Friday 4 July 2014

"மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொல்லவில்லை

மீண்டும் யாராவது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கூறினால் நிச்சயம் அவர்களுக்கு உதை தான் விழும். என்று பாரதி அப்படிச் சொன்னார்? ஒரு முறையேனும் பாரதியின் நூலைப் படிக்காத மூடர்கள் தாங்கள் பேசும் போது எழுதும் போது எல்லாம் அந்த வரியைச் சேர்த்துக் கொள்கின்றனர். ஏதோ பாரதி தமிழ் அழிந்துவிடும் என்று சொன்னது போலவும் இவர்கள் தமிழைக் காப்பது போலவும் எழுதி எரிச்சலூட்டுகின்றனர். அந்த பாரதியின் வரிகளை முழுமையாகப் படிக்காதவர்கள் ஒருமுறையேனும் படியுங்கள். தமிழ் அழியும் என்று சொல்வோர்க்குப் பதிலடியாக அவர் எழுதிய கவிதையை இப்படித் திரித்துவிட்டனர்.

அவர் எழுதிய கவிதை இதோ.

"ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் 
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் 
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! 

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! 
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

தமிழன்னை உரைப்பது போன்ற இந்தக் கவிதை சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் எனும் அவருடைய கவிதைத் தொகுப்பில், “ (1) தேசீய கீதங்கள்” எனும் பிரதான தலைப்பின் கீழ் அடங்கியுள்ள “(2) தமிழ்நாடு”  துணைத் தலைப்பில் இரண்டாவது கவிதையாக “(21) தமிழ்த்தாய்” என்னும் தலைப்பில் உள்ளது. 

No comments:

Post a Comment