Monday 3 December 2012

இனியவை நாற்பது.. பாடல் 2


2. உடையான் வழக்கினி தொப்ப முடிந்தால்
  மனைவாழ்க்கை முன் இனிது மாணாதா மாயின்
  நிலையாமை நோக்கி நெடியார் துறத்தல்
  தலையாகத் தான்இனிது நான்கு.

சீர்  பிரிக்கப்பட்ட பாடல் 

உடையான் வழக்கு இனிது; ஒப்ப முடிந்தால்,
மனை வாழ்க்கை முன் இனிது; மாணாதாம் ஆயின்,
நிலையாமை நோக்கி, நெடியார், துறத்தல்
தலையாகத் தான் இனிது நன்கு.
பதவுரை 
உடையான்செல்வம் உடையவன் (பணம் உடையவன்)
வழக்குஈகை(இல்லாதவருக்குக் கொடுப்பது)
இனிது
ஒப்ப முடிந்தால்மனைவியும் கணவனும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டு ஒரு மனம் உடையவர்களானால் 
மனை வாழ்க்கைகுடும்ப வாழ்க்கை 
முன் இனிது - முற்பட இனிது 
மாணாதாம் ஆயின் - அவ்வாறு ஒன்றுபடாவிட்டால் 
நிலையாமை நோக்கி - உடல் முதலானவை  நிலையில்லாதவை என்பதை உணர்ந்து 
நெடியார்தாமதியாதவராய்
துறத்தல் - ஆசைகளை  விடுதல்
தலையாக நன்கு இனிது - தலைப்பட மிக இனிது

தெளிவுரை 
      பணம் உடையவர்கள் அதிகமாக  பொருளைச் சேமித்து வைப்பதை விட துன்பப்படும் ஏழைகளுக்குக் கொடுப்பது இனிமையானதுகணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு ஒருமனம் உடையவர்களாய்த் தங்கள் வாழ்க்கையை வாழ்வது மிகவும் இனிமையானது. அவ்வாறு மனம் ஒன்றுபட்ட வாழ்வினை அமைத்துக் கொள்ள முடியாதவர்கள் உடல் முதலியவை நிலையில்லாதவை என்பதை உணர்ந்து  உடல்மேல் உள்ள ஆசை, பொருள்மேல் உள்ள ஆசை, உலகின்மேல் உள்ள ஆசை அனைத்தையும் விட்டுவிட்டு ஒரு நொடி கூட தாமதியாமல் துறவியாக   மாறுவதே தலைசிறந்த இனிமையாகும்.
      இப்பாடல் பிறருக்குக் கொடுப்பதில் உள்ள இனிமையையும் குடும்ப வாழ்வில் மற்ற பொருத்தங்களை விட முக்கியமானது மனப் பொருத்தமே என்பதையும் அதில் உள்ள இனிமையையும் மனம் ஒன்றுபடாதவர்கள் இணைவதைவிட தனியாளாய் துறவியாக வாழ்வதே சிறப்பானது என்பதையும் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment