Tuesday 15 July 2014

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்.

இட்டேரிப்பக்கமா நடந்து போனால் இந்தச் சொற்களையெல்லாம் பார்க்கலாம்.
(இட்டேரி??? இப்படி யோசிப்பவர்கள் இந்தப்பக்கமா போய்ப்பாருங்க- இட்டேரி).

1. கடவு. 

சில சமயம் தோட்டத்தைச் சுற்றி வேலி நீண்டுகொண்டே போகும். ஒரு கல் தொலைவெல்லாம் தாண்டி தான் வழியிருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் வேலியில் கொஞ்சம் முள்ளை நீக்கி ஓட்டை போட்டு அந்த வழியைப் பயன்படுத்துவார்கள். (By-pass). இதற்குக் கடவு என்றுபெயர்.














2. தொக்கடா.

"இது என்ன இந்தியன் படப்பாடல் வரிமாறி இருக்கே" என்று சோசிக்காதீர்கள். இதுவும் ஒரு அழகான சொல். நாம் மட்டும் தான் கடந்து போக வேண்டும், கால்நடைகள் கடக்கக் கூடாது. அப்பொழுது என்ன செய்வது? மனிதர்கள் மட்டும் தாண்டும் வகையில் பட்டியில் ஒரு வழி அமைத்துவிடுவார்கள் (இடுப்பு உயரத்திற்கு கீழ் வழியில் கட்டை கட்டி அடைத்துவிடுவார்கள்.) இதற்குத் தொக்கடா என்று பெயர். ஆடு தாண்டாத என்று கேட்கலாம். ஆடுகளின் கால்களைக் கட்டிவைத்திருப்பார்கள் (முன்னங்காலில் ஒன்றோடு பின்னங்காலின் எதிர் பக்கக் காலோடு சேர்த்து அதனை விரைந்து ஓடாமல் கட்டி வைப்பார்கள்). அதனால் அவற்றால் தாண்ட முடியாது.

3. தொண்டுபட்டி.

பட்டிகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது இச்சொல் நினைவிற்கு வந்தது. சுற்றி வேலியால் அடைத்த பகுதியில் இரண்டொரு மாடு ஆடு வைக்கற்போர் வைக்கக் கொஞ்சம் இடம், ஒரு குட்டிச் சாலை, இப்படி இருக்கும் இடத்தை தொண்டுபட்டி என்பார்கள். (மற்ற வட்டாரங்களில் எதைத் தொண்டுபட்டி என்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை).
















4. வெள்ளதாரை.

sink / wash basin என்றெல்லாம் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சலதாரை என்னும் சொற்பயன்பாடு அழிந்துவருவதைக் கண்டேன். சலம்- வடமொழி என்பதாலோ என்னவோ அது வழக்கொழிந்து போவதில் எனக்குப் பெரிதாய்க் கவலை ஏதுமில்லை. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது என் அம்மா வெள்ளதாரையைப் பற்றி நினைவுபடுத்தினார்.

மழை பெய்யும் போது தோட்டங்காடு, புன்செய் நன்செய் என்றிருக்கும் இடங்களில் மழைநீர் ஓடும். ஓடை, ஆறு இவற்றில் சேர்க்கமுடியாத நீர் போகும் பாதையை வெள்ளதாரை என்பார்கள். இங்கும் அடித்துவரப்பட்ட மண் சேர்ந்திருக்கும். அங்கு எந்தச் செடிகளும் வளர்வதில்லை. எல்லா நாளும் நீர் போகாமல் அடைமழை காலங்களில் மட்டும் நீரோடும் வெள்ளதாரையைச் சிறு வயதில் கண்டிருக்கிறேன். அதிலும் நீர் இருக்கும் போது கண்டதாய் நினைவில்லை. நீரின் தாரையை மட்டுமே கண்டிருந்தேன். என் அம்மா அவர்களின் சிறுவயது நினைவிகளைப் பகிர்ந்தபோது அங்கு சென்று பலரும் துணிதுவைத்ததாகக் கூறினார். ஒருமுறை மீண்டும் சென்று அந்தத் தாரையாவது இருக்கிறதாவென்று பார்த்துவர வேண்டும்.

இதெல்லாம் எங்கள் வீட்டிற்குப்பின்னால் இருக்கும் இட்டேரியில் எடுத்த படங்கள்.

















இதேபோல் இன்னும் கொஞ்சக் கொஞ்சும் வட்டாரவழக்குச்சொற்களோடு மீண்டும் எழுதுகிறேன்.
அன்புடன்
சுபாசினி.


7 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. சலம் என்னும் தமிழ்ச்சொல்லில் இருந்து ஜலம் தோன்றியதா எனத் தெரியவில்லை. அது தமிழில் முதலில் தோன்றவில்லையென்று தான் எண்ணிக்கொண்டிருக்கிறேன். காரணம் சங்கம் மருவிய காலத்தில் சகரத்தை முதலாகக் கொண்ட சொற்கள் அவ்வளவாகப் புலக்கத்திலில்லை.
      (http://www.tamilvu.org/courses/degree/a051/a0512/html/a0512662.htm)

      இச்சொல் தேவாரத்தில் வருகிறது. திருக்குறளில் வேறு பொருளில் வருகிறதென நினைக்கிறேன். இச்சொல் நல்ல தமிழ்ச்சொல் என்பதற்கு இலக்கியச்சான்றுகள் இருந்தால் பகிருங்கள் .

      Delete
  2. Salam (சலம்) is a Tamil word. Jalam is a Sanskrit word. Sanskrit borrowed this name from Tamil.
    Sa (ச) in Tamil become Ja (ஜ) in Sanskrit

    The word SALAVAI (சலவாய் ) in Tamil refers to SALIVA (சலைவ) in English and in many other European languages. SALAM (சலம்) means "Water" (நீர்) and VAI (வாய்) means "Mouth" in Tamil. SALAM + VAI = SALAVAI. The water which comes out from mouth is called SALAVAI (சலவாய் ) in Tamil.

    SALAVAI (சலவாய் ) (Tamil) > SALIVA (சலைவ) (English & Latin & Basque & Catalan & Galician & Portuguese & Italian & Spanish & Romanian & Javanese) > SALIVO (சலிவொ ) (Esperanto) > SALIVE (சலிவ்) (French)
    _________________________
    Sali (Tamil) > Jalathosam (Sanskrit)

    Sali is also refers to liquid from nose.
    __________________________

    I will try to find this word in literature and also please refer to this link

    http://agarathi.com/word/%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D

    The challenge is we have to clearly identify which one is Tamil and Sanskrit. Many reference website are confusing us.

    ReplyDelete
  3. Please think Kadavu (கடவு) Vs Kathavu (கதவு) and relate this to Gate. Old English is GAET.

    ReplyDelete
  4. பல சொற்கள் அறியாதவை ஐயா... நன்றி...

    இட்டேரி அழகு...!

    ReplyDelete
  5. அருமையான தொகுப்பு! ஆவணப்படுத்தியமைக்குத் தமிழ் கூறும் நல்லுலகு சார்பாய் நன்றிகள்! இப்படிப்பட்ட சொற்களை விக்சனரியில் சேர்த்து விடுங்கள்! பலருக்கும் போய்ச் சேரும்; காலத்துக்கும் அழியாமலும் இருக்கும்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா. இன்னும் கொஞ்ச சொற்களும் அதற்கான படங்களையும் சேகரித்துவிட்டு பின்னர் விக்சனரியில் சேர்க்கும் பணியில் ஈடுபடுகிறேன் ஐயா

      Delete