Wednesday 28 November 2012

பன்னாடை..

நீங்க முறமா? இல்லை பன்னாடையா?

    உண்மையில் பன்னாடை என்பது நல்ல தமிழ் பதம். இது பனை/ தென்னை மரங்களில் இருக்கும் நார் போன்ற பகுதி. நெருக்கம் குறைந்து சல்லடை போன்று இருக்கும். அந்தக் காலத்தில் இதனை கல் முதலியவற்றை வடிகட்ட பயன்படுத்தினர். பன்னாடையானது வடிகட்டி மீந்த சக்கயை தன்னிடம் வைத்துக்கொண்டு நல்லவற்றை விட்டுவிடும். அப்படி நல்லதைவிட்டு தீயதை எடுத்துக்கொள்கிறவர்களை பன்னாடை என்று சொல்வர். முறமானது புடைக்கும் போது நல்லதை தன்னிடம் வைத்துக்கொண்டு தீயதைவிட்டுவிடும். 
பன்னாடை என்பது கெட்ட சொல்லோ வழக்கு மொழிச்சொல்லோ இல்லை. நன்னூலின் ஒரு பாடலில் பன்னாடை இடம் பெற்றுள்ளது. அப்பாடல் பின்வருமாறு:

"அன்ன மாவே மண்ணொடு கிளியே
இல்லிக் குடமா டெருமை நெய்யரி
அன்னர் தலையிடை கடைமா ணாக்கர்."
          நன்னூல்-35.
(பொதுப்பாயிரம், மாணவனது வரலாறு)

பதம் பிரிக்கும் முறை:

அன்னம் ஆவே மண்ணோடு கிளியே
இல்லிக்குடம் ஆடு எருமை நெய்யரி
அன்னர் தலை இடை கடை மாணாக்கர்.

பொருள்:
அன்னம், பசு போன்றோர் முதல் மாணக்கர். மண், கிளி போன்றோர் இடை மாணாக்கர். இல்லிக்குடம்(ஓட்டைக்குடம்), ஆடு, எருமை, பன்னாடை(நெய்யரி) போன்றோர் கடை மாணக்கர்.

விளக்கம்:
    அன்னம் நீரிலிருந்து பாலை பிரித்து உண்ணும், அது போல் முதல் மாணாக்கர் ஆசிரியர் சொல்வதிலிருந்து நல்லனவற்றை எடுத்துக்கொள்வர். பசுவானது கிடைக்கும் போது புல்லை தின்றுவிட்டு பின்னர் அதனை அசை போடு. அதே போல் முதல் மாணாக்கர் ஆசிரியர்கள் இருக்கும் போது அவர்களிடம் கலைகளைக் கற்றுக்கொண்டு பின்னர் அதனை பயிற்சிப்பர்.
    மண்ணை எந்த அளவு பண்படுத்துகிறோமோ அது அந்த அள்வு பயன் தரும். அது போல் ஆசிரியரின் பயிற்சிக்கு ஏற்ப கற்பவரும், கிளியைப் போன்று சொன்னதை சொல்பவரும் இடை மாணாக்கர்.
    ஒட்டைக்குடம் எதையும் தக்க வைத்துக்கொள்ளாது; ஆடு கண்ட தளையெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக மேயும், எதையும் உருப்படியாக உண்ணாது: எருமை குளத்து நீரிலே கிடந்து அதனையே கலக்கிவிடும்; நெய்யரி நெயியை(நல்லதை)விட்டு கசடை(வேண்டாததை) வைத்துகொள்ளும். இத்தகைய குணங்கள் உடையவர்கள் கடை மாணாக்கர்.
-சுபாசினி.




No comments:

Post a Comment