Sunday, 24 August 2014

குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் - 1

உறவினர்களின் குழந்தைகளுக்குப்பெயர் தேடிய போது எழுதிவைத்த பெயர்கள். ( புலவர்கள், மன்னர்கள் பெயர்களும், பூக்கள் பெயரும், உவமைத்தொடர்களும் இன்னும் பிறவும் இதில் அடங்கும். )

1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)


















தொடர்ந்து எழுதுகிறேன்....


படத்திலுள்ள குழந்தை - நண்பர் கவின் அவர்களின் குழந்தை. 

Tuesday, 22 July 2014

போதையனார் பாடலையும் பித்தோகோரஸ் தேற்றத்தையும் ஒப்புமை படுத்தாதீர்கள்

அரிசிமாவு புளிக்குமென்றும் புளித்தபின் அதனை தோசையாகச்சுட்டால் நன்றாகயிருக்குமென்று என் பாட்டிக்குத் தெரிந்திருந்தது. அதற்காக "புளித்துப்போவதற்குக் காரணம் பாக்டீரியாக்கள் என்னும் நுண்ணுயிரிகள்" என்பதை அவர் தெரிந்துவைத்திருந்தார் என்று சொல்லும் போது என்னை முட்டாள், வெற்றுப்பெருமை பேசுபவள் என்றெல்லாம் நீங்கள் சொல்வது நியாயமே. இது போதையனார் பாடலுக்கும் பொருந்தும். புளிக்கும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பதற்குப் பகுத்தறிவு (Common sense) என்று பெயர். அது ஏன் புளித்துப்போகிறது என்று ஆராய்ந்து உண்மைப்பொருளைக் கண்டறிவதற்குப்பெயர் தான் அறிவியலறிவு. போதையனார் பாடல் பகுத்தறிவு. ஆனால் பித்தோகரஸ் கண்ட "பை" என்னும் மாறிலி ஏன் என்ற கேள்வியின் பதிலாகத் தோன்றிய விடை. இரண்டிற்கும் வேறுபாடிருக்கிறது. - இதைச் சொன்னால் நான் தமிழ்த்துரோகி, மேற்கத்திய அறிவியலின் அடிமை, தமிழ் நாஜ்ஜி என்றெல்லாம் வைவார்கள்.

Sunday, 20 July 2014

உங்கள் குழந்தைக்குத் தமிழ்ப்பெயர்தான் சூட்டுகிறீர்களா?

சமீபத்தில் என் உறவினர் ஒருவர் தன் மகனுக்குச் சூட்ட ஒரு நல்லதமிழ்ப் பெயர் கேட்டிருந்தார். ஆனால் அவர் போட்ட "CONDITION"ல் ஒன்று பெயர் "அன்" என்று முடியக்கூடாது. அதற்கு அவர் கூறிய காரணம் "அன்ல முடிஞ்ச மரியாதய இருக்காது". எனக்குப் புரியவேயில்லை. ஆண்பாற்பெயர்கள் அன் விகுதிகொண்டுமுடிவதும், பெண்பாற்பெயர்கள் ஆள் விகுதிகொண்டு முடிவதும் இயல்புதானே. இதில் என்ன மரியாதைக்குறைவு இருக்கிறது? ஒருமுறை என் தோழி கட்டுரைப்போட்டி ஒன்றில் தீரன் சின்னமலைக்குப் பதிலாகத் தீரர் சின்னமலை என்று எழுதியிருந்தாள். தீரன் என்றால் மரியாதையாக இராது என்ற எண்ணத்தில் எழுதியிருந்தாள். தமிழாசிரியை அவளிடம் "அது ஆவரின் அடைமொழி, அன் விகுதிகொண்டு ஆண்பாற்பெயர்கள் முடிவதில்லை தவறில்லையென்று கூறினார். இந்த நிகழ்வு தான் என் நினைவிற்கு வந்தது. இது தெரியாமலேயே தமிழ்மக்கள் தமிழ்ப்பெயர்கள் தேடுகிறார்களா? மற்றொரு உறவினர் தன் மகளுக்குத் தமிழ்ப்பெயர் வேண்டுமென்று கேட்டார். தேடி ஒரு பட்டியல் போட்டுக்கொடுத்தால் வடமொழிப்பெயர் என்று பெயர்வைத்திருந்தார். கேட்டால் அது தமிழ்ப்பெயர்தானே என்றார். என்ன பதில் சொல்வது? இன்னும் சிலர் தமிழ்ப்பெயர்களை "க்,த்,ப்" போன்ற பெய்யெழுத்துகள் கொண்டுமுடிக்கின்றனர். இவ்வெழுத்துக்கள் மொழிக்குக் கடையாக வாராவென்று படித்த நினைவு. பிறகு அழைக்கும் போது அந்தப்பெயரின் ஒரு உகரத்தைச் சேர்த்து அழைப்பார்கள். காரணம் விளிச்சொல்லை அந்த எழுத்துக்களைக் கொண்டு முடிப்பது கடினம். இன்னும் ஒருவர் வஞ்சியம்மனை வழிபடுவதால் தன் குழந்தைக்கு "வஞ்சித்" எனப் பெயரிட்டிருந்தார். உண்மையிலேயே இவர்களுக்கு இதன் பொருள் தெரியவில்லையா இல்லை இதுதான் trend என நினைத்துவைக்கிறார்களாத் தெரியவில்லை. இணையத்தில் தேடினால் அதைவிடக்கொடுமை. வடமொழிப்பெயர்களையெல்லாம் தமிழ்ப்பெயர்ப் பட்டியலில் காட்டுகிறது. கிரந்தயெழுத்துக்கள் சேர்த்தபெயரையும் அவர்கள் தமிழில் சேர்த்ததுதான் வேதனையாகயிருக்கிறது. உங்கள் குழந்தை உங்கள் விருப்பம்போல் பெயர்வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வைத்தபெயரையெல்லாம் தமிழ்ப்பெயரென்று சொல்லாதீர்கள்.

Tuesday, 15 July 2014

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்

மீண்டும் கொஞ்ச வட்டார வழக்குச் சொற்களோடு வந்திருக்கிறேன்.

இட்டேரிப்பக்கமா நடந்து போனால் இந்தச் சொற்களையெல்லாம் பார்க்கலாம்.
(இட்டேரி??? இப்படி யோசிப்பவர்கள் இந்தப்பக்கமா போய்ப்பாருங்க- இட்டேரி).

1. கடவு. 

சில சமயம் தோட்டத்தைச் சுற்றி வேலி நீண்டுகொண்டே போகும். ஒரு கல் தொலைவெல்லாம் தாண்டி தான் வழியிருக்கும். அப்படி இருக்கும் சமயத்தில் வேலியில் கொஞ்சம் முள்ளை நீக்கி ஓட்டை போட்டு அந்த வழியைப் பயன்படுத்துவார்கள். (By-pass). இதற்குக் கடவு என்றுபெயர்.














2. தொக்கடா.

"இது என்ன இந்தியன் படப்பாடல் வரிமாறி இருக்கே" என்று சோசிக்காதீர்கள். இதுவும் ஒரு அழகான சொல். நாம் மட்டும் தான் கடந்து போக வேண்டும், கால்நடைகள் கடக்கக் கூடாது. அப்பொழுது என்ன செய்வது? மனிதர்கள் மட்டும் தாண்டும் வகையில் பட்டியில் ஒரு வழி அமைத்துவிடுவார்கள் (இடுப்பு உயரத்திற்கு கீழ் வழியில் கட்டை கட்டி அடைத்துவிடுவார்கள்.) இதற்குத் தொக்கடா என்று பெயர். ஆடு தாண்டாத என்று கேட்கலாம். ஆடுகளின் கால்களைக் கட்டிவைத்திருப்பார்கள் (முன்னங்காலில் ஒன்றோடு பின்னங்காலின் எதிர் பக்கக் காலோடு சேர்த்து அதனை விரைந்து ஓடாமல் கட்டி வைப்பார்கள்). அதனால் அவற்றால் தாண்ட முடியாது.

3. தொண்டுபட்டி.

பட்டிகள் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் போது இச்சொல் நினைவிற்கு வந்தது. சுற்றி வேலியால் அடைத்த பகுதியில் இரண்டொரு மாடு ஆடு வைக்கற்போர் வைக்கக் கொஞ்சம் இடம், ஒரு குட்டிச் சாலை, இப்படி இருக்கும் இடத்தை தொண்டுபட்டி என்பார்கள். (மற்ற வட்டாரங்களில் எதைத் தொண்டுபட்டி என்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை).
















4. வெள்ளதாரை.

sink / wash basin என்றெல்லாம் வீட்டில் பேசிக்கொண்டிருந்த போது சலதாரை என்னும் சொற்பயன்பாடு அழிந்துவருவதைக் கண்டேன். சலம்- வடமொழி என்பதாலோ என்னவோ அது வழக்கொழிந்து போவதில் எனக்குப் பெரிதாய்க் கவலை ஏதுமில்லை. இதைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்த போது என் அம்மா வெள்ளதாரையைப் பற்றி நினைவுபடுத்தினார்.

மழை பெய்யும் போது தோட்டங்காடு, புன்செய் நன்செய் என்றிருக்கும் இடங்களில் மழைநீர் ஓடும். ஓடை, ஆறு இவற்றில் சேர்க்கமுடியாத நீர் போகும் பாதையை வெள்ளதாரை என்பார்கள். இங்கும் அடித்துவரப்பட்ட மண் சேர்ந்திருக்கும். அங்கு எந்தச் செடிகளும் வளர்வதில்லை. எல்லா நாளும் நீர் போகாமல் அடைமழை காலங்களில் மட்டும் நீரோடும் வெள்ளதாரையைச் சிறு வயதில் கண்டிருக்கிறேன். அதிலும் நீர் இருக்கும் போது கண்டதாய் நினைவில்லை. நீரின் தாரையை மட்டுமே கண்டிருந்தேன். என் அம்மா அவர்களின் சிறுவயது நினைவிகளைப் பகிர்ந்தபோது அங்கு சென்று பலரும் துணிதுவைத்ததாகக் கூறினார். ஒருமுறை மீண்டும் சென்று அந்தத் தாரையாவது இருக்கிறதாவென்று பார்த்துவர வேண்டும்.

இதெல்லாம் எங்கள் வீட்டிற்குப்பின்னால் இருக்கும் இட்டேரியில் எடுத்த படங்கள்.

















இதேபோல் இன்னும் கொஞ்சக் கொஞ்சும் வட்டாரவழக்குச்சொற்களோடு மீண்டும் எழுதுகிறேன்.
அன்புடன்
சுபாசினி.


Wednesday, 9 July 2014

பேரூர் கோவில் யாளிகள்

நேற்று பச்சை நாயகி உடனமர் பட்டேசுவரர் கோவிலுக்குச் சென்றிருந்தேன். அங்கும் என் கண்ணை நிலை கொள்ளச் செய்தது யாளி சிற்பங்கள் தாம். தஞ்சைப்பெரிய கோவிலில் (நின்ற வண்ணம்) இருக்கும் யாளி சிற்பங்களுக்கும் இங்கு உள்ளவைக்கும் ஒரு வேறுபாடு இருந்தது. தஞ்சைப்பெரிய கோவில் யாளிகள் சற்று வாயை மூடிய வண்ணமும், இங்குள்ளவை வாயைத் திறந்துள்ளவையாகவும் இருந்தன. (15 சூன் 2014)



இலக்கணம் தேவையா? 2

"தமிழிலக்கணம் கற்றான்", "தமிழ் இலக்கணம் கற்றான்." இவ்விரண்டிற்குமான பொருள் வேறுதான். இதனைப் படிப்பவரின் அவாவிற்கேற்றாற் போல படிக்க இயலுமே தவிரப் பொருள் தெளிவு கிடைக்காது. எளிமையென்பது எழுதுவதில் மட்டுமில்லை. படிப்பதிலும் சொன்ன பொருளையே புரிந்துகொள்வதிலும் கூட இருக்க வேண்டும். இலக்கணமென்பது எப்படி எழுத வேண்டுமென்று கற்பிப்பதைவிட எப்படி வாசித்துப் பொருள்கொள்ள வேண்டுமென்று கற்பிக்கிறது. தனிமொழியாய் எழுதுவது பொருள் மயக்கம் தராதவரை நல்ல மாற்றம் தான். ஆனால் புணர்ச்சிவிதிகளைப் பயன்படுத்தினால் கணினிமயமாக்கல் எளிது. இதையே ஒருவர் கூகிளில் மொழிபெயர்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இலக்கணவிதிகளைப்படி அதனால் எளிதாக சரியான மொழிபெயர்ப்பைத் தரவியலும். " He is learning Tamil grammar", "Tamil is learning grammar". Tamil grammar has a mathematical structure which makes it easier to computerize. When all are trying to make a formula for randomly working things, we are moving from a well defined structure to a randomness.

ஊருக்குப்போறேன்- இப்படித் தான் பேசுகிறோம். இதே எழுதும் போது- ஊருக்கு போறேன்- என்று எழுதுகிறோம். இந்த முரண்பாடு ஏன்? வட்டார வழக்கில் எழுதுவது தவறில்லை, பேச்சுவழக்கை எழுதுவதும் சரிதான். பேச்சில் நமக்கு இயல்பாக வருகின்ற ஒன்றை எழுத்தில் விடுவதுதான் இடிக்கிறது. நம் பேச்சில் இன்னும் ஒற்று வாழ்கிறது. புணர்ச்சி வாழ்கிறது. வயித்துவலி- வயிற்றுவலி என்பதன் பேச்சு வழக்கு, இதே எழுதும் போது பல வயிறு வலி என்று எழுதுகின்றனர். இதை எப்படித் தானாக நிகழும் மாற்றம் என்று கூறுவது? எழுத்துவழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் ஒவ்வாத ஒரு தட்டச்சு வழக்கு சரியில்லை.

உற்று நோக்கும்போது ஏதோ பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் ஒத்துப் போவது இன்றைய காலகட்டத்திற்கு புணர்ச்சியிலக்கணங்கள் தான். இதை எழுத்து வழக்கை(தட்டச்சு வழக்கு) எளிமை படுத்துவதாக நினைத்து பல நேரங்களில் சோம்பல் கொண்டு எழுதுவதை இயல்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாமாவென்று தெரியவில்லை. ஒரு மாற்றம் நிகழும் போது அது இயல்பானது தானா என்று பார்க்க வேண்டும். இயல்பு தானென்றால் அது எல்லாவிடங்களிலும் நிகழ வேண்டும். இங்கு எழுத்து வழக்கில் மட்டும் நிகழ்கிறது. இது இயல்பா இல்லையா என்று தெரியவில்லை
என் கருத்து இப்பொழுதும் நம்மால் இலக்கணத்தைப் பின்பற்ற முடியும். ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் எழுத்தில் இல்லாத பிழைகள் நம் எழுத்தில் வருகிறதே.  இதை வெறுமனே மாற்றம் என்று ஏற்றுக்கொண்டுவிட முடியவில்லை.


மொழியில்லா ஒரு நிலை->எப்படி பேசுவது என்ற வரைமுறைகள்-> பேச்சு வழக்கு மொழி->எழுத்து வழக்கு->இலக்கணங்கள். இப்படி நம் மொழி உருவானதாக எண்ணுகிறேன். இதற்கு முன்னர் நடந்த மாற்றங்கள் எல்லாம் மெதுவாக நடந்தது. உதாரணமாக வடிவு- அழகு, இந்தப் பொருள் மாறி வடிவு-வடிவம், இந்தப் பொருளில் வழங்குகிறது. பாவினங்களில் சேராக் கவிதைகள் வந்துவிட்டன. இது இயல்பான மாற்றம். ஒரு நீண்ட நெடிய காலக்கட்டத்திற்கு பின்பு தானாகவே நடந்த மாற்றம். ஆனால் இப்பொழுது நிகழும் இம்மாற்றம் இயல்பானதா? இதுவே என் கேள்வி. முன்னர் நடந்த மாற்றங்களில் ஒரு சேர அனைவரும் பயணித்தோம். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பயணிக்க முற்படுகிறோம். இதன் விளைவு குழப்பம் தான் (chaos).


சரி இம்மாற்றம் பேச்சு வழக்கிலும் நிகழ்கிறதா? இல்லையே. நாம் மாற்றம் இயல்பானதும் அதை ஏற்றுக்கொள்வது முறை என்று சொல்வதற்கும் அடிப்படை ஒன்று தான். "பேச்சு வழக்கு எழுத்து வழக்கானது;அதன் தன்மை ஆராய்ந்து இலக்கணம் இயற்றப்பட்டது;கடிய இலக்கணத்தால் மக்களை மூச்சுத் திணறச்செய்யக்கூடாது". இதை நன்கு கவனத்தால் நான் சொன்னது போல அண்மை காலமாக நம் பேச்சு வழக்கில் இருக்கும் இலக்கணங்கள் அல்லது அதன் அமைப்பு எழுத்து வழக்கிற்கு வரும்போது அடிபடுகிறது. பேசுவது ஒன்றையும் எழுதுவது ஒன்றையுமாகச் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி ஏதோ ஒரு உந்துசக்தியால் நிகழும் திடீர் மாற்றமானது குழப்பத்தைத் தான் தரும். சில காலம் கழித்து பேசுவதற்கு பொருந்தாத ஒரு எழுத்துவழக்கு இலக்கணத்தை நாம் கடைபிடுத்துக்கொண்டிருப்போம்.

செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்

தொடுவானமும் அதனை அங்கே
தொட்டுவிட்ட தென்னையும் மஞ்சள்
வண்ணங் குழைத்தவன் கைபோலே
வண்ணங் கொள்ளும் மாலையிது..

குடம்பை தனித் தொழிந்த
குருவியெல்லாம் கூடுதிரும்பும் வேளையிது...

செம்மலது வாசம் வீசும்
செவ்வான நேரமதில் காத்திருக்கிறேன்
கடல் கடந்து சென்றயென்
கண்ணன் வரும் சாலையெது??