Wednesday 8 March 2017

வனவிலங்கு பாதுகாப்பு பற்றிய துணுக்கு செய்திகள்

(முகநூலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக, வனவிலங்கு பாதுகாப்பு பற்றி நான் எழுதிய பதிவுகளின் தொகுப்பு)

Wild Things, Wild Places என்னும் நூலை படித்துக்கொண்டிருக்கிறேன். தற்போதைய அமெரிக்கர்கள் அமெரிக்க கண்டத்தில் குடியேறும் முன் அக்கண்டம் முழுவதும் பரவலாகக் காணப்பட்ட ஒரு விலங்கு அமெரிக்கக் காட்டெருமை (American Bison). அந்த நாட்டின் தொல்குடிகளைப் போல் அல்லாமல் ஐரோப்பியர்கள் குடியேற்றத்திற்கு பின் காட்டெருமைகளை கொன்று அழித்தனர். அதில் பெரும் பங்கு அமெரிக்க இராணுவத்தைச் சேரும். கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் 2,80,000 காட்டெருமைகள் வேட்டையாடப்பட அவர்கள் காரணமாக இருந்திருக்கிறார்கள். 40 இலட்சத்திற்கும் அதிகமாய் இருந்த காடெருமைகளின் எண்ணிக்கை 1884ல் வெறும் ஓராயிரமாக (1000) குறைந்தது. அதன் பின் ஏற்பட்ட விழிப்புணர்வின் காரணமாக அமெரிக்க காட்டெரிமை நலனிற்காக சங்கமொன்றை உருவாக்கி அவற்றை காக்கத் தொடங்கினர். (American Bison Society). அந்த மீதமிருந்த 1000 காட்டெருமைகளின் வழிவந்த காட்டெருமைகள் தாம் இப்பொழுது வட அமெரிக்காவில் காணப்படும் காட்டெருமைகள், கிட்டத்தட்ட அழிந்துவிட்ட விலங்கினத்தை மீட்டெடுத்தனர்




















அமெரிக்காவில் நூற்றாண்டுகளுக்கு முன்னர் காட்டு விலங்குகள் அழிக்கப்பட்ட பின் அவற்றை மீட்டெடுக்க தேசிய ஆடுபன் சங்கம் (National Audubon Society) போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் காடுகளையும் விளைநிலங்களையும் வாங்கி அவற்றைக் காடுகளாகவே பராமரிக்கின்றனர். அங்கு வாழும் பறவைகளையும் விலங்குகளையும் காக்கின்றனர். அற்றுப்போன விலங்குகளை மீண்டும் அவ்விடங்களில் மீட்க முயல்கின்றன. ஆனால் இந்தியாவில் மட்டும் தான் இரண்டு மதக்கும்பல் (ஈசா, காருண்யா) போட்டி போட்டுக்கொண்டு பல்லுயிர் வாழும் காட்டு பகுதியை அழித்து வருகின்றன. அதற்கு அரசாங்கம் ஒத்து வேறு ஊதுகிறது. இதில் விருது ஒரு கேடு. எப்படி இப்படி அமைப்புகளாலும் அரசாலும் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ள முடிகிறது என்றே தெரியவில்லை. இந்த மத அமைப்புகளும் அவற்றை ஆதரித்து காட்டுயிர்களின் வாழ்விடங்களை அழிக்கும் அரசும் நாசமாய் போகட்டும்.


தாய்லாந்தில் பௌத்த மதத்தைத் தழுவிய மக்கள் சிலர் பாம்பினை உயிருடன் சமைப்பராம். கேட்டால் "பௌத்தம் உயிர்களைக்கொல்லக்கூடாது என்கிறது, பிறகு எப்படி நாங்கள் பாம்பினைக் கொல்வது, அதுதான் உயிருடன் சமைக்கிறோம்" என்பார்களாம். காட்டு விலங்குகளை வேட்டையாடி சீனாவிற்கு விற்றும்விட்டு, புலியைக்கண்டால் புத்தர் என்றும் வணங்குவராம். இவ்வளவு தான் மக்களின் மதப்புரிதல்கள். ஆதிமனிதனின் கடவுள் இயற்கை, என்றைக்கு இந்த Organized Religions என்று சொல்லக்கூடிய மதங்கள் வந்தனவோ அன்றைக்கே இயற்கை தன் மதிப்பை இழந்துவிட்டது. யானைகளைக்கொன்று விட்டு அங்கு பிள்ளையாருக்கு சிலை வடிப்பர், புலிகளைக் கொன்றுவிட்டு ஐயப்பனுக்கு விரதம் இருப்பர், இயேசு மனிதனிக்குத்தான் அனைத்தையும் படைத்தார் என்று விவிலியத்திலிருந்து ஆதாரம் கொடுப்பர். இவர்களின் கொள்கைக்கு முற்றிலும் முரண்பட்டதே இவர்களின் செயல்பாடுகள்.
இங்கு ஒரு காடு வெட்டி சித்தர், மன்னிக்கவும், காடு வெட்டி யோகி காட்டை அழித்துவிட்டு நாட்டில் ஆயிரம் மரங்களை நடுகிறார். இது எதற்கு? காட்டுயிர்களை அழித்துவிட்டு மனிதனும் அவன் வளர்க்கும் நாயும் பூனையும் கிளியும் மட்டும் உண்டு வாழவா?


மாயன் நாகரிகத்தில் நிலங்களை உடைமையாக்கும் வழக்கமில்லை. பல ஆண்டுகளாகக் காட்டில் வாழ்ந்தவர்கள். பட்டா பற்றி எல்லாம் அவர்கள் அறிந்திருக்கவில்லை. 1970 களில் திடீரென்று பெலீசு (Belize) நாட்டில் வாழும் மாயர்களில் சிலர் அரசிடம் நிலப்பட்டா கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களைத் தூண்டி விட்டது கிறித்தவ அமைப்புகள். பாவம் செய்தவர்கள் நரகத்தில் அழிவர் என்று சொல்லி அவர்களை மனம் மாற்றி கிறித்துவ தேவாலயம் ஒன்றை எழுப்புவதற்காக காடுகளை மாயர்களின் பேரில் பட்டா போட்டு வாங்க சொன்னார்கள். அது யாகுவார் (Jaguar) சிறுத்தைகள் வாழும் வனப்பகுதி, அவற்றை தெய்வமாக வழிபட்டு போற்றி வந்தவர்கள் மாயர்கள். காட்டை அழித்து தேவலாயம் அமைக்கத்தூண்டியது புதிதாய் வந்த மதம்.
இதைப்புரிந்து கொள்ளுதல் மிக எளிது. தேவாலயம் எழுப்பட்டிருந்தால் என்ன நேர்ந்திருக்கும்? காடுகளை பெரும்பணக்கார்கள் வாங்குவதைவிட பட்டா போட்ட நிலத்தை வாங்குவது எளிது. காட்டுப்பகுதிகளில் வாழும் மக்களை வெளியேற்றிவிட்டு வனவிலங்கு சரணாலயங்கள் அமைப்பது போன்று எளிதல்ல அங்கிருக்கும் தேவாலயங்களையும் கோவில்களையும் இடித்து விட்டு வனவிலங்குகளைக் காப்பது.
இன்று ஈசாவிலும் இது தான் நடக்கிறது. இனி யாரும் அங்கிருக்கும் சிலையை நீக்க முடியாது, அங்கு போகும் மனிதர்களை தடுக்க முடியாது. மீறி பேசினால் மதங்கள் தான் பதில் சொல்லும். " இந்துக்களுக்கு மட்டும் இந்த நிலையா? ஐயோ இந்துக்களுக்கு இந்த நாட்டில் இருக்க இடமேயில்லையா!" என்று ஒரு கும்பல் மக்களைத் தூண்டிவிடும். ஆனால் எந்த இந்து இந்த ஈசாவால் பயன் அடைகிறான் என்பது அந்த ஈசனுக்குத் தான் வெளிச்சம்.
காடுகளில் கல்லூரி கட்டுவதைக் காட்டிலும் பேராபத்தானது கோவில் கட்டுவது. அதிலும் பேராபத்து இந்த கார்ப்பரேட்டுத் தனமான பணக்காரர்கள் ஞானம் தேடும் கோவில்கள். ஏனென்றால் இவர்களை நாம் ஒன்றும் செய்ய இயலாது.


(படங்கள்: இணையம்)

No comments:

Post a Comment