Tuesday 28 November 2017

Lyanna Stark & Rhaegar Targaryen- சங்க இலக்கியத்தோடு சேர்த்த புனைவுக்காதல் கதை

(A Song of Ice and Fire என்ற நூலில் வரும் நிகழ்வை சங்க இலக்கியக் காதலோடு சேர்த்து ஓர் புனைவு. ஆமாங்க அதான் Fanfiction.)

அவன் அன்று தான் கண்ட அழகியைப் பற்றியே எண்ணிக் கொண்டிருந்தான். பேரழகிகளுக்கென வரையறுக்கப்பட்டவை எதுவுமே இல்லாத ஓர் பேரழகி, காட்டுரோஜா இல்லை இல்லை பொங்கி வரும் காட்டாறு. கூதிர் காலம் மட்டுமே கொண்ட வடப்புலத்தின் முல்லை நிலத் தலைவி அவள். இவன் நெருப்பு கக்கும் டிராகன் வம்சம், இருந்தும் என்ன. அந்தக் குளிர் நாட்டு ஓநாய்க்குட்டி அவனை ஓர் நொடியில் ஆட்கொண்டுவிட்டாள்.

Lyanna Stark

















அவன் யாழ் எடுத்து மீட்டளானான். நேற்றும் யாழ் மீட்டும் போது தானே அந்தப் பேரழகி இவன் பாடலுக்கு மனமுறுகி கண்ணீர் வடித்தாள். யாழ் மீட்டிக் கொண்டே மனதில் வந்த பாவை பாவையை நினைத்துப் பாடத் தொடங்கினான்.

"மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே."


'தூய அருவியைப் போன்ற பல வெள்ளை மலர்கள் - இங்கு அவள் நாட்டில் பொழியும் பனியே வெள்ளைமலர்- பூக்கின்ற நாட்டுத் தலைவனின் சிறிய பெண் இவள். தீயென இருந்த என்னை நீராய் வந்த அவள் ஒன்றும் இல்லாமல் செய்கிறாளே!' என்று எண்ணி எண்ணி யாழ் மீட்டினான்.

Rhaegar playing his Harp

















அடடே! அவனுக்கும் அவளுக்கும் எவ்வளவு வேறுபாடு. அவன் தெற்கு அவளோ வடக்கு, அவன் சுட்டெரிக்கும் நெருப்பு அவளோ உறைய வைக்கும் கொடும்பனி, அவன் வார்த்த வெள்ளியைப் போன்ற முடியையும் நீலக் கண்களையும் கொண்ட தேவலோகத்து அழகைக் கொண்டவன், அவளோ கருங்கூந்தலும் கருவிழியும் கொண்ட மாந்தர் குலத்து அழகி. கனவிலும் சேர முடியாத இணை.

அவன் தான் பட்டத்து இளவரசன் ரேகார் தார்கேரியன் (Rhaegar Targaryen). இருந்தும் என்ன செய்ய. அவள் முல்லை நிலத் தலைவனின் மகள் இலயான்னா இசுடார்க்(Lyanna Stark). அவனது தந்தையின் பேரரசிற்கு உட்பட்டவர்கள் தான். ஆனாலும் தனியே குலப்பெருமை கொண்டவர்கள். 300 ஆண்டுகளுக்கு முன்பு டிராகன்கள் இருந்த காலத்தில் தன் மக்களைக் காப்பதற்காக அவளது முன்னோர் அவனது முன்னோரை மன்னனாக ஏற்றனர். இன்றும் அவளது அப்பா "ம்ம்" என்று ஒரு வார்த்தை சொன்னால் மறவர் கூட்டம் தலைநகருக்குப் படையெடுத்து வரும். அவளின் நாட்டைப் போலவே அவளுக்கும் அவனுக்குமான இடைவெளி கடக்க முடியாத கொடும்பாதை என்று நினைக்க நினைக்க இன்னும் அவள் அவனிடமிருந்து எட்டாத தூரத்திற்கு செல்வதாகவே அவனுக்குத் தோன்றியது. தன் நெஞ்சை நொந்து கொண்டே இன்னொரு பாட்டெடுத்துப் பாடலானான்.

"குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே." 

'கிழக்குக் கடலோரம் வாழும் பறக்க முடியாத நாரை மேற்குக் கடலில் வாழும் அயிரை மீனிற்கு ஆசைப்பட்டது போலல்லவா அவளை நான் அடைய நினைக்கும் ஆசையும்?' ஏங்கினான். 'நான் பறக்க முடியாத நாரை அல்ல. ஓர் டிராகன். அவள் வடக்கில் இருந்தால் என்ன ஒரு நொடியில் பறந்து சென்று கவர்ந்து வரத் தன்னால் முடியும்' என்று நெஞ்சிற்கு ஆறுதல் சொன்னான். ஆனாலும் கூடப் பறக்க அவள் தயாரா?

-தொடரும்.

..................................................................................................................................................................
Prince Rhaegar Targaryen was the eldest son and heir to King Aerys II Targaryen. His house Sigil is a three headed dragon and his house words are "Fire and blood". He is from South, a land which has Summer throughout the year.

Lyanna Stark was the only daughter of Rickard Stark. Her house Sigil is a running grey direwolf, on an ice-white field and her House words are "Winter is coming". She is from far North where it is always winter.

மூலக் கதையில் ரேகார் யாழ் மீட்டுவதில் வல்லவன். அவன் யாழ் மீட்டுவது கண்டு மயங்காதவர் யாரும் இல்லை. இலயான்னாவும் அதற்கு விதிவிலக்கல்ல. 
இங்கு சங்க இலக்கியப் பாடல்கள் அவர்கள் இருவருக்கும் எவ்வளவு அழகாய் பொருந்தி வருகிறது பாருங்கள். அவள் நீர் (பனி), அவன் தீ. அவர்களுக்கு இடையையேயான இடைவெளியை அந்தக் கதைக்கு ஏற்றாற் போன்ற உவமைகளோடே சங்க இலக்கியப் பாடல்கள் அமைந்திருப்பது படிக்கப் படிக்க எவ்வளவு உவப்பை ஊட்டுகின்றது. 

பாடல் 1: 
குறுந்தொகை 95

மால்வரை இழிதருந் தூவெள் அருவி
கல்முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறுகுடிக் குறவன் பெருந்தோட் குறுமகள்
நீரோ ரன்ன சாயல்
தீயோ ரன்னவென் உரனவித் தன்றே.

தலைவன் கூற்று.
பாடியவர்: கபிலர்.
உரை:
தோழனே, பெரிய மலையிலிருந்து விழும் தூய வெண்மையான அருவி,  பாறைகளின் வெடிப்புக்களில் ஒலிக்கின்ற, பல மலர்களையுடைய மலைப்பக்கத்தில் உள்ள, சிற்றூரிலுள்ள குறவனுடைய, பெரிய தோளையுடைய இளம்பெண்ணின் நீரைப் போன்ற மென்மை, தீயைப் போன்ற என் வலிமையைக் இழக்கச் செய்தது.

பாடல் 2:
குறுந்தொகை 128

குணகடல் திரையது பறைதபு நாரை
திண்டேர்ப் பொறையன் தொண்டி முன்றுறை
அயிரை ஆரிரைக் கணவந் தாங்குச்
சேயள் அரியோட் படர்தி
நோயை நெஞ்சே நோய்ப்பா லோயே.

தலைவன் கூற்று.
பாடியவர்: பரணர்.
உரை: நெஞ்சே! கிழக்குக் கடலலைக்குப் பக்கத்தில் இருந்த, சிறகை இழந்த நாரை, திண்ணிய தேரையுடைய சேரமன்னனாகிய பொறையனது மேற்குக் கடற்கரையில் உள்ள தொண்டி நகரின் ஆறு கடலோடு கலக்கும் துறைமுகத்தில் உள்ள அயிரைமீனாகிய அரிய உணவைப் பெறுவதற்குத் தலையை மேலே தூக்கிப் பார்ப்பது போல, தொலைதூரத்தில் உள்ளவளும் எளிதில் அடைய முடியாத  அரியவளுமாகிய தலைவியை நீ அடைய நினைக்கிறாய். நீ துன்புறுவதற்கான ஊழ்வினையைப் பெற்றுள்ளாய்! அதனால்தான், இவ்வாறு நீ வருந்துகிறாய்.


-சுபா

படங்கள்: இணையம்
செய்யுள் உரை: முனைவர். பிரபாகரன்.
https://www.andrill.in/

1 comment: