Sunday, 18 August 2013

தாராசுரம் கோவில் புகைப்படங்கள்...
















தாராசுரம் கோயிலின் சுற்று மண்டபத்தில் அமைந்த ஒரு படிக்கட்டில் அமைந்த சிற்பம் இது. ஒரு சிங்கம் யானையை விழுங்குவது போன்ற காட்சி. யானையை கொல்லும் அளவு பெரிய சிங்கமா?? ஒருவேளை வள்ளுவர் சொன்ன
"பரியது கூர்ங்கோட்ட தாயினும் யானை
வெரூஉம் புலிதாக் குறின்."
என்னும் குறளில் வரும் புலியைப் போல ஊக்கமுடைய அரிமாவாக இருக்கும். இந்த சிற்பம் அமைத்த காரணம் அதன் அடிப்படையில் அமைந்த சாராம்சம் எல்லாம் மறைந்தே போய்விட்டது. Dan Brown புதினங்களில் வரும் Robert Langdon போன்ற ஒருவர் தமிழ்நாட்டில் இருந்து அதன் காரண காரியங்களைத் தேடிக் கண்டுபிடித்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.
இருந்தும் ஒரு நான்கு படி கொண்ட படிக்கட்டின் கைபிடியில் எவ்வளவு நேர்த்தியான சிற்பம். ஆனால் சிற்பங்கள் எல்லாமே சற்று சிதிலமடைந்து தான் காணப்படுகின்றன. சிதிலமடைந்த நிலையிலேயே இவ்வளவு அழகாக இருக்கும் போதும், செதுக்கிய ஆண்டில் பார்க்கக் கண் கோடி தேவைப்பட்டிருக்கும்.



Saturday, 17 August 2013

தமிழ் மொழி பற்றி அறிஞர் பெருமக்களின் கருத்து.

முன் குறிப்பு:
பதிவு முழுவதையும் படியுங்கள். இதில் தமிழ் மொழி பற்றி பல அறிஞர்கள் கூறியது. நம் தமிழின் பழமை கண்டு பெருமை கண்டு கர்வம் கொள்ள வேண்டியது. இதில் தனிப்பட்ட எங்கள் கருத்து எதுவும் இல்லை. பெருமக்கள் சொன்னதன் தொகுப்பே இது. இந்தப் பதிவைக் கற்பனை சோடித்து பூதமாக்கி கடலில் இருந்து தமிழைக் கண்டெடுத்தேன் என்று கட்டுக்கதைகளை விட வேண்டாம்.  உள்ளதை உள்ளபடி உள்ளம் உவந்து உண்மையைப் பிறர்க்குப் பகிர்வோம்.

தமிழைப் பற்றிய பிற மொழியார் கருத்துக்கள்:


Tamil in its poetical form is more polished and exact than Greek and in both dialects with its borrowed treasure, more copious than Latin. - Dr.Winslow

Tamil Language is extraordinary in its subtlety and sense of Logic. - Dr.G.Slater

No human speech is more close and philosophic in its expression as an exponent of the mind than Tamil. - Perceival

The mode of callocating Tamil’s words follows the logical or intellectual order, more so than even Latin or Sanskrit. - Dr.Schmidt

In one department, at least, that of ethical epigrams Sanskrit has been outdone by Tamil. - Dr.Coldwell

Tamil is perhaps the only example of an ancient classical tongue, which has survived as a spoken language for more than 2500 years, with its basic structure, almost unchanged. - Encyclopedia Brittanica.

Tamil has been described as "the only language of contemporary India which is recognizably continuous with a classical past" and having "one of the richest literatures in the world". Tamil literature has existed for over 2000 years. The earliest epigraphic records found on rock edicts and hero stones date from around the 3rd century BCE. - Wikipedia

தமிழ்மொழி பற்றித் தமிழ் இலக்கியங்களில் காணப்படும் கருத்துக்களில் சிலவும் தமிழறிஞர் சிலரின் கருத்துக்களும் கீழே காண்க:

என்றுமுள தென்றமிழ்! – கம்பராமாயணம்

எவ்வுலகும் புகழ்ந்தேத்தும் இன்தமிழ்! - பெரியபுராணம்.

நல்லதமிழை வித்தி என் உள்ளத்தை நீ விளைத்தாய்! – நாலாயிரத் தெய்வியப் பனுவல்

கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந்தாய்ந்த இப்பசுந் தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக்கிடந்ததா எண்ணவும் படுமோ?
– திருவிளையாடற் புராணம்

கொழி தமிழ்ப் பெருமையை யார் அறிவார்? - மதுரைக் கலம்பகம்

இருந்தமிழே உன்னால் இருந்தேன் இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன். - தமிழ்விடு தூது.

ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
ஏங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
தன்னேர் இலாத தமிழ். - தண்டியலங்காரம்

ஆரியம்போல் உலகவழக் கழிந்தொழிந்து சிதையாஉன்
சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே!
- மனோன்மணீயம்

அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல் - புறநானூறு

ஆடல் பாடல் இசையே தமிழே - சிலப்பதிகாரம்

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவ(து)
எங்கும் காணோம்! - பாரதியார் பாடல்கள்

தமிழுக்கும் அமுதென்று பேர்! – அந்தத்
தமிழ் இன்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்! – பாவேந்தர் பாடல்கள்

தமிழ்மொழிப் புணர்ச்சிகட்படும் செய்கைகளும் குறியீடுகளும் வினைக்குறிப்பு வினைத்தொகை முதலிய சொல்லிலக்கணங்களும் உயர்திணை அஃறிணை முதலிய சொற்பாகுபாடுகளும் அகம் புறம் என்னும் பொருட் பாகுபாடுகளும் குறிஞ்சி வெட்சி முதலிய திணைப் பாகுபாடுகளும் அவற்றின் பகுதிகளும் வெண்பா முதலிய செய்யுள் இலக்கணமும் இன்னோரன்ன பிறவும் வடமொழியிற் பெறமாட்டா.
- சிவஞானமுனிவர்

நம்மைப் பெற்றதும் தமிழ்; வளர்த்ததும் தமிழ்; நம்மைத் தாலாட்டுத் தூங்க வைத்ததும் தமிழ்... இப்படிப்பட்ட அருமையான மொழியை விட்டுவுட்டுச் சமற்கிருதம் இலத்தீன் முதலிய அயல்மொழியைப் படிக்கிறார்கள். சுற்றத்தார்களை விட்டுவிட்டு அயலாரை நேசம் செய்கிறவர்களுக்குச் சமானமாயிருக்கிறார்கள். – நயனரசர் வேதநாயகர்

தமிழ்மொழியே எல்லா மொழிகளுக்கும் தாய்மொழியாக அமைந்தது - ஆபிரகாம் பண்டிதர்

தமிழ் உயர்தனிச்செம்மொழி – பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண சாத்திரியார்)

தமிழைப்போலும் கொத்துக் கொத்தாய்க் கூடி இயலும் சொற் பரப்பைக் கொண்ட ஒரு மொழி நாம் அறிந்தவற்றுள் வேறின்று. - ஞானப்பிரகாசர்

எம்மொழிக்கும் ‘பித்ரு’ மொழி தமிழ் – இராமலிங்க வள்ளலார்

தமிழ் திரவிடத்திற்குத் தாயும் ஆரியத்திற்கு மூலமும் ஆகும்… தமிழ் வடக்கே போய் திரவிடமானது. திரவிடம் வடமேற்கே போய் ஆரியமாக மாறியது. அந்த ஆரியத்திலே ஒருபகுதியினர் கிரேக்கத்திற்கு இனமான ஒருமொழி பேசிய ஒருதொகுதி ஆரியர் இந்தியாவிற்கு வந்தனர். - தேவநேயப்பாவாணர்

தமிழர் தென்னாட்டின் பழங்குடி மக்கள். நாகரிக மாந்தன் தோன்றியது தென்னாடாகத்தான் இருக்க முடியும். – பி.டி. சீனிவாசஅய்யங்கார்

இங்கிருந்து (பழந் தமிழகத்திலிருந்து) போன தமிழர்தாம் சுமேரிய நாகரிகத்தைப் பரப்பினார்கள். – இராமச்சந்திரதீட்சிதர்.


தமிழ் மொழி வரலாறு பற்றிக் கூறும் நூல்கள்:

(நன்றி: மொழியும் இனமும் - முனைவர் மலையமான்)

‘தமிழகம் மக்கள் இனத்தின் தொட்டில்’ என்று செருமானிய அறிஞர் எக்கல் கூறியுள்ளார்.
1913-இல் தமிழ் உலகின் முதன்மொழி என்ற கருத்தை மொழிநூலறிஞர் மாகறல் கார்த்திகேயனார் கூறினார்.
1920-ஆம் ஆண்டளவில் இதே கருத்தை அறிஞர் கா.சுப்பிரமணியனார் மொழிநூல் கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும் என்ற நூலில் கூறினார்.
1930-40ஆம் ஆண்டுகளில் ஈழத்து நல்லூர் ஞானப்பிரகாச அடிகளார், ‘தமிழ் அமைப்புற்ற வரலாறு’ என்ற நூலில் இந்த உண்மையை அறிவித்துள்ளார்.

ஞால முதல்மொழி ஒன்றிருந்தது என்று ‘மாரிசு சுவாதசு’- Origin and Development of Language -என்ற நூலில் கூறினார்.
இதையே ‘கிரீன் பெர்கு’, ‘மெர்ரிட்ருகுலன்’ ஆகியோரும் தெரிவித்துள்ளனர்.
அந்த மூலமொழி தமிழ் என்று தேவநேயப்பாவாணர் தம் ஆய்வு நூலான Primary Classical Language of the World –இல் கூறினார்.
அறிஞர் இளங்குமரனார், மதிவாணன் போன்ற இக்கால ஆய்வாளர் பலரும் தமிழே உலகின் முதன்மொழி என்கின்றனர்.

‘கருணாமிர்த சாகரம்’ என்னும் நூலில் ஆபிரகாம் பண்டிதர், தமிழே உலக மொழிகளின் தாய் என்றார்.
மயோரிகளின் மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை மவ்லானாவும், பி.இராமநாதனும் கண்டு கூறினர்.
சுமத்ராவில் காரோபட்கு இனத்தவரின் மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன.
கொரியா-திராவிடமொழி ஒப்பாய்வு நடத்திய எச்.பி.கூபர் என்பவர் கொரிய மொழியில் தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று கூறினார்.

தமிழுக்கும் சீனமொழிக்கும் தொடர்புள்ளது என்று மாகறல் கார்த்திகேயனார் கூறியதை கடிகாசலம் நிறுவியுள்ளார்.
சப்பான் நாட்டு ‘கடகானா’ எழுத்துமுறை தமிழிலிருந்து பெறப்பட்டது என்று தி.நா.சுப்பிரமணியம் என்ற ஆய்வாளர் (கலைமகள் இதழில்) தெரிவித்தார்.
சப்பான் மொழியில் 500க்கும் மேல் தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சுசுமுஓனோவும் பொற்கோவும் இணைந்தாய்ந்து கூறினர்.
வடமேற்கு ஆப்பிரிக்காவிலுள்ள கணா நாட்டுக் கணா மொழியில் 27 விழுக்காட்டுச் சொற்கள் தமிழ் என்று ஆய்வாளர் கூறினர்.
அய்ரோப்பாவின் அங்கேரி மொழியில் தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஆய்ந்து முத்துக்குமாரசாமி ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழில் எழுதினார்.
கிரேக்க இலத்தீன மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் இருப்பதை ஞானகிரி(நாடார்) நூலாக வெளியிட்டுள்ளார்.

இசுபெயின் நாட்டின் ‘பாசுகு’ மொழி தமிழுடன் ஒற்றுமை உடையதாயிருக்கின்றது. தமிழின் இடப் பெயர்களின் ஈறுகள் பல காணப்படுகின்றன.
அம்மா என்ற சொல் அதே வடிவிலும் திரிந்தும் 50க்கும் மேற்பட்ட மொழிகளில்வழக்கில் உள்ளதாக ப.அருளி ‘பெற்றோரைப் பற்றி’ நூலில் விளக்கினார்.

ஆதிச்சநல்லூர் அகழாய்வில் கண்ட கி.மு. 2000-கி.மு.1200 காலத்திய பிணக்குழிப் பொருள்கள் பாலத்தீனம், சைப்பிரசு, கிரீசு ஆகிய நாடுகளின் பிணக்குழிகளிலும் காணப்பட்டதை கே.கே.பிள்ளை ‘தென்னிந்திய வரலாறு’ என்னும் நூலில் எழுதினார்.
‘ஒரடோட்டசு’ என்னும் கிரேக்க வரலாற்றாசிரியர் ‘கிரீட்’ தீவில் வாழ்ந்த மக்களைத் ‘தெமிலி’ என்றார். ‘தெமிலி’ என்பது தமிழரைக் குறிக்கும் என்று ந.சி. கந்தையா ஆய்ந்து எழுதினார்.
சிந்துசமவெளியில் கிடைத்த பழந்தமிழ்க் குறிகள் சுமேரியா, கிரீட், ஈசுடர் தீவிலும் கண்டுபிடிக்கப்பட்டன.
தென் அமெரிக்காவின் ‘மாயன் நாகரிகம்’ தமிழ்நாகரிகத்துடன் தொடர்புடையது என ந.சஞ்சீவி தெரிவித்தார்.

ஆரியர் வருகைக்கு முன்னர் இந்தியா முழுவதும் பழந்தமிழே வழங்கியது என்று சுனீத் குமார் சட்டர்சி ‘வங்காள மொழியின் தோற்றமும் வளர்ச்சியும்’ என்ற நூலில் எழுதினார்.
‘ஒரு காலத்தில் வடந்தியா முழுவதும் திராவிட (தமிழ்) மொழி பேசப்பட்டது’ என்று அம்பேத்கர் untouchables என்ற நூலில் எழுதினார்.
தென்னிந்தியாவே திராவிடரின் தமிழரின் வலிமைப்புலமாக இருந்தாலும் மொழியாலும் பிறவற்றாலும் அவர்கள் பலுசித்தானம் முதல் வங்காளம் வரை பரவியிருந்தனர் என்பதற்குச் சான்றுகள் உள்ளன என்றார் எசு.கே.டே.
குறைந்தது 4000 ஆண்டுகளுக்கு முன்பு மராத்திய நிலப்பகுதி திராவிடரின் (தமிழரின்) ஆட்சியின் கீழிருந்தது என்று மராத்திய அறிஞர் முனைவர் கட்ர Introduction to Modern Indian Linguistics என்ற நூலில் எழுதினார்.
சிந்தி மொழியில் 2000க்கும் மேற்பட்ட தமிழ்ச்சொற்கள் உள்ளன என்று ஆய்வறிஞர் பர்சோ கித்வானி கூறினார்.
வங்க மொழியில் பல தமிழ்ச்சொற்கள் இருப்பதைச் சாந்தி நிகேதனத்தின் பேராசிரியர் முத்தையா ஆய்ந்துரைத்தார்.
தொடர் அமைப்பில் வடமொழியும் மற்ற இந்திய மொழிகளும் தமிழை ஒத்துள்ளன என்று சுனீத் குமார் சட்டர்சி கூறினார்.
இந்தி தொடர் அமைப்பைப் பற்றிக் கூறிய அறிஞர் மு.வ., ‘இந்தி ஆரிய உடை அணிந்த தமிழ்ப்பெண்’ என்றார்.
அரப்பா, மொகஞ்சதாரோ மக்களின் மொழி தமிழே என்றார் திருத்தந்தை ஈராசு.


பின் குறிப்பு.
இணையத் தேடல் வழி சேகரித்தத் தகவல். இணையத்தில் தமிழ் மொழி தொடர்பான தகவல் பகிரும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.

Monday, 5 August 2013

ஒரு செய்யுளும் அதனைச் சுற்றி சோடிக்கப்பட்ட கற்பனையும்

"நம் வரலாற்றைத் தெரிந்து கொள்ள இந்த முறை உங்களை 20,000 வருடங்களுக்கு முந்தைய கடலில் மூழ்கிய ஒரு உலகிற்கு அழைத்துச் செல்லவிருக்கிறேன்."

இப்படியாகத் தொடங்கி அச்சு மாறாமல் அதே வரிகளைக் கொண்ட பதிவுகளை வெவ்வேறு படங்களுடன் தினமும் முகப் புத்தகம், வலைப்பூ என ஆதாரமற்ற பல இணையத் தளங்களில் காண்கிறோம். அதில் சொல்லப்பட்டுள்ள செய்தியைப் பாருங்கள். அவை அனைத்தும் ஒரு செய்யுளின் கரு, அதைத் தான் கற்பனை சோடித்துத் தங்கள் மதியை மயக்குகின்றனர்.
அந்தச் செய்யுள் இடம் பெற்ற நூல் இறையனார் களவியல் / இறையனார் அகப்பொருள் நூல். உரை எழுதியவர் தான் நக்கீரர், இந்த நக்கீரரும் நெடுநல்வாடை பாடிய சங்ககாலப் புலவர் நக்கீரரும் ஒருவர் அல்லர்.

அடுத்து. இந்த நூல் எழுதப்பட்டது 7-8 ஆம் நூற்றாண்டு.

ஆக 1500 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய ஒரு நூல் மட்டுமே நாம் 20,000 ஆண்டு பழமையானவர்கள் என்று கூறுவதற்கு உள்ள ஒரே ஆதாரம். பகிரும் முன் சற்று யோசியுங்கள். கல்வெட்டுக்களோ, இன்ன பிற சான்றுகளோ இல்லாத ஒரு செய்தியைப் பரப்பி, தமிழனை வெட்டிப் பெருமை பேசுபவன் என்று உலகம் ஏசச் செய்கிறார்கள். அந்த நூலில் கூறப்பட்டுள்ள செய்தியை சொல்வதில் தவறில்லை. ஆனால் அந்த நூல் என்ன கூறுகிறதோ அந்த நூல் சொன்னதாக அதை அப்படியே இவர்கள் சொல்லலாம். கற்பனைகளையும் தவறான கருத்துக்களையும் உள் நுழைக்க வேண்டாம்.

Friday, 12 July 2013

கொங்கு மண்டல வட்டார வார்த்தைகள்

சில வார்த்தைகள் தமிழ்நாட்டில், தமிழில் பிறந்து தமிழிலேயே வழக்கொழிந்து போகின்றது. ஆங்கிலம் வருவதற்கு முன்பிருந்தே இவை இங்கு வழக்கில் இருந்தன. அப்படி வட்டார வழக்கில் இருக்கும், இருந்த வார்த்தைளில் சில இங்கு.

1. யேனம் - சமையல் பாத்திரங்களை இப்படிச் சொல்வார்கள்.
2. வட்டல் - உணவு சாப்பிடும் தட்டை மட்டும் வட்டல் என்பார்கள். மற்ற வட்ட வடிவில் அமைந்த எந்த தட்டுகளையும் இப்படிச் சொல்வதில்லை.
3. தாட்டிவிடு - அனுப்பிவை என்பது இதன் பொருள். ( தாட்டிவிட்டேன் - அனுப்பிவைத்தேன்)
4. சேந்துதல் - கிணற்றில் நீர் எடுப்பதை இப்படி சொல்வார்கள் (தண்ணீர் சேந்துனேன்)
5. மாட்டுதல் - சண்டை போடுதல், திட்டுதல் ( அம்மா என்ன மாட்டுவாங்க, திட்டுவாங்க என்ற பொருளில் இது வரும்)
6. சந்தகை - இடியாப்பம்.
7. கோசாப் பழம்- தர்ப்பூசனி.
மீண்டும் சில வார்த்தைகளோடு வருகிறேன்.

Thursday, 11 July 2013

நான் << மலர் .

















கூட்டத்தில் பெண்ணொருத்தி கூடையோடு நின்றிருக்க
தோட்டத்துப் பூவதில் மாலையாக வந்திருக்க
ஓடாத எண்ணங்களை அதுபார்த்து ஓட்டிவிட்டேன்
தேடாத பொருள் தேடியெங்கோ தாட்டிவிட்டேன்...

பேரம் பேசிவிட்டு போவார் பலரே
ஓரமாய் வேடிக்கை பார்ப்பரும் உளரே
வாங்கி வைக்கும் மக்கள் சிலரே
ஏங்கி நிக்கும் மற்ற மலரே....

விலையேது இன்று விக்காத மலருக்கு ???
கலையிழந்த கண்ணாய் ஒதுங்கியே வீற்றிருக்கு....
பூவாகப் பூத்திருந்தால் அந்தியும் வந்திருக்கும்
நோவாகிப் போகும்முன்னே வாழ்க்கை முடிந்திருக்கும்....

மந்தையில் மனிதனாகப் பிறந்துவிட்டேன்- உலகச்
சந்தையில் விலைபோக மறந்துவிட்டேன் - ஏனோ
காலத்தின் கட்டாயமென கட்டுண்ட காற்றாய்
ஞாலத்தில் வாழுகின்றேன் ஞானத்தைத் தேடுகின்றேன்.

Friday, 5 July 2013

இயல்பை மாற்ற வேண்டாம்

இதுவும் எங்கள் பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. என்னை பாதித்தவைகளில் ஒன்று.

பாம்பு ஒன்று ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வந்தது. அந்த வழியாக யார் சென்றாலும் அவர்களைக் கொத்துவது அதன் இயல்பு. அந்தப் பாம்பிற்கு பயந்த மக்கள் அந்த வழியைத் தவிர்த்தனர். அதனிடம் ஒரு பயமும் மரியாதையும் வைத்திருந்தனர். அந்த வழியாய் ஒரு துறவி சென்றார், பாம்பு அவரையும் தீண்ட வந்தது. அவர் அதனிடம் " நீ எவ்வளவு உயிர்களைப் பலி கொண்டாய் உன்னால் ஒன்றையேனும் திருப்பிக்கொடுக்க முடியுமா, அதனால் இனி யாரையும் தீண்டாதே" என்று சொன்னார். அதனை அந்த பாம்பும் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கொத்துவதை விட்டு விட்டு சாதுவாக மாறியது. கொஞ்ச நாளில் பாம்பு யாரையும் கொத்துவதில் இல்லை என்ற செய்தி மக்களிடம் பரவியதும் அந்த வழியை மக்கள் பயன்படுத்தினர். இன்னும் சில நாட்கள் செல்ல செல்ல அந்தப் பாம்பை கல்லால் அடிப்பது, வாலை இழுப்பது போன்ற செயல்களை செய்து துன்புரித்தினர். மீண்டும் ஒரு முறை அதே துறவி அந்த வழியாக வந்த போது அந்த பாம்பு மிகவும் அடிபட்டு சாகும் தருவாயில் இருப்பதைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டார். " இவ்வளவு நாட்களும் கடித்துக்கொண்டிருந்தேன், மதித்தனர். உங்கள் பேச்சைக் கேட்டு, இப்பொழுது யாரையும் தீண்டுவதில்லை, அமைதியாக இருக்கிறேன், அதனால் எனக்கு சக்தியில்லை என்று எண்ணி என்னை சாகும் நிலையில் கொண்டுவிட்டனர்" என்று அந்த பாம்பு பதிலளித்தது.

அதற்கு அந்த துறவி " உன்னை தீண்ட வேண்டாம், உயிரைக் கொள்ள வேண்டாம் என்று மட்டும் தான் சொன்னேன். அதற்காக உன் உயிரை மாய்த்துக் கொள்ள சொல்லவில்லை, சீறு அவர்கள் பயப்படுவார்கள், ஆனால் அவர்களாய்த் தீண்டாதே, உன் இயல்பை பிறரைத் துன்படுத்தாத அளவு மட்டும் மாத்திக்கொள், ஆனால் பிறர் உன்னைத் துன்பப்படுத்த இடம் கொடுக்காதே."

Thursday, 4 July 2013

துன்ப மூட்டை

இது ஆறாம் வகுப்புப் படிக்கும் போது பள்ளி வழிபாட்டுக்குக் கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. இது எந்த ஞானியால் சொல்லப்பட்டது எனத் தெரியவில்லை, பலரும் இதைக் கேட்டிருப்பார்கள்.

" ஒரு நாட்டில் மக்கள் எல்லோரும் கடவுளிடம் சென்று 'எனக்கு அது துன்பம், இது சோகம், எனக்கு மட்டும் ஏன் இத்தனை துன்பம், மற்றவர்கள் எல்லாம் இன்பமாக இருக்கின்றனர்,  அவனுக்கு அது இருக்கிறது எனக்கு இல்லை' இவ்வாறு சொல்லிக்கொண்டே இருந்தனராம்.. அவரும் பொருமையிழந்து மக்கள் அனைவரையும் வரவழைத்து, " உங்கள் துன்பத்தை எல்லாம் நாளை ஒரு மூட்டையில் கட்டி இந்த இடத்திற்கு எடுத்து வாருங்கள், அவற்றைப் போக்குகிறேன்" என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். மறுநாள் மக்கள் அனைவரும் அவரவர் துன்ப மூட்டையை எடுத்துக்கொண்டு கடவுளைப் பார்க்க சென்றனராம். கடவுள் அவர்களிடம் " உங்கள் துன்ப மூட்டையை இங்கு வைத்துவிட்டு வேறு யாருடைய துன்ப மூட்டையாவது எடுத்துச் செல்லுங்கள்" என்று கூறிவிட்டார். மக்களும் அவரவர் மனதில் யாரெல்லாம் 'மகிழ்ச்சியாக வாழ்கின்றனர், நமக்கும் அந்த வாழ்வு கிடைக்காதா' என்று எண்ணி ஏங்கி கொண்டிருந்தனரோ அவர்களது துன்ப மூட்டையை எடுத்து கொண்டு மகிழ்ச்சியாக சென்றுவிட்டனராம். இரண்டே நாட்களில் மக்கள் அனைவரும் கடவுளிடம் திரும்பி வந்து " எனக்கு என் பழைய துன்ப மூட்டையையே கொடுங்கள், அது இதற்கு பரவாயில்லை, குறைந்தது அது எனக்கு பழகிப் போன துன்பம் , இது மிகவும் கடுமையாக இருக்கிறது" என்று சொல்லி தன் பழைய துன்ப மூட்டையே கேட்டனராம்..."

என்னை ஆழமாக பாதித்த கதை இது... உண்மையும் கூட....