Friday 17 April 2020

'Bella Ciao' - தமிழில்

'Money Heist' என்ற பிரபல தொலைக்காட்சித் தொடர் மூலம் பிரபலமான ஒரு பாடல் 'Bella Ciao'.
இப்பாடல் நாஜி ஜெர்மனியை எதிர்த்த இத்தாலிய போராட்டக்காரர்கள் பாடியது. வல்லாதிக்கத்தை எதிர்த்து ஒலிக்கப்பட்ட எதிர்ப்பின் குரல். மரணத்தை ஏற்றுக் கொண்டு மகிழ்ச்சியாய் ஆதிக்கத்தை எதிர்க்கும் புரட்சியாளனின் குரலாய் இப்பாடல் ஒலிக்கும்.

பலமுறை கேட்டுவிட்டேன். கேட்டுவிட்டு சும்மா போக என்னால் தான் முடியாது. இதோ, என்னுடைய கரடுமுடான மொழிபெயர்ப்பு. வரிக்கு வரி எல்லாம் மொழிபெயர்க்கவில்லை. இசைக்கும் கூட மொழிபெயர்க்கவில்லை. ஆனால் ஒரு மொழிபெயர்ப்பு.

ஓ தோழா! ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!
மக்கள் உரிமையைப் பறித்தானே!
ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!
போராட..... நானும் போறேன்...
மரணம் ஏற்றே நானும் போறேன்...

ஓ தோழா! ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!
நானும் வீழ்ந்தால், மண்ணில் புதைப்பாயே..
தோழா! நான் போறேன், போய் வாறேன்!

அங்கே ஓர் நாள், பூவும் பூக்கும்...
வழிப்போவர் மீது வாசம் வீசும்...
ஓ தோழா! நான் போறேன், போய் வாறேன்!

நான் போறேன், போய் வாறேன்
'உரிமை வேண்டி விதைக்கப்பட்டான்' என்று..
அந்தப் பூவும் பாடும்...
ஓ தோழா! நான் போறேன்! நான் போறேன்... போறேன் நான்.... போறேன்!

இந்தப் பாட்டுக்கு சற்றும் குறையாத உணர்வோடு மரணத்திற்கு முத்தமிடும் வரிகள் வேண்டுமென்றால், பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' நூலையும், அண்ணாவின் 'மரண சாசனம்' நூலையும் படிக்க வேண்டும்.