Thursday 22 August 2013

சிலம்பு கழி நோன்பு

ஒரு பையனும் பொண்ணும் வீட்டு விட்டு ஓடிப் போறாங்க... இப்பவா இருந்த அத பார்க்கறவங்க அரசியல் பிரச்சனை ஆக்கி இருப்பாங்க.
ஆனா சங்க காலத்தில அவங்க படும் துயரத்த பார்த்து பரிதாப பட்டுருக்காங்க.

"வில்லோன் காலன கழலே தொடியோள்
மெல்லடி மேலவும் சிலம்பே நல்லோர்
யார் கொல் அளியர் தாமே ஆரியர்
கயிறாடு பறையில் கால் பொரக் கலங்கி
வாகை வெண் நெற்று ஒலிக்கும்
வேய் பயில் அழுவம் முன்னி யோரே."

குறுந்தொகை பாடல்-7, பெரும்பதுமனார், பாலை திணை- கண்டோர் சொன்னது.

(தலைவனும் தலைவியும் தமரின் நீங்கி உடன்போன காலத்தில் எதிரே வந்தவர்கள், தலைவி காலில் அணிந்திருந்த சிலம்பினால்அவ்விருவரும்க்கும் மணம் நடைபெறவில்லை என்பதை உணர்ந்து இரங்கிக் கூறியது.)

விளக்கம்:
வாகை மரங்களின் நெற்றுகள் (முதிர்ந்து காய்ந்த காய்) நிறைந்தது அந்தப் பாலைப் பகுதி. அதிலே நடக்கும் போது அந்த நெற்றுகள் உடைந்து சத்தம் எழுப்புகின்றன. அந்த ஒலியானது ஆரியக் கூத்து ஆடுபவர்கள் கயிற்றின் மீது நடக்கும் போது அடிக்கும் பறையைப் போன்று இருக்கிறது.
அந்தப் பகுதியிலே தலைவி தலைவனுடன் உடன் போக்கு மேற்கொள்கிறாள். ஆனால் அவர்கள் இருவருக்கும் மணம் ஆகவில்லை. அதனைத் தலைவி பெற்றோர் தனக்கு அணிவித்த காற்சிலம்பைக் கழற்றாமலேயே இருக்கிறாள் என்பதைக் கொண்டே பார்ப்பவர்கள் தெரிந்து கொள்ளலாம். தலைவனோ வில்லை உடைய வீரக் கழல் அணிந்த ஆண்மகன், தலைவியோ மென்மையான அடி எடுத்து நடப்பவள். அவளால் அந்த பகுதியில் எப்படி நடந்து செல்ல முடியும்??? அவர்களைப் பார்த்த நல்லோர் (முக பாவங்களைக் கொண்டு அவர்கள் படும் துயரை அறியக்கூடியவர்கள்) இந்த இருவரும் யாரோ என்று இரங்குகின்றனர்.

பின் குறிப்பு:

மணம் புரிவதற்கு முன், மணமகளது காலில் பெற்றோர்களால் அணியப்பட்ட சிலம்பை நீக்குதற்கு ஒரு சடங்கு செய்யப்படும்; அது 'சிலம்பு கழி நோன்பு’ எனப்படும்; "நும்மனைச் சிலம்பு கழீஇ யயரினும், எம்மனை வதுவை நன்மணங் கழிகெனச், சொல்லி னெவனோ... பொய்வல் காளையை யீன்ற தாய்க்கே’’ (ஐங்.311) என்பதனால் அந் நோன்பு மணத்திற்கு முன்பு செய்யப்படும் என்று தெரிகின்றது.
ஆரியர்-ஆரிய நாட்டில் உள்ள ஒருவகைக் கூத்தர்; அவர் இயற்றும்கூத்து ஆரியக் கூத்து எனப்படும்; 'ஆரியக் கூத்தாடினாலும் காரியத்திலேகண்’ என்ற பழமொழி அக்கூத்தின் அருமையைப் புலப்படுத்தும்; விலக்குறுப்பின் வகையாகிய பதினான்கனுள் ஒன்றாகிய சேதமென்பது இரு வகைத்தென்பதும் அவ்விரண்டினுள் ஆரியக் கூத்து ஒன்று என்பதும் சிலப்பதிகார உரையால் அறிந்த செய்திகள்; "ஆரியந் தமிழெனுஞ் சீர்நட மிரண்டினும்’’ (சிலப்.3:12-25,அடியார். மேற்.) அக்கூத்தர் கழையை நட்டுக் கயிறு கட்டி அக்கயிற்றின் மேல் ஆடுவர். "ஆடியற் பாணிக்கொக்கு மாரிய வமிழ்தப் பாடற், கோடியர்’’ (கம்ப. கார்காலப்.33) என்று கம்பரும் இக் கூத்தரைப் பற்றிக் கூறியுள்ளார்.

உடன்போக்கின்கண் நேரும் இடையூறுகளை நீக்கற் பொருட்டு வில்லுடையனாதலின் தலைவனை வில்லோனென்றார்;உதயணன் வாசவத்தையைக் கொண்டு செல்லுகையில் வராகன் என்பவனது கையில் இருந்த வில் முதலியவற்றைப் பெற்றுச் சென்றானென்றும்,பின் தன்னை வளைத்த சவரர் புளிஞரை அவற்றால் வென்றான் என்றும்பெருங்கதையிற் காணப்படும் செய்தி இங்கே அறியற்பாலது. கழல,் வீரத்திற்கும் வென்றிக்கும் தனித்தனியே கட்டப்பட்டனவாதலின் காலனவென்று பன்மையாற் கூறினார்; போர்தோறும் வென்று கட்டின என்பது மாம்; “காலன புனைகழல்” (புறநா. 100:1, விசேடவுரை); " கெழுதகையம்பர் கிழவோன் சேந்தனில், விழைவுறு தியாகத்து வீரத்து வீக்கிய, கழலே யாடவர் கான்மிசை யணிவடம்’’ என்பது திவாகரமாதலின், கொடையின்பொருட்டும் வீரத்தின் பொருட்டும் புனைந்த கழல்கள் என்றலுமாம்.

சொற்பொருள் விளக்கம்
வில்லோன்-வில்லையுயை தலைவன், காலன கழலே- காலில் அணிந்துள்ளது கழல், தொடியோள்- தொடியணிந்த பெண், மெல்லடி – மென்மையான, மேலவும் சிலம்பே - மேலே இருப்பது சிலம்பு, நல்லோர் – நல்லவராய் இருப்போர், யார்கொல் – யாரோ? அளியர் தாமே – இரங்கத்தக்கவர்களே, ஆரியர்-ஆரியர், கயிறாடு பறையில்- கயிற்றில் ஆடுகின்றபோது அடிக்கின்ற பறைபோல, கால்பொரக் கலங்கி – காற்று அலைப்ப நிலை கலங்கி, வாகை வெண் நெற்று – வாகை மரத்தின் வெண்மையான நெற்று, ஒலிக்கும் – ஒலி எழுப்பும், வேய்பயில் - மூங்கில்கள் நெருங்கிய, அழுவம் – பாலைநிலம், முன்னியோரே – முற்பட்டு எழுந்தோர்.

2 comments:

  1. மிக அருமையான செய்தி வாழ்த்துகள் சுபாஷினி

    ReplyDelete