Wednesday 8 November 2017

ஆருடம்-ஆரூடம் தென் அமெரிக்க பழங்குடியினரின் சொல்லும் தமிழ்ச்சொல்லும்

எக்குவடோர்(Ecuador) பெரு பகுதிகளில் வாழும் தென் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒன்று சூவார் (Shuar). அம்மக்களிடையே ஓர் நம்பிக்கை உண்டு. அவர்களை இறைவழிபாடே அற்ற அரக்கர்கர்கள் என்று ஐரோப்பியர்கள் நினைத்தார்கள். ஆனால் அம்மக்களின் நம்பிக்கை காடுகளைவிட்டு வெகுதொலைவில் வாழும் நகரவாசிகளால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

அவர்கள் ஓர் ஆன்மா(Spirit) இருப்பதாகக் கருதுகிறார்கள். எப்படித் தமிழின் அறம் என்ற சொல்லையும், வடமொழியின் தர்மம் என்ற சொல்லையும் அச்சொற்களோடு சேர்ந்து வரும் கருத்தியலையும் பிறமொழிகளில் அப்படியே மொழிபெயர்க்க முடியாதோ மொழிபெயர்த்தாலும் அதன் முழுப்பொருள் விளங்கும்படி சொல்லவியலாதோ அது போலத் தான் அவர்களது இந்த நம்பிக்கையும். ஆன்மா, Spirit என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம் ஆனால் அம்மக்கள் புரிந்துகொள்ளும் அதே பொருளிலும், நம்பிக்கையிலும், கருத்தியலிலும் அதனை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது.

இந்தக் கடவுளுக்கு நிகரான ஒன்றை நாம் ஒருவாறு புரிந்துகொள்ள முயலலாம். அதற்கு மனித உருவும் இல்லை, அது மனிதனும் இல்லை. அதுவே காட்டை இணைக்கும், காக்கும் புள்ளி என நம்புகிறார்கள். மனிதன், அனகோண்டா, யாகுவார் என அனைத்திலும் அந்த சக்தி நிறைந்திருக்கிறது என்கிறார்கள். கிட்டத்தட்ட நமது இயக்கி (இசக்கி) வழிபாடு போல. தமிழரிடத்தே இருக்கும் பெண்தெய்வ வழிபாடும், முனியடித்தல் போன்ற நம்பிக்கைகளுக்கும் இணையான ஒன்று இது.

இதனைத் தேடி அலைந்து அதன் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது அவர்களது வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அப்படிப் பெற்றால் தான் அந்தக் காட்டில் தங்களால் உயிரோடு இருக்க முடியும், அதுவே தங்களைக் காக்கும், இறப்பிற்கு பின்னும் அதனுடையே தான் கலக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அனகோண்டா, யாகுவார் என எல்லாமே அது தான் என்கிறார்கள். சரி எப்படி அதனைத் தேடுகிறார்கள் என்று பார்த்தால் பல வழிகளில் தேடல் நடக்கிறது.

சரி அதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? அந்த ஆற்றலின் ஆன்மாவின் இயக்கத்தின் பெயர் ஆருடம். ஆங்கிலத்தில் இப்படி இருந்தாலும் அவர்களின் மூல மொழியின் பலுக்கலானது ஏறுடம் என்பதைப் போன்று இருக்கின்றது. (ஆங்கிலத்தில் றகரமில்லை என்பதனால் அவர்கள் ஆருடம் என்பது போல ஒலிக்கிறார்கள்) ஆ, ஏ என்ற இரு உச்சரிப்புக்கு இடையே அமைந்த ஒன்று.

இதை எப்படிக் கண்டடைகிறார்கள் தெரியுமா? காட்சிகளின் மூலம். ஆமாம் ஆருடம் காட்சியளிக்கிறான். வயது வந்த மகனை புயல் நாளில் தந்தை ஆருடத்தைக் கண்டு (உணர்ந்து) அதனிடமிருந்து ஆற்றலைப் பெறச்சொல்கிறார். மகனும் ஈட்டியோடு செல்கிறேன், ஆருடம் வந்தால் அதன் முன் எதிர்த்து அஞ்சாதவனாய் நிற்கிறான், அதன் ஆற்றலைப் பெருகிறான். அன்று அதனை எதிர்த்து நில்லாமல் விட்டால் அவனுக்கு அழிவு தான் என நம்புகிறார்கள். இது கிட்டத்தட்ட நமது ஊரில் நாம் கேள்விப்படும் முனியடித்தல் போல இருக்கிறதல்லவா?

சிலர் ஓர் அருவிக்கு சென்று அங்கு சில செடிகளை உண்டு பிறகு ஆருடத்தின் காட்சிக்காக காத்திருக்கிறார்கள். ஐயவுசுக்கா சாமான் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் மூலமும் காட்சிகள் காணக்கிடைக்கிறது அவர்களுக்கு. இந்த செயலினை ஏற்றம் என்றே சொல்கிறார்கள். ஆருடனும் ஏறி வந்து காட்சிகளைத் தருகிறான். அந்தக் காட்சிகளே கூட ஆருடம் தான். பாம்புகளும் யகுவார்களும் இன்னும் பல காட்டோடு தொடர்புடைய காட்சிகளுமாய் வரும் அந்த ஆற்றலின் வெளிப்பாடே இந்த ஆருடம்.

தமிழில் இந்த ஆரூடம் என்னும் சொல்லுக்கு ஏறுயது என்றும் பொருள். இதுவொரு வகையான சோதிடம் தான். ஆனால் தொடக்கத்தில் எந்த வகையான கணிப்புகள் இதில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஏறி வந்து குறிப்புகள் தந்திருக்க வேண்டும், இல்லையேல் குறி கேட்டவர்கள் ஏறிச்சென்று குறி கேட்டிருக்க வேண்டும். ஆனால் எது ஏறி வந்தது, இல்லை எதில் ஏறிச்சென்றார்கள் என்ற தகவல்கள் எல்லாம் இல்லை. தமிழில் ஏறுதல் என்பதன் அடியில் பொருளில் பிறந்தது தான் ஆரூடம் என்று இராம்கி ஐயா அவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.















பி.கு: எப்படி இந்த இரு சொற்களுக்கும் அவை நுட்பமாய் உணர்த்தும் பொருளுக்கும் தொடர்பிருக்கிறது என நான் அறியேன். ஞாலத்தின் முதல்மொழி தமிழ் என்று சொல்பவர்களுக்கு கொம்பு சீவி விடவும் நான் இதையெழுதவில்லை. தமிழின் சொற்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்துப் பொருளைக் கொணர்ந்து பிறமொழிச்சொற்களுக்கு பொருத்திக் காட்ட முடியும். அதை இங்கு இணைய வெளியில் பலரும் செய்கிறார்கள். நான் இங்கு அதைச் செய்யவில்லை. இருக்கும் சொல்லையும் அதன் பொருளையும் பின்புலத்தையும் அப்படியே கொடுத்திருக்கிறேன். அவ்வளவே!

http://agarathi.com/word/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
http://www.minelinks.com/ecuador/arutam_1.html
http://valavu.blogspot.in/2006/11/blog-post.html

No comments:

Post a Comment