Friday 5 July 2013

இயல்பை மாற்ற வேண்டாம்

இதுவும் எங்கள் பள்ளி வழிபாட்டுக்கூட்டத்தில் ஒரு ஆசிரியை சொன்ன கதை. என்னை பாதித்தவைகளில் ஒன்று.

பாம்பு ஒன்று ஒரு ஊரின் ஒதுக்குப்புறத்தில் வாழ்ந்து வந்தது. அந்த வழியாக யார் சென்றாலும் அவர்களைக் கொத்துவது அதன் இயல்பு. அந்தப் பாம்பிற்கு பயந்த மக்கள் அந்த வழியைத் தவிர்த்தனர். அதனிடம் ஒரு பயமும் மரியாதையும் வைத்திருந்தனர். அந்த வழியாய் ஒரு துறவி சென்றார், பாம்பு அவரையும் தீண்ட வந்தது. அவர் அதனிடம் " நீ எவ்வளவு உயிர்களைப் பலி கொண்டாய் உன்னால் ஒன்றையேனும் திருப்பிக்கொடுக்க முடியுமா, அதனால் இனி யாரையும் தீண்டாதே" என்று சொன்னார். அதனை அந்த பாம்பும் ஏற்றுக்கொண்டு அதிலிருந்து கொத்துவதை விட்டு விட்டு சாதுவாக மாறியது. கொஞ்ச நாளில் பாம்பு யாரையும் கொத்துவதில் இல்லை என்ற செய்தி மக்களிடம் பரவியதும் அந்த வழியை மக்கள் பயன்படுத்தினர். இன்னும் சில நாட்கள் செல்ல செல்ல அந்தப் பாம்பை கல்லால் அடிப்பது, வாலை இழுப்பது போன்ற செயல்களை செய்து துன்புரித்தினர். மீண்டும் ஒரு முறை அதே துறவி அந்த வழியாக வந்த போது அந்த பாம்பு மிகவும் அடிபட்டு சாகும் தருவாயில் இருப்பதைக் கண்டு என்ன நடந்தது எனக் கேட்டார். " இவ்வளவு நாட்களும் கடித்துக்கொண்டிருந்தேன், மதித்தனர். உங்கள் பேச்சைக் கேட்டு, இப்பொழுது யாரையும் தீண்டுவதில்லை, அமைதியாக இருக்கிறேன், அதனால் எனக்கு சக்தியில்லை என்று எண்ணி என்னை சாகும் நிலையில் கொண்டுவிட்டனர்" என்று அந்த பாம்பு பதிலளித்தது.

அதற்கு அந்த துறவி " உன்னை தீண்ட வேண்டாம், உயிரைக் கொள்ள வேண்டாம் என்று மட்டும் தான் சொன்னேன். அதற்காக உன் உயிரை மாய்த்துக் கொள்ள சொல்லவில்லை, சீறு அவர்கள் பயப்படுவார்கள், ஆனால் அவர்களாய்த் தீண்டாதே, உன் இயல்பை பிறரைத் துன்படுத்தாத அளவு மட்டும் மாத்திக்கொள், ஆனால் பிறர் உன்னைத் துன்பப்படுத்த இடம் கொடுக்காதே."

No comments:

Post a Comment