Monday, 29 August 2016

புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..

ஒரு நூலின் அட்டைப்படம் அந்நூலை என்னை படிக்கவிடாமல் செய்யும் கதை.
"புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
உடைந்த காதும் உலர்ந்த முகமுமாய்,
மூடிய விழியும் முழு நீள மௌனமுமாய்,
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
குமுறும் எண்ணங்களையும் குழறும் சொற்களையும்
குறுஞ்சிரிப்பில் ஒளித்து வைக்குமொரு
பெண்ணின் மெய்ப்பாட்டோடு
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
பிரபஞ்சனின் நூலின் அட்டைப்படத்தில்
அமர்ந்து சாலை மறியல் செய்யும்
புத்தன் ஏதோ சொல்ல வருகிறான்..
எங்கு என் விரல் பட்டு
அமைதி விடுத்து அவன் சொல்லாமல் போனதை சொல்லிவிடுவானோ
எனத் தயங்கி நிற்கிறேன்...
அட்டையை வெறிக்க வெறிக்க பார்த்துவிட்டு
நூலை ஓரமாய் வைக்கிறேன்..  இன்று
நிறைய படித்துவிட்டேன் என்று.."
சுபா

Wednesday, 13 January 2016

போகி (எ) காப்புக்கட்டு

போகம் - விளைச்சல், செல்வம். (முப்போகம் விளைந்தது). அறுவடை காலம் முடிந்து விளைச்சல் எடுத்தவன் கொண்டாடும் விழா. போகம் எடுத்தவன் கொண்டாடுவது போகி. இச்சொல்லின் மூலம் தமிழில்லை(?) நகரங்களில் கொண்டாடப்படும் " பழையன எரித்து புதியன புகுத்தும்" போகிக்கு நாட்டார் வழக்கில் இடமில்லை. சாமி படம் பார்த்து இப்படி தான் போகி கொண்டாடுவாங்களா என்று வியந்தேன். இங்கெல்லாம் காப்புக்கட்டு தான். வேப்பிலை, பூளைப்பூ, ஆவாரம்பூ எல்லாம் சேர்த்துக்கட்டி வீட்டை, தோட்டத்தைச்சுற்றி வைப்பர். வைத்தால் பொங்கல் வந்துவிட்டது. :)
சல்லிக்கட்டு தமிழர் பண்பாடுனா டயர் எரிக்கிறதும் தமிழர் பண்பாடானு கேட்கறவங்க எல்லாம் தங்களது தாத்தா பாட்டி எப்படி போகி கொண்டாடுனாங்கனு போய் கேளுங்க.

Saturday, 2 January 2016

கிட்டி - கொங்கு வட்டாரச்சொற்கள்

கிட்டி.
ஆடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியின் பெயர் கிட்டி என்பதாகும்.
குறும்பு செய்யும் ஆடுகள் பட்டியைத்தாண்டுவதைத் தடுப்பதற்கு கட்டப்படுவது தான் இந்தக்கிட்டி. வேலியிலுள்ள சிறிய குறுகிய வழியில் ஆட்டால் வெளியில் வரமுடியாமல் இக்கிட்டியானது தடுத்துவிடும்.
இயந்திரங்களில் உலக்கையை உருளையில் இருந்து வெளிவராமல் தடுக்கும் உறுப்புகளுக்கு இப்பெயர் வைக்கலாம் அல்லவா?















இச்சொல்லின் மூலம் தெரியவில்லை. ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் குச்சிகளுக்கு கிட்டியெனப்பெயர் இருக்கலாம். கிடுகிட்டி என்றொரு இசைக்கருவியிருக்கிறது, அதில் இரு இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து கட்டியிருப்பர். படம் கீழே:
(படம்: இணையம்)
எலி பிடிக்கும் பொறி ஒன்றினுக்கும் கிட்டி எனப்பெயருண்டு. அப்பொறியிலும் இரண்டு குச்சிகள் இணைத்துக்கட்டப்பட்டிருக்கும். அதைப்பற்றி தி இந்துவில் வெளியான செய்தியையும் படத்தையும் கிழே காண்க.
இணைப்பு

Wednesday, 25 November 2015

அசையா நிலை! அசைத்தாய் நீ! (நியூட்டனின் முதலாம் இயக்க விதி)

உனைக்கண்டேனே! காதல் கொண்டேனே!

நேரே நிலையாய் இருந்தேனடி!
அசையாச் சீராய் கிடந்தேனடி!

வெள்ளி  இசையாய் என்னுள் வந்தாயே!
வெளி விசையை நீதான் தந்தாயே!

விசையை ஊட்டாதே - என்
திசையை மாற்றாதே!
நிலைமம் குலைக்காதே - சென்
நிலையைக் கலைக்காதே!

இதுதான் நியூட்டனின் முதலாம் விதியோ?
இல்லை நியூட்ரினோக்காரி உன்விழி செய்யும் சதியோ?

வழி மறித்தாயே உயிர் நிறைத்தாயே!
உனைக்கண்டேனே! காதல் கொண்டேனே!

Monday, 23 November 2015

பொடி நடை

அது என்ன பொடி நடை?
பலரும் இதற்கு "சின்னதா ஒரு நடை போட்டு கொஞ்சம் தூரம் போவது " என்று தவறாக பொருள்  கொள்கின்றனர். பொடி என்னும் சொல்லிற்கு சிறியது என்ற பொருள்  இருப்பதால் இப்படி கருதுகின்றோம்.

பொடி என்ற சொல்லிற்கு கால் பாதம் என்று பொருளும் இருக்கின்றது எங்கள் வீட்டில்  அடிக்கடி சொல்லும் வசனம் "பொடி சுடும் , செருப்பு தொட்டுட்டு வா". அதற்குப்பொருள் "கால்  பாதம் வெயிலால் நோகும். செருப்பு அணிந்துகொள்" என்பது.
பொடி நடை என்றால் வெறுங்காலில் நடப்பது என்று பொருள்.

Sunday, 22 November 2015

இராஜா இராணி திரைப்படத்தில் இடம்பெற்ற கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம்.

பத்மினி: சுவையான கதையொன்றை சொல்லுங்கள் அத்தான்!

சிவாஜி: சொல்லட்டுமா? சோழன் மகளை சேரன் மணந்தான், அந்த சேரனுக்கோர் செல்வன் பிறந்தான், செல்வன் இந்தச்சிலையை மணந்தான்.

பத்மினி: தெரிந்த கதை தானேயிது!

சிவாஜி: நடந்த கதையும் கூட.

பத்மினி: நடக்காத கதையொன்றைச்சொல்லுங்கள் அத்தான்.

சிவாஜி: சுவைக்காது கண்ணேயது!

பத்மினி: ஆ! காதல் கதையொன்று

சிவாஜி: ஆகா! இதோ புறநானூற்றில் .
பத்மினி: போதும். வீரக்கதை தானே?
சிவாஜி: வீரத்தை மணந்த காதல் கதை. தந்தையையும் கணவனையும் போரிலே பலி கொடுத்த பெண்ணொருத்தி தன் மகனையும் போர்க்கு அனுப்பிய புறக்காட்சி வெண்பா. கொஞ்சம் கேளேன். நானே எழுதியிருக்கிறேன் புதியநடையில்.

காவிரி தந்த தமிழகத்துப் புதுமணலில் களம் அமைத்துச் சேர சோழ பாண்டி மன்னர், கோபுரத்துக் கலசமதில் யார் கொடிதான் பறப்பதென்று இன்று போல் போர் தொடுத்துக் கொண்டிருந்த காலம் அது. அந்நாளில்  போர்க்களத்தில் தாய்நாடு காக்க தாவிப் பாய்ந்து செத்தார் தந்தையென்ற செய்தி  கேட்டு அனல் வீழ் மெழுகானாள் தமிழகத்து கிளியொருத்தி.

அனல் போலும் கண்ணோடு அயலூர் சென்றிருந்த அவள் கணவனும் வந்திட்டான்; புனல் போக்கும் விழியாலே அவள் போர்ச்செய்தி தந்திட்டாள்; தந்தை களம்பட்ட செய்திக்கோ தவித்திட்டாய் என்றான்; இல்லை அன்பா! முல்லை சூழ் இந்நாட்டுப் படையிலோர் வீரர் குறைந்திட்டால் நல்ல உடையிலோர் கிழிசல் வந்தது போலன்றோ? இனி தடையின்றி நுழைவரே பகைவர் என எண்ணினேன் அடைபட்ட கண்ணீர் அணையுடைத்ததத்தான் என்றாள்.

அவன் குடைவிட்டுக் கிளம்பும் ஒரு புலியென, புகைவிட்டுக்குமுறும் எரிமலையென பகைவெட்டிச் சாய்க்கும் வாளெடுத்தான்; சூளுரைத்தான் சுடர்முகம் தூக்கினான்; சுக்கு நூறுதான் சூழ்ந்துவரு பகையென்றான்; நாடு மீட்காமல் வீடு திரும்பேனென்றான்.

பார்! பார்! பார்! அந்த பைங்கிளியில் உரிமையாளன் பகைவர்மீது பாய்ந்து கொல்லும் வீரம் பாரென்று பட்டாளத்து தோழரெல்லாம் வியந்துரைத்தார். அந்த கட்டாணி முத்தாளும் கண்வழியே சிரித்திட்டாள் களத்தினிலே அத்தானுக்கு அடுக்கடுக்காய் குவிந்துவரும் வெற்றிகளைக்கேட்டுவிட்டு.

கோட்டைகள் விடுபட்டன;எதிரியின் குதிரைக்கால்கள் உடைபட்டன; வேலாட்படை முறிபட்டது வேல்கள் பொடிபட்டன. எம் கொற்றவன் படைகள் கொட்டும் பேரிகை கோடையிடியெனக் கேட்குது கேட்குது எனக்குதித்திட்டாள், புதுப்பண் அமைத்திட்டாள்.

வீரர்கள்  வந்தனர்;வெற்றி உன் கணவனுக்கே என்றனர். வேந்தனின் தூதுவர் வந்தனர்; வாழ்த்துக்கள் வழங்கினர். வீட்டோரத்து தோழிகள் வந்தனர்; வெற்றி மீட்டோனை வாழித்து மகிழ்ந்தனர். அந்த அழகி ஆனந்தக்கண்ணீர் பொழிந்தாள்.

அப்போது ஏனந்த மனிதன் வந்தானோ இழவுச்செய்தி கொல்வதற்கு. என்னருமை பெண்பாவாய் கண்ணல்ல கலங்காதே, களச்செய்தி கடைசிச்செய்தி கேளென்றான். அந்தோ மாவிலை தோரணங்கட்டி மணவிழா மேடைதன்னில் வாழ்விலே ஒன்றானோம் என்று சொன்ன சொன்ன கணவர் மார்பிலே வேல்தாங்கி நல்ல சாவிலே வீழ்ந்துவிட்டார் ஆவிதான் போனதின்னும் உயிர்வாழும் ஆரணங்கு, அச்சடித்த தமிழ்ப்பதுமை கூவியழுதாள். கொத்தான மலரிந்தக்குடும்பம், அதைக்கொத்திவிட்ட கொடுஞ்சாவை பழித்தாள் இழித்துரைத்தாள், இனியென்ன மிச்சமென்றும் கனியழுகிப்போனதென்ன்றும் கதறியழுதாள். பனிவெல்லும் விழிகாட்டி பனைவெல்ல மொழியுரைத்து பள்ளியறை கவிபாடும் நாளெல்லாம் மண்தானோ, இனி இது தூங்காத கண்தானோயென அழுதாள். அத்தான் பிணங்கிடக்கும் களம் நோக்கித்தொழுதாள்.

சோகத்தால் வீழ்ந்துவிட்ட அவள் காதில் வெற்றி வேகத்தில் பகைவர் தட்டும் போர்முரசம் பட்டதுதான் தாமதம், கெட்டது நம்குடி முழுவதுமே பட்டொழிந்து போகட்டுமென எழுந்தாள். மட்டில்லா புகழ்கொண்ட நாட்டிற்கேயன்றி வீட்டிற்கோ வாழ்வேனென்றாள். பக்தியினால் நாடுபார்க்கும் விதங்கண்ட தமிழ்னாட்டு மாதரசி தொட்டிலிலேயிட்டு தான் வளர்த்த தூயசெல்வன் அட்டியின்றி கல்விகற்க ஆலமரத்தடி ஆசானிடம் சென்றிருக்கும் நினைவுகொண்டாள், அங்கு சென்றாள்.

அம்மாவெனப் பாய்ந்தான் அழகுமிகு மொழி அன்புத்தங்கம். அப்பா தாத்தா ஊர்திரும்பினாரோ என்றான். திரும்பி வந்து சாவூர் சென்றுவிட்டார், கரும்பே! நீயும் வாவென அழைத்தாள்.  என்ன வாங்கிவந்தார் என்றான். மானம்! மானம்! அழியாத மானம்! என்றாள். அதைச்சுவைக்க நீயும் பருகு என்றாள். வந்துவிட்டான் குலக்கொழுந்து. குடும்பவிளக்கு எரிந்துகொண்டே கூறுகின்றாள் எதிரிகளின் படையெடுப்பால் நம் குடும்பம் தளையுதிர்த்துவிட்ட மரமாக போனதடா தம்பி, கவலையில்லை, களம் சென்றார் மாண்டார் ஆனால் இந்த நிலமுள்ளவரையில் மானம் காத்தார் என்ற பெயர்கொண்டார். மகனே நீயும் உன் தோளிலே பலமுள்ளவரையில் பகையைச்சாடு, பரணி பாடு, இது உன் தாய்த்திருநாடு உடனே ஓடுயென உடனே தாவியணைத்து தளிர்மகன் தன்னை சீவிமுடித்து சிங்காரித்து இரத்தக்காவிபடிந்த வாள்கொடுத்து சென்றுவா மகனே தெருமுனை நோக்கியென வாழ்த்திவிட்ட திருமனத்துக்காட்சிதன்னை பாடாதோருண்டா திருமகளே நீ சூளுரை!
...................................................................................................................................................................
பார்க்க:  https://www.youtube.com/watch?v=vAE6xvRMn34

Thursday, 22 October 2015

சிலப்பதிகாரமும் கண்ணனும்

கண்ணனை புகழ்ந்து மகிழ்ந்து போற்றி பல பாடல்களைக் கேட்டிருக்கிறோம். அதில்  ஓர் பா என்  மனதில்  நீங்காமல் நிற்கின்றது.

கண்ணனைக்  காணத கண்ணெல்லாம்  கண்ணென்றாகுமா? அது இருந்து பிறவற்றை கண்டுதான் என்ன பயன்? கண்ணனைக் கண்டால் மட்டும்  அவ்விரண்டும் கண்ணென்றாகிவிடுமா? கண்ணிமைத்துக்  கண்ணனை காணும்  கண்ணெல்லாம் கண்ணாகா.. இமைக்காமல்  கரியவனை கண்டு களிக்கும் கண்களே கண்கள், மற்றெல்லாம் இருபுண்கள். (உன்னைக்  காணாத கண்ணும் கண்ணல்ல என்ற பாடல்  நினைவிற்கு வருகிறதா.? )

இப்படி நான் இரண்டு வரிசேர்த்து எழுதிய பா இடம்பெற்ற நூல் சிலப்பதிகாரம் .
ஆய்ச்சியர் குரவையில் வரும்  அச்செய்யுள் இதோ.

"கரியவனை காணாத கண் என்ன கண்ணே?
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே? "

அடடா! கவிதை! கவிதை!