும் அடிப்படையான செயல்களைச் செய்கின்றன.

இப்படி உயிர்களுக்குத் தேவையான மிக முக்கியமான 23 புரதங்கள் மூன்று பெரும் பிரிவுகளிலும் காணப்படுவதால், உலகின் அனைத்து உயிர்களுக்கும் பொது மூதாதை ஒன்று இருந்திருக்க வேண்டும். அந்த ஒற்றை மூதாதையிலிருந்து வெவ்வேறு சடுதி மாற்றங்கள் மூலம் இப்பொழுது இருக்கும் புரதங்களும் மரபணு தொடர்வரிசையும் தோன்றியிருக்க வேண்டும்.

ஏன் ஒற்றை மூதாதையில் இருந்து இல்லாமல், ஒவ்வொரு பெரும் பிரிவும் தனித்தனியாகத் தோன்றியிருக்க கூடாதா? இந்த 23 புரதங்களின் ஒற்றுமையும் வெறும் தற்செயலான ஒன்றாக இருக்கக் கூடாதா? இருக்க வாய்ப்பு மிக மிக குறைவு என்கிறார்கள். எவ்வளவு குறைவு தெரியுமா? ஒன்றிற்கு பின் 2680 பூசியங்கள் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு பங்கு தானாம். மனிதர்கள் வேறு எந்த உயிர்களில் இருந்து பரிணாம வளர்ச்சி அடையாமல், தனியாகத் தோன்றியிருக்க எவ்வளவு வாய்ப்பு தெரியுமா? 1 க்கு பிறகு 6000 பூசியம் போட்டுக் கொள்ளுங்கள். அதில் ஒரு பங்கு தான்.

பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.