Saturday 22 November 2014

காலன் கோழி

இதை மலையாளத்தில் (குறிப்பாக பாலக்காட்டில்) "காலன் கோழி" என்கிறார்கள். இது கத்தினால் வீட்டில் மரணம் நிகழும் என்று நம்பிக்கையுண்டாம். அது காலன் (எமன்) வருவதை உணர்த்துவதற்காக ஒலியெழுப்புவதாகவும் போலாம் போலாம் என்று உயிரை அழைப்பதகாவும் சொல்வர். தமிழில் இதற்கு பொரிப்புள்ளி ஆந்தை என்று பெயர். 
(Mottled Wood Owl)






















PC: Internet

நர்மதா

ஓடிக்கொண்டிருக்கும் நர்மதை நதியின் 
குளிர்ந்த நீர் என்கைகளில் படுகிறது.. 
விழித்துக்கொள்கின்றேன் கனவிலிருந்து... 
குளிர்ச்சி இப்பொழுது இல்லை.. 
குளிர்ச்சியின் நினைவுகள் சுடுகிறது..

Thursday 2 October 2014

கற்றதனால் ஆனா பயன்??? எதுவுமில்லை!

கற்றலினால் ஆன பயன் என்ன??
நிச்சயம் தெரியவில்லை. ஆனால் இத்தலைப்பில வெளியான கட்டுரையின் பயன் மட்டும் தெரிகிறது.
" நன்றாக ஆறடி உயரம் வளர்ந்த புலியானாலும் நம் கையால் அதன் கண்ணில் அடித்தால் பயந்து ஓடிவிடும்" இதுதான் அக்கட்டுரைவிட்டுச்செல்லும் செய்தி. கட்டுரையில் பல இருக்க இதை ஏன் பிடித்துக்கொண்டாய் என்று கேட்காதீர்கள். சிந்தனைகளின் ஊடே, கருத்துக்களின் ஊடே சொல்லப்படும் செய்திகளும், அறிவியல் சிந்தாங்களும் மக்களை அதிகம் சென்றடைகின்றன. நேற்று தினத்தந்தியின் முகனூல் பக்கத்தில் பலரும் இதைச்சொல்லியிருந்தனர். இச்சம்பவம் நடந்த அன்று இதுபோன்ற பின்னூட்டங்கள் இல்லை என்பதும், இக்கட்டுரை பரவிய பின்பு இக்கருத்து வேரூன்றியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆமாம் புலிகளை அப்படி கண்ணில் தாக்கி விரட்ட முடியுமா? முடியாது. அக்கட்டுரையை முதன்முதலாகப்படித்த நாளில் இருந்து இணையத்தில் புலிகளிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று தேடிப்பார்த்தேன். ஒரு இடத்தில் கூட இந்த முட்டாள் தனமான யோசனையை யாரும் சொல்லவில்லை. எனக்குத்தெரிந்த வனவிலங்கு ஆர்வலர்களிடமும் கேட்டுப்பார்த்தேன். இக்கட்டுரை படித்து அவர்களும் எரிச்சலுற்றார்கள் என்பது புரிந்தது. ஆக மொத்தம் கட்டுரை ஆசிரியர் அக்கருத்தை தாமாகவே எழுதியுள்ளார். அது இன்று மக்களிடையே அதிக தாக்குதலை உண்டாக்கியிருக்கின்றது என்று உணர்ந்தால் அதில் உள்ள பிழையின் தாக்கமும் எவ்வளவு என்று உணர முடியும். இன்று பலரும் பொத்தாம் பொதுவாய் கருத்து சொல்கிறேன் என்று இடையில் அறிவியலுக்கும், அறிவுக்கும் முரண்பட்ட செய்திகளை மக்களிடம் விதைத்துச்செல்கின்றனர். இதை உண்மையென்று நம்பி நாளை நானே ஒரு நாயை கண்ணில் ஓங்கிக்குத்தினால் அது கடிக்காமல் போகுமா என்பது சந்தேகம் தான். கட்டுரை எழுதுபவர்கள் சிந்திப்பார்களா???
இந்திய ஊடகங்கள் மோசத்திலும் மோசம். புலி தாக்கிய படங்களை பரப்பிவிட்டு விட்டு அதே சமயம் "மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்" என்று கொந்தளிக்க வேறு செய்கின்றனர். (இதுவும் தினத்தந்தியில் வெளியானது, வேறு எந்த நாளிதழ்கள் எல்லாம் அப்படி எழுதுகின்றனவோ தெரியவில்லை) அப்படங்களை வைத்து இவர்கள் காசு பார்த்தார்கள் என்பதை மறந்துவிட்டு எழுதுகின்றனர். இதற்கு முன் தான் மக்களுக்கு அறியாமை. அதைப்போக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?? பாம்பைப்பார்த்தால் என்ன செய்வது, புலிவிரட்டினால் என்ன செய்வது என்று அத்துறை சார்ந்த வல்லூநர்களின் உதவியோடு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கட்டுரைகள் வெளியிடாமல் புலிதாக்கிய படத்தை மட்டும் தானே அதிகம் வெளியிட்டீர்கள்.
நாம் மட்டும் என்ன விதிவிலக்கா... இதற்கு முன் பல ஆர்வலர்கள் விலங்குகளைப்பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். அதையெல்லாம் முழுவதும் படித்ததும் இல்லை, மற்றவர்க்குப்பரிந்துரைத்ததும் இல்லை. ஒரு விபத்திற்குப்பின்னாவது தெளிவு பெறவேண்டும்.
ஆமாம் கற்றலினால் ஆன பயன் என்ன? கற்பதால் எப்பயனும் இல்லை. கற்றல் வழி நடப்பதில் தான் பயன். விதிகளைப்பின்பற்றவேண்டும் என்று எல்லாப்பள்ளிகளும் கற்றுக்கொடுக்கின்றன. சாலை விதிகள் தொடங்கி எவ்விதிகளையும் மதிப்பதில்லை. வேலிதாண்டி புலியின் இடத்திற்கு செல்லக்கூடாது என்று கற்றதை நாம் கடைபிடிக்கவில்லை. புலியிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று பள்ளியில் கற்றுக்கொடுத்திருந்தாலும் கடைபிடிப்போமா என்பது சந்தேகம் தான். இப்படியொரு கோரவிபத்து நேர்ந்துவிட்டதால் புலியிடம் கொஞ்சம் தள்ளியிருப்போம், மற்றபடி விதிகளை மீறிக்கொண்டுதானே இருப்போம். ஒரு நாளைக்கு ஆயிரம் விதிகளை மீறுகிறோம். யார் செய்த புண்ணியமோ என்னமோ தப்பித்துக்கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில் மீறப்படும் விதிகளின் விளைவு மிகவும் பயங்கரமாய் இருக்கும். அதில் ஒன்று தான் புலிதாக்கிய நிகழ்வும். "விதிகள் மீறப்படுவதற்குத்தான்" என்னும் மனநிலை மாறி அவை மதித்து நடப்பதற்கு என்னும் மனநிலை வளர்ப்பதைத்தவிர விபத்துக்களைத்தவிர்க்க வேறு வழியில்லை.

Tuesday 26 August 2014

கொங்கு மண்டல வட்டார வழக்குச்சொற்கள்.

சமையல் அறை, குளியல் அறை, வரவேற்பறை என்பதெல்லாம் கிட்சென், பாத்ரூம், ட்ராயிங்க் ரூம் போன்றவற்றின் நேரடி தமிழ்மொழிபெயர்ப்பு. இதற்கு இணையான தமிழ்ச்சொற்களைப் பயன்பாட்டில் இன்றும் இருக்கத்தான் செய்கின்றன. அவற்றைத்தொகுக்கும் சிறு முயற்சி.

1. ஆசாரம்

இன்று ஹால், வரவேற்பறை என்றெல்லாம் சொல்லக்கூடிய அந்த நீண்ட முன் பக்க அறைக்குத்தான் ஆசாரம் என்று பெயர். இன்றும் எங்கள் வீட்டில் இந்தச்சொல்லின் பயன்பாடிருக்கிறது.

2. திண்ணை.

இதைப்பற்றி பலருக்கும் தெரிந்திருக்கும். வீட்டிற்கு உள்ளேயும் அல்லாமல் புறமும் அல்லாமல் அமைந்த ஒரு பகுதி. வருபவர்களை வரவேற்று அமர வைக்கும் பகுதி.

3. சமையக்கட்டு / அடுக்களை / கொட்டம்

சமையலறையை இப்படிப்பல சொற்களால் அழைப்பர்.

பானை, மொடா போன்றவற்றை அடுக்கிவைத்திருந்ததால் அதற்கு அடுக்களையென்ற பெயர் வழக்கில் இருக்கிறது.
வேரொரு அறையோடு இணைந்திருக்கும் சமையலறையை கொட்டம் என்பார்கள். ஆதாவது ஒரு தடுப்பு வைத்து சமைக்கும் இடத்தை மட்டும் பிரித்திருப்பார்கள். அந்த இடத்தைக் கொட்டம் என்பார்கள்.

4. பொடக்காலி 

இன்று குளியலறை என்று சொல்கிறோமோ அதற்கு இணையான தமிழ்ச்சொல் பொடக்காலி.
இது புறக்காணி என்னும் சொல்லின் மரூஉ. வீட்டின் பின்பக்கத்தைப் புறம் என்று சொல்வர். "பொறவுக்கு" என்றால் பின்பக்கம் என்றும், சிறிது நேரம் கழித்து என்றும் பொருள்படும். "பொறகாண்டி" என்ற சொல்லை சதிலீலாவதி படத்தில் நீங்கள் கேட்டிருக்கலாம். அனைத்திற்கும் வீட்டின் பின்புறம் என்றே பொருள்படும். தமிழில் இடக்கரடக்கல் என்னும் ஒரு இலக்கணவகையில் இதுவரும். கைகழுவதல், கால்கழுவுதல் என்பன போன்று இதுவும் குறிப்பால் பொருளுணர்த்தும் ஒரு சொல்.

(நன்மக்களிடத்தில் அல்லது சான்றோர்கள் அவையில் கூறத்தகாத சொற்களை மறைத்துப் பிற சொற்களால் கூறுவது 'இடக்கரடக்கல்' எனப்படும். மேலும் படிக்க: இடக்கரடக்கல் )

5. நடை / நட

இப்பொழுது கேட் என்று சொல்வதின் வழக்குமொழி இது. போன தலைமுறை வரை மதில்சுவர் வைத்த வீடுகளைப்பார்ப்பது கடினம். அப்படி மதில்சுவர் வைத்து அதற்கு ஒரு கதவு போட்டிருந்தால் அந்தக்கதவை நடை/நட என்பார்கள். அத்தகைய வீடுகள் அரிது. அவற்றை "நட வச்ச வூடு" (நடை வைத்த வீடு) என்றழைப்பார்கள்.

இதில் விடுபட்ட சொற்களையும் சேர்த்து வேறொரு நிலைபதிவில் எழுதுகிறேன்.

நன்றி.
சுபாசினி.

Sunday 24 August 2014

குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் - 1

உறவினர்களின் குழந்தைகளுக்குப்பெயர் தேடிய போது எழுதிவைத்த பெயர்கள். ( புலவர்கள், மன்னர்கள் பெயர்களும், பூக்கள் பெயரும், உவமைத்தொடர்களும் இன்னும் பிறவும் இதில் அடங்கும். )

1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)


















தொடர்ந்து எழுதுகிறேன்....


படத்திலுள்ள குழந்தை - நண்பர் கவின் அவர்களின் குழந்தை. 

Tuesday 22 July 2014

போதையனார் பாடலையும் பித்தோகோரஸ் தேற்றத்தையும் ஒப்புமை படுத்தாதீர்கள்

அரிசிமாவு புளிக்குமென்றும் புளித்தபின் அதனை தோசையாகச்சுட்டால் நன்றாகயிருக்குமென்று என் பாட்டிக்குத் தெரிந்திருந்தது. அதற்காக "புளித்துப்போவதற்குக் காரணம் பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிரிகள்" என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார் என்று சொல்லும் போது என்னை முட்டாள், வெற்றுப்பெருமை பேசுபவள் என்றெல்லாம் நீங்கள் சொல்வது நியாயமே. இது போதையனார் பாடலுக்கும் பொருந்தும். புளிக்கும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பதற்குப் பகுத்தறிவு (Common sense) என்று பெயர். அது ஏன் புளித்துப்போகிறது என்று ஆராய்ந்து உண்மைப்பொருளைக் கண்டறிவதற்குப்பெயர் தான் அறிவியலறிவு. போதையனார் பாடல் பகுத்தறிவு. ஆனால் பித்தோகரஸ் கண்ட "பை" என்னும் மாறிலி ஏன் என்ற கேள்வியின் பதிலாகத் தோன்றிய விடை. இரண்டிற்கும் வேறுபாடிருக்கிறது. - இதைச் சொன்னால் நான் தமிழ்த்துரோகி, மேற்கத்திய அறிவியலின் அடிமை, தமிழ் நாஜ்ஜி என்றெல்லாம் வைவார்கள்.

Sunday 20 July 2014

உங்கள் குழந்தைக்குத் தமிழ்ப்பெயர்தான் சூட்டுகிறீர்களா?

சமீபத்தில் என் உறவினர் ஒருவர் தன் மகனுக்குச் சூட்ட ஒரு நல்லதமிழ்ப் பெயர் கேட்டிருந்தார். ஆனால் அவர் போட்ட "CONDITION"ல் ஒன்று பெயர் "அன்" என்று முடியக்கூடாது. அதற்கு அவர் கூறிய காரணம் "அன்ல முடிஞ்ச மரியாதய இருக்காது". எனக்குப் புரியவேயில்லை. ஆண்பாற்பெயர்கள் அன் விகுதிகொண்டுமுடிவதும், பெண்பாற்பெயர்கள் ஆள் விகுதிகொண்டு முடிவதும் இயல்புதானே. இதில் என்ன மரியாதைக்குறைவு இருக்கிறது? ஒருமுறை என் தோழி கட்டுரைப்போட்டி ஒன்றில் தீரன் சின்னமலைக்குப் பதிலாகத் தீரர் சின்னமலை என்று எழுதியிருந்தாள். தீரன் என்றால் மரியாதையாக இராது என்ற எண்ணத்தில் எழுதியிருந்தாள். தமிழாசிரியை அவளிடம் "அது ஆவரின் அடைமொழி, அன் விகுதிகொண்டு ஆண்பாற்பெயர்கள் முடிவதில்லை தவறில்லையென்று கூறினார். இந்த நிகழ்வு தான் என் நினைவிற்கு வந்தது. இது தெரியாமலேயே தமிழ்மக்கள் தமிழ்ப்பெயர்கள் தேடுகிறார்களா? மற்றொரு உறவினர் தன் மகளுக்குத் தமிழ்ப்பெயர் வேண்டுமென்று கேட்டார். தேடி ஒரு பட்டியல் போட்டுக்கொடுத்தால் வடமொழிப்பெயர் என்று பெயர்வைத்திருந்தார். கேட்டால் அது தமிழ்ப்பெயர்தானே என்றார். என்ன பதில் சொல்வது? இன்னும் சிலர் தமிழ்ப்பெயர்களை "க்,த்,ப்" போன்ற பெய்யெழுத்துகள் கொண்டுமுடிக்கின்றனர். இவ்வெழுத்துக்கள் மொழிக்குக் கடையாக வாராவென்று படித்த நினைவு. பிறகு அழைக்கும் போது அந்தப்பெயரின் ஒரு உகரத்தைச் சேர்த்து அழைப்பார்கள். காரணம் விளிச்சொல்லை அந்த எழுத்துக்களைக் கொண்டு முடிப்பது கடினம். இன்னும் ஒருவர் வஞ்சியம்மனை வழிபடுவதால் தன் குழந்தைக்கு "வஞ்சித்" எனப் பெயரிட்டிருந்தார். உண்மையிலேயே இவர்களுக்கு இதன் பொருள் தெரியவில்லையா இல்லை இதுதான் trend என நினைத்துவைக்கிறார்களாத் தெரியவில்லை. இணையத்தில் தேடினால் அதைவிடக்கொடுமை. வடமொழிப்பெயர்களையெல்லாம் தமிழ்ப்பெயர்ப் பட்டியலில் காட்டுகிறது. கிரந்தயெழுத்துக்கள் சேர்த்தபெயரையும் அவர்கள் தமிழில் சேர்த்ததுதான் வேதனையாகயிருக்கிறது. உங்கள் குழந்தை உங்கள் விருப்பம்போல் பெயர்வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வைத்தபெயரையெல்லாம் தமிழ்ப்பெயரென்று சொல்லாதீர்கள்.

Tuesday 15 July 2014

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்.

இட்டேரிப்பக்கமா நடந்து போனால் இந்தச் சொற்களையெல்லாம் பார்க்கலாம்.
(இட்டேரி??? இப்படி யோசிப்பவர்கள் இந்தப்பக்கமா போய்ப்பாருங்க- இட்டேரி).

1. கடவு. 

சில சமயம் தோட்டத்தைச் சுற்றி வேலி நீண்டுகொண்டே போகும். ஒரு கல் தொலைவெல்லாம் தாண்டி தான் வழியிருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் வேலியில் கொஞ்சம் முள்ளை நீக்கி ஓட்டை போட்டு அந்த வழியைப் பயன்படுத்துவார்கள். (By-pass). இதற்குக் கடவு என்றுபெயர்.














2. தொக்கடா.

"இது என்ன இந்தியன் படப்பாடல் வரிமாறி இருக்கே" என்று சோசிக்காதீர்கள். இதுவும் ஒரு அழகான சொல். நாம் மட்டும் தான் கடந்து போக வேண்டும், கால்நடைகள் கடக்கக் கூடாது. அப்பொழுது என்ன செய்வது? மனிதர்கள் மட்டும் தாண்டும் வகையில் பட்டியில் ஒரு வழி அமைத்துவிடுவார்கள் (இடுப்பு உயரத்திற்கு கீழ் வழியில் கட்டை கட்டி அடைத்துவிடுவார்கள்.) இதற்குத் தொக்கடா என்று பெயர். ஆடு தாண்டாத என்று கேட்கலாம். ஆடுகளின் கால்களைக் கட்டிவைத்திருப்பார்கள் (முன்னங்காலில் ஒன்றோடு பின்னங்காலின் எதிர் பக்கக் காலோடு சேர்த்து அதனை விரைந்து ஓடாமல் கட்டி வைப்பார்கள்). அதனால் அவற்றால் தாண்ட முடியாது.

3. தொண்டுபட்டி.

பட்டிகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது இச்சொல் நினைவிற்கு வந்தது. சுற்றி வேலியால் அடைத்த பகுதியில் இரண்டொரு மாடு ஆடு வைக்கற்போர் வைக்கக் கொஞ்சம் இடம், ஒரு குட்டிச் சாலை, இப்படி இருக்கும் இடத்தை தொண்டுபட்டி என்பார்கள். (மற்ற வட்டாரங்களில் எதைத் தொண்டுபட்டி என்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை).
















4. வெள்ளதாரை.

sink / wash basin என்றெல்லாம் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சலதாரை என்னும் சொற்பயன்பாடு அழிந்துவருவதைக் கண்டேன். சலம்- வடமொழி என்பதாலோ என்னவோ அது வழக்கொழிந்து போவதில் எனக்குப் பெரிதாய்க் கவலை ஏதுமில்லை. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது என் அம்மா வெள்ளதாரையைப் பற்றி நினைவுபடுத்தினார்.

மழை பெய்யும் போது தோட்டங்காடு, புன்செய் நன்செய் என்றிருக்கும் இடங்களில் மழைநீர் ஓடும். ஓடை, ஆறு இவற்றில் சேர்க்கமுடியாத நீர் போகும் பாதையை வெள்ளதாரை என்பார்கள். இங்கும் அடித்துவரப்பட்ட மண் சேர்ந்திருக்கும். அங்கு எந்தச் செடிகளும் வளர்வதில்லை. எல்லா நாளும் நீர் போகாமல் அடைமழை காலங்களில் மட்டும் நீரோடும் வெள்ளதாரையைச் சிறு வயதில் கண்டிருக்கிறேன். அதிலும் நீர் இருக்கும் போது கண்டதாய் நினைவில்லை. நீரின் தாரையை மட்டுமே கண்டிருந்தேன். என் அம்மா அவர்களின் சிறுவயது நினைவிகளைப் பகிர்ந்தபோது அங்கு சென்று பலரும் துணிதுவைத்ததாகக் கூறினார். ஒருமுறை மீண்டும் சென்று அந்தத் தாரையாவது இருக்கிறதாவென்று பார்த்துவர வேண்டும்.

இதெல்லாம் எங்கள் வீட்டிற்குப்பின்னால் இருக்கும் இட்டேரியில் எடுத்த படங்கள்.

















இதேபோல் இன்னும் கொஞ்சக் கொஞ்சும் வட்டாரவழக்குச்சொற்களோடு மீண்டும் எழுதுகிறேன்.
அன்புடன்
சுபாசினி.


Wednesday 9 July 2014

பேரூர் கோவில் யாளிகள்

நேற்று பச்சை நாயகி உடனமர் பட்டேசுவரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கும் என் கண்ணை நிலை கொள்ளச் செய்தது யாளி சிற்பங்கள் தாம். தஞ்சைப்பெரிய கோவிலில் (நின்ற வண்ணம்) இருக்கும் யாளி சிற்பங்களுக்கும் இங்கு உள்ளவைக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. தஞ்சைப்பெரிய கோவில் யாளிகள் சற்று வாயை மூடிய வண்ணமும், இங்குள்ளவை வாயைத் திறந்துள்ளவையாகவும் இருந்தன. (15 சூன் 2014)



இலக்கணம் தேவையா? 2

"தமிழிலக்கணம் கற்றான்", "தமிழ் இலக்கணம் கற்றான்." இவ்விரண்டிற்குமான பொருள் வேறுதான். இதனைப் படிப்பவரின் அவாவிற்கேற்றாற் போல படிக்க இயலுமே தவிரப் பொருள் தெளிவு கிடைக்காது. எளிமையென்பது எழுதுவதில் மட்டுமில்லை. படிப்பதிலும் சொன்ன பொருளையே புரிந்துகொள்வதிலும் கூட இருக்க வேண்டும். இலக்கணமென்பது எப்படி எழுத வேண்டுமென்று கற்பிப்பதைவிட எப்படி வாசித்துப் பொருள்கொள்ள வேண்டுமென்று கற்பிக்கிறது. தனிமொழியாய் எழுதுவது பொருள் மயக்கம் தராதவரை நல்ல மாற்றம் தான். ஆனால் புணர்ச்சிவிதிகளைப் பயன்படுத்தினால் கணினிமயமாக்கல் எளிது. இதையே ஒருவர் கூகிளில் மொழிபெயர்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இலக்கணவிதிகளைப்படி அதனால் எளிதாக சரியான மொழிபெயர்ப்பைத் தரவியலும். " He is learning Tamil grammar", "Tamil is learning grammar". Tamil grammar has a mathematical structure which makes it easier to computerize. When all are trying to make a formula for randomly working things, we are moving from a well defined structure to a randomness.

ஊருக்குப்போறேன்- இப்படித் தான் பேசுகிறோம். இதே எழுதும் போது- ஊருக்கு போறேன்- என்று எழுதுகிறோம். இந்த முரண்பாடு ஏன்? வட்டார வழக்கில் எழுதுவது தவறில்லை, பேச்சுவழக்கை எழுதுவதும் சரிதான். பேச்சில் நமக்கு இயல்பாக வருகின்ற ஒன்றை எழுத்தில் விடுவதுதான் இடிக்கிறது. நம் பேச்சில் இன்னும் ஒற்று வாழ்கிறது. புணர்ச்சி வாழ்கிறது. வயித்துவலி- வயிற்றுவலி என்பதன் பேச்சு வழக்கு, இதே எழுதும் போது பல வயிறு வலி என்று எழுதுகின்றனர். இதை எப்படித் தானாக நிகழும் மாற்றம் என்று கூறுவது? எழுத்துவழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் ஒவ்வாத ஒரு தட்டச்சு வழக்கு சரியில்லை.

உற்று நோக்கும்போது ஏதோ பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் ஒத்துப் போவது இன்றைய காலகட்டத்திற்கு புணர்ச்சியிலக்கணங்கள் தான். இதை எழுத்து வழக்கை(தட்டச்சு வழக்கு) எளிமை படுத்துவதாக நினைத்து பல நேரங்களில் சோம்பல் கொண்டு எழுதுவதை இயல்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாமாவென்று தெரியவில்லை. ஒரு மாற்றம் நிகழும் போது அது இயல்பானது தானா என்று பார்க்க வேண்டும். இயல்பு தானென்றால் அது எல்லாவிடங்களிலும் நிகழ வேண்டும். இங்கு எழுத்து வழக்கில் மட்டும் நிகழ்கிறது. இது இயல்பா இல்லையா என்று தெரியவில்லை
என் கருத்து இப்பொழுதும் நம்மால் இலக்கணத்தைப் பின்பற்ற முடியும். ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் எழுத்தில் இல்லாத பிழைகள் நம் எழுத்தில் வருகிறதே.  இதை வெறுமனே மாற்றம் என்று ஏற்றுக்கொண்டுவிட முடியவில்லை.


மொழியில்லா ஒரு நிலை->எப்படி பேசுவது என்ற வரைமுறைகள்-> பேச்சு வழக்கு மொழி->எழுத்து வழக்கு->இலக்கணங்கள். இப்படி நம் மொழி உருவானதாக எண்ணுகிறேன். இதற்கு முன்னர் நடந்த மாற்றங்கள் எல்லாம் மெதுவாக நடந்தது. உதாரணமாக வடிவு- அழகு, இந்தப் பொருள் மாறி வடிவு-வடிவம், இந்தப் பொருளில் வழங்குகிறது. பாவினங்களில் சேராக் கவிதைகள் வந்துவிட்டன. இது இயல்பான மாற்றம். ஒரு நீண்ட நெடிய காலக்கட்டத்திற்கு பின்பு தானாகவே நடந்த மாற்றம். ஆனால் இப்பொழுது நிகழும் இம்மாற்றம் இயல்பானதா? இதுவே என் கேள்வி. முன்னர் நடந்த மாற்றங்களில் ஒரு சேர அனைவரும் பயணித்தோம். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பயணிக்க முற்படுகிறோம். இதன் விளைவு குழப்பம் தான் (chaos).


சரி இம்மாற்றம் பேச்சு வழக்கிலும் நிகழ்கிறதா? இல்லையே. நாம் மாற்றம் இயல்பானதும் அதை ஏற்றுக்கொள்வது முறை என்று சொல்வதற்கும் அடிப்படை ஒன்று தான். "பேச்சு வழக்கு எழுத்து வழக்கானது;அதன் தன்மை ஆராய்ந்து இலக்கணம் இயற்றப்பட்டது;கடிய இலக்கணத்தால் மக்களை மூச்சுத் திணறச்செய்யக்கூடாது". இதை நன்கு கவனத்தால் நான் சொன்னது போல அண்மை காலமாக நம் பேச்சு வழக்கில் இருக்கும் இலக்கணங்கள் அல்லது அதன் அமைப்பு எழுத்து வழக்கிற்கு வரும்போது அடிபடுகிறது. பேசுவது ஒன்றையும் எழுதுவது ஒன்றையுமாகச் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி ஏதோ ஒரு உந்துசக்தியால் நிகழும் திடீர் மாற்றமானது குழப்பத்தைத் தான் தரும். சில காலம் கழித்து பேசுவதற்கு பொருந்தாத ஒரு எழுத்துவழக்கு இலக்கணத்தை நாம் கடைபிடுத்துக்கொண்டிருப்போம்.

செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்

தொடுவானமும் அதனை அங்கே
தொட்டுவிட்ட தென்னையும் மஞ்சள்
வண்ணங் குழைத்தவன் கைபோலே
வண்ணங் கொள்ளும் மாலையிது..

குடம்பை தனித் தொழிந்த
குருவியெல்லாம் கூடுதிரும்பும் வேளையிது...

செம்மலது வாசம் வீசும்
செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்
கடல் கடந்து சென்றயென்
கண்ணன் வரும் சாலையெது??

Monday 7 July 2014

பொன்னியின் செல்வன் நாடகம்- என் பார்வையில்.

பொன்னியின் செல்வன் நூல் நாடமாக நிகழ்த்தப்படுகிறதென்றவுடன் என்னை முதலில் ஆச்சரியம் கொள்ளச்செய்தது "எப்படி இவ்வளவு பெரிய நூலை நாடகமாகப் போடப்போகிறார்கள்" என்பதில்லை. "எப்படி  இவ்வளவு புகழ்பெற்ற நூலை நாடகமாகச் செய்யத் துணிந்தார்கள்" என்பதுதான். பல்லாண்டு காலமாக இந்நூல் மக்களிடையே ஏற்படுத்திய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யமுடியும் என்றெண்ணி இந்நாடகத்தை அரங்கேற்ற வந்ததற்கே அவர்களை நாம் மெச்ச வேண்டும்.

கோவையில் சூலை 6 ஆம் தேதி நடித்த அதே நடிகர்கள் தான் மற்ற இடங்களில் நடித்தார்களாவென்று தெரியவில்லை. இதை நான் அன்று பார்த்த நாடகத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதுகிறேன்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரங்கத்தைச் சென்றடைந்துவிட்டேன். கூட்டம் சேரத் தொடங்கியது. " அம்மா! நாடகம் எனக்கு புரியுமா? ஈசித் தமிழா இருக்குமா?", " புரியற தமிழாத் தான் இருக்கும்" இப்படி அம்மாவிற்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டு அது என்ன புரியற தமிழ் புரியாத தமிழ், ஏதோ அந்தமிழ் பைந்தமிழ் போல நமக்குத் தெரியாத தமிழாக இருக்கும் என்றெண்ணிக் காத்துக்கொண்டிருந்தேன்.

நாடகம் சொன்ன நேரத்திற்கு ஆரம்பமானது. அரங்கமும் அதில் இருந்த கோட்டை மதிலும் யாளியும் (அங்கும் நான் யாளியைவிட்டு வைக்கவில்ல) நம்மை சோழர் காலத்திற்குக் கூட்டிச்செல்வதாய் இருந்தது. ஆனால் அத்தகைய பிரம்மாண்ட அமைப்புகளுக்கு மேடை போதுமானதாகத் தெரியவில்லை. கோவையில் இதைவிடப் பெரிய அரங்கம் இல்லையே என வருத்தமாக இருந்தது :( கைபேசி வேண்டாம் என்பதற்கு அவர்கள் அறிவித்தவிதமே இரசிக்கும்படி இருந்தது. நாடகம் தொடங்கியது. மூன்றரை மணி நேரத்தில் அது முடிந்தது.

இந்த மூன்றரை மணி நேரத்தில் நான் இரசித்தது இவற்றைத் தான்:

வந்தியத் தேவனாக நடித்தவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நூலைப் படிக்கும் போது நம் கண்முன் வந்து போகும் வந்தியத்தேவன் நாடகத்தில் நடிப்பது போன்றே இருந்தது. கொஞ்சம் குறும்பும் பெண்களைக் காணும் போது கொஞ்சும் காதலுமாய் நெஞ்சை அள்ளிவிட்டார். நாடகத்திற்கு அத்தகை உயிரோட்டத்தை இவர்தான் கொடுத்திருந்தார். எதிர்பார்த்த கதாப்பாத்திரம் எதிர்பார்த்தது போல் இருந்தது வாணர்குல வீரன் தான்.

நான் அவ்வளவாக எதிர்பார்க்காமல் இருந்த ஒரு கதாமாந்தர் நடிப்பால் கவர்ந்திழுத்துத் தன் இருப்பை மக்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார் என்றால் அது பழுவேட்டரயர் தான். கோபம் கர்வம் இரக்கம் என அனைத்துக் குணங்களையும் ஒன்றே கொண்ட ஒருவரைத் தேடிப்பிடித்து அந்தக் கதாபாத்திரமாக நடிக்க வைத்ததைப் போல் இருந்தது.

இவர்கள் இருவருமே அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறியிருந்தனர். தங்களுக்குத் தொடர்பில்லாத ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போதும், வசனமில்லாமல் சும்மா அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது கூடத் தாங்கள் பூண்ட வேடத்திற்கு உரியவர்களாகவே நடந்துகொண்டனர். இது அவர்களின் தேரிய நாடக அனுபவத்தைப் பறைசாற்றுவது போல இருந்தது.

ஆதித்த கரிகாலனின் அறிமுகம் அட்டகாசம். மதம்கொண்ட யானையாக அவன் உலா வருவதாகக் கற்பனை செய்ததைப் போலவே அவரின் நடிப்பு இருந்தது. கோபம், உணர்ச்சிவசப்படுவது, நந்தினியைப் பார்க்கும் போது கனிந்துருகுவது என நாடகத்தின் இறுதியில் வந்து புயல் மழையாய் அடித்து ஓய்ந்தது ஆதித்த கரிகாலன் என்னும் புயல்.

நந்தினியின் பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு கொஞ்ச நேரமேயாயினும் அசத்தல். இயற்கையாக நகைச்சுவை வரவழைத்தது.

ஆண்பால் நடிகர்கள் அனைவரும் தமிழ் உச்சரிப்பில் தேரியவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. அவர்களின் தமிழ் இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது.

செம்பியன் மாதேவி, மதிராந்தகன், இளைய பழுவேட்டரயர், கந்த மாறன், இரவிதாசன் போன்றோர் ஏமாற்றங்களைத் தராமல் சிறப்பாக நடித்திருந்தனர்.

ஆழ்வார்க்கடியானக வந்தவர் அருமையாக நடித்திருந்தார். இருப்பினும் குட்டை உருவமாய் தொப்பையுடன் இருக்கும் அழ்வார்க்கடியானுக்கு உயரமாய் ஒருவரைப் போட்டது ஏதோ போலிருந்தது. இதே போல பார்த்திபேந்தரனாக நடித்தவரை பனைமரத்தில் பாதி உயரத்திற்குக் கற்பனை செய்துவைத்திருந்தேன். குட்டையாக ஒருவர் நடித்ததால் மன ஏற்கவில்லை. மேலும் அவர் சாமியாடியாக வந்ததும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் நடிப்பும் கலைஞர்களுக்கே உரிய ஒன்றாய் இருந்தது. நந்தினியைக் காணும் போது அவர் முகத்தில் காட்டிய மாற்றங்கள் அடேங்கப்பா என்று சொல்லிக் கைதட்டும் அளவு அருமை.

ஆனால் பெரிதும் ஏமாற்றியது நாடகத்தின் பெண்பாற் கதாபாத்திரங்கள் தான். நந்தினியின் நடிப்பும் உச்சரிப்பும் குறைகூறும் வகையில் இல்லை. இருப்பினும் ஒரு நாகம் போலக் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு கதாநாயகிக்கு அவரை வைத்துப் பார்க்க முடியவில்லை.
குந்தவை, பூங்குழலி- இவர்கள் இருவருமே மிகச் சுமாராக நடித்திருந்தனர். குந்தவைக்குத் தொடர் மொழியாக வரும் சொற்களைப் படிக்கும் போது குளறியதும், பூங்குழாலியாய் நடித்தவர் அனைத்து லகர, ளகரத்தையும் ழகரமாக உச்சரித்தமும் நாடகத்தின் தமிழைக் குழைப்பதாய் இருந்தது. நடிப்பிலும் அவர்கள் சொதப்பியிருந்தனர். வந்தியத் தேவன் தேனொழுகக் காதலித்த காட்சியில் குந்தவை பக்கத்திலிருந்து எந்த உணர்வும் வெளிப்படவில்லை :( அதே போலப் பூங்குழலி அருள்மொழியைப் பார்த்த காட்சியில் அவளின் கண்களிலும் குரலிலுல் எந்த உணர்ச்சியும் இல்லை. வானதியாக நடித்தவர் ரொம்பக் கொஞ்சிக் கொஞ்சிப்பேசிக்கொண்டிருந்தார்.

நாடகத்தின் தொடக்கதில் இருந்த நேர்த்தி போகப் போக கொஞ்சம் குறைந்தது. முதற்காட்சியில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கோட்டை மதிலுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருப்பதைக் காட்டிய விதமெல்லாம் மிகச்சிறப்பு. அதே போன்று இறுதி வரை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வானதி அருள்மொழியைப் பார்த்ததும் மயங்கி விழும் காட்சியை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் வரவில்லை.
மணிமேகலையைக் கதையில் விட்டுவிட்டனர். :(
சேந்தன் அமுதன் முதற்காட்சியிலேயே வாளெடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆதித்தகரிகாலனின் இறப்பு நூலில் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு விழுக்காடு கூட நாடகம் ஏற்படுத்தவில்லை.
மேடையின் பின்னால் இருந்த திரையைக் கடலருகில் வரும் காட்சிகளுக்குக் கடல் போல் மாற்றியருக்கலாம்.

பெண் நடிகர்களின் உச்சரிப்பை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நாடகம் மிக அருமை. திருப்தி அளிக்கும் ஒரு அனுபவம்.
திரையுலகத்தினரைவிட இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்துவிட்டனர்.
இதில் நான் கண்ட அதிருப்தி கூடப் பள்ளிப்பருவத்தில் எங்கள் பள்ளியில் நிறைய வரலாற்று நாடகங்கள் பார்த்துப் பழகிவிட்டிருக்கிறபடியால் தோன்றியவை தானே ஒழிய குறை கூறும் அளவிற்கு நாடகமில்லை.

பள்ளி மாணவர்கள் சிலர் நாடகம் பார்க்க வந்திருந்தனர். எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள். மொக்கைடா என்று பேசிக்கொண்டு சென்றது வருத்தமாக இருந்தது. அதே வயதில் நான் கல்கியைப் படிக்க ஆரம்பித்திவிட்டிருந்தேன். அவர்களுக்கு அந்த அனுபவம் கிடைத்தால் அவர்களும் இரசித்திருப்பர் என்று நினைத்துக் கொண்டேன்.

நாடகத்தமிழ் அழியும் விளிம்பில் இருக்கும் இந்தக்காலத்தில் இப்படியொரு நாடகப்புரட்சி செய்த S.S. International Live நிறுவனத்திற்கு நாடகத் தமிழே கடமைப்பட்டிருக்கிறது தான். நாடக்கத்தை மீட்டெடுத்துவிட்டனர். மேலும் பல வரலாற்று நாடங்களை இவர்கள் அரங்கேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பில் அரங்கத்தைவிட்டு வெளியே வந்தேன்.

-சுபாசினி. (06/07/2014)

Saturday 5 July 2014

இலக்கணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? ஆம்.

தமிழ் மொழியையும் அதன் இலக்கணங்களையும் உற்று நோக்கும் போது அது இயற்கையாகத் தானாக பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் தோன்றியது எனப் புலப்படும். ஓசைகளின் அடிப்படையில் பிறந்தது. சங்க இலக்கியங்களில் வந்த காதல் தொடங்கி அனைத்தும் இயல்பானவை. அதனால் அதில் இயல்பிற்கு எதிரான செயற்கை விதிகள் எதுவும் இல்லை. கொஞ்சம் கவனம் வைத்தால் அதன் விதிகளைப் பின் பற்றுதல் எளிது.

இப்படி இயல்பான மொழிக்கு நாம் ஏன் இலக்கணத்தைப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் என்று தாங்கள் கேட்கலாம்.
ஒரே ஒரு காரணம் தான். நாம் ஏன் சொல்ல வந்ததோமோ அதையே மற்றவரும் புரிந்து கொள்ள வேண்டும். There should not be any communication gap.

நீங்கள் கேட்கலாம் " அத நான் சொல்றது உங்களுக்குப் பிழையா இருந்தாலும் புரியுதே?"
இப்பொழுது உங்கள் காலக் கட்டத்திலேயே நிகழும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டே தாங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளுதல் எளிது. ஆனால் இன்னும் சில பல நூற்றாண்டுகள் கழிந்தபின் இதே நிலை இருக்குமா?
நீங்கள் சொல்ல வந்ததை ஒரு ஆயிரம் ஆண்டு காலம் கழித்து ஒருவன் புரிந்து கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

ஒரே வழிதான். Proper documentation. நம் மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினாலே அது சரியாக நிகழும். பண்பாடு நாகரிகம் மருத்துவம் கட்டிடக் கலை என அனைத்தையும் எல்லாக் காலங்களுக்கும் கொண்டு செல்லலாம்.
மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது நிகழுமா?
நிச்சயம் நிகழும். நம் மொழியில் ஒரு சொல்லுக்கு ஒரு உச்சரிப்பு தான். எழுதுவதைத் தான் படிக்க முடியும். Read- past or present ?? போன்ற ஐயங்கள் எல்லாம் நம் மொழியில் எழாது,
இப்படி இயற்கையாக இருக்கும் ஒரு அமைப்பை புதியன புகுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏன் வேறொன்றைத் திணிக்க வேண்டும்? ஏன் பிழைகளை ஏற்க வேண்டும்? 

Friday 4 July 2014

"மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொல்லவில்லை

மீண்டும் யாராவது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கூறினால் நிச்சயம் அவர்களுக்கு உதை தான் விழும். என்று பாரதி அப்படிச் சொன்னார்? ஒரு முறையேனும் பாரதியின் நூலைப் படிக்காத மூடர்கள் தாங்கள் பேசும் போது எழுதும் போது எல்லாம் அந்த வரியைச் சேர்த்துக் கொள்கின்றனர். ஏதோ பாரதி தமிழ் அழிந்துவிடும் என்று சொன்னது போலவும் இவர்கள் தமிழைக் காப்பது போலவும் எழுதி எரிச்சலூட்டுகின்றனர். அந்த பாரதியின் வரிகளை முழுமையாகப் படிக்காதவர்கள் ஒருமுறையேனும் படியுங்கள். தமிழ் அழியும் என்று சொல்வோர்க்குப் பதிலடியாக அவர் எழுதிய கவிதையை இப்படித் திரித்துவிட்டனர்.

அவர் எழுதிய கவிதை இதோ.

"ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் 
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் 
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! 

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! 
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

தமிழன்னை உரைப்பது போன்ற இந்தக் கவிதை சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் எனும் அவருடைய கவிதைத் தொகுப்பில், “ (1) தேசீய கீதங்கள்” எனும் பிரதான தலைப்பின் கீழ் அடங்கியுள்ள “(2) தமிழ்நாடு”  துணைத் தலைப்பில் இரண்டாவது கவிதையாக “(21) தமிழ்த்தாய்” என்னும் தலைப்பில் உள்ளது. 

Monday 23 June 2014

I do not want Hindi Imposition

இது என் முக நூல் பக்கத்தில் 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்குப் நிலை பதிவாக இடப்பட்டது. பிறமொழியினர் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.

People who wants to have hindi as national language I suggest an alternate solution.
All you want is a language to unite the country. so let us ask the govt to make Tamil as national language. It is an unadulterated classical language which was born in this sub continent and oldest surviving language. so u get the pride infront of other countries for having such a language as national language.
And you are talking about employment opportunities. People from north are working in my home town, it will be helpful for them if Tamil is made as national language.
You talk about majority of people knows Hindi. When globally considered the % of people having Tamil as their mother tongue is higher than Hindi speaking people. It is an added advantage. if you go to Singapore and malaysia you need not learn a foreign language (English, which you are ashamed to talk), you can use Tamil there also, you can even find Tamil medium schools in those countries. Also When you travel to German and Canada also you can see Tamil people. there are many associations for Tamil language there, u can become a part of it and develop your national language.
If you say the Tamil speaking people are less in India, let me add Kannada, Telugu and malayalam also in the Tamil belt like how you added marathi, gujarathi and bhojpuri in Hindi speaking belt. and the count will be balanced.
When coming to Independence movements Tamils have equally contributed and so you can trust us.
And after all you are patriots whose only concern is country's unity. But we are morons who are narrow minded to accept other languages. As you are broad minded people who thinks about the nations unity, u can compromise and accept my mother tongue as the national language.
Deal?
this idea looks stupid for u right? similar way ur idea of hindi as national language and link language doesn't make us happy.

Sunday 15 June 2014

'யாளி' நூல் - படித்ததும் அதை நான் வெறுத்தமும்

எனக்கு யாளி மேல் தீராத ஒரு பாசம். கோவிலுக்குச் சென்றால் அதை மட்டும் தான் பார்த்து இரசிப்பேன். யாளி பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2010 ல் வெளியான இந்த நூல் என் கண்ணில் பட்டது. அன்றிலிருந்து
மூன்று ஆண்டுகளாக இந்த நூலை படிக்க எண்ணியிருந்தேன். ஏதோ ஒரு தளத்தில் இதுக் கற்பனை வளம் மிகுந்த நூல் என்றும் Harry Potter, Lord of the Rings போன்ற நூல்களுக்கு ஒத்தது என்று விமர்சனம் எழுதியிருப்பதைப் படித்தேன். இந்த மாதம் தான் இணையதளத்தில் இந்த நூல் இருந்தது கண்டு உடனே வாங்கினேன். பெருத்த ஏமாற்றம். நூலைப் பற்றி நீண்ட நெடிய குறைக் கடிதம் எழுத வேண்டும்.

ஏன் தான் இப்படி இத்தனை பிழைகளோடு நூல் எழுதியுள்ளாரோ தெரியவில்லை.. அச்சிடும் முன்பு ஒரு தமிழ் ஆசிரியரிடம் கொடுத்துச் சரி பார்க்கவாவது செய்திருக்கலாம். ஒரு சிவப்பு மை பேனா கொண்டு நூலில் உள்ள எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, கருத்துப் பிழை ஆகியவற்றைக் கோடிட்டு நூலாசிரியருக்கே அனுப்ப வேண்டும் போலுள்ளது. அடேங்கப்பா பிழைகளைக் குறித்து வைத்துக்கொண்டே வந்தால் ஒரு நூலே வெளியிடலாம் போல. திரு. மணி தணிகை குமார் B.E. !!! நீங்கள் முன்னுரையில் தங்களுக்கு மொழி அறிவும் எழுத்துப் பயிற்சியும் இல்லை என்று குறிப்பிட்டுருக்கத் தேவையேயில்லை. தங்களின் நூலைப் படிக்கும் போது எங்களுக்கே தெரிகிறது. அனைத்துப் பிழைகளையும் ஏற்றுக் கொள்ளலம், ஆனால் 'தென்னை சோலை' என்று எழுதியதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 ஓரிரு ஒற்றுப் பிழைகள் அச்சுப்பிழைகளை ஏற்றுக்கொள்ளலாம், தவறுவது இயல்பு. ஆனால் இந்த நூல் முழுமையும் பிழை மயம். இலக்கணப் பிழைகளைக் குறித்து வைக்க ஆரம்பித்தேன் ஆனால் எரிச்சல் அடைந்து விட்டுவிட்டேன். எவ்வளவு குறிப்பு தான் எடுப்பது. இத்தனைக்கும் இது இரண்டாம் பதிப்பு. யாருமே இவருக்குப் பிழைகள் குறித்துக் கடிதம் எழுதவில்லை போலும். " அவைகள், இவைகள்" போன்ற இலக்கணப் பிழை. சரி இவருக்குத் தமிழ் எழுதத் தான் வரவில்லை என்றால் தமிழ் வரலாறும் தெரியவில்லை. "கடல் கடந்து சென்ற ஒரே மன்னன் இராஜராஜன் " என்று எழுதியுள்ளார். இராஜேந்திர சோழனை எங்கு கொண்டு போய்ச்$ சேர்ப்பாரோ தெரியவில்லை. தனக்குத் துளியும் தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் எழுதியுள்ளார். பக்கங்களை அதிகரிக்கச் செய்த செயலா இல்லை இப்படித் தமிழர் பெருமையைப் பற்றி அடித்துவிட்டால் மக்கள் நூலை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு நூல் எழுதும் முன் கொஞ்சமேனும் ஆராய்ந்துவிட்டு எழுதியிருக்கலாம்.

அனைத்தும் அரைகுறை ஆராய்ச்சி. யாளியின் முன்னங்கால் சிறிது என்று சொல்லும் கருத்து தொடங்கி அனைத்திலும் சொதப்பிவிட்டுருக்கிறார். தான் பார்த்த பத்துக் கோவிலை வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கிறார். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நாயக்கர் கால மண்டபங்களை மட்டும் பார்த்திருப்பார் போல. கோவிலின் கோபுரத்தில் உள்ள யாளி வரிசைகள் இவர் கண்ணில் பட்டதாகத் தெரியவில்லை. இங்கிலாந்து பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி தமிழகக் கோவில்கள் பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி, எதுவுமே இரசிக்கும்படி இல்லை. இந்தியா, தமிழ் நாடு- அவற்றின் நாகரிகம் (நாகரீகம் என்னும் எழுத்துப் பிழை வேறு) என்று அவர் சொல்லியிருக்கும் எதுவும் உண்மைக்குப் பெருதும் பொருந்தாத சாதாரண மனிதன் சொல்லும் கதைகள். (எழுத்தாளனும் அதையே சொல்லுவது தவறு. உண்மையை அறிந்து அதைத் தன் எழுத்து மூலம் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.)

மொத்தத்தில் யாளி பற்றித் தெரியாதவர்களுக்கு சலிப்பூட்டும் நூல். தெரிந்தவர்களுக்கு எரிச்சலூட்டும் நூல்.

நூல் முழுவதும் படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

Saturday 31 May 2014

கண்ணீரும்-ஆறும்; அவை கொள்ளும் வண்ணமும்.

வண்ணங்கள் எப்பொழுதும் ஈர்ப்பவையாகவே அமைகின்றன. அறிவியலிலும் கூட வண்ணங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஒவியத்தில் துளி திறமை இல்லாதவர் கூட வண்ணங்களைக் கொட்டி மகிழ்வர்.

இப்படி இலக்கியத்திலும் நிறங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பாரதியின் "காக்கைச் சிறகினிலே" பாடல் தொடங்கி, அலைபாயுதே படத்தின் "பச்சை நிறமே " பாடல் வரை அனைத்திலுமே ஒரு வசீகரம் உண்டு. இப்படி வண்ணம் கலந்த பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட பாடல் இது.

"கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே."

-ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார்,
மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது).
















சங்கப் பாடல்களில் அகப்பொருள் பாடல்களை எடுத்துக் கொண்டால் நம் கண்ணில் அதிகம் படும் சொல் "பசலை". தலவனின் பிரிவால் தலைவியைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் நோய் இது. உடல் மெலிந்து, கலையிழந்து, தோள் தணிந்து காணப்படுவாள்.

இப்படி பசலைக் கண்ட தலைவியைக் கண்டு வேதனைக் கொண்ட தோழி தலைவனிடம் சென்று தலைவி உரைப்பது போல் கூறுகிறாள். என்ன சொல்கிறாள்? " தலைவா! உம்முடைய ஊரில் உள்ள நதியானது குளிர் காலம் என்றால் கலங்கியும், வெயில் காலம் என்றால் மணி நிறம்  கொண்டுள்ளது. ஆனால் என் கண்ணானது நீ விட்டு அகன்றதால் பசலை நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது." இவ்வாறு கூறுகிறாள்.

இது செய்யுள் தரும் நேரடி பொருள் மட்டும் தான். ஆனால் உற்று நோக்கும் போது அது எவ்வளவு அழகிய பொருள் கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

எதற்காக தலைவி நதியை உதாரணம் காட்ட வேண்டும்? அவள் சொல்ல விளைவது இதைத்தான்.

" தலைவா! வண்ணங்கள் என்னைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் என் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. நீர் கூடப் பல நிறம் கொள்கிறது. உன் ஊரில் ஓடும் நதியானது குளிர் காலத்தில் கலங்கிய நிறமுள்ள நீரையும், வெயில் காலத்தில் மணி நிறமுள்ள நீரையும் கொண்டு தருகின்றது. ஆனால் என் கண்ணீரோ பசலை நிறம் கொண்டுள்ளது. வேறு எந்த நிறமும் தெரியவில்லயே!" என்று வருந்துகிறாள்.

"பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே" என்பது ஆழமான வரிகள். பிரிவினால் எவ்வளவு அவள் அழுதிருந்தால் அவள் கண்ணின் நீரை ஆற்று நீரோடு ஒப்பிட்டு அதன் வண்ணம் பசலை என்பாள். அடடே!!!

பதவுரை:
கூதிர்- குளிர் காலம்
தண்- குளிர்ச்சி
கழில்- கலங்கிய நீர்
வேனில்- வெயில் காலம்
யாறு- நதி

Wednesday 7 May 2014

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!



















விளைச்சலுக்காய் நீ வரும் போதும்
காய்ச்சல் கண்ட என் கல்லூரி நினைவுகளைத்
தோய்த்தே கொண்டு வந்து கொட்டுகிறாய்...
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!
















உன்னாலே, இழையோடிய சோகம் வந்து
தன்னாலே என்னைப் பற்றிக் கொள்கிறது...
பட்டுச் சேலையிடை தங்க நூலாய்
எட்ட நின்றதை நான் ரசித்தாலும்,
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














மண் தொடும் நின் துளி
என் அறை ஜன்னல் தட்டுமென
ஏனோ பயந்திருந்தேன். நல்லவேளை
தானோ!!! ஜன்னல் இல்லை புது அறையில்... எனினும்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!











உறக்கம் தந்தாலும் உறங்கிடுவேனோ என்ற
பயமும் தருகின்றாய்.. உறங்கினால் எழுவேனோ??
ஐயமும் தருகின்றாய்.. கெஞ்சிடும் என்மேல்
இரக்கம் கொஞ்சமேனும் கொண்டு, இன்று
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














தனிமை வெறுமை என்று பலகொண்டு
மைக்கண் கலங்க வைக்கின்றாய் நீ...
அழுகவும் வேண்டுகின்றாய், பின்னர் என்னை
எழுதவும் தூண்டுகின்றாய்... இருப்பினும் வான்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

-சுபாசினி.

http://isainirai.blogspot.in/2013/02/blog-post_8807.html

Saturday 26 April 2014

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன ; பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன...

என்னது இப்படி ஒரு பதிவானு யோசிக்காதீங்க.
"அடடே இந்த எழுத்தையெல்லாம் எங்க எப்படி உச்சரிக்கனும்னு எழுதப் போறீங்க , சரியா? " அப்படினு கேட்ட அதுவும் இல்ல. இதெல்லாம் எங்க பயன்படுத்தனும் எப்படிப் பயன்படுத்தனும்னு சொல்றதுக்கு முன்னாடி இதுக்கெல்லாம் என்ன பெயர்னு சொல்லத் தான் இந்த பதிவு. (கலி முத்திடுச்சு).

பள்ளத்துக்கு வர 'ள' , குண்டு 'ல', ஒல்லிக்குச்சி 'ர' , ரெட்டச் சுழி 'ன' (சின்ன வயசுல ரொம்ப சேட்டை செஞ்சதுனால இதுக்கு ரெண்டு சுழியோ!!!)... மூனு சுழி "ண"... (நாலு சுழி போடற தமிழ் ஞானிகள் கூட சில பள்ளிகளில் இருப்பாங்க)... இப்படிப் பல nicknames கேட்டு ரொம்ப நொந்து போய் இதை எழுதுகிறேன்.

இவற்றையெல்லாம் எப்படிக் குறிப்பிட வேண்டும்???
இதோ இப்படித் தான்.

ல - தனி 'ல'கரம். (பாவம் மத்த ழ,ள கூட சேர விடாம வ வந்து இதத் தனியா பிரிச்சுடுச்சு. இதுத் தனியா இருக்கு)
ழ - சிறப்பு 'ழ'கரம். (தமிழுக்கே உரிய சிறப்பு.)
ள- பொது 'ள'கரம்.

ர - இடையியன 'ர'கரம்
ற - வல்லின 'ற'கரம்

ண - டண் 'ண'கரம் ( 'ட'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ந - தந் 'ந'கரம் ( 'த'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ன - றன் 'ன'கரம் ( 'ற'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)

இனிமேல் பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க.. மனசு வலிக்குது.


Sunday 13 April 2014

புத்தாண்டு வாழ்த்துக்கள்!!!

சித்திரை முதலாய் ஒளிரும் தேவி!
சித்திரை நிலவாய் குளிரும் தேவி!

மா வைத்தோம் மானுடம் செழிக்க!
பலா வைத்தோம் பல்லுயிர் ஒம்பிட!
வாழை வைத்தோம் வையம் வாழ!

முக்கனி கனியும் நாளில் பிறந்து
மூவா என்றும் வாழும் தேவி

திங்கள் பன்னிரண்டும் தழைக்க வைப்பாய்!
எங்கள் வாழ்வை செழிக்க வைப்பாய்!

அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

நன்றி,
சுபாசினி..

Tuesday 8 April 2014

மயில்விடு தூது!!! (முருகனுக்குத் தலைவி அனுப்பும் தூது)














மலைகளின் மன்னனிடம், திருச்செந்தூர்



அலைகளின் அரசனிடம் எந்தன்
நிலையை எடுத்துரைக்கும் தூதுக்
கலையை நீ அறிவாயோ???

காவல் கடந்தே காதல் சொல்ல,
சேவல் கொடியுடையானை நீ சென்றடைய
ஏவல் புரிந்தேனே! கெஞ்சியே உனக்கு
ஏவல் புரிந்தேனே! உயிர் மெலிந்தேனே.

உணவு துறந்தேன், நல்ல
உடை மறந்தேன், பகலில்
கனவில் தொலைந்தேன், அன்ன
நடையை இழந்தேன்- குமரன்

நினைவு வாட்ட விழிநீர்
மடை திறந்தேன் நானே!!!
துணையாக தூது செல்லாயோ??? உன்
விடையாது மயிலே சொல்லாயோ??



















'சித்தம் குழம்பியதோ? இவளுக்குப்
பித்தோ? பேயோ?' என
ஒத்த நோய்சொல்லி சுற்றம்
நித்தம் புலம்பியதே- அழகனே
மொத்தக் காரணம் என்று
சுத்த மொழியில் நீ செப்பாயோ???

ஒற்றைத் தலைக் காதலால்

சுற்றித் தலை சாய்கிறதே,
நெற்றிக் கண்ணுடையான் மகனைப்
பற்றி மனம் நோகிறதே...

உமையாள் மைந்தனை எண்ணி

இமைகள்  கருக அழுகின்றேன்.
தண்ணீரில் அழும் மீனாய்
கண்ணீரில் நானே கரைகின்றேன்...

அப்பன்சாமி முருகனை என்

சொப்பனத்தில் கண்டே களிக்கின்றேன்.
நேரில் வந்து நில்லானோ?? எனைத்
தேரில் ஏற்றிச் செல்லானோ??

ஆம்பலும் அல்லியும் அங்கே

கூம்பும் நேரம், அவனை
நாடுதே நெஞ்சம் நாளும்
கூடுதேயென்  நெஞ்சின் பாரம்.















மறையாத புகழுடையோன் மேலே
குறையாத காதல் கொண்டேனே!
விரைவாகச் சென்று நீயும்
நிறைவாக இதனை உரைப்பாயே!!

மயிலோன் மீது கொண்டது
மையல் இல்லை காதலென்று,
மயிலாள் நெஞ்சை மின்
மெயிலாய் மயிலே, மொழிவாயே!!!

வெயில் சாயும் முன்பே!
மதியும் காயும் முன்பே!
துயிலெனைக் கொல்லும் முன்பே!
விதியும் உயிர்க் கொள்ளும் முன்பே!

குருதி உள்ளே உறையும் முன்பே!
உறுதியும் கொஞ்சம் குறையும் முன்பே!
கருதிய கருமம் முடிக்கும் அவனையென்
இறுதி நாளுக்குள் வரச் சொல்லேன்!!!

Saturday 22 March 2014

தமிழிலக்கணம்-3 (மெய்ப்பாடு, வெகுளி)

இன்று இலக்கணப் பதிவிற்கு செல்லும் முன்பு பொதுவான சொல் பயன்பாடு பற்றிப் பார்க்கலாம்.

சின்ன சின்ன தமிழ் வார்த்தைக்குக் கூட பக்கத்துல அதற்குப் புலக்கத்துல உள்ள தமிழ் வார்த்தைய நான் குறிப்பிடக் காரணம் ஒன்றே ஒன்று தான். பல சமயம் நாம் இது தான் பொருள் என்று நினைத்துப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அது பொருளே கிடையாது. புரியலயா???
அடிக்கடி நாம பஸ்ல போகும் போது "ஒரே ரஷ்ஷா இருக்குப்பா" என்போம். உண்மையில் அங்கு பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை crowded-கூட்டமாக இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாம நம்ம தமிழ்நாட்டுல மட்டும் வேற எதோ சொல்லப் பயன்படுத்துறோம்.

இத ஏன் சொல்றேனா தமிழ் மொழியிலும் இப்படி நிறையப் பயன்பாடுகள் இருக்கு. சென்ற பதிவு இட்ட போது வெகுளி- கோபம் என்று சொல்லியிருந்த்தைப் பார்த்து அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார் "வெகுளினா எதார்த்தம் தானே!! நீ ஏன் தப்பா கோபம்னு போட்டுருக்க??".
வெகுளினா கோவம் தாங்க என்று சூடம் அனச்சு சத்தியம் பண்ணுனாலும் அவர் நம்பல. google translator க்கு போய் வெகுளினு அடிச்சாரு. அங்கயும் கோபம்னு காட்டல. அவர் முகத்தில் இப்போது பெருமிதச் சிரிப்பு.

தயவு செஞ்சு தமிழ் இலக்கியத் தேடலுக்கு கூகிள நம்பாதீங்க. அதிக மக்களால் பார்க்கப்பட்ட ஒரு பக்கத்த தான் அது முன்னால காட்டும். அது சரியா தப்பானு யாருக்கும் தெரியாது. translator கூட அப்படித் தான். முன்னாடி யாராச்சும் ஒரு வார்த்தைய தேடிப் பார்த்து அதுக்கு இது பொருள்னு தப்பா எதையாச்சும் add குடுத்துட்டு போயிருந்த அதுவும் தப்பா தான் காட்டும். paper presentation என்பதற்கு காகித வழங்கள் என்று மொழிபெயர்க்கும் அளவுக்கு தான் அது இருக்கிறது.

வெகுளி:

அத விட்டுட்டு வெகுளிக்கு வருவோம். எப்படி அவர நம்ப வைக்கிறது. இருக்கவே இருக்கிறது தொல்காப்பியம். அதுல மொழி பயன்பாடு மட்டுமா, வாழ்க்கை முறை எப்படினு கூட சொல்லியிருக்காங்க. இத சொல்லியிருக்க மாட்டாங்களா??? சொல்லியிருக்காரே தொல்காப்பியர்.
இதோ அந்தப் பாட்டு.

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" (பொருளதிகாரம் 247)

ஆமா இதெல்லாம் என்னனு கேட்கறீங்களா...ஒரு செய்யுளுக்கு உறுப்பா வரக் கூடிய மெய்ப்பாடுகள். நவரசம்னு சொல்றாங்களே அது தான். ஆனா என்ன தமிழ்ல எட்டு ரசம் தான். சாந்தம்னு ஒன்னு தனியா இல்ல. மனசுல என்ன தோணுதோ அது முகத்துல வெளிப்படும் போது அது மெய்ப்பாடு. மெய்- உடல். இப்ப சொல்லுங்க, உலக மொழியில எந்த மொழியில இந்த வரையறை எல்லாம் இருக்கு??? எந்த அளவு documentation செஞ்சுருக்காங்க. நம்ம tracksheet எல்லாம் சும்மா, தூக்கிப் போட்டறலாம்.















சரி வாங்க நாம பாட்டுக்கு போவோம். இதுல வர வெகுளிக்கு கோபம்னு அர்த்தம். இன்னும் நான் நம்ப மாட்டேன்னு சொன்ன இதையும் படிங்க.

வெகுளி- சினம். சீற்றம்னு கூட வச்சுக்கலாம். இது எப்படி வந்துச்சு???
வேகும்-உள்-இ. = வெகுளி. இப்படி உரியடிகளால பிறந்துச்சு.
சிலர் கோபப்பட்டா என்ன வயித்தெரிச்சலானு கேட்கறோமே, "வயிறு உள்ள வேகுது. (வேகும்- உள்-இ)" அப்ப அது வெகுளி தானா? (என்ன ஒரு புத்திசாலித்தனம், இஞ்சினியரிங்க் படிச்ச புள்ளைக்கு இவ்வளவு அறிவானு நீங்க மனசுக்குள்ள சொல்றது தெரியுது. :P )

ஆனா இப்படி சகட்டுமேனிக்கு வரது எல்லாம் சினமா???  எதுக்கு எடுத்தாலும் கோவப்பட்டா அதுக்கு மாறியாதையில்ல. ஆனா தொல்காப்பியர் இதுக்கு எல்லாம் கோவப்பட்ட தான் அது கோவம், இல்லனா out of syllabus பா அப்படினு ஒரு பட்டியல் சொல்றாரு.

"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே."

வெகுளி ஏன் வருது? வெறுப்பால தான் வருது. (வெறுப்ப வந்த வெகுளி).
அந்த வெறுப்புக்கு எத்தன காரணம்?? நான்கு.
அந்த நாலு எது??

1. உறுப்பறை- அதாவது உடல் உறுப்புகளை சேதம் செய்றது (சூர்பனகை கோபப்பட்டு அண்ணன் கிட்ட போனதுல என்ன தப்பு?)
2. குடிகோள்- தன்னை சார்ந்து வாழ்பவருக்குத் துன்பம் தருதல் (அண்ணன் தங்கச்சி அழுதத பார்த்து சீதைய கடத்துனது கோபத்துல தான?)
3. அலை- திட்டுதல்
4. கொலை- கொலை செய்றது அல்லது அதற்கு உடந்தையா இருக்கறது.  (கண்ணகி வெகுண்டு மதுரையை அழித்தது)

இந்த காரணத்துக்கு எல்லாம் ஒருவனுக்கு சினம் வரலாம்.

















இதெல்லாம் ஏன் இலக்கணப் பகுதில எழுதறனு கேட்காதீங்க. இதெல்லாம் செய்யுளுக்குரிய மெய்ப்பாடுகளும் அவைத் தோன்றக் காரணங்களும்.

பிற மெய்ப்பாடு பத்தி கொஞ்சம் தெளிவா பொருளியல் வரும் போது பார்க்கலாம்.
இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம்.

நன்றி
சுபாசினி.

Tuesday 18 March 2014

தமிழிலக்கணம்-2 (அடுக்குத்தொடர்)

லேசா! லேசா! நீ இல்லாம வாழ்வது லேசா!!!

புரிஞ்சுருக்குமே!!! இரட்டைக் கிளவி பார்த்தாச்சு.. அடுத்து என்ன?? இன்னைக்கு அடுக்குத்தொடர் தான்.

அடுக்குத்தொடர்:

இரண்டு சொல் அடுக்கி வரும். தனித்தனியே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கும். அப்படி இருந்தா அது அடுக்குத்தொடர். நான்கு சொல் வர கூட அடுக்கி வரும். அச்சம், வெகுளி (கோபம்), விரைவு (அவசரம்), அவலம் இவற்றைக் குறிக்க அடுக்குத்தொடர் பயன்படும்.

இங்கு 'இவற்றை' என்பதனை தட்டச்சு செய்யும் போது தான் பெரும்பாலானோர் செய்யும் தவறு நினைவுக்கு வந்தது. 'அவைகள், இவைகளை' என்பது எல்லாம் தப்பு. அவை, இவை என்பதே பன்மை தான். (U mean plural??? Yes). இதுல எதுக்கு மறுபடியும் ஒரு "கள்" சேர்த்து அவற்றை மேலும் பன்மையாக்க வேண்டும்?? ஆங்கிலத்திலே "falling down" என்பதை தவறு என்பார்களே. அது போல இதுவும் தவறான பயன்பாடு.
(when there is no gravity how will we fall down?? :P இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. இது சும்மா மொழி பயன்பாட்டிற்கு மட்டும் தான்).

பெரும்போக்கா சொன்ன அடுக்கி வருவது அடுக்குத் தொடர். ஆனால் நன்னூல்ல கொஞ்சம் இறங்கி தேடுனா இது அவ்வளவு எளிமையா முடியற தலைப்பு இல்லனு தெரியும்.

"அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்." இது நன்னூல் சூத்திரம்.

அவ்ளோ தாங்க. அசைநிலை, பொருள்நிலை, இசைநிறைக்கு ஒன்று இரண்டு மூன்றுனு அவ்வை வரிசைபடுத்திப் பாடுன மாறிப் பாடுன அது அடுக்குத்தொடர். இதுல பிரச்சனை என்னனா "அசைநிலை என்றால் என்ன? பொருள்நிலை என்றால் என்ன??" இதுக்கு எல்லாம் மறுபடியும் நாம நிறைய இரண்டு மார்க்கு கேள்விக்கு பதில் படிக்கற மாறி இருக்கும். (ரொம்ம டெக்கினிக்கல் டெர்ம்ஸா இருக்கே!!!).

1. தனியா ஒரு பொருள் உணர்த்தாம பெயர்ச்சொல் கூடயும், வினைச்சொல் கூடயும் சேர்த்து சொல்லப்படுவது அசைநிலை. (அசைநிலை பற்றி பின் ஒரு தனி இடுகை பதிவு செய்கிறேன். இப்பொழுது அடுக்குத் தொடரில் கவனம் செலுத்தலாம்). அடுக்குத்தொடர் அசைநிலையா வரும்.

எடுத்துக்காட்டு : போலும் போலும், வாழிய வாழிய...

2. இதுல மேல சொன்ன " அச்சம், வெகுளி, விரைவு, அவலம்" இதெல்லாம் பொருள்நிலைக்கு கீழ வரும்.

எடுத்துக்காட்டு: தீத் தீ, பாம்பு பாம்பு. 
(ஐயோ!! ஐயோ!! உன் கண்கள் ஐயையோ!!!... இது அவலமா அச்சமானு தெரியலைங்க... ஆனா அடுக்குத் தொடர் தான்... )

3. செய்யுள் மற்றும் பிற இடங்கள்ள ஓசை நிறப்ப அடுக்கி வந்தா அதுவும் அடுக்குத் தொடர் தான். அது இசைநிறiக்குக் கீழ வரும்.
(கவிதை எழுதும் போது எந்த வார்த்தையும் கிடைக்கலனா மானே! மானே! தேனே!! தேனே!! இப்படி போட்டுக்கோங்க.. கேட்ட இசைநிறையின் பொருட்டு வந்த அடுக்குத் தொடர்னு சொல்லி சமாலிச்சுக்கலாம் :P )

எடுத்துக்காட்டு: வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! (எங்கயோ கேட்ட பாட்டு மாறி இருக்குதுல).

இன்னும் கொஞ்சம் இறங்கிப்போய் தொல்காப்பியத்துல தேடுன இந்தப் பாட்டெல்லாம் கிடைக்குது...

"ஏஏ யம்பன் மொழிந்தனள் யாயே"
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்"
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ"
(அடுக்குத்தொடருக்கு எடுத்துக்காட்டுகளைக் கூறும் தொல்காப்பியப்பாடல்).

இந்தப் பாடல்களையும் நன்னூல் சூத்தரத்தையும் வச்சுப் பார்க்கும் போது நமக்கு தெளிவா ஒன்னு புரியுது.
அதாவது அசைநிலைக்கு ஒரு சொல் இரண்டு தடவ அடுக்கி வரலாம். பொருள் நிலைக்கு இரண்டு, மூன்று முறை அடுக்கி வரலாம். இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறை கூட அடுக்கி வரலாம்.

" ராமா ராமா!!!" இது அடுக்குத் தொடரா?? இல்லை. இப்படி பெயர்களை தொடர்ந்து விளித்தல் (விளி- அழை) அடுக்குத் தொடர் ஆகாது. இதுவே பயத்தில் "ராமா ராமா" என்று அலரினால் அது அடுக்குத் தொடர்.

இன்னும் தெளிவா சொல்லனும்னா... "கண்டேன் கண்டேன் காதலை" இதுல வருவது அடுக்குத் தொடர். "சோனியா! சோனியா!" இந்தப் பாட்டுல வருவது விளி வேற்றுமை. அடுக்குத்தொடர் இல்லை.


இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்? - கம்பராமாயணம்.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!!! - பாரதியார்.















வாழ்க,வாழ்க பாரத சமுதாயம் - வாழ்கவே - பாரதியார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு. - பெரியாழ்வார்.

(இலக்கியச் சான்றுனு சொல்லிட்டு தசாவதாரம் பாட்ட சொல்லி இருக்கேன்னு நினைக்காதீங்க. இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் திருப்பல்லாண்டு என்னும் பகுதிப் பாடல்)


பி.கு:  இதோடு அடுக்குத்தொடர் பற்றிய குறிப்புகள் முடிகின்றன. இதில் சொல்லப்பட்ட அசைநிலை, இசைநிறை பற்றியெல்லாம் அந்தந்த தலைப்புகளின் கீழ் பிற்பாடு தெளிவாக எழுதுகிறேன்.
இரட்டைக்கிளவி பற்றிப் படிக்க சொடுக்கவும்.

நன்றி,
சுபாசினி.

Monday 17 March 2014

தமிழிலக்கணம்- 1 (இரட்டைக்கிளவி)

"சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ"













'இப்படி ஜீன்ஸ் படத்துல வர மாறி சொன்ன தமிழ் இலக்கணம் எவ்ளோ நல்லா இருக்கும்!!! இப்படி நினைக்கறவங்களுக்கு கொஞ்சம் எளிமயா நியாபகம் வச்சுக்க சுலபமா ஒரு பகுதி எழுதுன என்னனு நினைச்சு தான்' இதை எழுத ஆரம்பித்துள்ளேன்.

இலக்கணம் ஐந்து வகைப்படும் என்று தொடங்கினால், இந்த புள்ள ஆறாவது தமிழ் இலக்கணத்த அப்படியே எழுதுது என்று தோன்றிவிடும்.

அப்பொழுது எங்கிருந்து தொடங்கலாம்??
இரட்டைக்கிளவில இருந்தே ஆரம்பிக்கலாம்.
இரட்டைக்கிளவி என்னனு எங்களுக்குத் தெரியாதா?? இத எழுதறதுக்கு ஒரு தொடரா?? என்று கடியாகாதீர்கள். எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். எடுத்ததும் "ஒன்றிய வஞ்சித்தளை", "கொண்டுகூட்டு பொருட்கோள்" என்று தொடங்கினால் இது ஒத்துவராதுபா என்று பலரும் படிக்கமாட்டார்கள். அதனால் தான், தெரிந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று இரட்டைக் கிளவியில் தொடங்குகிறேன்.

இரட்டைக் கிளவி:

"சல சல" இது தாங்க இரட்டைக்கிளவி. "சல" க்கு பொருள் இல்லை. இப்படி இரண்டு பொருள் இல்லாத சொற்கள் சேர்ந்து வருவது தான் இரட்டைக்கிளவி. (கிளவியா? அது யாரு? பக்கத்து வீட்டு பாட்டியா? என்று கேட்காதீர்கள். இந்த கிளவிக்கு சொல் எனப் பொருள். கிளவி- சொல்). ஆக பொருள் இல்லாத இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருள் தருவது தான் இரட்டைக்கிளவி. அவற்றை பிரித்தால் பொருள் இல்லை.
இவை வினைக்கு அடைமொழியாய் வரும். அதாவது ஒரு செயலின் தன்மையைக் குறிக்க பயன்படும்.

எடுத்துக்காட்டு:
'பள பள'க்குது புது நோட்டு...
திருதிரு துறுதுறு...
“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ”- இது என்ன படப் பாட்டுடா என்று யோசிக்காதீர்கள். இது திருப்புகழ் பாட்டு.
(அப்ப அப்ப கொஞ்சம் இலக்கியத்தையும் சேர்த்துகலாம்.)

"இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா.". இது நன்னூல் சூத்திரம்.

இங்கு ஒரு ஐயம் (சந்தேகம்) எழலாம்.
"துடி துடித்து போனான்"- இதில் துடித்து என்பதற்கு தனியே பொருள் உண்டு தானே. பின் இது எப்படி இரட்டைக் கிளவி??? ஆனால் முன்னால் உள்ள 'துடி' என்பதற்கு இங்கு  தனியே பொருள் இல்லை. மேலும் இது வினைக்கு அடைமொழியாக வருகிறது. அதனால் இது இரட்டைக் கிளவி.

இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

"திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு”-திருப்புகழ்.
"மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்" -திருப்புகழ்.
"நெறிவு கலகலென வாசம் வீசுகுழ" - திருப்புகழ்.
"சலசல மும்மதம் பொழிய” - சீவக சிந்தாமணி
“கலகல, கூஉந்துணை யல்லால்” -நாலடியார்
“குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும்” - புறநானூறு
“வற்றிய வோலை கலகலக்கும்” -நாலடியார்.

பி.கு: இலக்கண நாட்டம், அறிவு இவை உடையவர்களுக்கும், இலக்கணம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும் பொதுவாகவே இந்தத் தொடரை எழுதுகிறேன். முழு மூச்சாக மொத்த இலக்கணப் படுதியையும் எழுதிவிட வேண்டும் என்ற அவாவில் எழுதுகிறேன். எப்படியெல்லாம் தமிழை எளிமையாக கற்றுக்கொடுத்திருக்கலாம் என்று நான் எண்ணினேனோ அப்படியெல்லாம் இந்தத் தொடரை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள். பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
நன்றி
சுபாசினி.




Sunday 16 March 2014

வைதல் பாடல்

வீட்டில் திட்டுவதில் கூட பாரம்பரியம் இருக்கத் தானே செய்கிறது!!!

இது கொஞ்சம் ஓவர்னு நினைக்காதீர்கள். உண்மை தான்...

இது என்ன புதுசா, நடவுப்பாட்டு ஏற்றப்பாட்டு போல வைதல் பாட்டா??

அப்படிக் கூட வைத்துக்கொள்ளலாம்.
அதற்காக ஊர்க்குழாய் அடியில் சண்டை போட்டுக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட வரிகளில் பாரம்பரியமா என்று எண்ண வேண்டாம். (அதில் கூட பாரம்பரியம் இருக்கலாம்)..

நம் அம்மா திட்டும் வரிகளில் கொஞ்சம் ஊர்ப் பழக்கமும், குடும்ப வசனங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
பல வரிகள் என் அம்மாச்சியிடம் இருந்து ஜீனில் வந்தவை தான்... யோசித்துப் பார்த்தால் உங்கள் வீட்டிலும் இப்படியாக ரெடிமேட் வசனங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

என் அம்மா கோபம் வந்தால் "புள்ளை இல்லாட்டி போகுதுனு சுருக்குட்டுத் தூக்கிட்டு ஏனோ செத்துப் போச்சுனு சொல்லிடுவேன்" என்பார். சின்ன வயதில் இந்த வசனம் எனக்கு திகிலூட்டப் போதுமானதாக இருந்தது. "போலீஸ் சம்சாரமா இருந்திட்டு அம்மாக்கு போலீஸ் கொலை கேசுல பிடிச்சுடுவாங்கனு பயம் அம்மாக்கு கொஞ்சம் கூட இல்லயா" என்று சந்தேகம் வர என் அப்பாவிடம் சென்று " சுருக்குட்டு தூக்குனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கண்டு பிடிக்க முடியாத டாடி" என்று கேட்டேன். (நாலவது படிக்கற என் பொன்னுக்கு எவ்வளவு அறிவு என்று எண்ணி) அவர் சிரித்துவிட்டு "கண்டு பிடிச்சடலாம்" என்றார். அன்றிலிருந்து என் அம்மா அதை சொல்வதை குறைத்துக் கொண்டார். இது ஏதோ என் அம்மா சொல்லும் வசனம் தான் என்ரு நினைத்துக்கொண்டேன். பிற்பாடு தான் தெரிந்தது என் பக்கத்துவீட்டு அண்ணாவின் (அவருக்கே இப்பொழுது குழந்தை உள்ளது) இதை விட பரிதாபம். "அவங்க அம்மா கதவை சாத்தி சேலைய சாரத்துல போட்டு, அவன அண்டா மேல ஏத்தி 'சுருக்கு போடட்டுமானு கேட்டா' அவன் அழுதுட்டே இருந்தான், அப்பறம் அவங்க பெரிமா பெரிப்பா எல்லாம் வந்து அவங்க அம்மாவ திட்டி பையன கூட்டிட்டு போனாங்க" என்று பக்கத்து வீட்டு அத்தை நினைவில் திளைக்கும் போது தான் தெரிகிறது "சுருக்குட்டு தூக்கறது" எங்கள் ஊரின் யுனிவர்சல் டைலாக் என்று. சிலர் அதனை சோதனை செய்து பார்க்கும் அளவு கூட சென்றிருக்கிறார்கள்.

தோசைக்கு சாம்பாரும் தேங்காய் சட்டினியும் வைத்திருக்கும் போது " என்னங் மா!!! புளிச் சட்னி இல்லயா?" என்று கேட்டால் இந்த பதில் தான் கிடைக்கும் "இத விட இல்லைனாலும் நீ எல்லாம் எமன பலகாரம் பண்ணி எதுத்தவூட்ல சங்காரம் பண்ணிடுவ".... இது எங்கள் பாட்டி சொல்லி என் அம்மாவிற்கு தொற்றிக் கொண்ட பழக்கம் தான்.

"உங்கத் திங்கத் தான் செல்லம், ஊடெல்லாம் இரைக்கவுமா செல்லம்???" எந்த பொருளையாவது உடைத்தாலோ கீழே போட்டாலோ வரும் ரெஃப்லெக்டிவ் ரியாக்சன் இது. ஆனால் இவை ஆழம் பொருந்திய வரிகள். இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு செல்லம் தர வேண்டும் என்று உணர்த்தும் வரிகள்.

சின்ன குறும்பு செய்யும் போது எல்லாம் என் அம்மாவும் சித்தியும் " இப்படியே பன்னுன மிளகா பிடிச்சுவிட்டுருவென்" என்பார்கள். அது என்னடா "மிளகாய் பிடிக்கறது" என்று ஆராய்ந்து பார்த்தோமானல்... ஒரு படியிலே (ஆழாக்கில்) அடுப்புத் தனலைப் போட்டு அதன் மேல் மிளகாயை போடுவது.. அந்த மிளகாய் என்ன காரநெடி அடிக்கும்.. அய்யோ சாமி... நல்ல வேளை எங்கள் வீட்டில் படியும் இல்லை, விறகடுப்பும் இல்லை... இதையெல்லாம் படித்துவிட்டு "என்னமா வன்முறைய வளர்க்கறயா" என்று கேட்காதீர்கள். இதெல்லாம் சும்மனாச்சிக்கு குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட பூச்சாண்டிக் கதைகள். எனினும் இவை நாட்டுப்புறப் பாடல் போல் சிற்றூர்களில் பரவிக்கிடந்தன.

பலவும் வழகொழிந்து வரும் நிலையில் இந்த வைதல் பாட்டும் மறந்து கொண்டு தான் வருகிறது. அம்மாக்களும் பாட்டிகளும் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். நாகரிகம் கருதியோ, மனநிலையாக குழந்தைகளை இத்தகைய வசனம் பாதிக்கும் என்று எண்ணியோ, இல்லை புது வசனம் ஒன்று கிடைத்தோ, நாளை நான் என் பிள்ளைகளை "Mind what you are doing" என்ற ரேஞ்சுக்கு குறைத்துவிடக்கூடும். என்ன சொல்லுங்கள், சும்மனாச்சிக்கு பயம்காட்ட சொல்லப்படும் இத்தகைய வரிகள் என்றுமே மணம் வீசுகின்றன தான்.

பி.கு.: உங்கள் வீட்டிலும் இப்படியாக இருக்கும் பாரம்பாரிய வைதல் பாடல்கள் பற்றி நிச்சயம் பின்னூட்டம் இடுங்கள். நன்றி.

Saturday 15 March 2014

கண்ணதாசன் எடுத்தாண்ட நளவெண்பாப் பாடல்

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் " என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறீர்களா???

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" இப்படியாக தலைவன் பாட அதற்கு பின்வருமாறு தலைவி பதிலுரைப்பாள்

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"















அடேங்கப்பா! முகத்தை மலர்னு நெனச்சு வண்டு மோதுச்சா??? என்னமா எழுதியிருகாரு தலைவர் என்று சொல்லத் தோன்றும் வரிகள் அல்லவா இவை.
இதே பொருள் கொண்ட பாடல் ஒன்று நளவெண்பாவில் உள்ளதென்றால் நம்புவீர்களா???

"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." - (நளவெண்பா)

திருமணம் முடிந்து பின்பு நளன் தமயந்தியை தோட்டத்திற்கு ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன். அங்கே தான் கண்ட காட்சியை அவளையும் காணச்சொல்கின்றான்.
அங்கே என்ன காட்சி நடக்கிறது தெரியுமா!!!

"பெண் ஒருத்தி மலர்கொய்து கொண்டிருக்கிறாள்; அங்கே மலர்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டொன்று அவளது முகத்தை தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவள் தன் கைகளால் முகத்தை மறைக்கிறாள்; அப்பொழுதும் அந்த வண்டு அவளது கைகளை காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவளுக்கு வேர்க்கின்றது" இந்தக் காட்சியைக் காண் எங்கின்றான் நளன்.















முகத்தை மலர் என்றதோடு முடித்துக்கொண்டார் கண்ணதாசன். கையையும் மலர் என்றார் புகழேந்தி!!!

பிரித்துப் பொருள் கொள்ளும் முறை:

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள், வாள் முகத்தைப் பங்கயம் என்று எண்ணிப் படி வண்டைச் செங்கையால் காத்து ஆள, கை மலரைக் காந்தள் எனப் பாய்தலுமே, வேர்த்தளைக் காண் என்றான் வேந்து.

செங்கையை செங்காந்தள் மலர் என்கிறார். கை மலர் என்கிறார்.
பங்கயம்- தாமரை
காந்தள்- செங்காந்தள்
வேந்து- அரசன்.(நளன்)

Sunday 9 March 2014

தலைவியை உடன் அழைத்துச் செல்லாததற்கு தலைவன் சொல்லும் காரணங்கள்

காதலிய கூட கூட்டிட்டு போறதுக்கு ஆயிரம் காரணம் காதலர்களுக்கு இருக்கும். "போருக்குப் போறேன், ஊருக்குப் போறேன்" இப்படி பல கதைகள் சொல்லுவாங்க. ஆனா இந்தப் பாட்டுல தலைவன் சொல்ற காரணங்கள் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாத்தான் இருக்கு. அடேங்கப்பா!!! தலைவி மேல அவனுக்கு இவ்வளவு அக்கறையா, இல்ல தலைவி அவன் எதைச் சொன்னாலும் நம்புவானு தைரியத்துல தலைவன் சொல்றானானு தெரியல. இல்ல ஒருவேளை அந்த காலத்தில் போகும் வழி அவ்வள்வும் கொடுமையாக் கூட இருந்திருக்கலாம். "தலைவியைக் கூட்டிக்கொண்டு செல்" எனக் கூறும் தோழிக்கு தலைவன் உரைக்கும் பதிலாக அமைந்த அப்பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை
திணை: பாலை,
பாடியவர்: சிறைக்குடியாந்தையார்

"வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே."

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

(கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல், பொல்லாங்கு - தீமை.)

அஃதாவது, தலைவியப் பிரியும் தலைவன், தான் போகும் வழியே இடரானது, தன்னால் தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது என்று தோழிக்கு எடுத்துச் சொல்லும் பாட்டு.














விளக்கம்:

பாலை வழியானது மிகவும் கொடுமையானது. அங்கே நீருக்கு பெரும்பாடு.
வேட்டைக்குச் சென்று திரும்பும் செந்நாய் நீரற்ற சுனையில் குழி தோண்டி கிடைக்கும் நீரில், அது உண்டது போக மிச்சம் உள்ள நீர் தான் கிடைக்கும்.
அதிவும் குளவி மலர்களால் மூடப்பட்டு, அம்மலர்கள் அழுகி வீசும் துர்நாற்றம் உடையதாய் இருக்கும்.
வளையல் அணைந்த கையையுடைய தலைவியை என்னோடு சேர்ந்து எப்படி அந்த நீரைப் பருகச் சொல்வது??
என்னோடு இந்த வழியில் வந்தால் என் மனதில் நிறைந்துள்ள அவள் வருந்தத்தக்கவள் ஆவாள்.

குறிப்பு:










இதில் குளவி என்பது பூச்சியினத்தைக் குறிப்பிடவில்லை. அது ஒரு மலர் வகை. [குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) ]

வேட்டம், சின்னீர் போன்ற சொற்கள் பாலைத் திணையை நன்கு புலப்படுத்துகின்றன.

பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2).


பிரித்துப் படிக்கும் முறை:
வேட்டம் செந்நாய்  கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளையுடை கையள் எம்மொடு  உணீயர் தான் வருகதில்,
வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் அளியளோ, அளியள்.

பதவுரை:
கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியது
அளியள் - மிக இரங்கத் தக்காள்