Friday 31 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 4

கேள்வி: குரங்கிற்கு அறிவு வளர்ந்து மனிதன் ஆவது தானே பரிணாம வளர்ச்சி? (அ) பரிணாம வளர்ச்சி என்பது ஒரு உயிரினம் தன்னை அறிவிலோ உடலமைப்பிலோ மேம்படுத்திக் கொள்வது தானே?
பதில்: பரிணாமக் கொள்கையைப் பற்றிய மிகத்தவறான புரிதல்களுள் இதுவும் ஒன்று. குரங்குகளுக்கும் நமக்கும் உள்ள அறிவு வேறுபாட்டிற்குக் காரணம் நாம் பரிணமித்து மேம்பட்டவர்கள் ஆகிவிட்டோம் என்பதல்ல, அவையும் நாமும் பரிணாம வளர்ச்சியில் வெவ்வேறு விதமாகக் கிளைத்துச் சென்றுவிட்டோம் என்பது மட்டுமே.
பரிணாம வளர்ச்சி என்பது நாம் மேம்பட்ட உயிர்கள் என்று கருதக்கூடியவற்றை உருவாக்குவதை நோக்கியே என்பது தவறான புரிதல்.
பரிணாம வளர்ச்சி என்பது எப்போதுமே சிக்கலான உடலமைப்பைக் கொண்ட உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ அறிவில் தேர்ந்த உயிர்களை உருவாக்குவதை நோக்கியோ நகர்வது அல்ல. அறிவுள்ளவை பிழைக்கும்; வலியவை பிழைக்கும்; திறமையானவை பிழைக்கும்; என்றெல்லாம் இல்லை. தக்கது தான் பிழைக்கும். அதாவது புறச்சூழலுக்கு எந்த உயிரினத்தால் தாக்குக் கொடுக்க முடிகிறதோ, இனப்பெருக்கம் செய்து தன் வாரிசுகளை விட்டுச் செல்ல முடிகிறதோ அவற்றால் மட்டுமே பிழைக்க முடியும்.
"கண்ணில்லாத உயிரனத்திற்கு கண் கிடைப்பதும், மூளையில்லா உயிரனத்திற்கு மூளை வளர்வதும் தானே பரிணாம வளர்ச்சி" என்று நம்புவீர்களானால் அது மிகவும் தவறு. குகைமீன்கள் (Cavefish) பரிணாம வளர்ச்சியின் போது தங்களது கண்களை இழந்துவிட்டன. காரணம் இருட்டில் அவற்றிற்கு கண்களால் எந்தப் பலனும் இல்லை. அதே போல நிறமிகளையும் இழந்துள்ளன. இருட்டில் கண்களுக்கும் நிறமிகளுக்கும் வேலையில்லாத போது அவற்றால் நன்மைகள் எதுவும் இல்லை, மாறாக அவற்றால் ஆற்றல் தான் விரயமாகும். உணவுத் தட்டுப்பாடு உள்ள ஓரிடத்தில் ஆற்றலை விரயமாக்கும் சிக்கலான உடலுறுப்புகளை இழக்கும் உயிரினங்களே பிழைக்கும் நெருக்கடி இருப்பது தான் அம்மீன்கள் கண்களையும் நிறமிகளையும் இன்னும் சிலவற்றையும் இழந்ததற்குக் காரணம்.
சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு உயிரனத்திற்குப் போட்டியோ தேர்வழுத்தமோ குறைந்திருக்கும் காலத்தில் தான் அது சிக்கலான அதிக ஆற்றல் எடுக்கும் மாற்றங்களை நோக்கி நகர்கின்றன என்று கருதுகிறார்கள். அந்த உயிரனத்திற்குத் தீங்காக அமையக் கூடிய அல்லது பயன் தராத சில சடுதி மாற்றங்கள் களையப்படாமல் பரவ வாய்ப்பு அதிகம். அப்படிப் பரவி அந்த உயிரனத்தின் உடலமைப்பையும் செயற்பாட்டையும் சிக்கலாக்கலாம் (மனிதர்களின் கண்ணுக்கு இந்த complexity மேம்பாடாகத் தெரியலாம்).
ஆனால் தேர்வழுத்தம் அதிகமாக இருக்கும் காலத்தில் இது போன்ற வேண்டாத சடுதி மாற்றங்கள் களையப்படும் வாய்ப்புகள் அதிகம். அதனால் எளிமையை நோக்கி ஒரு உயிரினம் பயணிக்கும் வாய்ப்பதிகம்.
இதையும் பார்க்கலாம். உணவுப் போட்டியும்  இரையாடிகளின் அச்சுறுத்தலும் குறைந்த பப்புவா நியூ கிணா தீவில் வாழும் பறவைகள் இணையை ஈர்க்க மட்டுமே பயன்படும் உடலமைப்புகள் மற்றும் செயற்பாடுகள் பலவற்றைக் கொண்டுள்ளன. இதை மேலே சொன்ன மீன்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் புலப்படும்.
மனிதர்கள் மேம்பாடு என்று எதைக் கருதுகிறார்களோ அதை நோக்கி பரிணாம வளர்ச்சி பயணிப்பதில்லை. இந்தப் புரிதல் சரியாக இல்லாத காரணத்தால் தான் 'இன்றைய குரங்கிலிருந்து மேம்பட்ட version தான் மனிதர்கள். இன்றைய குரங்குகள் பரிணமிப்பதை நிறுத்திவிட்டன, பரிணமித்தவை மனிதர்களாகிவிட்டனர்' போன்ற சில தவறான கருத்துகள் நிலவுகின்றன.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Wednesday 29 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 3

கேள்வி: பரிணாம வளர்ச்சி ஏற்பட பல கோடி ஆண்டுகள் ஆகும் தானே? (அல்லது) இப்போழுதும் பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறதா?
பதில்: இரண்டு கேள்விக்கும் சேர்த்தே பதில் எழுதலாம். பரிணாம வளர்ச்சி என்பது ஏதோ விண்கல் தாக்குவது போல ஒரு நாள் நடந்து முடியும்/முடிந்த நிகழ்வன்று. அது நாள்தோறும், நொடிதோறும் நடந்து கொண்டேயிருக்கும் ஒன்று.
சில ஆண்டுகள் கழித்து உங்கள் நண்பர் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறார். வந்து உங்களது மகனைப் பார்த்ததும் 'அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா?' என்று வியப்பாகக் கேட்கிறார். ஆனால் உங்களுக்கோ உங்களது நேற்று பார்த்தது போலவே தான் இருப்பான். நேற்று கேட்டிருந்தால் அதற்கு முதல் நாள் இருந்தது போலவே தான் உங்களுக்குத் தெரிந்திருப்பான். உங்களது மகன் நாள் தோறும் மாறிக் கொண்டே தான் இருக்கிறான், ஆனால் பார்த்துக் கொண்டே இருப்பதனால் எதுவும் புதிதாகத் தெரிவதில்லை.

இதே போலத் தான் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துமே தனது சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டு இனப்பெருக்கம் செய்து தனது வாரிசுகளை விட்டுச் செல்லும் உயிர்களே பிழைக்கின்றன. அப்படி மாற்றிக் கொள்ள முடியாமல், இனப்பெருக்கம் செய்து வாரிசுகளை விட்டுச் செல்லாத உயிர்கள் அழிந்து போகின்றன. அதனால் தான் தக்கதே பிழைக்கும்.
உலகின் முதல் உயிர் தோன்றிய நாளில் இருந்து பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு அது நடப்பது தெரியவில்லை என்றாலும் நடக்கும்/நடக்கிறது. உலகில் இவ்வளவு உயிர்கள் எப்படி தனக்கே உரிய தன்மையோடும் உடலமைப்போடும் தோன்றியிருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.
பரிணாம வளர்ச்சிக் கொள்கையைக் கொண்டு மட்டுமே உலகில் உயிர்களின் தோற்றத்தையும் பரவலையும் விளக்க முடியும்.

ஆக பதில் இது தான். பரிணாம வளர்ச்சி என்பது ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலும் நடந்தது, இன்றும் நடக்கிறது, இனப்பெருக்கம் செய்யும் உயிர்கள் உள்ள வரை நடக்கும். அது ஒரு வினைத்தொகை போல முக்காலத்துக்கும் பொருந்தும்.

Tuesday 28 May 2019

குழந்தைகள் பெயர்கள் - திருக்குறள்

திருக்குறளில் வரும் சொற்களை வைத்து குழந்தைகளுக்கு சூட்டக்கூடிய அழகுத் தமிழ்ப்பெயர்களைக் கீழே தொகுத்துள்ளேன். சூட்டி மகிழுங்கள்!

பனுவலன்
அகர முதல்வன்
வாலறிவன்
நிறைமொழியான்
மாசிலன்
அறன்
நயனுடையான்
பெருந்தகையான்
வித்தகன்
அதினன்
திண்
தகை
இன்சொலன்
இனியசொலன்
ஆற்றலன்
செப்பன்
பேரறிவாளன்
நீள்புகழன்
ஈதல் உவகையான்
நல்லளி
ஒளியிழை
வள்ளி
நலத்தகை
செவ்வி
மணி
திகழ்
மடந்தை
அணி
காரிகை
வேந்தன்
பணிமொழி
நறுமலர்
கவின்
பைந்தொடி
அழல்
ஆயன்
மதி
பெருமகிழ்
துறைவன்
பாவை
ஆயிழை
அனிச்சம்
மாணிழை
அன்னம்
அணியிழை
சேயிழை
ஆய்மயில்
வியன்
நயன்
குண நலன்
நூல்நயன்
வெல்படை வேந்தன்
மதிநுட்பன்
நாநலன்
சொலல்வல்லன்
அஞ்சான்
நூல்வல்லன்
உயர்வுள்ளன்

Monday 27 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 2

கேள்வி: குரங்கிற்கும் மாந்தருக்கும் அறிவில் ஏன் பெரிய வேறுபாடு?
பதில்: இன்றைய மனிதர்கள் Homo sapiens. நமக்கு வாழும் நெருங்கிய உறவுகள் என்றால் அவை Bonobos மற்றும் Chimpanzees. இப்படிப் புரிந்துகொள்ளலாம், அவை இரண்டும் அண்ணன் தம்பிகள். நமக்கு அவை சித்தப்பா மக்கள் பெரியப்பா மக்கள் போல. அதாவது நாமெல்லாம் ஒரு தாத்தாவின் வாரிசுகள்.
கொரில்லா நமது தாத்தாவின் உடன்பிறந்தவரின் இன்றைய வாரிசு. அதாவது நமக்கும் அதற்கும் தாத்தாவின் அப்பா ஒருவர் தான். இதே போல இன்னொரு தலைமுறை மேலே சென்றால் நம்முடைய தாத்தாவோட தாத்தா Gorilla விற்கும் மூதாதையர். இன்னும் ஒரு தலைமுறை மேலே போனால்  கொள்ளு தாதாவோட தாத்தா Gibbons க்கும் மூதாதையர்.
மீண்டும் ஒரு தலைமுறை மேலே சென்றால் தான் இந்தியாவில் காணப்படும் குரங்குகளின் (Old world Monkeys) மூதாதையர்கள் வந்து இணைகிறார்கள். அதாவது இன்றைய நம்முடைய கொள்ளு தாத்தாவின் கொள்ளு தாத்தா தான் இன்றைய இந்தியக் குரங்குகளுக்கும் மூதாதையர்.
ஆக மொத்தம் நமக்கும் இந்தியாவில் இன்று காணப்படும் குரங்குகளுக்கும் எவ்வளவு தலைமுறை வேறுபாடுகள் என்று பாருங்கள். அதனால் தான் நமது இயல்பும் அவற்றின் இயல்பும் அறிவும் மிகவும் வேறுபடுகின்றன.
நமக்கு நெருங்கிய உறவுகளான சிம்பான்சிகளின் செய்கைகள் நம்மை வியக்க வைப்பாதகவே இருக்கின்றன. கருவிகளைப் பயன்படுத்துதல், குடும்பத்தோட இணக்கமாக இருத்தல் என்று அவற்றிற்கும் நமக்குமான ஒற்றுமைகள் பலவுண்டு.
இன்றைய மனிதன் அளவிற்கு ஏன் அறிவுடைய உறவினர் யாரும் நமக்கில்லை என்கிறீர்களா? முன்னர் இருந்தார்கள் இப்போது அழிந்துவிட்டார்கள். உலகில் இன்னும் வேறு மனித இனங்களும் (Homo neanderthalensis, Homo floresiensis போன்ற மனித இனங்கள்) நம் மூதாதையருடன் வாழ்ந்து வந்தனர். நாமும் இவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல.
நியண்டர்தால்கள் கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயினர். தோராயமாக வேட்டையாடிகளாக இருந்த நம் முன்னோரும் அவர்களும் 4000-5000 ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கின்றனர். நியண்டர்தால் பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கிறது. அவர்களின் அழிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நமது மனித இனத்தோடு கலந்தும், நம்மால் வேட்டையாடப்பட்டும் நியண்டர்தால் அழிந்து போயிருக்கலாம்.
நாம் உற்று நோக்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் அறிவு பற்றிய ஆய்வுகள். அவர்களும் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். முன்னர் நமது மனித இனத்தின் ஓவியங்களாகச் சொல்லப்பட்ட சிலவும் அவர்களது ஓவியங்களாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பேசும் திறன் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட நம் இனத்தின் அறிவுக்கு நிகரான அறிவோடு தான் இருந்திருக்கிறார்கள். அக்கட்டத்தில் நம்மை விட அறிவு வளர்ச்சி பெற்றவர்களாகவும் அவர்கள் இருந்திருக்கலாம். அவர்கள் இன்று இல்லை.
ஆக, இந்தக் கேள்விக்கான பதிலின் சாராம்சம் இது தான். மனிதர்களுக்கு நிகரான அறிவுடைய மற்ற மாந்த இனங்கள் இருந்தன, இப்போது இல்லை. அதனால் பெரிய இடைவெளி நமக்கும் இன்று உயிருடன் இருக்கும் நமது நெருங்கிய உறவுகளுக்கும் இருப்பது போல இருக்கிறது.  இன்று இந்தியாவில் வாழும் குரங்கினங்கள் நம் இனத்தின் சற்றே தூரத்து உறவு தான். அவர்களின் பரிணாமம் நம்மிலிருந்து வேறு வகையாகக் கிளைத்துச் சென்று பல தலைமுறைகளானது தான் அதற்குக் காரணம்.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Sunday 26 May 2019

India Today article about Rakhigarhi DNA sample study explained

An article from India Today about DNA from Rakhigarhi samples is the trending topic now. For those who haven’t read it yet, I have shared the link in comment section. While reading many comments about that article, I understood that the information in the article is misunderstood by many. It is very important to interpret the information correctly as otherwise it will lead to wild assumptions. So I address some misconceptions here.
1. “North Indians, possessors of high level of ANI genes, are not descendants of IVC people”. No this is not true. The DNA sample collected from a deceased man from Rakhigarhi has living descendants, that means the deceased man is one of the common ancestors of all Indians. Numbers and genetics say so. For this given period of time (more than 5000 years), a person would have either no living descendants or would be a common ancestor for all the living people in that given area. As this deceased man has living descendants, for sure he would be a “Biological” ancestor for all the Indians. The current residents of Rakhigarhi are also descendants of that deceased man.

2. Explaining that, brings to next question.  Then why do the article says IVC people are more akin to South Indians than North Indians? Because ANI genes are more frequent in North Indians than in South Indians. This ANI genes were from the Aryans. When it comes to tribal people of South India ANI genes are very low, thus making them closer to IVC people in genetic makeup than the rest of Indians.

3. This particular genome project revealed that R1a1 (y-chromosome from Aryan) is lacking in the sample, thus confirming the previous studies that IVC pre-dated Aryan migration or in other words IVC was not a Vedic civilization. Though the Aryan descendants in India can trace their ancestry to IVC people, Aryans and IVC people were not as such related. That would also mean that they were not the speakers of Indo European languages. Thus making their language and culture more close to South Indians than the rest of the India. Though almost all of the Indians are biological descendants of non-vedic IVC people, it is not true for culture and language. 

4. Iranian farmers mentioned in the article are not current generation Persian speaking, white skinned, sharp featured people. Those Iranian farmers who migrated to Indus Valley would have more in common with Indians than the current day Iranians. Nomadic hunters who have migrated to North America before 12,000 years have more genes in common with current generation Asians than with Europeans or Russians. Though it is shocking, it is the truth. Like how the revelation that IVC people share more genes in common with a tribal group of South India than with the current residents of Indus Valley didn't shock us, this shouldn’t shocking us either.

5. Saying my paternal grandfather is one of my ancestors doesn’t mean that I am not descendant from my maternal grandfather. Both my grandparents might not be related to each other, but I am descendant from both of them. Though I am biologically descendant from both, I may be culturally descendant from only of them or have a cultural admixture. When this is a common understanding, why should the migration of Iranians farmers upset any of us (Tamils)? As R. Balakrishnan, IAS, mentions in his book, let us start looking North instead of South to understand our roots.

6. I don’t know why many people interpret that Out-of-Africa theory was debunked through these kind of genome studies. It is a well proven theory. All these studies only strengthen that theory. All Homo Sapiens (even all extinct hominoid species) trace their ancestry to Africa.

P.S : Any mistake would be corrected if refuted with evidences from scholarly sources.

Date: Sep 04 2018.

https://www.indiatoday.in/magazine/cover-story/story/20180910-rakhigarhi-dna-study-findings-indus-valley-civilisation-1327247-2018-08-31

மனிதர்களின் மகப்பேறு ஏன் சிக்கலானது?

'நம்ம முன்னோர் எல்லாம் வீட்டுல குழந்தை பெத்துக்கலையா? ஆறு ஏழு பெத்துக்கிட்டு செழிப்பா வாழலையா?'
ஆமாம், ஆத்தாக்கள் ஆறு ஏழு என்று பெற்றார்கள், தாத்தாக்கள் இரண்டு மூன்று என்று மனைவி கட்டிக்கொண்டார்கள். மூன்று தலைமுறை தாண்டிப் பாருங்கள் உங்கள் வீட்டிலும் ஒரு தாத்தாவிற்கு இரண்டு மனைவி இருந்திருப்பார், முதல் மனைவி மகப்பேறுச் சிக்கலினால் இறந்திருப்பார்.
நிச்சயம் அவர்கள் முட்டாள்கள் இல்லை, அவர்களுக்கு வேறு வழியில்லை. புத்திசாலிகளாய் இருந்த காரணத்தினால் தான் மருத்துவ வசதி பெருகியதும் வீட்டில் பிள்ளை பெருவதை நிறுத்திவிட்டார்கள். அதனால் தான் நீங்களும் நானும் மரணிக்காமல் இன்று இதைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.

மகப்பேறு இயற்கை தானே? ஆமாம் மகப்பேறும் இயற்கை தான் அதில் தாயும் சேயும் இறப்பதும் இயற்கை தான். மனிதர்களின் மகப்பேறு என்பது மிகவும் சிக்கலானது. அதைவிடச் சிக்கலான பேறு காலம் கொண்ட பாலூட்டிகள் ஒன்றிராண்டு தான். அவற்றின் பேறு கால தாய் சேய் இறப்பு விகிதமும் மிக அதிகம். இது தான் இயற்கை, மீண்டும் வாசியுங்கள், இது தான் இயற்கை.

பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதர்கள் இரட்டைக்காலில் நடக்கத் தொடங்கிய போது அவர்கள் இடுப்பு எலும்பு குறுகத் தொடங்கியது. மனித மூளை வளர்ச்சி அடையத் தொடங்கிய போது மண்டையும் பெரிதானது. மண்டை பெருத்த குழந்தைகள் குறுக்கு சிறுத்த மனிதர்களுக்கு பிறக்கத் தொடங்கினார்கள், பிறக்கிறார்கள். அப்படிப் பிறந்தால் இயற்கையில் அது சிக்கல் தான். பலர் இறந்து தான் போனார்கள். 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இருபது ஆண்டுகளுக்கு முன்பு வரை அது தான் இயற்கை.

வரையாட்டுக் குட்டி ஒரு வாரத்தில் நரியிடம் இருந்து தப்பி ஓடும், வடதுருவத்தில் போட்டதும் ஆட்டுக் குட்டி வலசை போகும் தன் கூட்டத்தோடு இன்னல்களைக் கடந்து நடக்கும், யானைக் குட்டி பஞ்ச காலத்திலும் தண்ணீர் தேடி அம்மாவுடன் நடக்கும். இது எதுவும் மனிதக் குட்டிகளுக்கு சாத்தியம் இல்லை. ஏனென்றால் மனிதக் குட்டிகள் அவற்றைப் போல முழு வளர்ச்சி அடைந்து பிறப்பதில்லை. மூளை பெரிதாக இடை சிறிதானதும் பேறுகாலம் சிக்கலானது. முழு வளர்ச்சியடையாமல் பிறந்த குட்டிகளும் அவற்றின் தாயுமே பிழைத்தனர்.

இத்தனை சிக்கலையும் மனித இனம் இந்த ஒற்றை மூளைக்காகத் தான் கடந்திருக்கிறது.
அப்படிப் பெரிதான மூளை நம் காலத்தில் இந்தப் பல மில்லியன் ஆண்டுகால சிக்கலுக்கு வழி கண்டுபிடித்திருக்கிறது. இவ்வளவு காலம் மனித சமூகம் பெரிய தலையைத் தூக்கிக் கொண்டு இரண்டு காலில் நடந்ததிற்கு இப்பொழுது தான் பலன் கிடைத்திருக்கிறது. இயற்கையின் உந்துதலினால் அதனைக் கண்டு அடைந்திருக்கிறோம்.

எதையுமே புரிந்துகொள்ளாமல் 'பிரசவம் இயற்கை, நம் முன்னோர்கள்' என்று கிளம்ப வேண்டாம்.

பணத்திற்காக அறுவை சிகிச்சை செய்வார்கள் என்று பயமாய் இருந்தால் அக்கம் பக்கம் கேளுங்கள். நல்ல மருத்துவமனைக்குச் செல்லுங்கள். வீட்டுப் பிரசவம் பற்றிப் பேசுவது பகிர்வது செய்யும் நேரத்தில் நல்ல மருத்துவமனைகள் பற்றி பேசுங்கள் பகிருங்கள்.

நல்ல உணவை உண்கிறோம், நஞ்சில்லாத காய்கறிகள் வாங்கி சமைக்கிறோம். எல்லாம் எதற்காக? நாளை நளமுடன் நம் குழந்தைகளோடு வாழத் தானே? அத்தனை நல்லதையும் ஒரே தவறான செயலால் தூக்கிக் குப்பையில் வீசுவது மடமையல்லவா?

ஆண்களுக்கு! நீங்கள் உங்கள் உயிரைக் கொடுத்துப் பிள்ளை பெறப் போவதில்லை, சன்னி வந்து சாகப் போவதில்லை. அதனால் அமைதியாய் இருங்கள். அப்பா பட சமுத்திரக்கனி போல ஆணாதிக்க சிந்தனையோடு மனைவி இப்படித் தான் குழந்தை பெற வேண்டும் என்று வற்புறுத்தாதீர்கள், மண்டை கழுவாதீர்கள்.

பெண்களுக்கு! உங்கள் குழந்தையை உங்களைவிட யார் நன்றாகப் பார்த்துக் கொள்ள முடியும்? அவர்களை மனதில் கொண்டு முடிவெடுங்கள். யாராவது ' ஆட்டுக்கல்லில் மாவாட்டுங்கள் தோழி! வீட்டில் சுகப்பிரசவம் ஆகும் தோழி' என்று சொல்லிக் கொண்டு வீட்டுப் பக்கம் வந்தால் சற்றும் சிந்திக்காமல் அதே ஆட்டுக்கலை அவர்கள் தலையில் போடுங்கள்.
ஆட்டுக்கல்லில் மாவாட்டுவதும் ஜிம் போய் உடற்பயிற்சி செய்வதும் உங்கள் விருப்பம், உரிமை. இவர்கள் பேச்சுக்கள் உங்கள் குற்ற உணர்ச்சிகளைத் தூண்ட விடாதீர்கள். நல்ல மருத்துவமனைக்குச் சென்று பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள்.

Aug 02 2018.

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 1

கேள்வி: குரங்கில் இருந்து மனிதன் வந்திருந்தால் குரங்குகள் ஏன் இன்னும் இருக்கின்றன?
பதில்: ஒரு உதாரணம் சொல்கிறேன்.
உங்களது தாத்தா ஊரில் விவசாயம் செய்தவர், கட்டு உடல் கட்டை மீசை என்று இருந்தவர். உங்களது பெரியப்பாவின் மகன் இப்போதும் உள்ளூரில் இருக்கிறார்.
உங்கள் அப்பா ஊரைவிட்டு நகரம் சென்று நீங்கள் வெளிநாடும் சென்றுவிட்டீர்கள். மீசை எல்லாம் எடுத்து கொஞ்சம் தோலும் வெளுத்துவிட்டது.
உங்களையும் உங்கள் பெரியப்பா மகனையும் நிற்க வைத்துப் பார்த்தால் அவர் தான் உங்களைவிட உங்கள் தாத்தாவைப் போல இருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் உங்களது தாத்தாவைப் பார்த்தது போலவே இருக்கிறது என்கிறார்கள். அப்படிச் சொன்னாலும் உங்கள் பெரியப்பா மகனும் உங்களது தாத்தாவிலிருந்து நிறைய மாற்றங்களை அடைந்திருப்பார். ஆனால் உங்களைப் போன்ற மாற்றாங்கள் இல்லை.
1. பார்க்க உங்களது தாத்தாவைப் போல இருக்கிறார் என்பதற்காக அவர் உங்கள் தாத்தா இல்லை.
2. உங்கள் பெரியப்பா மகன் எப்படி உங்கள் தாத்தாவிற்கு வாரிசோ அதேயளவு நீங்களும் அவருக்கு வாரிசு தான். வெளிநாடு போய்விட்டீர் என்பதற்காக அவர் உங்களது தாத்தா இல்லை என்று ஆகிவிடாது.
3. நீங்களும் உங்களது பெரியப்பா மகனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் தான்.
(இந்த உதாரணத்தை யாரையும் பழிப்பதற்காய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு எளிய புரிதலுக்காகத் தான். உங்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)
நீங்கள் தான் இன்றைய மனிதர்களான Homo sapiens. உங்களது பெரியப்பா மகன் தான் இன்றைய சிம்பன்சி போன்ற மனிதக் குரங்குகள். உங்களது தாத்தா தான் இன்றைய மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் மூதாதை. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் என்று சொல்வது இன்றைய குரங்குகளில் இருந்து அல்ல. மூதாதைக் குரங்குங்களிடமிருந்து. அந்த மூதாதையர்கள் நம்மைக் காட்டிலும் இன்றைய குரங்குகளோடு கூடுதல் ஒற்றுமை கொண்டிருந்தனர். நாம் இரண்டு காலில் நடப்பது, மரத்தைவிட்டு கீழ் இறங்கியது என்று நிறைய மாறிவிட்டோம், வெளிநாடு போன நீங்கள் மாறியது போல. இன்றைய குரங்குகளும் நமது மூதாதையரிடம் இருந்து நிறைய மாறியிருப்பார்கள்.
1. மனிதர்கள் இன்றைய குரங்குகளிலிருந்து பரிணமிக்கவில்லை.
2. இன்றைய மனிதர்களுக்கும் இன்றைய குரங்குங்களுக்கும் ஒரே மூதாதையர் தான்.
3. நாமும் இன்றைய குரங்குகளும் ஒன்று விட்ட சகோதரர்கள்.
பி.கு: இந்த உதாரணம் 100% விளக்கம் தரவில்லை. இது வெறும் அடிப்படைப் புரிதலுக்கான எடுத்துக்காட்டும் விளக்கமும் மட்டுமே.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

Saturday 25 May 2019

ஞானம் (wisdom) என்னும் 68 வயதுப் பறவை

எந்தப் பறவை அதிக ஆண்டுகள் வாழும் என்ற கேள்விக்கான விடை தான் இப்பதிவு.

மனிதர்களுக்குத் தெரிந்து இயற்கையில் வாழும் பறவைகளில் ஞானம்(wisdom) என்னும் பெயர் கொண்ட லெய்சேன் அல்பட்ராசு (Laysan Albatross) இனத்தைச் சார்ந்த பறவை தான் மிகவும் வயதான பறவை. 68 வயதான இப்பறவை 2018 ஆம் 37 வது முறையாக முட்டை வைத்துக் குஞ்சு பொரித்தது.

பொதுவாகவே லெய்சேன் அல்பட்ராசு பறவைகள் அதிக வாழ்நாள் கொண்டவை. 50,60 வயதைத் தாண்டிய இந்த இனப்பறவைகள் நிறைய இருக்கின்றன. தன் வாழ்நாள் முழுக்க ஒரே இணையுடன் வாழும் பறவை இது. ஆண்டுக்கு ஒரேயொரு முட்டையை மட்டுமே வைத்து அடை காக்கும் இப்பறவைகள். ஆண் பெண் இரண்டுமே முட்டையை அடைகாத்தல், குஞ்சுகளுக்கு உணவு தேடல் என அனைத்து வேலைகளையும் பகிர்ந்து கொள்ளும். கிட்டத்தட்ட குஞ்சுகளுக்காக 7 மாதம் செலவிடுவதால், பெரும்பான்மையான பறவைகள் ஆண்டுதோறும் முட்டையிடுவதில்லை, விட்டுவிட்டே முட்டையிடுகின்றன. தன் வாழ்நாளில் 90 சதவிகிதத்தை கடலில் கழிக்கும் இப்பறவைகள் முட்டையிடும் காலங்களில் தான் பிறந்த இடத்திற்கே திரும்பி வருகின்றன. பென்குயின்களைப் போலவே கிட்டத்தட்ட ஒரு மில்லியன் அல்பட்ராசுகள் சேர்ந்து ஒரே இடத்தில் இனப்பெருக்கம் செய்கின்றன. 

ஞானத்தைப் பற்றிக் கொஞ்சம் பார்ப்போம். 1956 ஆம் ஆண்டு உயிரியலாளர் சேண்ட்லர் ராபின்சு ( Chandler Robbins) கிட்டத்தட்ட ஐந்து வகையான ஞானத்தின் காலில் அடையாளப்பட்டையை மாட்டினார். 46 ஆண்டுகள் கழித்து 2002 ஆம் மீண்டும் ஞானத்தைப் பார்த்த போது தான் அவருக்குத் தெரிந்தது முதலாம் ஆண்டு தான் அடையாளப்படுத்திய 8,400 பறவைகளில் ஒன்று தான் இது என்று. தனது 97 ஆவது வயதில் 2017 ஆம் ஆண்டு அவர் இயற்கை எய்தினார். அவர் அடையாளப்படுத்திய ஞானம் இன்னும் உயிருடன் இருக்கிறது. கூடவே பறவையாளர்களுக்கு தகவல் களஞ்சியமாகவும் விளங்குகிறது.

ஞானத்தின் வாழ்க்கையைத் தொடர்ந்து கவனிப்பதன் மூலம் லெய்சேன் அல்பட்ராசு இனத்தைப் பற்றிய பல புரிதல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு கிடைத்துள்ளது.  Midway Atoll வனவிலங்குகள் சரணாலயத்தில் 2018 ஆம் ஆண்டு ஞானம் 37 வது முறை முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து தன் இணையுடன் அதனை வளர்த்து வருகிறது. என்ன வியப்பு என்றால் 2001 ஆம் பொரித்த ஞானத்தின் குஞ்சுவொன்று, இந்த முறை முதன்முறையாகத் தான் பிறந்த இடத்திற்கே வந்து முட்டையிட்டிருக்கிறது.

அமெரிக்க மீன் மற்றும் கானுயிர் சேவகத்தைச் சார்ந்த உயிரியலாளர் கெல்லி குடேல் (Kelly Goodale) தனது வலைப்பூவில் சொன்னதாவது "Midway Atoll இல் இருக்கும் அல்பட்ராசு வாழ்விடமானது பல மில்லியன் அல்பட்ராசு பறவைகளை மட்டுமல்ல பல தலைமுறைகளையும் பல குடும்பங்களையும் உள்ளடக்கியது. கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன், அடுத்த முறை ஞானம் இந்த இடத்திற்கு திரும்பி வரும்போது தனது குஞ்சுகளோடும் அவற்றின் குஞ்சுகளோடும் சூழப்பட்டு இருக்கும்"

Friday 24 May 2019

கழுகு இரண்டின் காதல் கதை ❤️

கழுகுகளுக்கு வயதானதும் இறக்கையின் எடை கூடிவிடும், அதன் நகங்களும் அலகும் மிகப்பெரிதாகி அதனால் வேட்டையாட இயலாமல் போய்விடும். அது உடனே நகத்தையும் அலகையும் உடைத்து விட்டு, இறக்கையைப் பிய்த்துவிட்டு 5 மாதம் மலையுச்சியில் பட்டினியாய் தவமிருந்து, அலகும் நகமும் இறகும் வளர்ந்த பிறகு வேட்டையாடும். பிறகு 100 ஆண்டுகள் வாழும்.

மேலே சொன்ன அனைத்துமே கட்டுக்கதை. இது இணையம் முழுதும் உலா வருகிறது. மேலாண்மை வகுப்பு என்ற பெயரில் இந்தக் கழுகு போல இருங்கள் என்று வேறு சொல்லிக் கொடுப்பார்கள். உண்மையில் இதெல்லாமே பொய்.

இந்தக் கதையை வெண்டலைக் கழுகுகளுக்கும் சில சமயம் பிணந்தின்னிக் கழுகுகளுக்கும் ஏற்றிக் கூறுவார்கள். அதெல்லாமே கட்டுக் கதை தான். வெண்டலைகள் அதிகப்படியாக 27 ஆண்டுகள் வாழ்ந்திருக்கின்றன, இதுவே அதிகம் தான். பிறகு ஏன் இப்படிக் கட்டுக் கதைகள் சோடிக்கப்படுகின்றன என்று கேட்கிறார்களா? அதெல்லாம் content கிடைக்காத பட்டிமன்றப் பேச்சாளர்கள் சொல்லி வைத்தது.

ஐயோ! இயற்கையில் இப்படி கதைகளே இருக்காதா, என் வாழ்க்கையே பொய்யா என்றெல்லாம் வருத்தப்பட வேண்டாம்.

வடகிழக்கு அமெரிக்கப் பறவையாளர்களையும், அமெரிக்கத் தலைநகர வாசிகளையும் இந்த ஆண்டு காதலர் நாளன்று இருக்கையின் ஓரத்தில் அமர்ந்து கொண்டு நகம் கடிக்க வைத்தக் காதல் கதை ஒன்று இருக்கிறது. 'மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதல் அல்ல அல்ல அல்ல' என்று சொன்ன காதல் கதை.

கழகு இரண்டின் காதல் கதை ❤️

அமெரிக்கத் தலைநகரில் கழுகுக் கூடொன்று இருக்கிறது. அங்கு தான் நீதியும் (Justice) விடுதலையும் (Liberty) வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் சொந்த ஊர் அதுவல்ல. ஒரு வகைப் பூச்சிக்கொல்லியால் அமெரிக்காவில் பெரும்பாலன இரையாடிப் பறவைகள் அழிவிளிம்பை எட்டின. அப்பூச்சிக்கொல்லிக்கு தடைவிதித்து இரையாடிகளை அமெரிக்கா மீட்டெடுத்தது. தலைநகரில் வெண்டலைக் கழுகுகள் இல்லாமல் போனதால் வடக்கே வேறொரு மாநிலத்தில் இருந்து கழுகுகள் கொண்டு வரப்பட்டு இங்கே விடப்பட்டன.

அப்படி வந்தவர்களின் வழித்தோன்றல் தான் நீதியும் விடுதலையும். 14 ஆண்டுகளுக்கு முன்பு தென்மேற்கு வாசிங்கடனில் கூடிகட்டிக் குடியமர்ந்தனர். அன்றிலிருந்து பிரியாத இணையாக இருந்த அவர்கள் ஆண்டுதோறும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொரித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இவர்களை நேரடி ஒளிபரப்பு மூலம் பார்த்து மக்களும் மகிழ்ந்திருந்தனர்.

கடந்த பிப் 9 ஆம் தேதி மீண்டும் இணை சேர்ந்தது இந்த இணை. அடுத்த நாளே விதி வீட்டுக்குள் கபடி விளையாடியது. நீதி திடீரென்று காணமற் போனது. இந்த நேரத்தில் விடுதலை இரண்டு முட்டைகளையும் வைத்தது. இன்னும் குளிர் காலம் முடிவடையாத நேரத்தில் உறையும் பனியில் முட்டையையும் அடைகாத்துக் கொண்டு மீனும் பிடிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டது விடுதலை.

இந்த நேரத்தில் தான் இன்னொரு இளம் வெண்டலை விடுதலையின் கூட்டுக்கு வந்தது. அதன் காலில் இருந்த சிறு காயங்களை வைத்து ஒரு வேளை நீதிக்கும் இதற்கும் ஏற்பட்ட சண்டையில் நீதி தோற்று எங்கேயோ அடிபட்டு ஓடிவிட்டதோ என்ற ஐயம் பறவையாளர்களுக்கு வரத் தொடங்கியது. விடுதலைக்கு வந்த புதியவனைப் பிடிக்கவில்லை. அவனைக் கண்டுகொள்ளவில்லை. அப்பாடா என்று பெருமூச்சு விட்ட மக்கள் நீதியைத் தேட தொடங்கினார்கள். 'யாராவது பார்த்த சொல்லுங்க' என்று முகநூலிலும் செய்தித்தாளிலும் எழுதி தலைநகர மக்கள் புலம்பிக் கொண்டிருந்தார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் விடுதலையும் தன் கூட்டைவிட்டு போய்விட்டது. இரண்டு நாட்கள் வரவில்லை. முட்டைகள் இரண்டும் குளிரில் வீணாய்ப்போயின. மீண்டும் விடுதலை வந்ததும் இன்னொரு இளம் வெண்டலை அதன் கூட்டிற்கு வந்தது. இது முன்னதை விட இன்னும் கொஞ்சம் கரிசனத்தோடு நடந்து கொண்டது, முட்டையை அமர்ந்து அடையெல்லாம் காத்தது. நீதி வராது என்று முடிவு செய்தோ என்னமோ இந்த வெண்டலையோடு பறந்து சென்றது விடுதலை.

இப்படி இருக்க 19 நாட்கள் கழித்து திடீரென்று ஒரு நாள் கூடு திரும்பியது நீதி. விடுதலையில்லாத போது கூட்டுக்கு வந்து காத்திருந்தது. விடுதலை வந்தால் என்ன செய்யும்? ஏற்குமா ஏற்காதா?

விடுதலை வரும்போது கூட்டிற்கு பக்கத்தில் கிளையில் அமர்ந்து கொண்டது நீதி. விடுதலை கூட்டுக்குத் திரும்பி வந்தது. நீதியை எங்க வந்த என்பது போலப் பார்த்துவிட்டு, தான் பிடித்து வந்த மீனை உண்ணத் தொடங்கியது விடுதலை.
சரி நம்ம விடுதலை தான என்பது போல மீனில் கை வைக்கப் போனது நீதி. 'மீன்ல கைய வச்ச, வச்ச கைய வெட்டிருவேன்' என்பது போல உறுமிவிட்டு தன் மீனைத் தான் மட்டுமே தின்று கொண்டிருந்தது விடுதலை.

பெரியதாய் ஏதாவது தப்பு செய்ததற்கு மனைவி சண்டைக்குப் போனால் 'நான் வேணும்னா காப்பி போட்டுக் கொடுக்கவா' என்று கேட்கும் கணவனைப் போல, நீதியும் கூட்டில் இருந்த குச்சியை அடுக்குவது போல பாவனை செய்தது.

இதே நாடகம் இன்னும் சில நாள் அரங்கேறிய பின்பு 'சரி போ, இந்த ஒரு தடவ மன்னிக்கிறேன்' என்று விடுதலை நீதியை ஏற்றுக் கொண்டது. மீண்டும் இணை சேர்ந்தனர் இருவரும். மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர் மக்கள்.

இருவரும் இல்லாத நாளில் இரண்டு முட்டைகளையும் (பொரிக்கவே போகாத முட்டைகள் தான்) ரக்கூன் ஒன்று வந்து தின்றுவிட்டுச் சென்றது. நீதியை விட்டுட்டு மக்கள் ரக்கூனைத் திட்ட தொடங்கினர். இனி இந்த ஆண்டு அவை குஞ்சு பொரிக்கா.

14 ஆண்டுகள் சேர்ந்திருந்த இணை அடுத்தாண்டு சேர்ந்திருக்குமா? இல்லை நீதியின் போக்குப் பிடிக்காமல் விடுதலை விடுதலை பெருமா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.