Wednesday 28 November 2018

The Eye of the World நூல் விமர்சனம்

The Eye of the World by Robert Jordan.

சமீபத்தில் Mono myth, The Hero's journey வகைக் கதைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு அவற்றைப்  படித்துக்கொண்டிருக்கிறேன். ஒரே வகைக் கதையைக் கதையை ஒவ்வொரு ஆசிரியரும் எப்படிக் கையாண்டுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ளவே இந்த வாசிப்பு.

The Wheel of Time தொடரின் முதல் நூலை வாசித்து முடித்திருக்கிறேன். Tolkien (The Lord of the rings) எழுத்தின் தாக்கமும் உர்சுலாவின் (Earthsea series) எழுத்தின் தாக்கமும் அதிகமாக இருப்பதைக் காண முடிகிறது. அதே போல இந்த நூலின் தாக்கத்தை மார்ட்டினின் நூல்களிலும் (A song of ice and fire) ரவுலிங்கின் நூல்களிலும் (Harry Potter) பார்க்க முடிகிறது.

LOTR படித்தவர்களுக்குத் தெரியும் அந்த நூலைப் படிக்க எவ்வளவு பொறுமை வேண்டும் என்று. அதே பொறுமையோடு தான் இந்த நூலையும் படிக்க முடியும். கிட்டத்தட்ட தொல்கீனின் கதைக்கு நிகரான கதைதான், தீயனவற்றை வெல்லப் போராடும் கூட்டத்தின் கதை. ஆனால் அவரைப் போல அல்லாமல் உர்சுலாவையும் மார்ட்டினையும் போல நன்மை தீமையை கருப்பு வெள்ளையாகக் காட்டாமல், எல்லா மனிதர்களுக்கும் உரிதாகக் காட்டியிருக்கிறார்.

அனைத்தையும் தாண்டி இந்த நூலில் என்னை ஈர்த்தது பெண்களுக்கு தரப்பட்ட இடம். தொல்கீனின் கதைகளில் பெண்களுக்குப் பெரிய இடமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. மற்ற ஆசிரியர்களின் கதைகளிலுமே கூட ஓரிரு பெண்கள் தனித்துவம் பெறுவார்கள், மற்றபடி கதை நிகழும் அச்சமூகத்தில் பெண்களுக்கான அங்கீகாரம் என்று எதுவுமே இருக்காது.

ஆனால் இந்த நூல் அப்படியில்லை. பெண்களுக்கான இடம் இதில் முக்கியம் பெருகிறது. கதையில் சில தாய்வழிச் சமூகங்கள், அதாவது தாயிற்கு பின்னர் மகளுக்கு அரச கட்டில் கிடைக்கும்; சில சமூகங்களில் பெண்களும் போருக்குப் போவார்கள்;
கிட்டத்தட்ட கதையில் வரும் எல்லாச் சமூகங்களிலும் நாடுகளிலும் பெண்களுக்கு நிர்வாகத்தில் பங்குண்டு. சில சமயம் முடிவெடுக்கும் இடத்தில் ஆண்களை விட
தகுதிவாய்ந்த பெண்களே இருக்கிறார்கள்.

மிக சிக்கலான காலக் கட்டத்தில் ஒரு குழு துன்பமிகு பயணம் ஒன்றை மேற்கொள்கிறார்கள். அதில் ஒருவன் தான் விரும்பும் பெண்ணைப் பார்த்து 'நீ வர வேண்டாம்' என்கிறான். தான் விரும்பும் ஒருவன் அதைச் சொன்ன போதும் அப்பெண் கான்ணியமாக அதை மறுத்துவிட்டு 'என் பயணத்தை நான் தான் தீர்மானிக்க வேண்டும். நீயல்ல' என்கிறாள்.
'உன்னை நான் பத்திரமாகப் பார்த்துக் கொள்கிறேன்' என்று அவன் சொல்லும் போதும் 'நான் உன்னைப் பார்த்துக்கொள்கிறேன்' என்கிறாள்.

முதிர்ச்சியடைந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு மெல்லிய காதல். அவளோ நிமிர்ந்த நடையும் தெளிவும் கொண்ட பெண். ஒரு கட்டத்தில் அவளது காதலைத் தன் கண்ணியமும் தெளிவும் குறையாமல் விரும்பியவனிடம் சொல்கிறாள். அவனது சூழல் அவனால் அக்காதலை ஏற்கமுடியாது, அதனால் அவன் நிராகரிக்கிறான். ஆனால் அதையும் கூட அவளின் மதிப்பிற்கு இழுக்கு வாராமல் கண்ணியத்தோடே முடியாது என்கிறான்.
"I will hate the man you choose because he is not me, and love him if he makes you smile. No woman deserves the sure knowledge of widow's black as her brideprice, you least of all"

இது போன்ற mono myth கதைகளில் இதெல்லாம் வியப்பு தான். இந்த ஒற்றைக் காதலுக்காகவே இந்தத் தொடர் முழுவதும் படிப்பது என முடிவு செய்துவிட்டேன்.
கொஞ்சம் தேவையில்லாத வருணனைகளைக் குறைத்திருந்தால் இன்னும் நூல் அருமையாக இருந்திருக்கும்.
இருந்தாலும் பரவாயில்லை, கதையில் வரும் பெண்களுக்காக வாசிக்கலாம்.