Sunday 26 May 2019

பரிணாமக் கோட்பாடு - கேள்வி பதில் 1

கேள்வி: குரங்கில் இருந்து மனிதன் வந்திருந்தால் குரங்குகள் ஏன் இன்னும் இருக்கின்றன?
பதில்: ஒரு உதாரணம் சொல்கிறேன்.
உங்களது தாத்தா ஊரில் விவசாயம் செய்தவர், கட்டு உடல் கட்டை மீசை என்று இருந்தவர். உங்களது பெரியப்பாவின் மகன் இப்போதும் உள்ளூரில் இருக்கிறார்.
உங்கள் அப்பா ஊரைவிட்டு நகரம் சென்று நீங்கள் வெளிநாடும் சென்றுவிட்டீர்கள். மீசை எல்லாம் எடுத்து கொஞ்சம் தோலும் வெளுத்துவிட்டது.
உங்களையும் உங்கள் பெரியப்பா மகனையும் நிற்க வைத்துப் பார்த்தால் அவர் தான் உங்களைவிட உங்கள் தாத்தாவைப் போல இருப்பார். அவரைப் பார்ப்பவர்கள் அனைவரும் உங்களது தாத்தாவைப் பார்த்தது போலவே இருக்கிறது என்கிறார்கள். அப்படிச் சொன்னாலும் உங்கள் பெரியப்பா மகனும் உங்களது தாத்தாவிலிருந்து நிறைய மாற்றங்களை அடைந்திருப்பார். ஆனால் உங்களைப் போன்ற மாற்றாங்கள் இல்லை.
1. பார்க்க உங்களது தாத்தாவைப் போல இருக்கிறார் என்பதற்காக அவர் உங்கள் தாத்தா இல்லை.
2. உங்கள் பெரியப்பா மகன் எப்படி உங்கள் தாத்தாவிற்கு வாரிசோ அதேயளவு நீங்களும் அவருக்கு வாரிசு தான். வெளிநாடு போய்விட்டீர் என்பதற்காக அவர் உங்களது தாத்தா இல்லை என்று ஆகிவிடாது.
3. நீங்களும் உங்களது பெரியப்பா மகனும் ஒன்றுவிட்ட சகோதரர்கள் தான்.
(இந்த உதாரணத்தை யாரையும் பழிப்பதற்காய் எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு எளிய புரிதலுக்காகத் தான். உங்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம்)
நீங்கள் தான் இன்றைய மனிதர்களான Homo sapiens. உங்களது பெரியப்பா மகன் தான் இன்றைய சிம்பன்சி போன்ற மனிதக் குரங்குகள். உங்களது தாத்தா தான் இன்றைய மனிதர்களுக்கும் குரங்குகளுக்கும் மூதாதை. மனிதன் குரங்கிலிருந்து பரிணமித்தவன் என்று சொல்வது இன்றைய குரங்குகளில் இருந்து அல்ல. மூதாதைக் குரங்குங்களிடமிருந்து. அந்த மூதாதையர்கள் நம்மைக் காட்டிலும் இன்றைய குரங்குகளோடு கூடுதல் ஒற்றுமை கொண்டிருந்தனர். நாம் இரண்டு காலில் நடப்பது, மரத்தைவிட்டு கீழ் இறங்கியது என்று நிறைய மாறிவிட்டோம், வெளிநாடு போன நீங்கள் மாறியது போல. இன்றைய குரங்குகளும் நமது மூதாதையரிடம் இருந்து நிறைய மாறியிருப்பார்கள்.
1. மனிதர்கள் இன்றைய குரங்குகளிலிருந்து பரிணமிக்கவில்லை.
2. இன்றைய மனிதர்களுக்கும் இன்றைய குரங்குங்களுக்கும் ஒரே மூதாதையர் தான்.
3. நாமும் இன்றைய குரங்குகளும் ஒன்று விட்ட சகோதரர்கள்.
பி.கு: இந்த உதாரணம் 100% விளக்கம் தரவில்லை. இது வெறும் அடிப்படைப் புரிதலுக்கான எடுத்துக்காட்டும் விளக்கமும் மட்டுமே.
பரிணாமக் கொள்கை பற்றி வேறு ஏதாவது கேள்விகள் இருந்தால் கேளுங்கள். இது போல எளிய விளக்கம் சொல்ல முயலலாம்.

No comments:

Post a Comment