Thursday 2 October 2014

கற்றதனால் ஆனா பயன்??? எதுவுமில்லை!

கற்றலினால் ஆன பயன் என்ன??
நிச்சயம் தெரியவில்லை. ஆனால் இத்தலைப்பில வெளியான கட்டுரையின் பயன் மட்டும் தெரிகிறது.
" நன்றாக ஆறடி உயரம் வளர்ந்த புலியானாலும் நம் கையால் அதன் கண்ணில் அடித்தால் பயந்து ஓடிவிடும்" இதுதான் அக்கட்டுரைவிட்டுச்செல்லும் செய்தி. கட்டுரையில் பல இருக்க இதை ஏன் பிடித்துக்கொண்டாய் என்று கேட்காதீர்கள். சிந்தனைகளின் ஊடே, கருத்துக்களின் ஊடே சொல்லப்படும் செய்திகளும், அறிவியல் சிந்தாங்களும் மக்களை அதிகம் சென்றடைகின்றன. நேற்று தினத்தந்தியின் முகனூல் பக்கத்தில் பலரும் இதைச்சொல்லியிருந்தனர். இச்சம்பவம் நடந்த அன்று இதுபோன்ற பின்னூட்டங்கள் இல்லை என்பதும், இக்கட்டுரை பரவிய பின்பு இக்கருத்து வேரூன்றியிருக்கிறது என்பதும் மறுக்க முடியாத உண்மை.
ஆமாம் புலிகளை அப்படி கண்ணில் தாக்கி விரட்ட முடியுமா? முடியாது. அக்கட்டுரையை முதன்முதலாகப்படித்த நாளில் இருந்து இணையத்தில் புலிகளிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று தேடிப்பார்த்தேன். ஒரு இடத்தில் கூட இந்த முட்டாள் தனமான யோசனையை யாரும் சொல்லவில்லை. எனக்குத்தெரிந்த வனவிலங்கு ஆர்வலர்களிடமும் கேட்டுப்பார்த்தேன். இக்கட்டுரை படித்து அவர்களும் எரிச்சலுற்றார்கள் என்பது புரிந்தது. ஆக மொத்தம் கட்டுரை ஆசிரியர் அக்கருத்தை தாமாகவே எழுதியுள்ளார். அது இன்று மக்களிடையே அதிக தாக்குதலை உண்டாக்கியிருக்கின்றது என்று உணர்ந்தால் அதில் உள்ள பிழையின் தாக்கமும் எவ்வளவு என்று உணர முடியும். இன்று பலரும் பொத்தாம் பொதுவாய் கருத்து சொல்கிறேன் என்று இடையில் அறிவியலுக்கும், அறிவுக்கும் முரண்பட்ட செய்திகளை மக்களிடம் விதைத்துச்செல்கின்றனர். இதை உண்மையென்று நம்பி நாளை நானே ஒரு நாயை கண்ணில் ஓங்கிக்குத்தினால் அது கடிக்காமல் போகுமா என்பது சந்தேகம் தான். கட்டுரை எழுதுபவர்கள் சிந்திப்பார்களா???
இந்திய ஊடகங்கள் மோசத்திலும் மோசம். புலி தாக்கிய படங்களை பரப்பிவிட்டு விட்டு அதே சமயம் "மக்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தனர்" என்று கொந்தளிக்க வேறு செய்கின்றனர். (இதுவும் தினத்தந்தியில் வெளியானது, வேறு எந்த நாளிதழ்கள் எல்லாம் அப்படி எழுதுகின்றனவோ தெரியவில்லை) அப்படங்களை வைத்து இவர்கள் காசு பார்த்தார்கள் என்பதை மறந்துவிட்டு எழுதுகின்றனர். இதற்கு முன் தான் மக்களுக்கு அறியாமை. அதைப்போக்க நீங்கள் என்ன செய்தீர்கள்?? பாம்பைப்பார்த்தால் என்ன செய்வது, புலிவிரட்டினால் என்ன செய்வது என்று அத்துறை சார்ந்த வல்லூநர்களின் உதவியோடு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக கட்டுரைகள் வெளியிடாமல் புலிதாக்கிய படத்தை மட்டும் தானே அதிகம் வெளியிட்டீர்கள்.
நாம் மட்டும் என்ன விதிவிலக்கா... இதற்கு முன் பல ஆர்வலர்கள் விலங்குகளைப்பற்றி பல கட்டுரைகள் வெளியிட்டுள்ளனர். அதையெல்லாம் முழுவதும் படித்ததும் இல்லை, மற்றவர்க்குப்பரிந்துரைத்ததும் இல்லை. ஒரு விபத்திற்குப்பின்னாவது தெளிவு பெறவேண்டும்.
ஆமாம் கற்றலினால் ஆன பயன் என்ன? கற்பதால் எப்பயனும் இல்லை. கற்றல் வழி நடப்பதில் தான் பயன். விதிகளைப்பின்பற்றவேண்டும் என்று எல்லாப்பள்ளிகளும் கற்றுக்கொடுக்கின்றன. சாலை விதிகள் தொடங்கி எவ்விதிகளையும் மதிப்பதில்லை. வேலிதாண்டி புலியின் இடத்திற்கு செல்லக்கூடாது என்று கற்றதை நாம் கடைபிடிக்கவில்லை. புலியிடமிருந்து எப்படித்தப்பிப்பது என்று பள்ளியில் கற்றுக்கொடுத்திருந்தாலும் கடைபிடிப்போமா என்பது சந்தேகம் தான். இப்படியொரு கோரவிபத்து நேர்ந்துவிட்டதால் புலியிடம் கொஞ்சம் தள்ளியிருப்போம், மற்றபடி விதிகளை மீறிக்கொண்டுதானே இருப்போம். ஒரு நாளைக்கு ஆயிரம் விதிகளை மீறுகிறோம். யார் செய்த புண்ணியமோ என்னமோ தப்பித்துக்கொள்கிறோம். ஆனால் சில நேரங்களில் மீறப்படும் விதிகளின் விளைவு மிகவும் பயங்கரமாய் இருக்கும். அதில் ஒன்று தான் புலிதாக்கிய நிகழ்வும். "விதிகள் மீறப்படுவதற்குத்தான்" என்னும் மனநிலை மாறி அவை மதித்து நடப்பதற்கு என்னும் மனநிலை வளர்ப்பதைத்தவிர விபத்துக்களைத்தவிர்க்க வேறு வழியில்லை.