Saturday 22 March 2014

தமிழிலக்கணம்-3 (மெய்ப்பாடு, வெகுளி)

இன்று இலக்கணப் பதிவிற்கு செல்லும் முன்பு பொதுவான சொல் பயன்பாடு பற்றிப் பார்க்கலாம்.

சின்ன சின்ன தமிழ் வார்த்தைக்குக் கூட பக்கத்துல அதற்குப் புலக்கத்துல உள்ள தமிழ் வார்த்தைய நான் குறிப்பிடக் காரணம் ஒன்றே ஒன்று தான். பல சமயம் நாம் இது தான் பொருள் என்று நினைத்துப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அது பொருளே கிடையாது. புரியலயா???
அடிக்கடி நாம பஸ்ல போகும் போது "ஒரே ரஷ்ஷா இருக்குப்பா" என்போம். உண்மையில் அங்கு பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை crowded-கூட்டமாக இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாம நம்ம தமிழ்நாட்டுல மட்டும் வேற எதோ சொல்லப் பயன்படுத்துறோம்.

இத ஏன் சொல்றேனா தமிழ் மொழியிலும் இப்படி நிறையப் பயன்பாடுகள் இருக்கு. சென்ற பதிவு இட்ட போது வெகுளி- கோபம் என்று சொல்லியிருந்த்தைப் பார்த்து அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார் "வெகுளினா எதார்த்தம் தானே!! நீ ஏன் தப்பா கோபம்னு போட்டுருக்க??".
வெகுளினா கோவம் தாங்க என்று சூடம் அனச்சு சத்தியம் பண்ணுனாலும் அவர் நம்பல. google translator க்கு போய் வெகுளினு அடிச்சாரு. அங்கயும் கோபம்னு காட்டல. அவர் முகத்தில் இப்போது பெருமிதச் சிரிப்பு.

தயவு செஞ்சு தமிழ் இலக்கியத் தேடலுக்கு கூகிள நம்பாதீங்க. அதிக மக்களால் பார்க்கப்பட்ட ஒரு பக்கத்த தான் அது முன்னால காட்டும். அது சரியா தப்பானு யாருக்கும் தெரியாது. translator கூட அப்படித் தான். முன்னாடி யாராச்சும் ஒரு வார்த்தைய தேடிப் பார்த்து அதுக்கு இது பொருள்னு தப்பா எதையாச்சும் add குடுத்துட்டு போயிருந்த அதுவும் தப்பா தான் காட்டும். paper presentation என்பதற்கு காகித வழங்கள் என்று மொழிபெயர்க்கும் அளவுக்கு தான் அது இருக்கிறது.

வெகுளி:

அத விட்டுட்டு வெகுளிக்கு வருவோம். எப்படி அவர நம்ப வைக்கிறது. இருக்கவே இருக்கிறது தொல்காப்பியம். அதுல மொழி பயன்பாடு மட்டுமா, வாழ்க்கை முறை எப்படினு கூட சொல்லியிருக்காங்க. இத சொல்லியிருக்க மாட்டாங்களா??? சொல்லியிருக்காரே தொல்காப்பியர்.
இதோ அந்தப் பாட்டு.

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" (பொருளதிகாரம் 247)

ஆமா இதெல்லாம் என்னனு கேட்கறீங்களா...ஒரு செய்யுளுக்கு உறுப்பா வரக் கூடிய மெய்ப்பாடுகள். நவரசம்னு சொல்றாங்களே அது தான். ஆனா என்ன தமிழ்ல எட்டு ரசம் தான். சாந்தம்னு ஒன்னு தனியா இல்ல. மனசுல என்ன தோணுதோ அது முகத்துல வெளிப்படும் போது அது மெய்ப்பாடு. மெய்- உடல். இப்ப சொல்லுங்க, உலக மொழியில எந்த மொழியில இந்த வரையறை எல்லாம் இருக்கு??? எந்த அளவு documentation செஞ்சுருக்காங்க. நம்ம tracksheet எல்லாம் சும்மா, தூக்கிப் போட்டறலாம்.















சரி வாங்க நாம பாட்டுக்கு போவோம். இதுல வர வெகுளிக்கு கோபம்னு அர்த்தம். இன்னும் நான் நம்ப மாட்டேன்னு சொன்ன இதையும் படிங்க.

வெகுளி- சினம். சீற்றம்னு கூட வச்சுக்கலாம். இது எப்படி வந்துச்சு???
வேகும்-உள்-இ. = வெகுளி. இப்படி உரியடிகளால பிறந்துச்சு.
சிலர் கோபப்பட்டா என்ன வயித்தெரிச்சலானு கேட்கறோமே, "வயிறு உள்ள வேகுது. (வேகும்- உள்-இ)" அப்ப அது வெகுளி தானா? (என்ன ஒரு புத்திசாலித்தனம், இஞ்சினியரிங்க் படிச்ச புள்ளைக்கு இவ்வளவு அறிவானு நீங்க மனசுக்குள்ள சொல்றது தெரியுது. :P )

ஆனா இப்படி சகட்டுமேனிக்கு வரது எல்லாம் சினமா???  எதுக்கு எடுத்தாலும் கோவப்பட்டா அதுக்கு மாறியாதையில்ல. ஆனா தொல்காப்பியர் இதுக்கு எல்லாம் கோவப்பட்ட தான் அது கோவம், இல்லனா out of syllabus பா அப்படினு ஒரு பட்டியல் சொல்றாரு.

"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே."

வெகுளி ஏன் வருது? வெறுப்பால தான் வருது. (வெறுப்ப வந்த வெகுளி).
அந்த வெறுப்புக்கு எத்தன காரணம்?? நான்கு.
அந்த நாலு எது??

1. உறுப்பறை- அதாவது உடல் உறுப்புகளை சேதம் செய்றது (சூர்பனகை கோபப்பட்டு அண்ணன் கிட்ட போனதுல என்ன தப்பு?)
2. குடிகோள்- தன்னை சார்ந்து வாழ்பவருக்குத் துன்பம் தருதல் (அண்ணன் தங்கச்சி அழுதத பார்த்து சீதைய கடத்துனது கோபத்துல தான?)
3. அலை- திட்டுதல்
4. கொலை- கொலை செய்றது அல்லது அதற்கு உடந்தையா இருக்கறது.  (கண்ணகி வெகுண்டு மதுரையை அழித்தது)

இந்த காரணத்துக்கு எல்லாம் ஒருவனுக்கு சினம் வரலாம்.

















இதெல்லாம் ஏன் இலக்கணப் பகுதில எழுதறனு கேட்காதீங்க. இதெல்லாம் செய்யுளுக்குரிய மெய்ப்பாடுகளும் அவைத் தோன்றக் காரணங்களும்.

பிற மெய்ப்பாடு பத்தி கொஞ்சம் தெளிவா பொருளியல் வரும் போது பார்க்கலாம்.
இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம்.

நன்றி
சுபாசினி.

Tuesday 18 March 2014

தமிழிலக்கணம்-2 (அடுக்குத்தொடர்)

லேசா! லேசா! நீ இல்லாம வாழ்வது லேசா!!!

புரிஞ்சுருக்குமே!!! இரட்டைக் கிளவி பார்த்தாச்சு.. அடுத்து என்ன?? இன்னைக்கு அடுக்குத்தொடர் தான்.

அடுக்குத்தொடர்:

இரண்டு சொல் அடுக்கி வரும். தனித்தனியே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கும். அப்படி இருந்தா அது அடுக்குத்தொடர். நான்கு சொல் வர கூட அடுக்கி வரும். அச்சம், வெகுளி (கோபம்), விரைவு (அவசரம்), அவலம் இவற்றைக் குறிக்க அடுக்குத்தொடர் பயன்படும்.

இங்கு 'இவற்றை' என்பதனை தட்டச்சு செய்யும் போது தான் பெரும்பாலானோர் செய்யும் தவறு நினைவுக்கு வந்தது. 'அவைகள், இவைகளை' என்பது எல்லாம் தப்பு. அவை, இவை என்பதே பன்மை தான். (U mean plural??? Yes). இதுல எதுக்கு மறுபடியும் ஒரு "கள்" சேர்த்து அவற்றை மேலும் பன்மையாக்க வேண்டும்?? ஆங்கிலத்திலே "falling down" என்பதை தவறு என்பார்களே. அது போல இதுவும் தவறான பயன்பாடு.
(when there is no gravity how will we fall down?? :P இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. இது சும்மா மொழி பயன்பாட்டிற்கு மட்டும் தான்).

பெரும்போக்கா சொன்ன அடுக்கி வருவது அடுக்குத் தொடர். ஆனால் நன்னூல்ல கொஞ்சம் இறங்கி தேடுனா இது அவ்வளவு எளிமையா முடியற தலைப்பு இல்லனு தெரியும்.

"அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்." இது நன்னூல் சூத்திரம்.

அவ்ளோ தாங்க. அசைநிலை, பொருள்நிலை, இசைநிறைக்கு ஒன்று இரண்டு மூன்றுனு அவ்வை வரிசைபடுத்திப் பாடுன மாறிப் பாடுன அது அடுக்குத்தொடர். இதுல பிரச்சனை என்னனா "அசைநிலை என்றால் என்ன? பொருள்நிலை என்றால் என்ன??" இதுக்கு எல்லாம் மறுபடியும் நாம நிறைய இரண்டு மார்க்கு கேள்விக்கு பதில் படிக்கற மாறி இருக்கும். (ரொம்ம டெக்கினிக்கல் டெர்ம்ஸா இருக்கே!!!).

1. தனியா ஒரு பொருள் உணர்த்தாம பெயர்ச்சொல் கூடயும், வினைச்சொல் கூடயும் சேர்த்து சொல்லப்படுவது அசைநிலை. (அசைநிலை பற்றி பின் ஒரு தனி இடுகை பதிவு செய்கிறேன். இப்பொழுது அடுக்குத் தொடரில் கவனம் செலுத்தலாம்). அடுக்குத்தொடர் அசைநிலையா வரும்.

எடுத்துக்காட்டு : போலும் போலும், வாழிய வாழிய...

2. இதுல மேல சொன்ன " அச்சம், வெகுளி, விரைவு, அவலம்" இதெல்லாம் பொருள்நிலைக்கு கீழ வரும்.

எடுத்துக்காட்டு: தீத் தீ, பாம்பு பாம்பு. 
(ஐயோ!! ஐயோ!! உன் கண்கள் ஐயையோ!!!... இது அவலமா அச்சமானு தெரியலைங்க... ஆனா அடுக்குத் தொடர் தான்... )

3. செய்யுள் மற்றும் பிற இடங்கள்ள ஓசை நிறப்ப அடுக்கி வந்தா அதுவும் அடுக்குத் தொடர் தான். அது இசைநிறiக்குக் கீழ வரும்.
(கவிதை எழுதும் போது எந்த வார்த்தையும் கிடைக்கலனா மானே! மானே! தேனே!! தேனே!! இப்படி போட்டுக்கோங்க.. கேட்ட இசைநிறையின் பொருட்டு வந்த அடுக்குத் தொடர்னு சொல்லி சமாலிச்சுக்கலாம் :P )

எடுத்துக்காட்டு: வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! (எங்கயோ கேட்ட பாட்டு மாறி இருக்குதுல).

இன்னும் கொஞ்சம் இறங்கிப்போய் தொல்காப்பியத்துல தேடுன இந்தப் பாட்டெல்லாம் கிடைக்குது...

"ஏஏ யம்பன் மொழிந்தனள் யாயே"
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்"
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ"
(அடுக்குத்தொடருக்கு எடுத்துக்காட்டுகளைக் கூறும் தொல்காப்பியப்பாடல்).

இந்தப் பாடல்களையும் நன்னூல் சூத்தரத்தையும் வச்சுப் பார்க்கும் போது நமக்கு தெளிவா ஒன்னு புரியுது.
அதாவது அசைநிலைக்கு ஒரு சொல் இரண்டு தடவ அடுக்கி வரலாம். பொருள் நிலைக்கு இரண்டு, மூன்று முறை அடுக்கி வரலாம். இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறை கூட அடுக்கி வரலாம்.

" ராமா ராமா!!!" இது அடுக்குத் தொடரா?? இல்லை. இப்படி பெயர்களை தொடர்ந்து விளித்தல் (விளி- அழை) அடுக்குத் தொடர் ஆகாது. இதுவே பயத்தில் "ராமா ராமா" என்று அலரினால் அது அடுக்குத் தொடர்.

இன்னும் தெளிவா சொல்லனும்னா... "கண்டேன் கண்டேன் காதலை" இதுல வருவது அடுக்குத் தொடர். "சோனியா! சோனியா!" இந்தப் பாட்டுல வருவது விளி வேற்றுமை. அடுக்குத்தொடர் இல்லை.


இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்? - கம்பராமாயணம்.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!!! - பாரதியார்.















வாழ்க,வாழ்க பாரத சமுதாயம் - வாழ்கவே - பாரதியார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு. - பெரியாழ்வார்.

(இலக்கியச் சான்றுனு சொல்லிட்டு தசாவதாரம் பாட்ட சொல்லி இருக்கேன்னு நினைக்காதீங்க. இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் திருப்பல்லாண்டு என்னும் பகுதிப் பாடல்)


பி.கு:  இதோடு அடுக்குத்தொடர் பற்றிய குறிப்புகள் முடிகின்றன. இதில் சொல்லப்பட்ட அசைநிலை, இசைநிறை பற்றியெல்லாம் அந்தந்த தலைப்புகளின் கீழ் பிற்பாடு தெளிவாக எழுதுகிறேன்.
இரட்டைக்கிளவி பற்றிப் படிக்க சொடுக்கவும்.

நன்றி,
சுபாசினி.

Monday 17 March 2014

தமிழிலக்கணம்- 1 (இரட்டைக்கிளவி)

"சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ"













'இப்படி ஜீன்ஸ் படத்துல வர மாறி சொன்ன தமிழ் இலக்கணம் எவ்ளோ நல்லா இருக்கும்!!! இப்படி நினைக்கறவங்களுக்கு கொஞ்சம் எளிமயா நியாபகம் வச்சுக்க சுலபமா ஒரு பகுதி எழுதுன என்னனு நினைச்சு தான்' இதை எழுத ஆரம்பித்துள்ளேன்.

இலக்கணம் ஐந்து வகைப்படும் என்று தொடங்கினால், இந்த புள்ள ஆறாவது தமிழ் இலக்கணத்த அப்படியே எழுதுது என்று தோன்றிவிடும்.

அப்பொழுது எங்கிருந்து தொடங்கலாம்??
இரட்டைக்கிளவில இருந்தே ஆரம்பிக்கலாம்.
இரட்டைக்கிளவி என்னனு எங்களுக்குத் தெரியாதா?? இத எழுதறதுக்கு ஒரு தொடரா?? என்று கடியாகாதீர்கள். எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். எடுத்ததும் "ஒன்றிய வஞ்சித்தளை", "கொண்டுகூட்டு பொருட்கோள்" என்று தொடங்கினால் இது ஒத்துவராதுபா என்று பலரும் படிக்கமாட்டார்கள். அதனால் தான், தெரிந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று இரட்டைக் கிளவியில் தொடங்குகிறேன்.

இரட்டைக் கிளவி:

"சல சல" இது தாங்க இரட்டைக்கிளவி. "சல" க்கு பொருள் இல்லை. இப்படி இரண்டு பொருள் இல்லாத சொற்கள் சேர்ந்து வருவது தான் இரட்டைக்கிளவி. (கிளவியா? அது யாரு? பக்கத்து வீட்டு பாட்டியா? என்று கேட்காதீர்கள். இந்த கிளவிக்கு சொல் எனப் பொருள். கிளவி- சொல்). ஆக பொருள் இல்லாத இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருள் தருவது தான் இரட்டைக்கிளவி. அவற்றை பிரித்தால் பொருள் இல்லை.
இவை வினைக்கு அடைமொழியாய் வரும். அதாவது ஒரு செயலின் தன்மையைக் குறிக்க பயன்படும்.

எடுத்துக்காட்டு:
'பள பள'க்குது புது நோட்டு...
திருதிரு துறுதுறு...
“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ”- இது என்ன படப் பாட்டுடா என்று யோசிக்காதீர்கள். இது திருப்புகழ் பாட்டு.
(அப்ப அப்ப கொஞ்சம் இலக்கியத்தையும் சேர்த்துகலாம்.)

"இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா.". இது நன்னூல் சூத்திரம்.

இங்கு ஒரு ஐயம் (சந்தேகம்) எழலாம்.
"துடி துடித்து போனான்"- இதில் துடித்து என்பதற்கு தனியே பொருள் உண்டு தானே. பின் இது எப்படி இரட்டைக் கிளவி??? ஆனால் முன்னால் உள்ள 'துடி' என்பதற்கு இங்கு  தனியே பொருள் இல்லை. மேலும் இது வினைக்கு அடைமொழியாக வருகிறது. அதனால் இது இரட்டைக் கிளவி.

இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

"திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு”-திருப்புகழ்.
"மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்" -திருப்புகழ்.
"நெறிவு கலகலென வாசம் வீசுகுழ" - திருப்புகழ்.
"சலசல மும்மதம் பொழிய” - சீவக சிந்தாமணி
“கலகல, கூஉந்துணை யல்லால்” -நாலடியார்
“குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும்” - புறநானூறு
“வற்றிய வோலை கலகலக்கும்” -நாலடியார்.

பி.கு: இலக்கண நாட்டம், அறிவு இவை உடையவர்களுக்கும், இலக்கணம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும் பொதுவாகவே இந்தத் தொடரை எழுதுகிறேன். முழு மூச்சாக மொத்த இலக்கணப் படுதியையும் எழுதிவிட வேண்டும் என்ற அவாவில் எழுதுகிறேன். எப்படியெல்லாம் தமிழை எளிமையாக கற்றுக்கொடுத்திருக்கலாம் என்று நான் எண்ணினேனோ அப்படியெல்லாம் இந்தத் தொடரை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள். பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
நன்றி
சுபாசினி.




Sunday 16 March 2014

வைதல் பாடல்

வீட்டில் திட்டுவதில் கூட பாரம்பரியம் இருக்கத் தானே செய்கிறது!!!

இது கொஞ்சம் ஓவர்னு நினைக்காதீர்கள். உண்மை தான்...

இது என்ன புதுசா, நடவுப்பாட்டு ஏற்றப்பாட்டு போல வைதல் பாட்டா??

அப்படிக் கூட வைத்துக்கொள்ளலாம்.
அதற்காக ஊர்க்குழாய் அடியில் சண்டை போட்டுக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட வரிகளில் பாரம்பரியமா என்று எண்ண வேண்டாம். (அதில் கூட பாரம்பரியம் இருக்கலாம்)..

நம் அம்மா திட்டும் வரிகளில் கொஞ்சம் ஊர்ப் பழக்கமும், குடும்ப வசனங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
பல வரிகள் என் அம்மாச்சியிடம் இருந்து ஜீனில் வந்தவை தான்... யோசித்துப் பார்த்தால் உங்கள் வீட்டிலும் இப்படியாக ரெடிமேட் வசனங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

என் அம்மா கோபம் வந்தால் "புள்ளை இல்லாட்டி போகுதுனு சுருக்குட்டுத் தூக்கிட்டு ஏனோ செத்துப் போச்சுனு சொல்லிடுவேன்" என்பார். சின்ன வயதில் இந்த வசனம் எனக்கு திகிலூட்டப் போதுமானதாக இருந்தது. "போலீஸ் சம்சாரமா இருந்திட்டு அம்மாக்கு போலீஸ் கொலை கேசுல பிடிச்சுடுவாங்கனு பயம் அம்மாக்கு கொஞ்சம் கூட இல்லயா" என்று சந்தேகம் வர என் அப்பாவிடம் சென்று " சுருக்குட்டு தூக்குனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கண்டு பிடிக்க முடியாத டாடி" என்று கேட்டேன். (நாலவது படிக்கற என் பொன்னுக்கு எவ்வளவு அறிவு என்று எண்ணி) அவர் சிரித்துவிட்டு "கண்டு பிடிச்சடலாம்" என்றார். அன்றிலிருந்து என் அம்மா அதை சொல்வதை குறைத்துக் கொண்டார். இது ஏதோ என் அம்மா சொல்லும் வசனம் தான் என்ரு நினைத்துக்கொண்டேன். பிற்பாடு தான் தெரிந்தது என் பக்கத்துவீட்டு அண்ணாவின் (அவருக்கே இப்பொழுது குழந்தை உள்ளது) இதை விட பரிதாபம். "அவங்க அம்மா கதவை சாத்தி சேலைய சாரத்துல போட்டு, அவன அண்டா மேல ஏத்தி 'சுருக்கு போடட்டுமானு கேட்டா' அவன் அழுதுட்டே இருந்தான், அப்பறம் அவங்க பெரிமா பெரிப்பா எல்லாம் வந்து அவங்க அம்மாவ திட்டி பையன கூட்டிட்டு போனாங்க" என்று பக்கத்து வீட்டு அத்தை நினைவில் திளைக்கும் போது தான் தெரிகிறது "சுருக்குட்டு தூக்கறது" எங்கள் ஊரின் யுனிவர்சல் டைலாக் என்று. சிலர் அதனை சோதனை செய்து பார்க்கும் அளவு கூட சென்றிருக்கிறார்கள்.

தோசைக்கு சாம்பாரும் தேங்காய் சட்டினியும் வைத்திருக்கும் போது " என்னங் மா!!! புளிச் சட்னி இல்லயா?" என்று கேட்டால் இந்த பதில் தான் கிடைக்கும் "இத விட இல்லைனாலும் நீ எல்லாம் எமன பலகாரம் பண்ணி எதுத்தவூட்ல சங்காரம் பண்ணிடுவ".... இது எங்கள் பாட்டி சொல்லி என் அம்மாவிற்கு தொற்றிக் கொண்ட பழக்கம் தான்.

"உங்கத் திங்கத் தான் செல்லம், ஊடெல்லாம் இரைக்கவுமா செல்லம்???" எந்த பொருளையாவது உடைத்தாலோ கீழே போட்டாலோ வரும் ரெஃப்லெக்டிவ் ரியாக்சன் இது. ஆனால் இவை ஆழம் பொருந்திய வரிகள். இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு செல்லம் தர வேண்டும் என்று உணர்த்தும் வரிகள்.

சின்ன குறும்பு செய்யும் போது எல்லாம் என் அம்மாவும் சித்தியும் " இப்படியே பன்னுன மிளகா பிடிச்சுவிட்டுருவென்" என்பார்கள். அது என்னடா "மிளகாய் பிடிக்கறது" என்று ஆராய்ந்து பார்த்தோமானல்... ஒரு படியிலே (ஆழாக்கில்) அடுப்புத் தனலைப் போட்டு அதன் மேல் மிளகாயை போடுவது.. அந்த மிளகாய் என்ன காரநெடி அடிக்கும்.. அய்யோ சாமி... நல்ல வேளை எங்கள் வீட்டில் படியும் இல்லை, விறகடுப்பும் இல்லை... இதையெல்லாம் படித்துவிட்டு "என்னமா வன்முறைய வளர்க்கறயா" என்று கேட்காதீர்கள். இதெல்லாம் சும்மனாச்சிக்கு குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட பூச்சாண்டிக் கதைகள். எனினும் இவை நாட்டுப்புறப் பாடல் போல் சிற்றூர்களில் பரவிக்கிடந்தன.

பலவும் வழகொழிந்து வரும் நிலையில் இந்த வைதல் பாட்டும் மறந்து கொண்டு தான் வருகிறது. அம்மாக்களும் பாட்டிகளும் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். நாகரிகம் கருதியோ, மனநிலையாக குழந்தைகளை இத்தகைய வசனம் பாதிக்கும் என்று எண்ணியோ, இல்லை புது வசனம் ஒன்று கிடைத்தோ, நாளை நான் என் பிள்ளைகளை "Mind what you are doing" என்ற ரேஞ்சுக்கு குறைத்துவிடக்கூடும். என்ன சொல்லுங்கள், சும்மனாச்சிக்கு பயம்காட்ட சொல்லப்படும் இத்தகைய வரிகள் என்றுமே மணம் வீசுகின்றன தான்.

பி.கு.: உங்கள் வீட்டிலும் இப்படியாக இருக்கும் பாரம்பாரிய வைதல் பாடல்கள் பற்றி நிச்சயம் பின்னூட்டம் இடுங்கள். நன்றி.

Saturday 15 March 2014

கண்ணதாசன் எடுத்தாண்ட நளவெண்பாப் பாடல்

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் " என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறீர்களா???

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" இப்படியாக தலைவன் பாட அதற்கு பின்வருமாறு தலைவி பதிலுரைப்பாள்

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"















அடேங்கப்பா! முகத்தை மலர்னு நெனச்சு வண்டு மோதுச்சா??? என்னமா எழுதியிருகாரு தலைவர் என்று சொல்லத் தோன்றும் வரிகள் அல்லவா இவை.
இதே பொருள் கொண்ட பாடல் ஒன்று நளவெண்பாவில் உள்ளதென்றால் நம்புவீர்களா???

"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." - (நளவெண்பா)

திருமணம் முடிந்து பின்பு நளன் தமயந்தியை தோட்டத்திற்கு ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன். அங்கே தான் கண்ட காட்சியை அவளையும் காணச்சொல்கின்றான்.
அங்கே என்ன காட்சி நடக்கிறது தெரியுமா!!!

"பெண் ஒருத்தி மலர்கொய்து கொண்டிருக்கிறாள்; அங்கே மலர்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டொன்று அவளது முகத்தை தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவள் தன் கைகளால் முகத்தை மறைக்கிறாள்; அப்பொழுதும் அந்த வண்டு அவளது கைகளை காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவளுக்கு வேர்க்கின்றது" இந்தக் காட்சியைக் காண் எங்கின்றான் நளன்.















முகத்தை மலர் என்றதோடு முடித்துக்கொண்டார் கண்ணதாசன். கையையும் மலர் என்றார் புகழேந்தி!!!

பிரித்துப் பொருள் கொள்ளும் முறை:

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள், வாள் முகத்தைப் பங்கயம் என்று எண்ணிப் படி வண்டைச் செங்கையால் காத்து ஆள, கை மலரைக் காந்தள் எனப் பாய்தலுமே, வேர்த்தளைக் காண் என்றான் வேந்து.

செங்கையை செங்காந்தள் மலர் என்கிறார். கை மலர் என்கிறார்.
பங்கயம்- தாமரை
காந்தள்- செங்காந்தள்
வேந்து- அரசன்.(நளன்)

Sunday 9 March 2014

தலைவியை உடன் அழைத்துச் செல்லாததற்கு தலைவன் சொல்லும் காரணங்கள்

காதலிய கூட கூட்டிட்டு போறதுக்கு ஆயிரம் காரணம் காதலர்களுக்கு இருக்கும். "போருக்குப் போறேன், ஊருக்குப் போறேன்" இப்படி பல கதைகள் சொல்லுவாங்க. ஆனா இந்தப் பாட்டுல தலைவன் சொல்ற காரணங்கள் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாத்தான் இருக்கு. அடேங்கப்பா!!! தலைவி மேல அவனுக்கு இவ்வளவு அக்கறையா, இல்ல தலைவி அவன் எதைச் சொன்னாலும் நம்புவானு தைரியத்துல தலைவன் சொல்றானானு தெரியல. இல்ல ஒருவேளை அந்த காலத்தில் போகும் வழி அவ்வள்வும் கொடுமையாக் கூட இருந்திருக்கலாம். "தலைவியைக் கூட்டிக்கொண்டு செல்" எனக் கூறும் தோழிக்கு தலைவன் உரைக்கும் பதிலாக அமைந்த அப்பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை
திணை: பாலை,
பாடியவர்: சிறைக்குடியாந்தையார்

"வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே."

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

(கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல், பொல்லாங்கு - தீமை.)

அஃதாவது, தலைவியப் பிரியும் தலைவன், தான் போகும் வழியே இடரானது, தன்னால் தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது என்று தோழிக்கு எடுத்துச் சொல்லும் பாட்டு.














விளக்கம்:

பாலை வழியானது மிகவும் கொடுமையானது. அங்கே நீருக்கு பெரும்பாடு.
வேட்டைக்குச் சென்று திரும்பும் செந்நாய் நீரற்ற சுனையில் குழி தோண்டி கிடைக்கும் நீரில், அது உண்டது போக மிச்சம் உள்ள நீர் தான் கிடைக்கும்.
அதிவும் குளவி மலர்களால் மூடப்பட்டு, அம்மலர்கள் அழுகி வீசும் துர்நாற்றம் உடையதாய் இருக்கும்.
வளையல் அணைந்த கையையுடைய தலைவியை என்னோடு சேர்ந்து எப்படி அந்த நீரைப் பருகச் சொல்வது??
என்னோடு இந்த வழியில் வந்தால் என் மனதில் நிறைந்துள்ள அவள் வருந்தத்தக்கவள் ஆவாள்.

குறிப்பு:










இதில் குளவி என்பது பூச்சியினத்தைக் குறிப்பிடவில்லை. அது ஒரு மலர் வகை. [குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) ]

வேட்டம், சின்னீர் போன்ற சொற்கள் பாலைத் திணையை நன்கு புலப்படுத்துகின்றன.

பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2).


பிரித்துப் படிக்கும் முறை:
வேட்டம் செந்நாய்  கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளையுடை கையள் எம்மொடு  உணீயர் தான் வருகதில்,
வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் அளியளோ, அளியள்.

பதவுரை:
கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியது
அளியள் - மிக இரங்கத் தக்காள்