Wednesday 22 November 2017

சங்க இலக்கியக் காதல்- தேடல்

அவன்: Heatset காணோம் தேடித்தானு சொன்னேனே! கிடைச்சுதா?
அவள்: அதுவா? தரையை உடைத்துக் கொண்டும் புகுந்திருக்காது, சுவற்றை ஊடுருவியும் போயிருக்காது, காலதர் வழி வெளியேவும் குதித்திருக்காது. வீட்டில் ஒவ்வொரு அங்குலமாய் நீங்கள் தேடினால் கிடைக்காமலா போய்விடும்?
அவன்: கவித கவித! ஆமாம் இந்த எங்கிருந்து சுட்ட? குறுந்தொகையா?
அவள்: ஆமாம்! எப்படி சரியா சொன்ன?
அவன்: இது கூடத் தெரியாதா? நீ மட்டுந்தான் குறுந்தொகையெல்லாம் படிச்சிருக்கியா? நாங்கெல்லாம் படிக்க மாட்டோமா என்ன?

அவள்: பார்ரா! சரி அது என்ன பாட்டு?
அவன்: இப்படி பொசுக்குனு கேட்டா? மறந்திடுச்சு. 400 பாட்டையுமா மானப்பாடம் செஞ்சு வைக்க முடியும்? எங்க ஐம்பதாவது பாட்டு என்னனு நீ சொல்லு பார்ப்போம்.
அவள்: எனக்குத் தெரியாது சாமி. நீங்க தான் ஏதோ படிச்சேனு சொன்னீங்க. சரி பாட்டோட பொருளாச்சும் சொல்லு.
அவன்: ஒரு நாள் கணவன் எதையோ தேடிட்டு இருந்தானாம். அப்ப தலைவிய கூப்பிட்டானாம். உடனே அவளும் தண்ணீ சேந்தறத விட்டுட்டு ஓடி வந்து அதைத் தேடிக்கொடுத்தாளாம். அந்த வாளியோ அவ விட்டுட்டு போன இடத்துலயே இருந்துச்சாம். அந்தக் கதை தானே?
அவள்: வாளிய கிணத்து மேட்டுல விட்டுட்டு போனா அங்கயே தான் இருக்கும். ஆமாம் நான் சொன்ன பொருளுக்கும் இந்தக் கதைக்கு என்ன சம்பந்தம்.
அவன்: சம்பந்தப்படுத்திக்கிட்டேன். அப்படி ஓடி வந்தவ தேடும் போது கணவனுக்கு போர் அடிக்கக் கூடாதுனு ஒரு பாட்டு பாடுனா. அந்தப் பாட்டு தான் இது.

அவள்: அடப்பாவி! வள்ளுவன் வாசுகி கதை, வெள்ளிவிதீயார் கதையெல்லாம் சேர்த்து புதுக் கதை சொல்லிட்டு இருக்கியே!
அவன்: அடப்போடி! நீ தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு, தமிழனின் மூழ்கிப் போன வரலாறு அப்படினு எல்லாம் உலா வருகிற கதையெல்லாம் படிச்சது இல்லையா? போன தடவ குறுந்தொகை பாட்டு விளாக்கம் எழுதுன தானே? எத்தனை பேர் படிச்சாங்க?
அவள்: நூறு பேர் இருக்கும்.
அவன்: தெரியுமே! பத விளக்கம், அருஞ்சொற்பொருள் அப்படி இப்படினு மொக்கைய போட்டுருப்ப. நான் சொல்ற மாதிரி செய். இந்த மாதிரி நாலு கதைய சேர்த்து "தெரியுமா உங்களுக்கு! தமிழனாய் இருந்தால் சேர் செய்யவும்" அந்த மாதிரி எதாச்சும் எழுதி, இடையில உன் குறுந்தொகை விளக்கத்தை சேர்த்து எழுது. அப்புறம் பார் எத்தனை பேர் படிக்கறாங்கனு.
அவள்: (சிரித்துவிட்டு) சரி சாமி. இனிமேல் அப்படியே செய்கிறேன்!

அவன்: சரி சரி. அது என்ன பாட்டு? அந்த அம்மா எதை தேடுனாங்க. ஊசியா நூலா?
அவள்: கணவன்.
அவன்: என்னது கணவனையா? மேல சொல்லு. நில்லு நில்லு. கூட ஒரு பின்னணி இசை வச்சுருப்பியே. அதை மொதல்ல பாடு.
அவள்: "கண்கள் இரண்டும் இனி உம்மைக் கண்டு பேசுமோ... காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ"
அவன்: ரொம்ப பழையா பாட்டா இருக்கும் போல. என்ன படம்.
அவள்: மன்னாதி மன்னன். அச்சம் என்பது மடமையடா பாட்டு வருமே அந்தப் படம்.
அவன்: ஓ!

அவள்: இந்தப் பாட்டுலையும் கணவனைக் காணாத அந்த அம்மா எப்படி எல்லாம் தேடுவேன்னு பாடியிருப்பாங்க. அதே போலத் தான் குறுந்தொகைல வெள்ளிவீதியாரும் இந்தப்பாட்டுல தன் கணவனைத் தேடுனதைப் பற்றி எழுதியிருப்பாங்க.
"என் தலைவன் எங்கே சென்றிருப்பான். நிலத்தைத் தோண்டி உள்ளேயும் புகுந்திருக்க முடியாது. வானத்தைத் தாண்டி வெளியேயும் சென்றிருக்க முடியாது. கடலைக் காலாலும் கடந்திருக்க முடியாது. அப்படியென்றால் ஒவ்வொரு நாடாக, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊராக, வீடு வீடாகத் தேடினால் கிடைத்துவிடுவான் தானே?" அப்படினு ரொம்ப அப்பாவியா எழுதியிருக்காங்க.

அவன்: "தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளைத் தேடிப் பார்பதென்று மெய் தேடல் தொடங்கியதே!" பாவம். இப்பவா இருந்த "காணவில்லை"நு முகநூலில் ஒரு பதிவு போட்டு தேடலாம். அப்ப அதெல்லாம் முடியாதே. அவங்க கணவரைத் தான் தேடுனாங்களா? சும்மா கவிதைக்காக எழுதியிருக்க மாட்டாங்களா. கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கே.
அவள்: அவங்க கணவனைத் தேடி அலைந்ததா அகநானூற்றிலையும் பாடல்கள் இருக்கு. ஆதிமந்தி மாதிரி இவங்களும் கணவனைத் தேடி அலைந்திருக்காங்க. "கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே" அப்படி பாடிட்டே கணவனைத் தேடி அலைந்த பெண்கள் இருக்கத் தான் செய்யுறாங்க.
அவன்: ம்ம்ம். அவங்க கொண்டது மட்டுந்தான் காதலா என்ன? கணவன் தொலைத்த headset தேடி அலைந்து கண்டுபிடித்த பெண்களும் இருக்கிறார்கள். அவர்களின் காதல் இன்னும் மேன்மையானது. தெரியாதா உனக்கு?
அவள்: ???

பாடல்: குறுந்தொகை 130

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே. 

பாடியவர்: வெள்ளிவீதியார்
கூற்று – 1: பிரிவிடை அழிந்த (வருந்திய) தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. ”நீ அவர் பிரிந்தரென்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன். நின் ஆற்றாமை நீங்குக”, எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

கூற்று – 2: தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையாற் கூறியதூஉமாம்.

விளக்கம்:
இப்பாடல் எளிய தமிழில் இன்றும் நாம் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தமையால் பதவுரையையும் செய்யுள் விளக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மன்னாதி மன்னன் படபாட்டுக்கும் இதுக்கும் இன்னொரு தொடர்பு கூட இருக்கிறது. தூது போகவா என்று கேட்கும் தோழிக்கு தலைவி சொல்லும் பதில் தான் இந்தப் பாடல். "சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்" என்று வருகிற வரிகளை இந்தப் பாட்டின் தலைவி சொல்லாமல் மனதிற்குள் குமுறும் வரிகளாய் இட்டுக் கேளுங்களேன்! " எங்க நீ தூது போறேன்னு தான் சொல்லுற. ஆனா சேதி மட்டுந்தான் சொல்ற. எல்லாரும் இப்படித் தான்." என்று பொருந்துவதாகவே வரும்.

சுபா

3 comments:

  1. Replies
    1. நல்ல பதிவு. என் முகநூல் பக்கத்தில் உங்கள் பிளாக்ஸ்பாட் முகவரி உடன் பகிர்ந்து மகிழ்ந்தேன். நயம்.இலக்கியம். தொடர்ந்து பகிர்வோம். வாழ்த்துக்கள் மா.

      Delete