Showing posts with label தமிழிலக்கணம். Show all posts
Showing posts with label தமிழிலக்கணம். Show all posts

Wednesday, 9 July 2014

இலக்கணம் தேவையா? 2

"தமிழிலக்கணம் கற்றான்", "தமிழ் இலக்கணம் கற்றான்." இவ்விரண்டிற்குமான பொருள் வேறுதான். இதனைப் படிப்பவரின் அவாவிற்கேற்றாற் போல படிக்க இயலுமே தவிரப் பொருள் தெளிவு கிடைக்காது. எளிமையென்பது எழுதுவதில் மட்டுமில்லை. படிப்பதிலும் சொன்ன பொருளையே புரிந்துகொள்வதிலும் கூட இருக்க வேண்டும். இலக்கணமென்பது எப்படி எழுத வேண்டுமென்று கற்பிப்பதைவிட எப்படி வாசித்துப் பொருள்கொள்ள வேண்டுமென்று கற்பிக்கிறது. தனிமொழியாய் எழுதுவது பொருள் மயக்கம் தராதவரை நல்ல மாற்றம் தான். ஆனால் புணர்ச்சிவிதிகளைப் பயன்படுத்தினால் கணினிமயமாக்கல் எளிது. இதையே ஒருவர் கூகிளில் மொழிபெயர்க்கிறார் என்று வைத்துக்கொள்வோம். இலக்கணவிதிகளைப்படி அதனால் எளிதாக சரியான மொழிபெயர்ப்பைத் தரவியலும். " He is learning Tamil grammar", "Tamil is learning grammar". Tamil grammar has a mathematical structure which makes it easier to computerize. When all are trying to make a formula for randomly working things, we are moving from a well defined structure to a randomness.

ஊருக்குப்போறேன்- இப்படித் தான் பேசுகிறோம். இதே எழுதும் போது- ஊருக்கு போறேன்- என்று எழுதுகிறோம். இந்த முரண்பாடு ஏன்? வட்டார வழக்கில் எழுதுவது தவறில்லை, பேச்சுவழக்கை எழுதுவதும் சரிதான். பேச்சில் நமக்கு இயல்பாக வருகின்ற ஒன்றை எழுத்தில் விடுவதுதான் இடிக்கிறது. நம் பேச்சில் இன்னும் ஒற்று வாழ்கிறது. புணர்ச்சி வாழ்கிறது. வயித்துவலி- வயிற்றுவலி என்பதன் பேச்சு வழக்கு, இதே எழுதும் போது பல வயிறு வலி என்று எழுதுகின்றனர். இதை எப்படித் தானாக நிகழும் மாற்றம் என்று கூறுவது? எழுத்துவழக்கிற்கும் பேச்சு வழக்கிற்கும் ஒவ்வாத ஒரு தட்டச்சு வழக்கு சரியில்லை.

உற்று நோக்கும்போது ஏதோ பேச்சு வழக்கிற்கும் எழுத்து வழக்கிற்கும் ஒத்துப் போவது இன்றைய காலகட்டத்திற்கு புணர்ச்சியிலக்கணங்கள் தான். இதை எழுத்து வழக்கை(தட்டச்சு வழக்கு) எளிமை படுத்துவதாக நினைத்து பல நேரங்களில் சோம்பல் கொண்டு எழுதுவதை இயல்பு என்ற கண்ணோட்டத்தில் பார்க்கலாமாவென்று தெரியவில்லை. ஒரு மாற்றம் நிகழும் போது அது இயல்பானது தானா என்று பார்க்க வேண்டும். இயல்பு தானென்றால் அது எல்லாவிடங்களிலும் நிகழ வேண்டும். இங்கு எழுத்து வழக்கில் மட்டும் நிகழ்கிறது. இது இயல்பா இல்லையா என்று தெரியவில்லை
என் கருத்து இப்பொழுதும் நம்மால் இலக்கணத்தைப் பின்பற்ற முடியும். ஒரு பத்தாம் வகுப்பு மாணவியின் எழுத்தில் இல்லாத பிழைகள் நம் எழுத்தில் வருகிறதே.  இதை வெறுமனே மாற்றம் என்று ஏற்றுக்கொண்டுவிட முடியவில்லை.


மொழியில்லா ஒரு நிலை->எப்படி பேசுவது என்ற வரைமுறைகள்-> பேச்சு வழக்கு மொழி->எழுத்து வழக்கு->இலக்கணங்கள். இப்படி நம் மொழி உருவானதாக எண்ணுகிறேன். இதற்கு முன்னர் நடந்த மாற்றங்கள் எல்லாம் மெதுவாக நடந்தது. உதாரணமாக வடிவு- அழகு, இந்தப் பொருள் மாறி வடிவு-வடிவம், இந்தப் பொருளில் வழங்குகிறது. பாவினங்களில் சேராக் கவிதைகள் வந்துவிட்டன. இது இயல்பான மாற்றம். ஒரு நீண்ட நெடிய காலக்கட்டத்திற்கு பின்பு தானாகவே நடந்த மாற்றம். ஆனால் இப்பொழுது நிகழும் இம்மாற்றம் இயல்பானதா? இதுவே என் கேள்வி. முன்னர் நடந்த மாற்றங்களில் ஒரு சேர அனைவரும் பயணித்தோம். ஆனால் இப்பொழுது ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் பயணிக்க முற்படுகிறோம். இதன் விளைவு குழப்பம் தான் (chaos).


சரி இம்மாற்றம் பேச்சு வழக்கிலும் நிகழ்கிறதா? இல்லையே. நாம் மாற்றம் இயல்பானதும் அதை ஏற்றுக்கொள்வது முறை என்று சொல்வதற்கும் அடிப்படை ஒன்று தான். "பேச்சு வழக்கு எழுத்து வழக்கானது;அதன் தன்மை ஆராய்ந்து இலக்கணம் இயற்றப்பட்டது;கடிய இலக்கணத்தால் மக்களை மூச்சுத் திணறச்செய்யக்கூடாது". இதை நன்கு கவனத்தால் நான் சொன்னது போல அண்மை காலமாக நம் பேச்சு வழக்கில் இருக்கும் இலக்கணங்கள் அல்லது அதன் அமைப்பு எழுத்து வழக்கிற்கு வரும்போது அடிபடுகிறது. பேசுவது ஒன்றையும் எழுதுவது ஒன்றையுமாகச் செய்து கொண்டிருக்கிறோம். இப்படி ஏதோ ஒரு உந்துசக்தியால் நிகழும் திடீர் மாற்றமானது குழப்பத்தைத் தான் தரும். சில காலம் கழித்து பேசுவதற்கு பொருந்தாத ஒரு எழுத்துவழக்கு இலக்கணத்தை நாம் கடைபிடுத்துக்கொண்டிருப்போம்.

Saturday, 26 April 2014

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன ; பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க

ல, ழ, ள ; ர, ற; ண, ந, ன...

என்னது இப்படி ஒரு பதிவானு யோசிக்காதீங்க.
"அடடே இந்த எழுத்தையெல்லாம் எங்க எப்படி உச்சரிக்கனும்னு எழுதப் போறீங்க , சரியா? " அப்படினு கேட்ட அதுவும் இல்ல. இதெல்லாம் எங்க பயன்படுத்தனும் எப்படிப் பயன்படுத்தனும்னு சொல்றதுக்கு முன்னாடி இதுக்கெல்லாம் என்ன பெயர்னு சொல்லத் தான் இந்த பதிவு. (கலி முத்திடுச்சு).

பள்ளத்துக்கு வர 'ள' , குண்டு 'ல', ஒல்லிக்குச்சி 'ர' , ரெட்டச் சுழி 'ன' (சின்ன வயசுல ரொம்ப சேட்டை செஞ்சதுனால இதுக்கு ரெண்டு சுழியோ!!!)... மூனு சுழி "ண"... (நாலு சுழி போடற தமிழ் ஞானிகள் கூட சில பள்ளிகளில் இருப்பாங்க)... இப்படிப் பல nicknames கேட்டு ரொம்ப நொந்து போய் இதை எழுதுகிறேன்.

இவற்றையெல்லாம் எப்படிக் குறிப்பிட வேண்டும்???
இதோ இப்படித் தான்.

ல - தனி 'ல'கரம். (பாவம் மத்த ழ,ள கூட சேர விடாம வ வந்து இதத் தனியா பிரிச்சுடுச்சு. இதுத் தனியா இருக்கு)
ழ - சிறப்பு 'ழ'கரம். (தமிழுக்கே உரிய சிறப்பு.)
ள- பொது 'ள'கரம்.

ர - இடையியன 'ர'கரம்
ற - வல்லின 'ற'கரம்

ண - டண் 'ண'கரம் ( 'ட'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ந - தந் 'ந'கரம் ( 'த'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)
ன - றன் 'ன'கரம் ( 'ற'கரத்தைத் தொடர்ந்து வருவதால்)

இனிமேல் பட்டப் பேரு வச்சுக் கூப்படாதீங்க.. மனசு வலிக்குது.


Saturday, 22 March 2014

தமிழிலக்கணம்-3 (மெய்ப்பாடு, வெகுளி)

இன்று இலக்கணப் பதிவிற்கு செல்லும் முன்பு பொதுவான சொல் பயன்பாடு பற்றிப் பார்க்கலாம்.

சின்ன சின்ன தமிழ் வார்த்தைக்குக் கூட பக்கத்துல அதற்குப் புலக்கத்துல உள்ள தமிழ் வார்த்தைய நான் குறிப்பிடக் காரணம் ஒன்றே ஒன்று தான். பல சமயம் நாம் இது தான் பொருள் என்று நினைத்துப் பயன்படுத்தும் வார்த்தைகளுக்கு அது பொருளே கிடையாது. புரியலயா???
அடிக்கடி நாம பஸ்ல போகும் போது "ஒரே ரஷ்ஷா இருக்குப்பா" என்போம். உண்மையில் அங்கு பயன்படுத்தப்பட வேண்டிய வார்த்தை crowded-கூட்டமாக இருக்கிறது. ஆனால் சம்பந்தமே இல்லாம நம்ம தமிழ்நாட்டுல மட்டும் வேற எதோ சொல்லப் பயன்படுத்துறோம்.

இத ஏன் சொல்றேனா தமிழ் மொழியிலும் இப்படி நிறையப் பயன்பாடுகள் இருக்கு. சென்ற பதிவு இட்ட போது வெகுளி- கோபம் என்று சொல்லியிருந்த்தைப் பார்த்து அலுவலக நண்பர் ஒருவர் கேட்டார் "வெகுளினா எதார்த்தம் தானே!! நீ ஏன் தப்பா கோபம்னு போட்டுருக்க??".
வெகுளினா கோவம் தாங்க என்று சூடம் அனச்சு சத்தியம் பண்ணுனாலும் அவர் நம்பல. google translator க்கு போய் வெகுளினு அடிச்சாரு. அங்கயும் கோபம்னு காட்டல. அவர் முகத்தில் இப்போது பெருமிதச் சிரிப்பு.

தயவு செஞ்சு தமிழ் இலக்கியத் தேடலுக்கு கூகிள நம்பாதீங்க. அதிக மக்களால் பார்க்கப்பட்ட ஒரு பக்கத்த தான் அது முன்னால காட்டும். அது சரியா தப்பானு யாருக்கும் தெரியாது. translator கூட அப்படித் தான். முன்னாடி யாராச்சும் ஒரு வார்த்தைய தேடிப் பார்த்து அதுக்கு இது பொருள்னு தப்பா எதையாச்சும் add குடுத்துட்டு போயிருந்த அதுவும் தப்பா தான் காட்டும். paper presentation என்பதற்கு காகித வழங்கள் என்று மொழிபெயர்க்கும் அளவுக்கு தான் அது இருக்கிறது.

வெகுளி:

அத விட்டுட்டு வெகுளிக்கு வருவோம். எப்படி அவர நம்ப வைக்கிறது. இருக்கவே இருக்கிறது தொல்காப்பியம். அதுல மொழி பயன்பாடு மட்டுமா, வாழ்க்கை முறை எப்படினு கூட சொல்லியிருக்காங்க. இத சொல்லியிருக்க மாட்டாங்களா??? சொல்லியிருக்காரே தொல்காப்பியர்.
இதோ அந்தப் பாட்டு.

"நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டே மெய்ப்பா டென்ப" (பொருளதிகாரம் 247)

ஆமா இதெல்லாம் என்னனு கேட்கறீங்களா...ஒரு செய்யுளுக்கு உறுப்பா வரக் கூடிய மெய்ப்பாடுகள். நவரசம்னு சொல்றாங்களே அது தான். ஆனா என்ன தமிழ்ல எட்டு ரசம் தான். சாந்தம்னு ஒன்னு தனியா இல்ல. மனசுல என்ன தோணுதோ அது முகத்துல வெளிப்படும் போது அது மெய்ப்பாடு. மெய்- உடல். இப்ப சொல்லுங்க, உலக மொழியில எந்த மொழியில இந்த வரையறை எல்லாம் இருக்கு??? எந்த அளவு documentation செஞ்சுருக்காங்க. நம்ம tracksheet எல்லாம் சும்மா, தூக்கிப் போட்டறலாம்.















சரி வாங்க நாம பாட்டுக்கு போவோம். இதுல வர வெகுளிக்கு கோபம்னு அர்த்தம். இன்னும் நான் நம்ப மாட்டேன்னு சொன்ன இதையும் படிங்க.

வெகுளி- சினம். சீற்றம்னு கூட வச்சுக்கலாம். இது எப்படி வந்துச்சு???
வேகும்-உள்-இ. = வெகுளி. இப்படி உரியடிகளால பிறந்துச்சு.
சிலர் கோபப்பட்டா என்ன வயித்தெரிச்சலானு கேட்கறோமே, "வயிறு உள்ள வேகுது. (வேகும்- உள்-இ)" அப்ப அது வெகுளி தானா? (என்ன ஒரு புத்திசாலித்தனம், இஞ்சினியரிங்க் படிச்ச புள்ளைக்கு இவ்வளவு அறிவானு நீங்க மனசுக்குள்ள சொல்றது தெரியுது. :P )

ஆனா இப்படி சகட்டுமேனிக்கு வரது எல்லாம் சினமா???  எதுக்கு எடுத்தாலும் கோவப்பட்டா அதுக்கு மாறியாதையில்ல. ஆனா தொல்காப்பியர் இதுக்கு எல்லாம் கோவப்பட்ட தான் அது கோவம், இல்லனா out of syllabus பா அப்படினு ஒரு பட்டியல் சொல்றாரு.

"உறுப்பறை குடிகோள் அலைகொலை என்றன
வெறுப்ப வந்த வெகுளி நான்கே."

வெகுளி ஏன் வருது? வெறுப்பால தான் வருது. (வெறுப்ப வந்த வெகுளி).
அந்த வெறுப்புக்கு எத்தன காரணம்?? நான்கு.
அந்த நாலு எது??

1. உறுப்பறை- அதாவது உடல் உறுப்புகளை சேதம் செய்றது (சூர்பனகை கோபப்பட்டு அண்ணன் கிட்ட போனதுல என்ன தப்பு?)
2. குடிகோள்- தன்னை சார்ந்து வாழ்பவருக்குத் துன்பம் தருதல் (அண்ணன் தங்கச்சி அழுதத பார்த்து சீதைய கடத்துனது கோபத்துல தான?)
3. அலை- திட்டுதல்
4. கொலை- கொலை செய்றது அல்லது அதற்கு உடந்தையா இருக்கறது.  (கண்ணகி வெகுண்டு மதுரையை அழித்தது)

இந்த காரணத்துக்கு எல்லாம் ஒருவனுக்கு சினம் வரலாம்.

















இதெல்லாம் ஏன் இலக்கணப் பகுதில எழுதறனு கேட்காதீங்க. இதெல்லாம் செய்யுளுக்குரிய மெய்ப்பாடுகளும் அவைத் தோன்றக் காரணங்களும்.

பிற மெய்ப்பாடு பத்தி கொஞ்சம் தெளிவா பொருளியல் வரும் போது பார்க்கலாம்.
இன்னைக்கு இதோட முடிச்சுக்கலாம்.

நன்றி
சுபாசினி.

Tuesday, 18 March 2014

தமிழிலக்கணம்-2 (அடுக்குத்தொடர்)

லேசா! லேசா! நீ இல்லாம வாழ்வது லேசா!!!

புரிஞ்சுருக்குமே!!! இரட்டைக் கிளவி பார்த்தாச்சு.. அடுத்து என்ன?? இன்னைக்கு அடுக்குத்தொடர் தான்.

அடுக்குத்தொடர்:

இரண்டு சொல் அடுக்கி வரும். தனித்தனியே ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் இருக்கும். அப்படி இருந்தா அது அடுக்குத்தொடர். நான்கு சொல் வர கூட அடுக்கி வரும். அச்சம், வெகுளி (கோபம்), விரைவு (அவசரம்), அவலம் இவற்றைக் குறிக்க அடுக்குத்தொடர் பயன்படும்.

இங்கு 'இவற்றை' என்பதனை தட்டச்சு செய்யும் போது தான் பெரும்பாலானோர் செய்யும் தவறு நினைவுக்கு வந்தது. 'அவைகள், இவைகளை' என்பது எல்லாம் தப்பு. அவை, இவை என்பதே பன்மை தான். (U mean plural??? Yes). இதுல எதுக்கு மறுபடியும் ஒரு "கள்" சேர்த்து அவற்றை மேலும் பன்மையாக்க வேண்டும்?? ஆங்கிலத்திலே "falling down" என்பதை தவறு என்பார்களே. அது போல இதுவும் தவறான பயன்பாடு.
(when there is no gravity how will we fall down?? :P இப்படி எல்லாம் யோசிக்காதீங்க. இது சும்மா மொழி பயன்பாட்டிற்கு மட்டும் தான்).

பெரும்போக்கா சொன்ன அடுக்கி வருவது அடுக்குத் தொடர். ஆனால் நன்னூல்ல கொஞ்சம் இறங்கி தேடுனா இது அவ்வளவு எளிமையா முடியற தலைப்பு இல்லனு தெரியும்.

"அசைநிலை பொருணிலை யிசைநிறைக் கொருசொல்
இரண்டு மூன்றுநான் கெல்லைமுறை யடுக்கும்." இது நன்னூல் சூத்திரம்.

அவ்ளோ தாங்க. அசைநிலை, பொருள்நிலை, இசைநிறைக்கு ஒன்று இரண்டு மூன்றுனு அவ்வை வரிசைபடுத்திப் பாடுன மாறிப் பாடுன அது அடுக்குத்தொடர். இதுல பிரச்சனை என்னனா "அசைநிலை என்றால் என்ன? பொருள்நிலை என்றால் என்ன??" இதுக்கு எல்லாம் மறுபடியும் நாம நிறைய இரண்டு மார்க்கு கேள்விக்கு பதில் படிக்கற மாறி இருக்கும். (ரொம்ம டெக்கினிக்கல் டெர்ம்ஸா இருக்கே!!!).

1. தனியா ஒரு பொருள் உணர்த்தாம பெயர்ச்சொல் கூடயும், வினைச்சொல் கூடயும் சேர்த்து சொல்லப்படுவது அசைநிலை. (அசைநிலை பற்றி பின் ஒரு தனி இடுகை பதிவு செய்கிறேன். இப்பொழுது அடுக்குத் தொடரில் கவனம் செலுத்தலாம்). அடுக்குத்தொடர் அசைநிலையா வரும்.

எடுத்துக்காட்டு : போலும் போலும், வாழிய வாழிய...

2. இதுல மேல சொன்ன " அச்சம், வெகுளி, விரைவு, அவலம்" இதெல்லாம் பொருள்நிலைக்கு கீழ வரும்.

எடுத்துக்காட்டு: தீத் தீ, பாம்பு பாம்பு. 
(ஐயோ!! ஐயோ!! உன் கண்கள் ஐயையோ!!!... இது அவலமா அச்சமானு தெரியலைங்க... ஆனா அடுக்குத் தொடர் தான்... )

3. செய்யுள் மற்றும் பிற இடங்கள்ள ஓசை நிறப்ப அடுக்கி வந்தா அதுவும் அடுக்குத் தொடர் தான். அது இசைநிறiக்குக் கீழ வரும்.
(கவிதை எழுதும் போது எந்த வார்த்தையும் கிடைக்கலனா மானே! மானே! தேனே!! தேனே!! இப்படி போட்டுக்கோங்க.. கேட்ட இசைநிறையின் பொருட்டு வந்த அடுக்குத் தொடர்னு சொல்லி சமாலிச்சுக்கலாம் :P )

எடுத்துக்காட்டு: வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! வாழ்த்துதுமே! (எங்கயோ கேட்ட பாட்டு மாறி இருக்குதுல).

இன்னும் கொஞ்சம் இறங்கிப்போய் தொல்காப்பியத்துல தேடுன இந்தப் பாட்டெல்லாம் கிடைக்குது...

"ஏஏ யம்பன் மொழிந்தனள் யாயே"
“நல்குமே நல்குமே நல்குமே நாமகள்"
“பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ"
(அடுக்குத்தொடருக்கு எடுத்துக்காட்டுகளைக் கூறும் தொல்காப்பியப்பாடல்).

இந்தப் பாடல்களையும் நன்னூல் சூத்தரத்தையும் வச்சுப் பார்க்கும் போது நமக்கு தெளிவா ஒன்னு புரியுது.
அதாவது அசைநிலைக்கு ஒரு சொல் இரண்டு தடவ அடுக்கி வரலாம். பொருள் நிலைக்கு இரண்டு, மூன்று முறை அடுக்கி வரலாம். இசைநிறைக்கு இரண்டு, மூன்று அல்லது நான்கு முறை கூட அடுக்கி வரலாம்.

" ராமா ராமா!!!" இது அடுக்குத் தொடரா?? இல்லை. இப்படி பெயர்களை தொடர்ந்து விளித்தல் (விளி- அழை) அடுக்குத் தொடர் ஆகாது. இதுவே பயத்தில் "ராமா ராமா" என்று அலரினால் அது அடுக்குத் தொடர்.

இன்னும் தெளிவா சொல்லனும்னா... "கண்டேன் கண்டேன் காதலை" இதுல வருவது அடுக்குத் தொடர். "சோனியா! சோனியா!" இந்தப் பாட்டுல வருவது விளி வேற்றுமை. அடுக்குத்தொடர் இல்லை.


இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

மறந்தன பெரிய; போன வரும்" மருந்து தன்னால்,
இறந்து இறந்து உய்கின்றேன் யான்; யார் இது தெரியும்
                                      ஈட்டார்? - கம்பராமாயணம்.

வாழ்க நிரந்தரம்! வாழ்க தமிழ்மொழி!
வாழிய வாழியவே!!! - பாரதியார்.















வாழ்க,வாழ்க பாரத சமுதாயம் - வாழ்கவே - பாரதியார்.

பல்லாண்டு பல்லாண்டு பல்லாயி ரத்தாண்டு
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா! உன்
சேவடி செவ்விதிருக் காப்பு. - பெரியாழ்வார்.

(இலக்கியச் சான்றுனு சொல்லிட்டு தசாவதாரம் பாட்ட சொல்லி இருக்கேன்னு நினைக்காதீங்க. இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் திருப்பல்லாண்டு என்னும் பகுதிப் பாடல்)


பி.கு:  இதோடு அடுக்குத்தொடர் பற்றிய குறிப்புகள் முடிகின்றன. இதில் சொல்லப்பட்ட அசைநிலை, இசைநிறை பற்றியெல்லாம் அந்தந்த தலைப்புகளின் கீழ் பிற்பாடு தெளிவாக எழுதுகிறேன்.
இரட்டைக்கிளவி பற்றிப் படிக்க சொடுக்கவும்.

நன்றி,
சுபாசினி.

Monday, 17 March 2014

தமிழிலக்கணம்- 1 (இரட்டைக்கிளவி)

"சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ"













'இப்படி ஜீன்ஸ் படத்துல வர மாறி சொன்ன தமிழ் இலக்கணம் எவ்ளோ நல்லா இருக்கும்!!! இப்படி நினைக்கறவங்களுக்கு கொஞ்சம் எளிமயா நியாபகம் வச்சுக்க சுலபமா ஒரு பகுதி எழுதுன என்னனு நினைச்சு தான்' இதை எழுத ஆரம்பித்துள்ளேன்.

இலக்கணம் ஐந்து வகைப்படும் என்று தொடங்கினால், இந்த புள்ள ஆறாவது தமிழ் இலக்கணத்த அப்படியே எழுதுது என்று தோன்றிவிடும்.

அப்பொழுது எங்கிருந்து தொடங்கலாம்??
இரட்டைக்கிளவில இருந்தே ஆரம்பிக்கலாம்.
இரட்டைக்கிளவி என்னனு எங்களுக்குத் தெரியாதா?? இத எழுதறதுக்கு ஒரு தொடரா?? என்று கடியாகாதீர்கள். எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். எடுத்ததும் "ஒன்றிய வஞ்சித்தளை", "கொண்டுகூட்டு பொருட்கோள்" என்று தொடங்கினால் இது ஒத்துவராதுபா என்று பலரும் படிக்கமாட்டார்கள். அதனால் தான், தெரிந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று இரட்டைக் கிளவியில் தொடங்குகிறேன்.

இரட்டைக் கிளவி:

"சல சல" இது தாங்க இரட்டைக்கிளவி. "சல" க்கு பொருள் இல்லை. இப்படி இரண்டு பொருள் இல்லாத சொற்கள் சேர்ந்து வருவது தான் இரட்டைக்கிளவி. (கிளவியா? அது யாரு? பக்கத்து வீட்டு பாட்டியா? என்று கேட்காதீர்கள். இந்த கிளவிக்கு சொல் எனப் பொருள். கிளவி- சொல்). ஆக பொருள் இல்லாத இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருள் தருவது தான் இரட்டைக்கிளவி. அவற்றை பிரித்தால் பொருள் இல்லை.
இவை வினைக்கு அடைமொழியாய் வரும். அதாவது ஒரு செயலின் தன்மையைக் குறிக்க பயன்படும்.

எடுத்துக்காட்டு:
'பள பள'க்குது புது நோட்டு...
திருதிரு துறுதுறு...
“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ”- இது என்ன படப் பாட்டுடா என்று யோசிக்காதீர்கள். இது திருப்புகழ் பாட்டு.
(அப்ப அப்ப கொஞ்சம் இலக்கியத்தையும் சேர்த்துகலாம்.)

"இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா.". இது நன்னூல் சூத்திரம்.

இங்கு ஒரு ஐயம் (சந்தேகம்) எழலாம்.
"துடி துடித்து போனான்"- இதில் துடித்து என்பதற்கு தனியே பொருள் உண்டு தானே. பின் இது எப்படி இரட்டைக் கிளவி??? ஆனால் முன்னால் உள்ள 'துடி' என்பதற்கு இங்கு  தனியே பொருள் இல்லை. மேலும் இது வினைக்கு அடைமொழியாக வருகிறது. அதனால் இது இரட்டைக் கிளவி.

இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

"திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு”-திருப்புகழ்.
"மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்" -திருப்புகழ்.
"நெறிவு கலகலென வாசம் வீசுகுழ" - திருப்புகழ்.
"சலசல மும்மதம் பொழிய” - சீவக சிந்தாமணி
“கலகல, கூஉந்துணை யல்லால்” -நாலடியார்
“குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும்” - புறநானூறு
“வற்றிய வோலை கலகலக்கும்” -நாலடியார்.

பி.கு: இலக்கண நாட்டம், அறிவு இவை உடையவர்களுக்கும், இலக்கணம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும் பொதுவாகவே இந்தத் தொடரை எழுதுகிறேன். முழு மூச்சாக மொத்த இலக்கணப் படுதியையும் எழுதிவிட வேண்டும் என்ற அவாவில் எழுதுகிறேன். எப்படியெல்லாம் தமிழை எளிமையாக கற்றுக்கொடுத்திருக்கலாம் என்று நான் எண்ணினேனோ அப்படியெல்லாம் இந்தத் தொடரை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள். பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
நன்றி
சுபாசினி.