Thursday 29 November 2012

இனியவை நாற்பது...கடவுள் வாழ்த்து


கடவுள் வாழ்த்து
கண்மூன் றுடையான்தாள் சேர்தல் கடிதினிதே
தொல்மாண் துழாய்மாலை யானைத் தொழலினிதே
முந்துறப் பேணி முகநான் குடையானைச்
சென்றமர்ந் தேத்தல் இனிது.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 

கண் மூன்று உடையான் தாள் சேர்தல் கடிது இனிதே;
தொல் மாண் துழாய் மாலை யானைத் தொழல் இனிதே;
முந்துறப் பேணி முகம் நான்கு உடையானைச் 
சென்று அமர்ந்து ஏத்தல் இனிது.
பதவுரை 
கண்  மூன்றுடையான் : மூன்று கண்களை உடைய சிவபெருமான்.
தாள் : கால் (அடிகள்)
சேர்தல் : அடைதல் 
கடிது : மிக 
இனிது : இனிமையானது 
தொல் : பழமையான 
மாண் : மதிப்புடைய 
துழாய் மாலையானை : துளசி மாலை அணிந்த திருமால்(விஷ்ணு)
தொழல் : கைகளை சேர்த்து வணங்குதல் 
இனிதே : இனிமையானது
முகம் நான்கு உடை யானை - நான்கு முகங்களையுடைய பிரமதேவனை,
சென்று (அவன் திருமுன்) சென்று,
அமர்ந்து - மேவியிருந்து,
பேணி ஏத்தல் - விரும்பி வாழ்த்தல்,
முந்துற இனிது - முற்படவினிது.

தெளிவுரை 
மூன்று கண்களையுடைய (மூன்று கண்கள் : சூரியன், சந்திரன், நெருப்பு.) சிவபெருமானது திருவடிகளை அடைதல் இனிது. பழமையான துளசி மாலை மாலையை அணிந்த திருமாலை வணங்குதல் இனிது. நான்கு முகங்களை உடைய பிரமதேவன் முன் அமர்ந்து அவனை வாழ்த்துதல் இனிது. இந்த பாடலில் மூன்று விதமான வழிபாட்டு முறைகள் சொல்லப்பட்டுள்ளன. அவை  சேர்தல், ஏத்தல், தொழல்  என்பன  ஆகும்.  இவை  இறைவனை  மனதினாலும் சொல்லினாலும்  செயலாலும் வழிபடுகிற  திரிகரண வழிபடு முறைகள்.
            இறைவனை உள்ளத்தில் வைத்து சொல்லாலும் செயலாலும்  போற்றி வணங்குவதே  இனியது என்பதையே இந்தச்  செய்யுள் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment