Monday, 7 July 2014

பொன்னியின் செல்வன் நாடகம்- என் பார்வையில்.

பொன்னியின் செல்வன் நூல் நாடமாக நிகழ்த்தப்படுகிறதென்றவுடன் என்னை முதலில் ஆச்சரியம் கொள்ளச்செய்தது "எப்படி இவ்வளவு பெரிய நூலை நாடகமாகப் போடப்போகிறார்கள்" என்பதில்லை. "எப்படி  இவ்வளவு புகழ்பெற்ற நூலை நாடகமாகச் செய்யத் துணிந்தார்கள்" என்பதுதான். பல்லாண்டு காலமாக இந்நூல் மக்களிடையே ஏற்படுத்திய எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யமுடியும் என்றெண்ணி இந்நாடகத்தை அரங்கேற்ற வந்ததற்கே அவர்களை நாம் மெச்ச வேண்டும்.

கோவையில் சூலை 6 ஆம் தேதி நடித்த அதே நடிகர்கள் தான் மற்ற இடங்களில் நடித்தார்களாவென்று தெரியவில்லை. இதை நான் அன்று பார்த்த நாடகத்தை மட்டுமே மையமாக வைத்து எழுதுகிறேன்.

மாலை ஐந்து மணிக்கெல்லாம் அரங்கத்தைச் சென்றடைந்துவிட்டேன். கூட்டம் சேரத் தொடங்கியது. " அம்மா! நாடகம் எனக்கு புரியுமா? ஈசித் தமிழா இருக்குமா?", " புரியற தமிழாத் தான் இருக்கும்" இப்படி அம்மாவிற்கும் மகளுக்கும் நடந்த உரையாடலைக் கேட்டு அது என்ன புரியற தமிழ் புரியாத தமிழ், ஏதோ அந்தமிழ் பைந்தமிழ் போல நமக்குத் தெரியாத தமிழாக இருக்கும் என்றெண்ணிக் காத்துக்கொண்டிருந்தேன்.

நாடகம் சொன்ன நேரத்திற்கு ஆரம்பமானது. அரங்கமும் அதில் இருந்த கோட்டை மதிலும் யாளியும் (அங்கும் நான் யாளியைவிட்டு வைக்கவில்ல) நம்மை சோழர் காலத்திற்குக் கூட்டிச்செல்வதாய் இருந்தது. ஆனால் அத்தகைய பிரம்மாண்ட அமைப்புகளுக்கு மேடை போதுமானதாகத் தெரியவில்லை. கோவையில் இதைவிடப் பெரிய அரங்கம் இல்லையே என வருத்தமாக இருந்தது :( கைபேசி வேண்டாம் என்பதற்கு அவர்கள் அறிவித்தவிதமே இரசிக்கும்படி இருந்தது. நாடகம் தொடங்கியது. மூன்றரை மணி நேரத்தில் அது முடிந்தது.

இந்த மூன்றரை மணி நேரத்தில் நான் இரசித்தது இவற்றைத் தான்:

வந்தியத் தேவனாக நடித்தவரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். நூலைப் படிக்கும் போது நம் கண்முன் வந்து போகும் வந்தியத்தேவன் நாடகத்தில் நடிப்பது போன்றே இருந்தது. கொஞ்சம் குறும்பும் பெண்களைக் காணும் போது கொஞ்சும் காதலுமாய் நெஞ்சை அள்ளிவிட்டார். நாடகத்திற்கு அத்தகை உயிரோட்டத்தை இவர்தான் கொடுத்திருந்தார். எதிர்பார்த்த கதாப்பாத்திரம் எதிர்பார்த்தது போல் இருந்தது வாணர்குல வீரன் தான்.

நான் அவ்வளவாக எதிர்பார்க்காமல் இருந்த ஒரு கதாமாந்தர் நடிப்பால் கவர்ந்திழுத்துத் தன் இருப்பை மக்களுக்குக் காட்டிக் கொண்டிருந்தார் என்றால் அது பழுவேட்டரயர் தான். கோபம் கர்வம் இரக்கம் என அனைத்துக் குணங்களையும் ஒன்றே கொண்ட ஒருவரைத் தேடிப்பிடித்து அந்தக் கதாபாத்திரமாக நடிக்க வைத்ததைப் போல் இருந்தது.

இவர்கள் இருவருமே அந்தக் கதாபாத்திரமாகவே உருமாறியிருந்தனர். தங்களுக்குத் தொடர்பில்லாத ஒரு நிகழ்வு நடந்துகொண்டிருக்கும் போதும், வசனமில்லாமல் சும்மா அமர்ந்து பார்த்துக்கொண்டிருக்கும் போது கூடத் தாங்கள் பூண்ட வேடத்திற்கு உரியவர்களாகவே நடந்துகொண்டனர். இது அவர்களின் தேரிய நாடக அனுபவத்தைப் பறைசாற்றுவது போல இருந்தது.

ஆதித்த கரிகாலனின் அறிமுகம் அட்டகாசம். மதம்கொண்ட யானையாக அவன் உலா வருவதாகக் கற்பனை செய்ததைப் போலவே அவரின் நடிப்பு இருந்தது. கோபம், உணர்ச்சிவசப்படுவது, நந்தினியைப் பார்க்கும் போது கனிந்துருகுவது என நாடகத்தின் இறுதியில் வந்து புயல் மழையாய் அடித்து ஓய்ந்தது ஆதித்த கரிகாலன் என்னும் புயல்.

நந்தினியின் பணிப்பெண்ணாக வந்தவரின் நடிப்பு கொஞ்ச நேரமேயாயினும் அசத்தல். இயற்கையாக நகைச்சுவை வரவழைத்தது.

ஆண்பால் நடிகர்கள் அனைவரும் தமிழ் உச்சரிப்பில் தேரியவர்கள் என்பது கண்கூடாகத் தெரிந்தது. அவர்களின் தமிழ் இன்னும் கேட்க வேண்டும் போல் இருந்தது.

செம்பியன் மாதேவி, மதிராந்தகன், இளைய பழுவேட்டரயர், கந்த மாறன், இரவிதாசன் போன்றோர் ஏமாற்றங்களைத் தராமல் சிறப்பாக நடித்திருந்தனர்.

ஆழ்வார்க்கடியானக வந்தவர் அருமையாக நடித்திருந்தார். இருப்பினும் குட்டை உருவமாய் தொப்பையுடன் இருக்கும் அழ்வார்க்கடியானுக்கு உயரமாய் ஒருவரைப் போட்டது ஏதோ போலிருந்தது. இதே போல பார்த்திபேந்தரனாக நடித்தவரை பனைமரத்தில் பாதி உயரத்திற்குக் கற்பனை செய்துவைத்திருந்தேன். குட்டையாக ஒருவர் நடித்ததால் மன ஏற்கவில்லை. மேலும் அவர் சாமியாடியாக வந்ததும் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் அவரின் நடிப்பும் கலைஞர்களுக்கே உரிய ஒன்றாய் இருந்தது. நந்தினியைக் காணும் போது அவர் முகத்தில் காட்டிய மாற்றங்கள் அடேங்கப்பா என்று சொல்லிக் கைதட்டும் அளவு அருமை.

ஆனால் பெரிதும் ஏமாற்றியது நாடகத்தின் பெண்பாற் கதாபாத்திரங்கள் தான். நந்தினியின் நடிப்பும் உச்சரிப்பும் குறைகூறும் வகையில் இல்லை. இருப்பினும் ஒரு நாகம் போலக் கற்பனை செய்து வைத்திருந்த ஒரு கதாநாயகிக்கு அவரை வைத்துப் பார்க்க முடியவில்லை.
குந்தவை, பூங்குழலி- இவர்கள் இருவருமே மிகச் சுமாராக நடித்திருந்தனர். குந்தவைக்குத் தொடர் மொழியாக வரும் சொற்களைப் படிக்கும் போது குளறியதும், பூங்குழாலியாய் நடித்தவர் அனைத்து லகர, ளகரத்தையும் ழகரமாக உச்சரித்தமும் நாடகத்தின் தமிழைக் குழைப்பதாய் இருந்தது. நடிப்பிலும் அவர்கள் சொதப்பியிருந்தனர். வந்தியத் தேவன் தேனொழுகக் காதலித்த காட்சியில் குந்தவை பக்கத்திலிருந்து எந்த உணர்வும் வெளிப்படவில்லை :( அதே போலப் பூங்குழலி அருள்மொழியைப் பார்த்த காட்சியில் அவளின் கண்களிலும் குரலிலுல் எந்த உணர்ச்சியும் இல்லை. வானதியாக நடித்தவர் ரொம்பக் கொஞ்சிக் கொஞ்சிப்பேசிக்கொண்டிருந்தார்.

நாடகத்தின் தொடக்கதில் இருந்த நேர்த்தி போகப் போக கொஞ்சம் குறைந்தது. முதற்காட்சியில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் கோட்டை மதிலுக்குப் பின்னால் ஒழிந்து கொண்டிருப்பதைக் காட்டிய விதமெல்லாம் மிகச்சிறப்பு. அதே போன்று இறுதி வரை இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

வானதி அருள்மொழியைப் பார்த்ததும் மயங்கி விழும் காட்சியை எதிர்பார்த்திருந்தேன். ஆனால் வரவில்லை.
மணிமேகலையைக் கதையில் விட்டுவிட்டனர். :(
சேந்தன் அமுதன் முதற்காட்சியிலேயே வாளெடுத்ததை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
ஆதித்தகரிகாலனின் இறப்பு நூலில் எனக்குள் ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு விழுக்காடு கூட நாடகம் ஏற்படுத்தவில்லை.
மேடையின் பின்னால் இருந்த திரையைக் கடலருகில் வரும் காட்சிகளுக்குக் கடல் போல் மாற்றியருக்கலாம்.

பெண் நடிகர்களின் உச்சரிப்பை மட்டும் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் நாடகம் மிக அருமை. திருப்தி அளிக்கும் ஒரு அனுபவம்.
திரையுலகத்தினரைவிட இவர்கள் தலைசிறந்த கலைஞர்கள் என்பதை நிருபித்துவிட்டனர்.
இதில் நான் கண்ட அதிருப்தி கூடப் பள்ளிப்பருவத்தில் எங்கள் பள்ளியில் நிறைய வரலாற்று நாடகங்கள் பார்த்துப் பழகிவிட்டிருக்கிறபடியால் தோன்றியவை தானே ஒழிய குறை கூறும் அளவிற்கு நாடகமில்லை.

பள்ளி மாணவர்கள் சிலர் நாடகம் பார்க்க வந்திருந்தனர். எட்டாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள். மொக்கைடா என்று பேசிக்கொண்டு சென்றது வருத்தமாக இருந்தது. அதே வயதில் நான் கல்கியைப் படிக்க ஆரம்பித்திவிட்டிருந்தேன். அவர்களுக்கு அந்த அனுபவம் கிடைத்தால் அவர்களும் இரசித்திருப்பர் என்று நினைத்துக் கொண்டேன்.

நாடகத்தமிழ் அழியும் விளிம்பில் இருக்கும் இந்தக்காலத்தில் இப்படியொரு நாடகப்புரட்சி செய்த S.S. International Live நிறுவனத்திற்கு நாடகத் தமிழே கடமைப்பட்டிருக்கிறது தான். நாடக்கத்தை மீட்டெடுத்துவிட்டனர். மேலும் பல வரலாற்று நாடங்களை இவர்கள் அரங்கேற்ற வேண்டும் என்று எதிர்பார்ப்பில் அரங்கத்தைவிட்டு வெளியே வந்தேன்.

-சுபாசினி. (06/07/2014)

Saturday, 5 July 2014

இலக்கணத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டுமா? ஆம்.

தமிழ் மொழியையும் அதன் இலக்கணங்களையும் உற்று நோக்கும் போது அது இயற்கையாகத் தானாக பல்லாயிரம் ஆண்டுகள் பரிணாம வளர்ச்சியில் தோன்றியது எனப் புலப்படும். ஓசைகளின் அடிப்படையில் பிறந்தது. சங்க இலக்கியங்களில் வந்த காதல் தொடங்கி அனைத்தும் இயல்பானவை. அதனால் அதில் இயல்பிற்கு எதிரான செயற்கை விதிகள் எதுவும் இல்லை. கொஞ்சம் கவனம் வைத்தால் அதன் விதிகளைப் பின் பற்றுதல் எளிது.

இப்படி இயல்பான மொழிக்கு நாம் ஏன் இலக்கணத்தைப் பிடித்துக் கொண்டு அழ வேண்டும் என்று தாங்கள் கேட்கலாம்.
ஒரே ஒரு காரணம் தான். நாம் ஏன் சொல்ல வந்ததோமோ அதையே மற்றவரும் புரிந்து கொள்ள வேண்டும். There should not be any communication gap.

நீங்கள் கேட்கலாம் " அத நான் சொல்றது உங்களுக்குப் பிழையா இருந்தாலும் புரியுதே?"
இப்பொழுது உங்கள் காலக் கட்டத்திலேயே நிகழும் நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டே தாங்கள் சொல்வதைப் புரிந்து கொள்ளுதல் எளிது. ஆனால் இன்னும் சில பல நூற்றாண்டுகள் கழிந்தபின் இதே நிலை இருக்குமா?
நீங்கள் சொல்ல வந்ததை ஒரு ஆயிரம் ஆண்டு காலம் கழித்து ஒருவன் புரிந்து கொள்ள வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

ஒரே வழிதான். Proper documentation. நம் மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினாலே அது சரியாக நிகழும். பண்பாடு நாகரிகம் மருத்துவம் கட்டிடக் கலை என அனைத்தையும் எல்லாக் காலங்களுக்கும் கொண்டு செல்லலாம்.
மொழியின் இலக்கணத்தை சரியாகப் பயன்படுத்தினால் அது நிகழுமா?
நிச்சயம் நிகழும். நம் மொழியில் ஒரு சொல்லுக்கு ஒரு உச்சரிப்பு தான். எழுதுவதைத் தான் படிக்க முடியும். Read- past or present ?? போன்ற ஐயங்கள் எல்லாம் நம் மொழியில் எழாது,
இப்படி இயற்கையாக இருக்கும் ஒரு அமைப்பை புதியன புகுத்த வேண்டும் என்ற நோக்கில் ஏன் வேறொன்றைத் திணிக்க வேண்டும்? ஏன் பிழைகளை ஏற்க வேண்டும்? 

Friday, 4 July 2014

"மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொல்லவில்லை

மீண்டும் யாராவது "மெல்லத் தமிழினிச் சாகும்" என்று பாரதி சொன்னதாகக் கூறினால் நிச்சயம் அவர்களுக்கு உதை தான் விழும். என்று பாரதி அப்படிச் சொன்னார்? ஒரு முறையேனும் பாரதியின் நூலைப் படிக்காத மூடர்கள் தாங்கள் பேசும் போது எழுதும் போது எல்லாம் அந்த வரியைச் சேர்த்துக் கொள்கின்றனர். ஏதோ பாரதி தமிழ் அழிந்துவிடும் என்று சொன்னது போலவும் இவர்கள் தமிழைக் காப்பது போலவும் எழுதி எரிச்சலூட்டுகின்றனர். அந்த பாரதியின் வரிகளை முழுமையாகப் படிக்காதவர்கள் ஒருமுறையேனும் படியுங்கள். தமிழ் அழியும் என்று சொல்வோர்க்குப் பதிலடியாக அவர் எழுதிய கவிதையை இப்படித் திரித்துவிட்டனர்.

அவர் எழுதிய கவிதை இதோ.

"ஆதி சிவன் பெற்று விட்டான் - என்னை
ஆரிய மைந்தன் அகத்தியன் என்றோர்
வேதியன் கண்டு மகிழ்ந்தே - நிறை
மேவும் இலக்கணஞ் செய்து கொடுத்தான்.

முன்று குலத்தமிழ் மன்னர் - என்னை
மூண்டநல் லன்போடு நித்தம் வளர்த்தார்,
ஆன்ற மொழிகளி னுள்ளே - உயர்
ஆரியத் திற்கு நிகரென வாழ்ந்தேன்.

கள்ளையும் தீயையும் சேர்த்து - நல்ல
காற்றையும் வான வெளியையும் சேர்த்துத்
தெள்ளு தமிழ்ப்புல வோர்கள் - பல
தீஞ்சுவைக் காவியம் செய்து கொடுத்தார்.

சாத்திரங் கள்பல தந்தார் - இந்தத்
தாரணி யெங்கும் புகழ்ந்திட வாழ்ந்தேன்
நேத்திரங் கெட்டவன் காலன் - தன்முன்
நேர்ந்த தனைத்தும் துடைத்து முடிப்பான்.

நன்றென்றுந் தீதென்றும் பாரான் - முன்
நாடும் பொருள்கள் அனைத்தையும் வாரிச்
சென்றிடுங் காட்டுவெள் ளம்போல் - வையச்
சேர்க்கை யனைத்தையும் கொன்று நடப்பான்.

கன்னிப் பருவத்தில் அந் நாள் - என்றன்
காதில் விழுந்த திசைமொழி - யெல்லாம் 
என்னென்ன வோ பெய ருண்டு - பின்னர் 
யாவும் அழிவுற் றிருந்தன கண்டீர்! 

தந்தை அருள்வலி யாலும் - முன்பு
சான்ற புலவர் தவ வலி யாலும்
இந்தக் கணமட்டும் காலன் என்னை
ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சியிருந்தான்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினன் கண்டீர்!

புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ! 
இந்த வசையெனக் கெய்திடலாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்."

தமிழன்னை உரைப்பது போன்ற இந்தக் கவிதை சி. சுப்ரமணிய பாரதியார் பாடல்கள் எனும் அவருடைய கவிதைத் தொகுப்பில், “ (1) தேசீய கீதங்கள்” எனும் பிரதான தலைப்பின் கீழ் அடங்கியுள்ள “(2) தமிழ்நாடு”  துணைத் தலைப்பில் இரண்டாவது கவிதையாக “(21) தமிழ்த்தாய்” என்னும் தலைப்பில் உள்ளது. 

Monday, 23 June 2014

I do not want Hindi Imposition

இது என் முக நூல் பக்கத்தில் 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை அன்று இரவு 9 மணிக்குப் நிலை பதிவாக இடப்பட்டது. பிறமொழியினர் புரிந்து கொள்ளும் வண்ணம் ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறேன்.

People who wants to have hindi as national language I suggest an alternate solution.
All you want is a language to unite the country. so let us ask the govt to make Tamil as national language. It is an unadulterated classical language which was born in this sub continent and oldest surviving language. so u get the pride infront of other countries for having such a language as national language.
And you are talking about employment opportunities. People from north are working in my home town, it will be helpful for them if Tamil is made as national language.
You talk about majority of people knows Hindi. When globally considered the % of people having Tamil as their mother tongue is higher than Hindi speaking people. It is an added advantage. if you go to Singapore and malaysia you need not learn a foreign language (English, which you are ashamed to talk), you can use Tamil there also, you can even find Tamil medium schools in those countries. Also When you travel to German and Canada also you can see Tamil people. there are many associations for Tamil language there, u can become a part of it and develop your national language.
If you say the Tamil speaking people are less in India, let me add Kannada, Telugu and malayalam also in the Tamil belt like how you added marathi, gujarathi and bhojpuri in Hindi speaking belt. and the count will be balanced.
When coming to Independence movements Tamils have equally contributed and so you can trust us.
And after all you are patriots whose only concern is country's unity. But we are morons who are narrow minded to accept other languages. As you are broad minded people who thinks about the nations unity, u can compromise and accept my mother tongue as the national language.
Deal?
this idea looks stupid for u right? similar way ur idea of hindi as national language and link language doesn't make us happy.

Sunday, 15 June 2014

'யாளி' நூல் - படித்ததும் அதை நான் வெறுத்தமும்

எனக்கு யாளி மேல் தீராத ஒரு பாசம். கோவிலுக்குச் சென்றால் அதை மட்டும் தான் பார்த்து இரசிப்பேன். யாளி பற்றிய தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கும் போது 2010 ல் வெளியான இந்த நூல் என் கண்ணில் பட்டது. அன்றிலிருந்து
மூன்று ஆண்டுகளாக இந்த நூலை படிக்க எண்ணியிருந்தேன். ஏதோ ஒரு தளத்தில் இதுக் கற்பனை வளம் மிகுந்த நூல் என்றும் Harry Potter, Lord of the Rings போன்ற நூல்களுக்கு ஒத்தது என்று விமர்சனம் எழுதியிருப்பதைப் படித்தேன். இந்த மாதம் தான் இணையதளத்தில் இந்த நூல் இருந்தது கண்டு உடனே வாங்கினேன். பெருத்த ஏமாற்றம். நூலைப் பற்றி நீண்ட நெடிய குறைக் கடிதம் எழுத வேண்டும்.

ஏன் தான் இப்படி இத்தனை பிழைகளோடு நூல் எழுதியுள்ளாரோ தெரியவில்லை.. அச்சிடும் முன்பு ஒரு தமிழ் ஆசிரியரிடம் கொடுத்துச் சரி பார்க்கவாவது செய்திருக்கலாம். ஒரு சிவப்பு மை பேனா கொண்டு நூலில் உள்ள எழுத்துப் பிழை, ஒற்றுப் பிழை, கருத்துப் பிழை ஆகியவற்றைக் கோடிட்டு நூலாசிரியருக்கே அனுப்ப வேண்டும் போலுள்ளது. அடேங்கப்பா பிழைகளைக் குறித்து வைத்துக்கொண்டே வந்தால் ஒரு நூலே வெளியிடலாம் போல. திரு. மணி தணிகை குமார் B.E. !!! நீங்கள் முன்னுரையில் தங்களுக்கு மொழி அறிவும் எழுத்துப் பயிற்சியும் இல்லை என்று குறிப்பிட்டுருக்கத் தேவையேயில்லை. தங்களின் நூலைப் படிக்கும் போது எங்களுக்கே தெரிகிறது. அனைத்துப் பிழைகளையும் ஏற்றுக் கொள்ளலம், ஆனால் 'தென்னை சோலை' என்று எழுதியதைத் தான் என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.

 ஓரிரு ஒற்றுப் பிழைகள் அச்சுப்பிழைகளை ஏற்றுக்கொள்ளலாம், தவறுவது இயல்பு. ஆனால் இந்த நூல் முழுமையும் பிழை மயம். இலக்கணப் பிழைகளைக் குறித்து வைக்க ஆரம்பித்தேன் ஆனால் எரிச்சல் அடைந்து விட்டுவிட்டேன். எவ்வளவு குறிப்பு தான் எடுப்பது. இத்தனைக்கும் இது இரண்டாம் பதிப்பு. யாருமே இவருக்குப் பிழைகள் குறித்துக் கடிதம் எழுதவில்லை போலும். " அவைகள், இவைகள்" போன்ற இலக்கணப் பிழை. சரி இவருக்குத் தமிழ் எழுதத் தான் வரவில்லை என்றால் தமிழ் வரலாறும் தெரியவில்லை. "கடல் கடந்து சென்ற ஒரே மன்னன் இராஜராஜன் " என்று எழுதியுள்ளார். இராஜேந்திர சோழனை எங்கு கொண்டு போய்ச்$ சேர்ப்பாரோ தெரியவில்லை. தனக்குத் துளியும் தெரியாத விடயங்களைப் பற்றி எல்லாம் எழுதியுள்ளார். பக்கங்களை அதிகரிக்கச் செய்த செயலா இல்லை இப்படித் தமிழர் பெருமையைப் பற்றி அடித்துவிட்டால் மக்கள் நூலை ஆகா ஓகோ என்று புகழ்வார்கள் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஒரு நூல் எழுதும் முன் கொஞ்சமேனும் ஆராய்ந்துவிட்டு எழுதியிருக்கலாம்.

அனைத்தும் அரைகுறை ஆராய்ச்சி. யாளியின் முன்னங்கால் சிறிது என்று சொல்லும் கருத்து தொடங்கி அனைத்திலும் சொதப்பிவிட்டுருக்கிறார். தான் பார்த்த பத்துக் கோவிலை வைத்துக்கொண்டு கதை எழுதியிருக்கிறார். தஞ்சை பெரிய கோவிலில் உள்ள நாயக்கர் கால மண்டபங்களை மட்டும் பார்த்திருப்பார் போல. கோவிலின் கோபுரத்தில் உள்ள யாளி வரிசைகள் இவர் கண்ணில் பட்டதாகத் தெரியவில்லை. இங்கிலாந்து பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி தமிழகக் கோவில்கள் பற்றி அவர் கொடுத்த வர்ணனைகளும் சரி, எதுவுமே இரசிக்கும்படி இல்லை. இந்தியா, தமிழ் நாடு- அவற்றின் நாகரிகம் (நாகரீகம் என்னும் எழுத்துப் பிழை வேறு) என்று அவர் சொல்லியிருக்கும் எதுவும் உண்மைக்குப் பெருதும் பொருந்தாத சாதாரண மனிதன் சொல்லும் கதைகள். (எழுத்தாளனும் அதையே சொல்லுவது தவறு. உண்மையை அறிந்து அதைத் தன் எழுத்து மூலம் மக்களுக்குச் சொல்ல வேண்டும்.)

மொத்தத்தில் யாளி பற்றித் தெரியாதவர்களுக்கு சலிப்பூட்டும் நூல். தெரிந்தவர்களுக்கு எரிச்சலூட்டும் நூல்.

நூல் முழுவதும் படித்துவிட்டு இந்தப் பதிவைத் தொடர்ந்து எழுதுகிறேன்.

Saturday, 31 May 2014

கண்ணீரும்-ஆறும்; அவை கொள்ளும் வண்ணமும்.

வண்ணங்கள் எப்பொழுதும் ஈர்ப்பவையாகவே அமைகின்றன. அறிவியலிலும் கூட வண்ணங்கள் நம்மை ஈர்க்கின்றன. ஒவியத்தில் துளி திறமை இல்லாதவர் கூட வண்ணங்களைக் கொட்டி மகிழ்வர்.

இப்படி இலக்கியத்திலும் நிறங்களின் ஆதிக்கம் அதிகம் உள்ளது. பாரதியின் "காக்கைச் சிறகினிலே" பாடல் தொடங்கி, அலைபாயுதே படத்தின் "பச்சை நிறமே " பாடல் வரை அனைத்திலுமே ஒரு வசீகரம் உண்டு. இப்படி வண்ணம் கலந்த பாடல்களை தேடிக் கொண்டிருந்த போது என் கண்ணில் பட்ட பாடல் இது.

"கூதிர் ஆயின் தண் கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணி நிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, நின் ஊரே;
பசப்பு அணிந்தனவால் மகிழ்ந! என் கண்ணே."

-ஐங்குறுநூறு 45, ஓரம்போகியார்,
மருதத் திணை – தோழி தலைவனிடம் சொன்னது (தலைவி கூறுவதைப் போல் தோழி தலைவனிடம் சொன்னது).
















சங்கப் பாடல்களில் அகப்பொருள் பாடல்களை எடுத்துக் கொண்டால் நம் கண்ணில் அதிகம் படும் சொல் "பசலை". தலவனின் பிரிவால் தலைவியைப் பிடித்து ஆட்டிப் படைக்கும் நோய் இது. உடல் மெலிந்து, கலையிழந்து, தோள் தணிந்து காணப்படுவாள்.

இப்படி பசலைக் கண்ட தலைவியைக் கண்டு வேதனைக் கொண்ட தோழி தலைவனிடம் சென்று தலைவி உரைப்பது போல் கூறுகிறாள். என்ன சொல்கிறாள்? " தலைவா! உம்முடைய ஊரில் உள்ள நதியானது குளிர் காலம் என்றால் கலங்கியும், வெயில் காலம் என்றால் மணி நிறம்  கொண்டுள்ளது. ஆனால் என் கண்ணானது நீ விட்டு அகன்றதால் பசலை நிறத்தை மட்டுமே கொண்டுள்ளது." இவ்வாறு கூறுகிறாள்.

இது செய்யுள் தரும் நேரடி பொருள் மட்டும் தான். ஆனால் உற்று நோக்கும் போது அது எவ்வளவு அழகிய பொருள் கொண்டுள்ளது என்பதை அறியலாம்.

எதற்காக தலைவி நதியை உதாரணம் காட்ட வேண்டும்? அவள் சொல்ல விளைவது இதைத்தான்.

" தலைவா! வண்ணங்கள் என்னைச் சுற்றி கொட்டிக்கிடக்கின்றன. ஆனால் என் கண்ணிற்கு எதுவும் தெரியவில்லை. நீர் கூடப் பல நிறம் கொள்கிறது. உன் ஊரில் ஓடும் நதியானது குளிர் காலத்தில் கலங்கிய நிறமுள்ள நீரையும், வெயில் காலத்தில் மணி நிறமுள்ள நீரையும் கொண்டு தருகின்றது. ஆனால் என் கண்ணீரோ பசலை நிறம் கொண்டுள்ளது. வேறு எந்த நிறமும் தெரியவில்லயே!" என்று வருந்துகிறாள்.

"பசப்பு அணிந்தனவால் மகிழ்ந என் கண்ணே" என்பது ஆழமான வரிகள். பிரிவினால் எவ்வளவு அவள் அழுதிருந்தால் அவள் கண்ணின் நீரை ஆற்று நீரோடு ஒப்பிட்டு அதன் வண்ணம் பசலை என்பாள். அடடே!!!

பதவுரை:
கூதிர்- குளிர் காலம்
தண்- குளிர்ச்சி
கழில்- கலங்கிய நீர்
வேனில்- வெயில் காலம்
யாறு- நதி

Wednesday, 7 May 2014

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!



















விளைச்சலுக்காய் நீ வரும் போதும்
காய்ச்சல் கண்ட என் கல்லூரி நினைவுகளைத்
தோய்த்தே கொண்டு வந்து கொட்டுகிறாய்...
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!
















உன்னாலே, இழையோடிய சோகம் வந்து
தன்னாலே என்னைப் பற்றிக் கொள்கிறது...
பட்டுச் சேலையிடை தங்க நூலாய்
எட்ட நின்றதை நான் ரசித்தாலும்,
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














மண் தொடும் நின் துளி
என் அறை ஜன்னல் தட்டுமென
ஏனோ பயந்திருந்தேன். நல்லவேளை
தானோ!!! ஜன்னல் இல்லை புது அறையில்... எனினும்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!











உறக்கம் தந்தாலும் உறங்கிடுவேனோ என்ற
பயமும் தருகின்றாய்.. உறங்கினால் எழுவேனோ??
ஐயமும் தருகின்றாய்.. கெஞ்சிடும் என்மேல்
இரக்கம் கொஞ்சமேனும் கொண்டு, இன்று
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!














தனிமை வெறுமை என்று பலகொண்டு
மைக்கண் கலங்க வைக்கின்றாய் நீ...
அழுகவும் வேண்டுகின்றாய், பின்னர் என்னை
எழுதவும் தூண்டுகின்றாய்... இருப்பினும் வான்
மழையே! நீ கொஞ்சம் தள்ளியே நில்லு!

-சுபாசினி.

http://isainirai.blogspot.in/2013/02/blog-post_8807.html