Thursday 25 April 2019

Fire and Blood (300 years before Game of Thrones) - நூல் விமர்சனம்.

ஏதேவது ஒரு விசேச நாளில் வீட்டில் அம்மா தடபுடலாக பத்து பதினைந்து வகையான உணவு சமைத்துக் கொண்டிருப்பார். நிறைய சமைப்பதால் நேரம் ஆகிக் கொண்டே இருக்கும். நமக்கோ அப்போது தான் பசி வயிற்றைக் கிள்ளும். சமையற்கட்டில் இருந்து ஆளைத் தூக்கும் வாசம் வேறு வரும். 'அம்மா பசிக்குது. அம்மா பசிக்குது' என்று புலம்பும் போது, அவரும் அய்யோ பாவம் என்று மதியம் வைத்த குழம்பை முறுக்குத் தொட்டு சாப்பிடச் சொல்வார். சும்மா நாளில் காயை ஒதுக்கி வைத்து முறுக்கோடு சாப்பாடு சாப்பிடும் நமக்கு அன்றைக்கு அது உள்ளே இறங்கவே இறங்காது.

நிற்க!
இதே போலத் தான் இந்த நூலைப் படிக்கும் போதும் இருந்தது. A song of ice and fire (Game of thrones series) நூல் தொடரின் ஆறாவது நூலிற்காக 6 வருடத்திற்கும் மேலாக வாசகர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருக்க, தொலைக்காட்சித் தொடரும் நூலை முந்திக் கொண்டு எட்டாவது ஆண்டில் அடியெடுத்து வைக்க, மார்டின் அவர்களோ இன்னும் 6 ஆவது நூலை வெளியிடவில்லை.

தொடர்ந்து அவரை வாசகர்கள் நச்சிக் கொண்டே இருக்க அவரும், முன்கதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக வெளிட்டுக் கொண்டே இருந்தார். குறிப்பாக டார்கேரியன்களின் வரலாற்றை நூலாகவே வெளியிட்டுவிட்டார்.
'என்ன ஆறாவது நூலை எழுதாமல் இதை எழுதிக் கொண்டிருக்கிறார்' என்று சிலரும் 'எதாச்சும் வெளியிட்டிருக்கிறாரே' என்று பந்திக்கு முன்னால் முறுக்கு என்பது போல சிலரும் உணர்கிறார்கள்.

நான் இரண்டாவது வகை.

இந்த நூல் மிக முக்கியமான ஒன்று. தொடர் மிகப்பிரபலம் ஆகிவிட்ட காரணத்தால் நிறைய மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டனர். குறிப்பாக பலரும் டிராகன்களையும் டேனரிசையும் டார்கேரியன்களையும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியிருக்கும் இந்த வேளையில் டார்கேரியன்கள் பற்றி நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல பல செய்திகளைத் தரும் நூல். நூல் படித்தவர்கள் ஏற்கனவே ஊகித்த தகவல்கள் தான் என்றாலும், ஆசிரியரே உறுதிபடுத்தியது இன்னும் மகிழ்ச்சி.

1. Targaryens and Dragons are not immune to fire. (We already knew this from the main series and prequels)
2. Danearys' dragon eggs came from the Targaryen clutch.  (Theory confirmed)
3. Dragons are pure evil.
4. We get some insight about doomed Valyria.

இது போக வேறு பல  ஊகங்களுக்கும் நூல் இடம் தருகிறது. ஆக மொத்தம் ஆறாவது நூல் வரும் வரை படிப்பதற்கு மற்றுமொரு நூல்.
அடுத்து ஆறாவது நூல் வெளியாகுமா இல்லை இந்த நூலின் இரண்டாம் பாகம் வெளியாகுமா என்பது மார்டினுக்கே வெளிச்சம்.