| பின்பு ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி பிடிக்கச்சொன்ன கல்லைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக்காட்டல் வேண்டும். காட்டியபின் அதைத் தனியாய் எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து மூன்றைக் கீழே வைத்துவிட்டுப் பிடித்து, மீண்டும்அதை மேலெறிந்து கீழே வைத்த கல்லை வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும்; அல்லது, வலக் குடங்கையிலுள்ள நாற்கற்களையும் இவ்விரண்டாக இரு தடவை சற்றே மேலெறிந்து, அவற்றைப் புறம்மேனோக்கிய இடக்குடங்கையால் உடனுடன் பிடித்துக் கொள்ள வேண்டும். இங்ஙனஞ் செய்யின் பழமாம்.     ஒருத்தி ஆடும்போது, மேலெறிந்து பிடிக்குங் கல் தவறினாலும், கீழிருக்குங் கல்லை யெடுக்கும்போது பிற கல்லைத் தொட்டுவிட்டாலும், அவள் நின்றுவிடவேண்டும். அதன்பின் அடுத்தவள் ஆடுவாள். ஒருத்தி ஒரே ஆட்டையில் மறுமுறை அல்லது வழிமுறை ஆடும்போது, முன்பு விட்டதிலிருந்து ஆடுவாள். இவை எல்லாவகைக்கும் பொதுவாம்.     ஆட்டை முடிந்தபின், வென்றவள் தோற்றவளின் கைகட் கிடையில் ஒரு கல்லை வைத்து, மேற்கைமேல் மூன்று தடவை குத்துவது வழக்கம். இது எல்லா வகைக்கும் பொது.     ஆட்டின் பயன் : கையும் கைநரம்பும் இந்த ஆட்டால் உரம்பெறும். இதுவும் பொதுவரம். 
 
ஐந்தாங்கல் (மற்றொரு வகை)நாலாங் கொட்டைக்குப்பின், ஐங்கல்லையுங் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்னதிற்போல் நான்கு தடவை மேலே போட்டுப் போட்டு அதை ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கல்லை ஒவ்வொன்றாய் இடப்பக்கமாகச் சற்றுத் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும்.     பின்பு, மறுபடியும் எல்லாவற்றையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போற் பலதடவை மேலெறிந்து, அதை முற்பட்ட ஒவ்வொரு தடவையும் கீழிருக்குங் கற்களுள் நீங்கியிருப்ப வற்றை ஒவ்வொன்றாக நெருங்க வைத்துப் பிடித்து, இறுதியில் கீழிருப்ப வற்றையெல்லாம் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும்.     அதன்பின் இரு பாதங்களையும் கூட்டிவைத்து, அவற்றின் மேல் மூலைக்கொன்றாக நான்மூலைக்கும் நாலு கல்வைத்து, ஏனையொன்றை நான்குதடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு 
 
| தடவையும் பாதங்களின் மேலுள்ள கல்லை ஒவ்வொன்றாய் இருபாத இடைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். |  | பிறகு மீண்டும், ஐங்கல்லையும் கீழிட்டு அவற்றுள் ஒன்றை முன்போல் நான்கு தடவை மேலெறிந்து, அதை ஒவ்வொரு தடவையும், கீழிருக்குங் கற்களை ஒவ்வொன்றாய் இடப்புறம் நிலத்திற் பொத்திச் சற்றே திறந்துவைக்கப்பட்டிருக்கும் இடக் குடங் கைக்குள் தள்ளித் தள்ளிப் பிடித்தல் வேண்டும். |  | பின்பு, ஐங்கல்லையும் போட்டுப் புறங்கைமேல் தாங்கி, அவற்றுள் எதிரி சுட்டியதைப் பிறவற்றுடன் மேலெறிந்து பிடித்துக் காட்டி, அதைத் தனியே எடுத்துவைத்துவிட்டு, ஏனை நான்கனுள் ஒன்றை மேலெறிந்து, மூன்றைக் கீழே வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல் வேண்டும். அதோடு பழம். |  | 
III. ஏழாங்கல் (ஒருவகை) |  | ஏழாங்கல்லின் இவ்வகை ஏறத்தாழ ஐந்தாங்கல்லின் முதல்வகை போன்றதே. |  | ஏழு கல்லையும் உருட்டி அவற்றுள் ஒன்றையெடுத்து மேலெறிந்து ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை யாடல் வேண்டும். ஒன்றாங் கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாங்கொட்டையில் இவ்விரண்டாகவும், மூன்றாங்கொட் டையில் மும்மூன்றாகவும், நாலாங் கொட்டையில் இரண்டும் நாலுமாகவும், ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங்கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும், ஏழாங்கொட் டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்பெறும். |  | பின்பு, முறையே, இழுத்தல் குத்தல் வைத்தல் வாரல் நான்கும் "தப்பு-தாளம்-தலைவலி-மோளம்" நான்கும் நிகழும். |  | அதன்பின், எல்லாக் கற்களையும் மேலெறிந்து புறங்கையால் தாங்கவேண்டும். மூன்று கல்மட்டும் புறங்கைமேல் நிற்பின், அவை 'கட்டான் கருங்கல்' எனக் கீழே போடப்படும். அதற்கு மேலுங் கீழும் நிற்பின் சொக்க வேண்டும். 
 
| மீண்டும் எல்லாவற்றையும் முன்போற் புறங்கையில் தாங்கி, எதிரி சுட்டியதைப் பிடித்துக்காட்டித் தனியாக வைத்துவிட்டு, எஞ்சியவற்றுள் ஒன்றை மேலெறிந்து ஐந்தைக் கீழ்வைத்துப் பிடித்து, மீண்டும் அதை மேலெறிந்து கீழுள்ளவற்றை வாரிப் பிடித்தல்வேண்டும்; பிடித்துவிடின் பழம். |  | 
ஏழாங்கல் (மற்றொரு வகை) |  | ஒரு கல்லை வைத்துக்கொண்டு எஞ்சிய ஆறு கல்லையும் உருட்டி ஒன்றாங்கொட்டை முதல் ஏழாங்கொட்டை வரை ஆடல் வேண்டும். ஒன்றாங்கொட்டையில் ஒவ்வொன்றாகவும், இரண்டாங்கொட்டையில் இவ்விரண்டாகவும், மூன்றாங்கொட் டையில் மும்மூன்றாகவும், நாலாங்கொட்டையில் நாலும் இரண்டுமாகவும், ஐந்தாங்கொட்டையில் ஐந்தும் ஒன்றுமாகவும், ஆறாங்கொட்டையில் ஆறும் ஒரேயடியாகவும், ஏழாங்கொட் டையில் ஒன்றும் இரண்டும் மூன்றுமாகவும், கீழிருக்குங் கற்கள் எடுக்கப்படும். |  | கீழிருந்தெடுக்குங் கற்களை ஒரே கைக்குள் அடக்க இயலாதார், இருகையையும் பயன்படுத்திக் கொள்வதுமுண்டு. ஆயின், இது அத்துணைச் சிறப்பினதன்று; அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்டதுமன்று : |  | கீழிருக்குங் கற்கள் தூரத்தூர இருந்தால், கைக்கல்லைப் பக்கத்தில் வைத்துவிட்டுத் தொலைவிலுள்ள கல்லை எடுத்துக் கொள்ளலாம். |  | ஏழுகொட்டைக்கும் பின்வருமாறு பாட்டுப் பாடப்படும்: (1) "பொறுக்கி சிறுக்கி போ(கி)றாளாம் தண்ணீர்க்குத் தண்ணீர்க்  குடமெடுத்து."
 (2) (அல்லது, வேறு ஏதேனுமொன்று.) "இரண்டு இரும்பு, ஏழடிக் கரும்பு."
 (3) "மூன்று முக்கோடு, முருகன் செங்கோடு".
 (4) "நான்கு நடலம், தேங்காய்ப் புடலம்."
 
 
| (5) "ஐவர் அரைக்கும் மஞ்சள் தேவர் குளிக்கும் மஞ்சள்." (6) "ஆக்கூர் அடிவாழை, அண்ணன் தம்பி பெருவாழை."
 (7) "ஏழண்ணன் காட்டிலே, எங்களண்ணன் ரோட்டிலே, மஞ்சள் சாரட்டிலே."
 |  | இன்னொரு பாட்டுப் பின்வருமாறு : |  | 
(1) "தூப்பொறுக்கி தூதுளங்காய்மாப்பொறுக்கி மாதுளங்காய்
 கல் பொறுக்கி கடாரங்காய்."
 
(2) "ஈர் ஈர்த்திக்கொள்பூப்பறித்துக்கொள்
 பெட்டியில் வைத்துக்கொள்."
 
(3) "முக்கோண வாசலிலேமுத்துத்தட்டுப் பந்தலிலே."
 
(4) "நான்கு டோங்கு டம்மாரம்நாங்களாடும் பம்பரம்."
 (அல்லது)
 "நான்கு டோங்கு
 நாலுவெற்றிலை வாங்கு"
 
(5) "ஐவர் அரைக்கும் மஞ்சள்தேவர் குளிக்கும் மஞ்சள்."
 
(6) "கூறு கூறு சித்தப்பாகுறுக்கே வந்த பெரியப்பா."
 
(7) "ஏழை எண்ணிக் கொள்எண்ணெய் மரம் சேர்த்துக்கொள்
 பெண்ணை அழைத்துக் கொள்." 1
 |  | 
 
| ஏழாங்கொட்டைக்குப் பின், ஒரு கையில் முக்கல்லும் இன்னொரு கையில் நாற்கல்லுமாக வைத்துக்கொண்டு, நாற்கல்லுள் ஒன்றை மேலெறிந்து எஞ்சிய இருமூன்றையுங் கீழ்வைத்து மேலெறிந்து கல்லைப் பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலெறிந்து அதைக் கீழ்வைத்த இருமூன்றையும் இருகையாலும் வாரிக்கொண்டு பிடித்தல் வேண்டும். |  | இது சிறுபுதை எனப்படும். இதை ஆடும்போது பாடும் பாட்டு "புதை புதைக்கிற பம்பரம், செட்டி சிதம்பரம்" என்பதாகும். |  | இதன்பின், இருகையிலும் மும்மூன்று கல்லை வைத்துக் கொண்டு, ஏனையொன்றை மேலெறிந்து, ஆட்காட்டி விரலால் நிலத்தில் இழுத்துப் பிடித்தல்வேண்டும். |  | பின்பு, ஒரு கல்லை மேலெறிந்து ஆறுகல்லைக் கீழ் வைத்துப் பிடித்தபின், மீண்டும் ஒன்றை மேலெறிந்து ஏனை ஆறையும் ஒருங்கே வாரிப் பிடித்தல் வேண்டும். இது பெரும்புதை எனப்படும். |  | இதையடுத்துத் "தப்பு - தாளம் - தலைவலி - மேளம்" நான்கும் நிகழும். பின்னர் ஒரு கல்லைக் கீழிட, அதை எதிரி எடுத்துக் கொடுத்தல் வேண்டும். இது பழத்தின் ஒப்பக்குறியாம். |  | 
IV. பல நாலொரு கல் |  | ஒன்பதும் பதின்மூன்றும் பதினேழும் இருபத்தொன்றும் போல் பல நாலொடு ஒன்றுசேர்ந்த கற்களை மேலெறிந்து, புறங்கையில் தாங்கிப், பிடிக்குமளவு வைத்துக்கொண்டு மிகுதியைக் கீழிட்டுவிட்டு, புறங்கையிலுள்ளவற்றை மேலே போட்டு அகங்கையிற் பிடித்து, அவற்றினின்று நந்நான்காய் இடக்கையாற் பிடித்துக் கீழே நந்நான்காய் வைத்தல் வேண்டும். இவ்வகையிற் பெரும்பாலும் ஒரு நான்கைத்தான் பிடித்தல் கூடும். |  | பின்பு, வலக்கையிலுள்ளவற்றுள் ஒரு கல்லை மேலேறிந்து அதைக் கீழேயுள்ளவற்றுள் ஒன்றையோ பலவற்றையோ எடுத்துக்கொண்டு பிடித்தல்வேண்டும். இங்ஙனம் கீழே கல்லுள்ள வரை (அல்லது தவறும் வரை) திரும்பத் திரும்ப ஆடவேண்டும். கையிற் பலகற்கள் சேர்ந்துவிட்டால், உடனே இடக்கையால் ஒரு நான்கை அல்லது பல நான்கைப் பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு எல்லாக் கற்களையும் 
 
| பிடித்து நந்நான்காய்க் கீழே வைத்தபின், இறுதியில் எஞ்சியுள்ள ஒற்றைக்கல்லை மேலேபோட்டுப் புறங்கையில் தாங்கி, அதை மீண்டும் மேலெறிந்து நிலத்தைத் தொட்டு, அது கீழேவிழுமுன் அதைக் கையாலழுத்தி நேரே வீழ்த்தி மூடிவிடல் வேண்டும். இது அமுக்குதல் அல்லது மூடுதல் எனப்படும். இதோடு ஒரு பழமாம். |  | முதலாவது புறங்கையால் தாங்கும்போது எல்லாக் கற்களையும் கீழே விட்டுவிட்டாலும், பிடிக்கும்போது கல் தவறினாலும், நான்காய் அல்லது நந்நான்காய்ப் பிடிக்கும்போது கூடக் குறையப் பிடிபட்டாலும், கீழுள்ள கல்லை எடுக்கும்போது மற்றக் கல் அலுங்கினாலும், ஆட்டம் நின்றுவிடும். பின்பு அடுத்தவள் ஆடவேண்டும். |  | ஒரே ஆட்டையில், அடுத்தவள் ஆடினாலும், ஆடினவளே மறுமுறை ஆடினாலும், நந்நான்காய்ப் பிடித்து வைக்கப்பட்ட கற்களை விட்டுவிட்டு மற்றக் கற்களைக் கொண்டுதான் ஆடவேண்டும். ஒருத்தி கடைசிக் கல்லை அமுக்கும்போது தவறிப்போய் அடுத்தவள் அதைச் சரியாய் அமுக்கிவிட்டால், அவளுக்குத்தான் பழம். |  | 
V. பன்னிரு கல் |  | பன்னிரு கற்களை மேலெறிந்து அவற்றைப் புறங்கையில் தாங்கி, அவற்றுள் ஒன்றைமட்டும் இருவிரற் கிடையில் இடுக்கிக்கொண்டு ஏனையவற்றைக் கீழே விட்டுவிட்டு, அவற்றை ஒவ்வொன்றாகவோ இவ்விரண்டாகவோ மும்மூன்றா கவோ, ஒன்றும் பலவுமாகவோ, வேறிரு விரலால் இடுக்கிப் பிடித்துக் கீழே வைத்து எல்லாவற்றையும் பிடித்தபின் புறங்கையிலுள்ளதை அமுக்கி, அதையும் மற்றவற்றொடு சேர்த்து மும்மூன்றாக நாற்கூறிட்டு, ஒவ்வொன்றினின்றும் ஒவ்வொரு கல்லை எடுத்துவிடவேண்டும். இக் கூறுகட்கு 'உட்டைகள்' என்று பெயர். நாலுட்டையினின்றும் ஒவ்வொரு கல்லை நீக்கியபின், எட்டுக் கல் எஞ்சி நிற்கும். அவ் வெட்டையும் முன்போன்றே ஆடி, மீண்டும் மும்மூன்றாக உட்டை வைத்து ஒவ்வொரு கல்லை நீக்கியபின், ஆறு கல் எஞ்சிநிற்கும். இவ்வாறே தொடர்ந்து ஆடின், இறுதியில் இருகல் எஞ்சும். அவற்றுள் ஒன்றை மேலேயெறிந்து 
 
| இன்னொன்றைக் கீழே வைத்துப்பிடித்து, பின்பு மீண்டும் அதை மேலேயெறிந்து கீழேவைத்ததை எடுத்துப் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் மும்முறை செய்தபின், மேலெறிந்த கல்லை, மூன்று தடவை சிலுப்பியும், மூன்று தடவை மேலேறிந்து நிலந்தொட்டுப் பிடித்தும், பின்னும் மூன்று தடவை மேலெறிந்து நிலமும் மார்புந் தொட்டுப் பிடித்தும், முடிப்பின் பழமாம். |  | சிலுப்புதலாவது, அகங்கையிலுள்ளதைப் புறங்கையிலிட்டு வெட்டிப்பிடித்தல். |  | ஆடும்போது தவறும் வகையும், அதன்பின் நிகழுஞ் செய்தியும், முற்கூறியவையே. |  | 
VI. பல கல் |  | ஒன்பது முதல் இருபத்தைந்துவரை ஒற்றைப்படையான ஏதேனும் ஒரு தொகைக் கற்களை, மேலே போட்டுப் புறங்கையால் தாங்கி ஒருகல் தவிர மற்றவற்றை யெல்லாங் கீழே போட்டுவிட்டு, அவ் வொரு கல்லை மேலேயெறிந்து உள்ளங்கையாற் பிடித்து, அதை மீண்டும் மேலேயெறிந்து, கீழே கிடக்குங் கற்களுள் இரண்டு நான்கு ஆறு எட்டு என இரட்டைப்படையாக எடுத்துக்கொண்டு, மேலேயெறிந்த கல்லையும் பிடித்தல் வேண்டும். இங்ஙனம் ஒவ்வோர் எடுப்பிற்கும், முன்னும் பின்னும், ஒரு கல்லை மேலெறிதலும் அதைப் பிடித்தலும் முறையே நிகழும். |  | இருகல் எடுப்பின் காய்; நான்கு ஆறு எட்டு ஆயின் பழம். பழக்கற்களெல்லாவற்றையும் தன் பங்கில் வைத்துக்கொண்டு, காய்க்கற்களிற் பாதியை விளையாட்டிற் போட்டுவிடல்வேண்டும். ஆட்டை முடிந்தபின், கூடுதலான கற்களைப் பிடித்திருப்பவள் கெலித்தவளாவள். |  | பிற இயல்புகளும் செய்திகளும் முற்கூறியவையே. |  | 
VII. பதினாறாங் கல் |  | 
படங்கள்: http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e1/Game_paandi_1.jpg/250px-Game_paandi_1.jpg
     பதினாறு கற்களைக்கொண்டு ஆடுவது பதினாறாங்கல். இது பலவகையாய் ஆடப்பெறும். வடார்க்காட்டு வட்டாரத்தார் இதை ஆடுவர்.பி.கு.
மொழிஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர்
 எழுதிய தமிழக விளையாட்டு குறிப்பிலிருந்து வழங்கபட்டது
 |  |  |  |  |  |  | 
No comments:
Post a Comment