Wednesday 31 October 2018

இதுவும் கதை தான்

நூலகத்தின் மேல் மாடியிலே அடுக்கி வைத்த நூல்கள் நடுவே நடந்து போகிறேன்..
ஒவ்வொன்றும் ஒவ்வொரு உலகம்..
கல்லாதது உலகளவு,
ஒற்றை உலக்கத்தைக்
கற்றல் வேண்டி கையிலேந்தினேன்..
தலைக்கு மேலிருந்த கோடுகள் எல்லாம் வளைந்து நெளிந்து தன்னுள் பிணைந்து வளையாகிக் கொண்டிருந்தன..
கூன் நிமிர்ந்து, ஆயுதம் ஏந்தும் ஒற்றைக் கோட்டு வரலாறு காலாவதியாவது கண்டேன்..
அவர்கள் என்று அவர்கள் ஆனார்கள்?
அவர்களானது அவர்களுக்குத் தெரியுமா?
பின்னரிருந்தவர் அவருலகத்தில் இருந்து சிரித்துக் கொண்டிருந்தார்..
அவரின் உலகத்தைப் பார்க்க ஆசையாய் இருந்தது.
ஆனாலும்..
திரும்பிப் பார்த்தால் தன்னுலகத்தில் இருந்து உலுக்கப்படுவரோ? வேண்டாம்
என்னுலகத்திற்கே திரும்பிச் செல்கிறேன்..
இதோ..கண்டம் விட்டுக் கண்டம் நகர்கிறார்களே,
கழுகுகளால் வேட்டையாடப்படும் விளிம்புநிலை மனிதர்கள்..
மனிதர்களா? அப்பொழுது அவர்கள் சந்திக்கும் இவர்கள் யார்?
இவர்களும் மனிதர்களா?
உம்ம்.. இங்கே கலங்காத மனமுண்டோ?
கலக்காத இனமுண்டோ?
பார்த்த போதெல்லாம் வெட்டிக்கொண்டார்கள்,
சில நேரம் கட்டியும் கொண்டார்கள்.
மோதலில் அழிந்தவர்கள் நியண்டர்தால்கள்..
காதலால் அவர்களின் மிச்சத்தை இவர்கள் மரபணுவில் தூக்கிக் கொண்டு அவர்கள் மீண்டும் நடந்தார்கள்.
என் உலகத்தில் மிதந்து கொண்டே,
ஊர்வதும் நகர்வதும் தெரியாமல்
ஊர்ந்தும் நகர்ந்தும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆசியா வந்தடைந்தவர்களைப் போல,
நானும் கீழே வந்தடைந்தேன்.
காலியாய் இருந்த இடத்தில்
இடம்பிடித்தேன்.. இடமும் பிடித்தது..
முன்னர் இங்கு யாரிருந்தார்?
முன்னர் இருந்தே நான்
இங்கு தானே இருக்கிறேன்.
நான் மட்டும் தானே இருக்கிறேன்,
நான் இங்கே மட்டும் தானே இருக்கிறேன்..
நகர்ந்தேனா? நானா?
வந்தவர் கேட்டார் 'தலையைத் தூக்காமல் படிக்கிறாயே, என்ன நூலது?'
காட்டியதும் சொன்னார் 'அறிவியலா? கதையென்று நினைத்தேன்'
ம்ம்ம்.. இதுவும் கதை தான்...
மனிதர்களின் கதை..
"A Brief History of Everyone Who Ever Lived: The Human Story Retold Through Our Genes by Adam Rutherford"