Thursday 7 December 2017

சங்க இலக்கியக் காதல் - புதரும் குருகும் காதலர்களும்

தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். தலைவன் திரும்பத் தலைவியைப் பார்க்க வரவில்லை. புலம்பத் தொடங்குகிறாள் தலைவி. "ஐயோ. சாட்சிக்கு கூட யாரும் இல்லையே. அன்னைக்கு ஒரு குருகு பார்த்துச்சே. அதுக்கு தெரியும் நாங்க காதலிச்சது" என்பாள். ஆமாங்க பள்ளியில் படித்த கபிலரின் பாடல் தான்.
குறுந்தொகை 25:
யாரு மில்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தா ளன்ன சிறுபசுங் காலஒழுகுநீ ராரல் பார்க்கும்குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
குறிஞ்சி - தலைவி கூற்று
கூற்று: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்: கபிலர்
விளக்கம்:
அன்று வேறு யாருமே இல்லை. அவன் மட்டும் தான் இருந்தான்,  கள்வனும் அவன் தான் ( குற்றம் சாட்டப்பட்டவன்). அவன் பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன். நாங்கள் மணந்த அன்று ஒரு குருகு மட்டுமே இருந்தது.
"அதுக்கு இப்ப என்ன? அதான் பள்ளிக்கூடத்தில் படிச்சது தானே" என்கிறீர்களா?
ஆம். இந்தப் பாடலைப் படிக்கும் போது பள்ளியில் என் மனக்கண் முன் விரிந்த காட்சி இப்படி இருக்கும் : பிரபலப் பத்திரிக்கைகளில் வரும் அந்தக் காலத் தலைவிகளைப் போல இந்தத் தலைவியும் ஓர் தடாகத்தின் அருகில் அமைந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருப்பாள். நீரின் அருகே ஓர் குருகோ கொக்கோ நாரையோ நிற்கும், நீரில் இரண்டு தாமரை இருக்கும். மற்றபடி அது வால்பேப்பர் படம் போல பளிச்சென்று இருக்கும்.
ஆனால் இன்று அந்தப் பாடலைப் படிக்கும் போது கண்முன் விரியும் காட்சி வேறு.

ஏன் குருகுகள்? கிளியோ மயிலோ குயிலோ சாட்சிக்கு வராதா? இல்லை அவர்கள் சந்தித்த இடங்களில் அப்பறவைகள் இல்லையா?
பொதுவாக இந்தக் குருகுகள் புதர்களுக்கு இடையே இருக்கும், காண்பதற்கு அரிதான இடத்தில் மறைந்து இருக்கும். நிற்க. இப்பொழுது பாட்டை நோக்குங்கள். அன்றைய தலைவனும் தலைவியும் இப்படி யாரும் இல்லா புதர்கள் நிறைந்த பகுதிகளில் (புதர்களிலும்) தான் சந்தித்திருக்கிறார்கள்.
இன்னொன்று குருகுகள் எப்படி மறைந்து மறைந்து பயந்து பயந்து வாழ்கிறதோ தலைவனும் தலைவியும் அப்படித் தான் மறைந்து பயந்து காதலித்திருக்கிறார்கள். அதனால் தான் அவளுக்கு குருகின் நினைவு வருகிறது.

பசுவிற்கே நீதி வழங்கிய சோழன் கதை இருக்கிறதே, சரி இழுத்து பிடித்து அந்தக் குருகை சாட்சி சொல்ல அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தால் அங்கு தான் சிக்கல். குருகுகளால் தொண்டை வளையில் இருந்து எந்த ஒலியும் எழுப்ப முடியாது, சாட்சியும் சொல்லாது. அது மௌனமாக அவர்கள் காதலித்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்பொழுது தெரிகிறது அந்தத் தலைவியின் நிலை என்னவென்று.

4 மணி நேரக் கதையை நாலே வரியில் நச்சென்று சொல்லிவிட்டுப் போகிறார் புலவர்.
திடீரென்று ஏனோ வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்த காதல் புறாக்களின் நினைவு வருகிறது. 2000 வருடங்களாக எத்தனை காதலர்களை வெள்ளோட்டுக் குளம் பார்த்திருக்கும்.
#சங்கஇலக்கியக்காதல்
#அன்றும்இன்றும்