Sunday 23 February 2014

தஞ்சை பெரிய கோவிலின் யாளி வரிசை.

ஒவ்வொரு யாளி மீதும் ஒரு வீரன் அமர்ந்திருப்பதைக் காணலாம். இது கற்பனை விலங்கேயாயினும் அசாத்திய கற்பனை தான்.







Friday 14 February 2014

"நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்" பதிவுக்கு இட்ட மறுபதிவு. (நியூட்டனின் ஆப்பிள் கதை)

இந்த நியூட்டன் கதை நாங்காம் வகுப்பு ஆங்கில பாடத்தில் முதன்முறையாக வந்தது. அந்த ஆசிரியைப் பெயர் கல்பனா. நன்றாக நினைவிருக்கிறது. "ஆப்பிள் கீழே விழுந்த என்ன பன்னியிருப்பீங்க?" என்று கேட்டுவிட்டு எங்கள் பதிலுக்கு எல்லாம் காத்திருக்கவில்லை, " சாப்பிட்டுருப்பீங்க, அதான் நாம எல்லாம் இப்படி இருக்கோம்" என்று பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். "அடேங்கப்பா.. எனக்கு ஆப்பிளே பிடிக்காது, நான் எப்படி அதை சாப்பிட்டிருப்பேன் என்று சொல்கிறார்கள்" இப்படியாக ஏதோ எண்ணிக்கொண்டிருந்து வகுப்பு ஓடியிருக்கும். இதெல்லாம் நினைவிருக்கிறதா? என்று கேட்க தோன்றும் பலருக்கு. அதற்குக் காரணம் பிற்பாடு நடந்த இந்த கூத்து தான்.

self evaluation பகுதியில் இருந்து மட்டும் தான் கேள்விகள் வரும். அதற்கு முன்னமே ஆசிரியை நடத்த class work நோட்டில் "is was" மாறாமல் எழுதிவைத்துக்கொண்டு அதை அப்படியே விழுங்கி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டும். இது தானே நடக்கிறது ரொம்ப காலமாக. அந்த முறை தேர்வில், புதிதாக ஒரு கேள்வி வந்திருந்தது. அதற்கு பதில் எழுதாமலேயே அனைவருக்கும் மதிப்பெண். நான் மட்டும் சொந்தமாக ஏதோ எழுதிவைக்க, "அது self evaluation ல இல்லனு கூட உனக்கு தெரியல, வர வர நீ ஒழுங்காப் படிக்கறது இல்ல சுபாஷினி" என்று தொடங்கி திட்டி தீர்த்து, பக்கத்து வகுப்பு ஆசிரியையிடம் "பாருங்க இவள, இப்பவே கதை எழுதற எங்க போய் படிச்சு மார்க் வாங்கி உருப்பட போற" என்ற அளவுக்கு அசிங்கப்படுத்திவிட்டார். அது எனது படிக்கத் தகுதியில்லாத் தனத்தின் வெளிப்பாடகவே கருதப்பட்டது. ஒரு அவமானம் சின்னமாகவே என் மனதில் பதிந்துவிட்டது. பத்தாம் வகுப்பில் ஒருமுறை அந்த ஆசிரியைப் பார்த்த போது கூட இதை சொல்லி சிரித்தார். இப்பொழுது பார்த்தால் சொல்லலாம். நானும் "மக்கப்" செய்து 1161 மதிப்பெண் எடுத்தேன் என்று.

இந்த நிகழ்வுகளை நினைவூட்டியது மதி அவர்களின் பின்வரும் பதிவு.
http://sunshinesignatures.blogspot.in/2014/01/blog-post_26.html#comment-form

Tuesday 4 February 2014

சுடச்சுடரும் பொன்!!!

ஒருவருக்கு துன்பம் மேல் துன்பம் வர வர அவர்கள் தங்கள் நற்தன்மையை மேன்மேலும் காட்டுவர் என்னும் பொருளிலும், எப்பொழுதும் நல்ல ஒழுக்கத்துடன் இருப்பவருக்கு சூடு மேல் சூடாய் துன்பம் வரும் என்னும் பொருளிலும் இந்த சொற்றொடரைக் கொள்ளலாம். எவ்வாறாயினும் சூடு தான் பொன்னை மிளிரச் செய்கிறது. அது போல் துன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த உவமை பின்வரும் திருக்குறளில் காணப்படுகிறது.

"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (குறள்-267)."