Wednesday 29 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 3

கேள்வி: பரிணாம வளர்ச்சி ஏற்பட பல கோடி ஆண்டுகள் ஆகும் தானே? (அல்லது) இப்போழுதும் பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டிருக்கிறதா?
பதில்: இரண்டு கேள்விக்கும் சேர்த்தே பதில் எழுதலாம். பரிணாம வளர்ச்சி என்பது ஏதோ விண்கல் தாக்குவது போல ஒரு நாள் நடந்து முடியும்/முடிந்த நிகழ்வன்று. அது நாள்தோறும், நொடிதோறும் நடந்து கொண்டேயிருக்கும் ஒன்று.
சில ஆண்டுகள் கழித்து உங்கள் நண்பர் ஒரு நாள் உங்கள் வீட்டிற்கு வருகிறார். வந்து உங்களது மகனைப் பார்த்ததும் 'அதுக்குள்ள இவ்வளவு வளர்ந்துட்டானா?' என்று வியப்பாகக் கேட்கிறார். ஆனால் உங்களுக்கோ உங்களது நேற்று பார்த்தது போலவே தான் இருப்பான். நேற்று கேட்டிருந்தால் அதற்கு முதல் நாள் இருந்தது போலவே தான் உங்களுக்குத் தெரிந்திருப்பான். உங்களது மகன் நாள் தோறும் மாறிக் கொண்டே தான் இருக்கிறான், ஆனால் பார்த்துக் கொண்டே இருப்பதனால் எதுவும் புதிதாகத் தெரிவதில்லை.

இதே போலத் தான் உலகில் உள்ள உயிர்கள் அனைத்துமே தனது சூழலுக்கேற்ப மாறிக் கொண்டே இருக்கின்றன. சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றித் தகவமைத்துக் கொண்டு இனப்பெருக்கம் செய்து தனது வாரிசுகளை விட்டுச் செல்லும் உயிர்களே பிழைக்கின்றன. அப்படி மாற்றிக் கொள்ள முடியாமல், இனப்பெருக்கம் செய்து வாரிசுகளை விட்டுச் செல்லாத உயிர்கள் அழிந்து போகின்றன. அதனால் தான் தக்கதே பிழைக்கும்.
உலகின் முதல் உயிர் தோன்றிய நாளில் இருந்து பரிணாம வளர்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது. மனிதர்களுக்கு அது நடப்பது தெரியவில்லை என்றாலும் நடக்கும்/நடக்கிறது. உலகில் இவ்வளவு உயிர்கள் எப்படி தனக்கே உரிய தன்மையோடும் உடலமைப்போடும் தோன்றியிருக்க முடியும் என்ற கேள்விக்கான விடை தான் பரிணாம வளர்ச்சிக் கொள்கை.
பரிணாம வளர்ச்சிக் கொள்கையைக் கொண்டு மட்டுமே உலகில் உயிர்களின் தோற்றத்தையும் பரவலையும் விளக்க முடியும்.

ஆக பதில் இது தான். பரிணாம வளர்ச்சி என்பது ஒரு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னாலும் நடந்தது, இன்றும் நடக்கிறது, இனப்பெருக்கம் செய்யும் உயிர்கள் உள்ள வரை நடக்கும். அது ஒரு வினைத்தொகை போல முக்காலத்துக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment