Friday 7 December 2012

இனியவை நாற்பது..பாடல் 4


4. யானை யுடைய படைகாண்டல் முன்இனிதே
  ஊனைத்தின் றூனைப் பெருக்காமை முன்இனிதே
  கான்யாற் றடைகரை யூர்இனி தாங்கினிதே
  மான முடையார் மதிப்பு.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 
யானையுடைப் படை காண்டல் மிக இனிதே;
ஊனைத் தின்று, ஊனைப் பெருக்காமை முன் இனிதே;
கான் யாற்று அடை கரை ஊர் இனிது; ஆங்கு இனிதே,
மானம் உடையார் மதிப்பு.
பதவுரை 
யானையுடைய படை - யானைகளையுடைய சேனையை
காண்டல்அமைத்துக் கொள்வது 
முன் இனிது - முற்பட வினிது
ஊனை தின்று - தசையைத் தின்று 
ஊனைப்பெருக்காமை - உடம்பை வளர்க்காமை
முன் இனிது.
கான் - காடு 
யாற்று அடை கரை ஊர்- ஆற்றின் கரையில் உள்ள ஊர் 
இனிது
ஆங்குஅவை போல
மானம் உடையார் - மானமுடையவரது,
மதிப்பு -  கொள்கை
இனிது.
தெளிவுரை 
அந்த காலங்களில் அரசர்கள் நால்வகை படைகள் (காலாட்படை, குதிரைப்படை,தேர்ப்படை,யானைப்படை) வைத்திருப்பர். இதில் மிகவும் வலிமையுடைய படை யானைப்படை. யானைப்படை கொண்டு பகைவரை எளிதில் வென்றுவிடலாம். எனவே தான் யானைப்படையை இனிமை என்றார். இக்காலத்திற்குச்  சொல்வதானால் வலிமையுடைய ராணுவத்தினை வைத்திருப்பது இனிமையானது. நம் உடலை வளர்ப்பதற்காக பிற உயிர்களைக் கொன்று உண்ணாமல் இருப்பது இனிமையானது. சுருக்கமாக கூறினால்  சைவ உணவுகளை உண்பது இனிமையானது. மரங்கள், செடிகள், மலர்கள், பறவைகள், பட்டுப் பூச்சிகள் , விலங்குகள் என இருக்கிற காட்டில் ஓடுகிற ஆறு எவ்வளவு இயற்கை அழகாய் காட்சியளிக்கும். அப்படிப்பட்ட ஆற்றங்கரையில் அமைந்துள்ள வீட்டில் வாழ்வது இனிமையானது. இயற்கை அழகை ரசித்து வாழ்வதைக் கூறுகிறார். அவை போல மதிப்புடைய மனிதர்களின் கொள்கைகள், கருத்துகள்வழிகாட்டுதல்கள் இனிமையானது. மதிப்புடையவர்கள் என்பவர் பணம் படைத்தவர் இல்லை. நல்ல மனம் படைத்தவர். சிறந்த குணம் உள்ளவர். சினம் அற்றவர். அன்னை தெரசா, அண்ணல் காந்தி, தந்தை பெரியார், விவேகானந்தர், பாரதி போன்றோரை மதிப்புடையவர் என்ற பட்டியலில் சேர்க்கலாம்

No comments:

Post a Comment