Wednesday 8 November 2017

சங்க இலக்கியக் காதல் - மோர்க்குழம்பு

சமையற்கட்டில் அவள் கையைக் கழுவிவிட்டு தன் ஆடையிலேயே கையைத் துடைக்கிறாள்.

அவன்: ஏய்! இது என்ன புதுப் பழக்கம். கழுவிட்டு வேற துணில தானே கையைத் துடைப்ப!
அவள்: புதுப்பழக்கமா? இது தான் நம்ம பாரம்பரியம். அவங்க அவங்க சமைச்சுட்டே கையை போட்டுருக்குற துணியில தான் துடைப்பாங்களாம். நான் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கேன். நம்ம முன்னோர் ஒன்னும் முட்டாள் இல்லைங்க.
அவன்: அடிப்பாவி! விட்ட நீ செஞ்ச தப்ப மறைக்க சங்க இலக்கியத்துலையே இதப்பத்தி பாடியிருக்காங்கனு சொல்லுவ போல.
அவள்: ஆமாம். சங்க இலக்கியத்துல பாட்டு இருக்கே!
அவன்: இதையெல்லாமா பாடியிருக்காங்க? அடிச்சுவிடு அடிச்சுவிடு!
அவள்: அட உண்மையா தான்.
அவன்: பாட்டை சொல்லு பார்ப்போம்.

அவள்: லா லா லா.. லாலா லா லா லா...
அவன்: ஏய்! சங்க இலக்கியப் பாட்டைப் பாட சொன்னா நீ என்ன சூரிய வம்சம் படப்பாட்டை பாடுற!
அவள்: என்ன அவசரம்? பின்னணி இசையோட ஆரம்பிக்கிறேன். அந்தப் படத்துல வந்த இட்லி உப்புமா காட்சி நியாபகம் இருக்கா?
அவன்: என்னது? அந்தக்காலத்துல இட்லி உப்புமா எல்லாம் செஞ்சாங்கனு மட்டும் சொல்லிடாத. என் சின்ன நெஞ்சு பிஞ்சு பிஞ்சு உடைஞ்சு போயிடும்.
அவள்: (சிரித்துவிட்டு) இல்ல, இல்ல. சங்க இலக்கியத்துல மோர்க்குழம்பா மாத்திட்டாங்க.
அவன்: என்னது மோர்க்குழம்பா? ஐயோ அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குறாளே! போதும்! இத்தோட நிப்பாட்டிட்டு பாட்டை சொல்லு.

அவள்: சூரியவம்சம் படத்துல வர்ரது போலத் தான். சரத்குமார்-தேவயானி போல நம்ம தலைவனோடு தலைவி உடன்போகிவிடுகிறாள்.
அவன்: யூ மீன் ஓடிப்போதல்? அருமை அருமை. மேல சொல்லு.
அவள்: அந்த சூரியவம்சம் தேவையானி போலவே நம்ம தலைவியும் நல்ல செல்வாக்கான வீட்டில் பிறந்து வளார்ந்தவள். வீட்டு வேலை எதுவும் செய்யத் தெரியாதவள். ஆனால் இப்பொழுது தலைவனோடு தனியே வாழ்கிறாள். அந்தப் படத்தில் வரும் அப்பாவைப் போலவே தலைவின் அம்மாவுக்கும் ஒரே வருத்தம். " ஐயோ பொண்ணு என்ன செய்யுறாளோ! எப்படி துன்பப்படுறாளோனு" ஒரே கவலை தான் அவளோட அம்மாவிற்கு.
அவன்: அடிப்பாவி! அப்படியே சந்தடி சாக்குல உன் கதையை உள்ள கொண்டுவரியே.
அவள்: கதை கேப்பியா மாட்டியா? எல்லாக் காலத்துலையும் அம்மா பொண்ணுனா அப்படித் தான். அதுவும் மாறவேயில்லை.
அவன்: சரி சரி. மேல சொல்லு.

அவள்: இப்படி அவள் அம்மா புலம்பிக் கொண்டு இருக்கும் போது தலைவியின் ஊருக்குப் போய்விட்டு வந்த செவிலித்தாய் தலைவியைப் பற்றி சொல்கிறாள். தேவயானியின் அப்பா இட்லி உப்புமா சாப்பிட்டுவிட்டு வந்து "உன் பொண்ணு என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா?" என்று பெருமையாகச்சொல்வாரே! அதே போன்ற காட்சி தான் இதுவும்.
செவிலித்தாய் சொல்கிறாள் " அட நீ ஏன் புலம்பிட்டே இருக்க. உன் பொண்ணு அங்க என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா? அன்னைக்கு அப்படித் தான் மோர்குழம்பு சமைத்திருந்தாள். எங்க நேரம் ஆகிடுமோனு தயிரைப் பிசைந்துவிட்டு அந்தக் கையைக் கூட கழுவாம அப்படியே அதை ஆடையில துடைச்சிக்கிட்டு, அவள் கணவனுக்கு மோர்க்குழம்பு செய்து கொடுத்தான். அவனோ அது புளிப்பாய் இருந்தாலும் " இனிமையா இருக்கே!" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்"
அவன்: அவன் ரொம்ப நல்லவன்னு நினைக்கிறேன். நல்லா இல்லாத சோறக் கூட ரொம்ப நல்லா இருக்குனு சாப்பிட்டுருக்கான். காதலுக்கு கண்ணு மட்டுந்தான் இல்லைனு நினைச்சேன்.
அவள்: சரி சரி. கதை முடிஞ்சுருச்சு. கதையில சொல்லாத அடுத்த காட்சியை சொல்லவா?
அவன்: என்ன?
அவள்: சாப்பிட்டுவிட்டு தலைவன் பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு அன்பு மனைவியிடம் சொல்கிறான் " அன்பே! இனி தினமும் நானே உனக்கு உதவி செய்கிறேன்"
அவன்: போச்சுடா. கதை கேட்டது ஒரு குத்தமா???
...................................


பாடல்: குறுந்தொகை 167
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 
திணை: முல்லை.
பாடியவர்: கூடலூர் கிழார்
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. 

பதவுரை:
கடிநகர் - தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனை.
கலிங்கம்- ஆடை
குய் புகை- தாளிப்பினது புகை.


விளக்கம்:
காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தலைவிக் கட்டித் தயிரைப் பிசைந்துவிட்டு அதனைத் தன் ஆடையில் துடைத்துக் கொண்டும், துடைத்த ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டும், குவளை மலர் போன்ற அவள் கண்களில் தாளித்த புகை அடித்திருந்தாலும் அவள் தானே துழாவிச்சமைத்த புளித்த மோர்க்குழம்பை அவளது கணவன் "இனிமை இனிமை" என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து அவள் முகம் மலர்ந்திருக்கிறது.



No comments:

Post a Comment