Saturday 26 April 2014

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன ; பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன...

என்னது இப்படி ஒரு பதிவானு யோசிக்காதீங்க.
"அடடே இந்த எழுத்தையெல்லாம் எங்க எப்படி உச்சரிக்கனும்னு எழுதப் போறீங்க , சரியா? " அப்படினு கேட்ட அதுவும் இல்ல. இதெல்லாம் எங்க பயன்படுத்தனும் எப்படிப் பயன்படுத்தனும்னு சொல்றதுக்கு முன்னாடி இதுக்கெல்லாம் என்ன பெயர்னு சொல்லத் தான் இந்த பதிவு. (கலி முத்திடுச்சு).

பள்ளத்துக்கு வர 'ள' , குண்டு 'ல', ஒல்லிக்குச்சி 'ர' , ரெட்டச் சுழி 'ன' (சின்ன வயசுல ரொம்ப சேட்டை செஞ்சதுனால இதுக்கு ரெண்டு சுழியோ!!!)... மூனு சுழி "ண"... (நாலு சுழி போடற தமிழ் ஞானிகள் கூட சில பள்ளிகளில் இருப்பாங்க)... இப்படிப் பல nicknames கேட்டு ரொம்ப நொந்து போய் இதை எழுதுகிறேன்.

இவற்றையெல்லாம் எப்படிக் குறிப்பிட வேண்டும்???
இதோ இப்படித் தான்.

ல - தனி 'ல'கரம். (பாவம் மத்த ழ,ள கூட சேர விடாம வ வந்து இதத் தனியா பிரிச்சுடுச்சு. இதுத் தனியா இருக்கு)
ழ - சிறப்பு 'ழ'கரம். (தமிழுக்கே உரிய சிறப்பு.)
ள- பொது 'ள'கரம்.

ர - இடையியன 'ர'கரம்
ற - வல்லின 'ற'கரம்

ண - டண் 'ண'கரம் ( 'ட'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ந - தந் 'ந'கரம் ( 'த'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ன - றன் 'ன'கரம் ( 'ற'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)

இனிமேல் பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க.. மனசு வலிக்குது.


Sunday 13 April 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சித்திரை முதலாய் ஒளிரும் தேவி!
சித்திரை நிலவாய் குளிரும் தேவி!

மா வைத்தோம் மானுடம் செழிக்க!
பலா வைத்தோம் பல்லுயிர் ஒம்பிட!
வாழை வைத்தோம் வையம் வாழ!

முக்கனி கனியும் நாளில் பிறந்து
மூவா என்றும் வாழும் தேவி

திங்கள் பன்னிரண்டும் தழைக்க வைப்பாய்!
எங்கள் வாழ்வை செழிக்க வைப்பாய்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி,
சுபாசினி..

Tuesday 8 April 2014

மயில்விடு தூது!!! (முருகனுக்குத் தலைவி அனுப்பும் தூது)














மலைகளின் மன்னனிடம், திருச்செந்தூர்



அலைகளின் அரசனிடம் எந்தன்
நிலையை எடுத்துரைக்கும் தூதுக்
கலையை நீ அறிவாயோ???

காவல் கடந்தே காதல் சொல்ல,
சேவல் கொடியுடையானை நீ சென்றடைய
ஏவல் புரிந்தேனே! கெஞ்சியே உனக்கு
ஏவல் புரிந்தேனே! உயிர் மெலிந்தேனே.

உணவு துறந்தேன், நல்ல
உடை மறந்தேன், பகலில்
கனவில் தொலைந்தேன், அன்ன
நடையை இழந்தேன்- குமரன்

நினைவு வாட்ட விழிநீர்
மடை திறந்தேன் நானே!!!
துணையாக தூது செல்லாயோ??? உன்
விடையாது மயிலே சொல்லாயோ??



















'சித்தம் குழம்பியதோ? இவளுக்குப்
பித்தோ? பேயோ?' என
ஒத்த நோய்சொல்லி சுற்றம்
நித்தம் புலம்பியதே- அழகனே
மொத்தக் காரணம் என்று
சுத்த மொழியில் நீ செப்பாயோ???

ஒற்றைத் தலைக் காதலால்

சுற்றித் தலை சாய்கிறதே,
நெற்றிக் கண்ணுடையான் மகனைப்
பற்றி மனம் நோகிறதே...

உமையாள் மைந்தனை எண்ணி

இமைகள்  கருக அழுகின்றேன்.
தண்ணீரில் அழும் மீனாய்
கண்ணீரில் நானே கரைகின்றேன்...

அப்பன்சாமி முருகனை என்

சொப்பனத்தில் கண்டே களிக்கின்றேன்.
நேரில் வந்து நில்லானோ?? எனைத்
தேரில் ஏற்றிச் செல்லானோ??

ஆம்பலும் அல்லியும் அங்கே

கூம்பும் நேரம், அவனை
நாடுதே நெஞ்சம் நாளும்
கூடுதேயென்  நெஞ்சின் பாரம்.















மறையாத புகழுடையோன் மேலே
குறையாத காதல் கொண்டேனே!
விரைவாகச் சென்று நீயும்
நிறைவாக இதனை உரைப்பாயே!!

மயிலோன் மீது கொண்டது
மையல் இல்லை காதலென்று,
மயிலாள் நெஞ்சை மின்
மெயிலாய் மயிலே, மொழிவாயே!!!

வெயில் சாயும் முன்பே!
மதியும் காயும் முன்பே!
துயிலெனைக் கொல்லும் முன்பே!
விதியும் உயிர்க் கொள்ளும் முன்பே!

குருதி உள்ளே உறையும் முன்பே!
உறுதியும் கொஞ்சம் குறையும் முன்பே!
கருதிய கருமம் முடிக்கும் அவனையென்
இறுதி நாளுக்குள் வரச் சொல்லேன்!!!