Saturday 31 May 2014

கண்ணீரும்-ஆறும்; அவை கொள்ளும் வண்ணமும்.

வண்ணங்கள் எப்பொழுதும் ஈர்ப்பவையாகவே அமைகின்றன. அறிவியலிலும் கூட வண்ணங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஒவியத்தில் துளி திறமை இல்லாதவர் கூட வண்ணங்களைக் கொட்டி மகிழ்வர்.

இப்படி இலக்கியத்திலும் நிறங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பாரதியின் "காக்கைச் சிறகினிலே" பாடல் தொடங்கி, அலைபாயுதே படத்தின் "பச்சை நிறமே " பாடல் வரை அனைத்திலுமே ஒரு வசீகரம் உண்டு. இப்படி வண்ணம் கலந்த பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட பாடல் இது.

"கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே."

-ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார்,
மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது).
















சங்கப் பாடல்களில் அகப்பொருள் பாடல்களை எடுத்துக் கொண்டால் நம் கண்ணில் அதிகம் படும் சொல் "பசலை". தலவனின் பிரிவால் தலைவியைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் நோய் இது. உடல் மெலிந்து, கலையிழந்து, தோள் தணிந்து காணப்படுவாள்.

இப்படி பசலைக் கண்ட தலைவியைக் கண்டு வேதனைக் கொண்ட தோழி தலைவனிடம் சென்று தலைவி உரைப்பது போல் கூறுகிறாள். என்ன சொல்கிறாள்? " தலைவா! உம்முடைய ஊரில் உள்ள நதியானது குளிர் காலம் என்றால் கலங்கியும், வெயில் காலம் என்றால் மணி நிறம்  கொண்டுள்ளது. ஆனால் என் கண்ணானது நீ விட்டு அகன்றதால் பசலை நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது." இவ்வாறு கூறுகிறாள்.

இது செய்யுள் தரும் நேரடி பொருள் மட்டும் தான். ஆனால் உற்று நோக்கும் போது அது எவ்வளவு அழகிய பொருள் கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

எதற்காக தலைவி நதியை உதாரணம் காட்ட வேண்டும்? அவள் சொல்ல விளைவது இதைத்தான்.

" தலைவா! வண்ணங்கள் என்னைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் என் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. நீர் கூடப் பல நிறம் கொள்கிறது. உன் ஊரில் ஓடும் நதியானது குளிர் காலத்தில் கலங்கிய நிறமுள்ள நீரையும், வெயில் காலத்தில் மணி நிறமுள்ள நீரையும் கொண்டு தருகின்றது. ஆனால் என் கண்ணீரோ பசலை நிறம் கொண்டுள்ளது. வேறு எந்த நிறமும் தெரியவில்லயே!" என்று வருந்துகிறாள்.

"பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே" என்பது ஆழமான வரிகள். பிரிவினால் எவ்வளவு அவள் அழுதிருந்தால் அவள் கண்ணின் நீரை ஆற்று நீரோடு ஒப்பிட்டு அதன் வண்ணம் பசலை என்பாள். அடடே!!!

பதவுரை:
கூதிர்- குளிர் காலம்
தண்- குளிர்ச்சி
கழில்- கலங்கிய நீர்
வேனில்- வெயில் காலம்
யாறு- நதி

Wednesday 7 May 2014

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!



















விளைச்சலுக்காய் நீ வரும் போதும்
காய்ச்சல் கண்ட என் கல்லூரி நினைவுகளைத்
தோய்த்தே கொண்டு வந்து கொட்டுகிறாய்...
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!
















உன்னாலே, இழையோடிய சோகம் வந்து
தன்னாலே என்னைப் பற்றிக் கொள்கிறது...
பட்டுச் சேலையிடை தங்க நூலாய்
எட்ட நின்றதை நான் ரசித்தாலும்,
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














மண் தொடும் நின் துளி
என் அறை ஜன்னல் தட்டுமென
ஏனோ பயந்திருந்தேன். நல்லவேளை
தானோ!!! ஜன்னல் இல்லை புது அறையில்... எனினும்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!











உறக்கம் தந்தாலும் உறங்கிடுவேனோ என்ற
பயமும் தருகின்றாய்.. உறங்கினால் எழுவேனோ??
ஐயமும் தருகின்றாய்.. கெஞ்சிடும் என்மேல்
இரக்கம் கொஞ்சமேனும் கொண்டு, இன்று
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














தனிமை வெறுமை என்று பலகொண்டு
மைக்கண் கலங்க வைக்கின்றாய் நீ...
அழுகவும் வேண்டுகின்றாய், பின்னர் என்னை
எழுதவும் தூண்டுகின்றாய்... இருப்பினும் வான்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

-சுபாசினி.

http://isainirai.blogspot.in/2013/02/blog-post_8807.html