Monday 27 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 2

கேள்வி: குரங்கிற்கும் மாந்தருக்கும் அறிவில் ஏன் பெரிய வேறுபாடு?
பதில்: இன்றைய மனிதர்கள் Homo sapiens. நமக்கு வாழும் நெருங்கிய உறவுகள் என்றால் அவை Bonobos மற்றும் Chimpanzees. இப்படிப் புரிந்துகொள்ளலாம், அவை இரண்டும் அண்ணன் தம்பிகள். நமக்கு அவை சித்தப்பா மக்கள் பெரியப்பா மக்கள் போல. அதாவது நாமெல்லாம் ஒரு தாத்தாவின் வாரிசுகள்.
கொரில்லா நமது தாத்தாவின் உடன்பிறந்தவரின் இன்றைய வாரிசு. அதாவது நமக்கும் அதற்கும் தாத்தாவின் அப்பா ஒருவர் தான். இதே போல இன்னொரு தலைமுறை மேலே சென்றால் நம்முடைய தாத்தாவோட தாத்தா Gorilla விற்கும் மூதாதையர். இன்னும் ஒரு தலைமுறை மேலே போனால்  கொள்ளு தாதாவோட தாத்தா Gibbons க்கும் மூதாதையர்.
மீண்டும் ஒரு தலைமுறை மேலே சென்றால் தான் இந்தியாவில் காணப்படும் குரங்குகளின் (Old world Monkeys) மூதாதையர்கள் வந்து இணைகிறார்கள். அதாவது இன்றைய நம்முடைய கொள்ளு தாத்தாவின் கொள்ளு தாத்தா தான் இன்றைய இந்தியக் குரங்குகளுக்கும் மூதாதையர்.
ஆக மொத்தம் நமக்கும் இந்தியாவில் இன்று காணப்படும் குரங்குகளுக்கும் எவ்வளவு தலைமுறை வேறுபாடுகள் என்று பாருங்கள். அதனால் தான் நமது இயல்பும் அவற்றின் இயல்பும் அறிவும் மிகவும் வேறுபடுகின்றன.
நமக்கு நெருங்கிய உறவுகளான சிம்பான்சிகளின் செய்கைகள் நம்மை வியக்க வைப்பாதகவே இருக்கின்றன. கருவிகளைப் பயன்படுத்துதல், குடும்பத்தோட இணக்கமாக இருத்தல் என்று அவற்றிற்கும் நமக்குமான ஒற்றுமைகள் பலவுண்டு.
இன்றைய மனிதன் அளவிற்கு ஏன் அறிவுடைய உறவினர் யாரும் நமக்கில்லை என்கிறீர்களா? முன்னர் இருந்தார்கள் இப்போது அழிந்துவிட்டார்கள். உலகில் இன்னும் வேறு மனித இனங்களும் (Homo neanderthalensis, Homo floresiensis போன்ற மனித இனங்கள்) நம் மூதாதையருடன் வாழ்ந்து வந்தனர். நாமும் இவர்களும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல.
நியண்டர்தால்கள் கிட்டத்தட்ட 40,000 ஆண்டுகளுக்கு முன்பு அழிந்து போயினர். தோராயமாக வேட்டையாடிகளாக இருந்த நம் முன்னோரும் அவர்களும் 4000-5000 ஒரே நிலப்பரப்பில் வாழ்ந்திருக்கின்றனர். நியண்டர்தால் பற்றிய ஆய்வுகள் நிறைய நடக்கிறது. அவர்களின் அழிவிற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நமது மனித இனத்தோடு கலந்தும், நம்மால் வேட்டையாடப்பட்டும் நியண்டர்தால் அழிந்து போயிருக்கலாம்.
நாம் உற்று நோக்க வேண்டியது என்னவென்றால், அவர்கள் அறிவு பற்றிய ஆய்வுகள். அவர்களும் கருவிகளைப் பயன்படுத்தியிருக்கின்றனர். முன்னர் நமது மனித இனத்தின் ஓவியங்களாகச் சொல்லப்பட்ட சிலவும் அவர்களது ஓவியங்களாக இருக்கலாம் என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவர்களுக்கும் பேசும் திறன் இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் காலகட்டத்தில், கிட்டத்தட்ட நம் இனத்தின் அறிவுக்கு நிகரான அறிவோடு தான் இருந்திருக்கிறார்கள். அக்கட்டத்தில் நம்மை விட அறிவு வளர்ச்சி பெற்றவர்களாகவும் அவர்கள் இருந்திருக்கலாம். அவர்கள் இன்று இல்லை.
ஆக, இந்தக் கேள்விக்கான பதிலின் சாராம்சம் இது தான். மனிதர்களுக்கு நிகரான அறிவுடைய மற்ற மாந்த இனங்கள் இருந்தன, இப்போது இல்லை. அதனால் பெரிய இடைவெளி நமக்கும் இன்று உயிருடன் இருக்கும் நமது நெருங்கிய உறவுகளுக்கும் இருப்பது போல இருக்கிறது.  இன்று இந்தியாவில் வாழும் குரங்கினங்கள் நம் இனத்தின் சற்றே தூரத்து உறவு தான். அவர்களின் பரிணாமம் நம்மிலிருந்து வேறு வகையாகக் கிளைத்துச் சென்று பல தலைமுறைகளானது தான் அதற்குக் காரணம்.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

1 comment:

  1. அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் விளக்கம் தந்துள்ளீர்கள். அறிவியல் விளக்கம் தந்த நபரை தொடர்புகொள்ள விழைகிறேன். 9943950991 என்ற எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பவும்.தொடர்புகொள்கிறேன்

    ReplyDelete