Wednesday 22 March 2017

நீயா நானாவும் திருமணக் கனவுகளும் ஆண்டாளும்.

ஒரு பொண்ணு உலங்குவானூர்தி கேட்டுருச்சுனு என்ன கலாய் கலாய்க்கிறோம். இத விட ஒரு பொண்ணு நிறைய கேட்டிருக்கு. வாங்க அந்தப்பொண்ணையும் கலாய்க்கலாம்.
யாருடா அந்தப் பெண்ணென்று போன்மி (meme) இயக்குனர்கள் எல்லாம் கான்செப்ட் யோசிக்கிறீங்களா? அந்தப் பெண் நம்ம ஆண்டாள் தான். அதாங்க நம்மூர் திருமண அழைப்பிதழ்களில் எல்லாம் ஒரு நாலு வரி எழுதுவாங்களே, அந்தப்பாட்டுல..
"மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத
முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ நான்"
இந்த நாலு வரிய திருமண அழைப்பிதழில் பார்த்த ஒருவருக்குக் கூடவா ஆண்டாளின் திருமணக் கனவுகள் பேராசையாகத் தோன்றவில்லை?
ஆரம்பமே அமர்களமா இருக்கும். "வாரணம் ஆயிரம் சூழ" ஆயிரம் யானை சூழ்ந்து தலைவன் வருகிறனாம். Helicopter எல்லாம் சும்மா சுசுப்பி..
அடுத்து கேளுங்கள் "பூரண பொற்குடம் வைத்துப் புறம் எங்கும் தோரணம் நாட்ட" நூறு பவுனுக்கு ஒரு பொண்ணு ஆசைபட்டதுக்கே அசந்துட்டா எப்படி, வெளியில் உள்ள இடங்களில் எல்லாம் பொற்குடம் வைத்து தோரணம் கட்டுவது போல் கனவு காண்கிறாள். "முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற் கீழ்" சும்மா வெறும் தென்னங்கீற்றில் செய்த பந்தல் எல்லாம் இல்லை. முத்தால் அலங்கரிபட்ட பந்தலின் கீழ் தான் தலைவனை அவள் கரம்பிடிக்க கனாக் காண்கிறாள்.
கண்ணகியின் திருமணத்தை ஊராருக்கு அறிவித்த படலத்தை நீங்கள் பள்ளியில் படித்திருப்பீர்கள். ஒரு பக்கம் பண்பாடு " தமிழ் பெண்கள் என்றால் இந்த உடை தான் அணிய வேண்டும்" என்று சொல்லும் பல இளவட்டங்களும், இதெல்லாம் நம் இலக்கியத்தில் இருக்கின்றன என்று கூடத்தெரியாமல் இருக்கின்றனரா?
இது போன்ற திருமணக் கனவுகள் பற்றிய பாடல்கள் இலக்கியங்களிலும் திரைப்படங்களிலும் ஏராளம். கனவு, Fanatsy என்றெல்லாம் சொல்லும் போது இப்படியாகத் தான் பெண்கள் திருமணக் கனவுகள் காண்பதாய் சித்தரித்து வைக்கின்றோம். இந்த நீயா நானா தொடர் கூட அப்படித் தானே தொடங்குகிறது? அவர்கள் கற்பனைக்குதிரைகளை அவிழ்த்துவிடுகிறார்கள். உடனே அதில் வந்த வானூர்தியைப் பிடித்துக் கொண்டு அப்பெண்ணைக் கலாயோ கலாய் என்று கலாய்கிறார்கள். இதே கலாய்க்கும் பேருள்ளங்கள் தான் "காற்று வெளியிடை" படத்தின் பாடல்களைப் பார்த்துவிட்டு, வாயைப் பிளந்து கொண்டு "கார்த்தி helicopter ல வந்து அவளைக்கூட்டிட்டு போறாருல.. சூப்பர்ல.. மணி சார் மணி சார் தான்" என்று உருகியது. இயக்குனர்கள் மணிரத்தினமும், சங்கரும் இப்படியெல்லாம் கற்பனை செய்து காசைக்கொட்டி படமெடுத்தால் ஆகா ஓகோ என்பீர்கள். யாரோ ஒரு பெண் நீயா நானாவில் பேசினால் உடனே உலகமே உங்கள் வீட்டு வாசல் முன் தான் அழிவது போல கூப்பாடு போடுவீர்கள்.
இல்லை கேட்கிறேன், உங்களது நட்பு வட்டத்தில் உறவுகளில் இதுவரை ஒரு வேலைக்குப் போகாத பையன் கூட " எனக்கு பைக்கு வாங்கிக் கொடு, கேமரா வாங்கிக்கொடு" என்று பெற்றோரை உயிரை எடுத்துப் பார்த்ததில்லையா. தலைவன் வேலைவெட்டியில்லாமல் வண்டியில் அப்பா காசில் ஊர் சுற்றினால் அது Road Trip, அதெல்லாம் கணக்கில் கூட வராது. ஆனால் ஒரு பெண் அவங்க அப்பா கிட்ட வண்டி கேட்ட உடனே " அவள படிக்க வச்சாங்களே, அப்பா அம்மாவ இப்படியா துயரப்படுத்துவது" என்று கிளம்பிவிட வேண்டியது. அதற்கும் நீயா நானா மாதிரி பொதுவெளியில் கேட்பதா என்று நீங்கள் கேட்டால், மேலே இருந்து நான் எழுதியதை மீண்டும் படியுங்கள். இலக்கியங்கள், திரைப்படங்கள் எல்லாம் பொதுவெளியில் தான் இருக்கின்றன, அவை நம் கண்களை உருத்தாத போது இந்த நிகழ்வில் பேசிய ஒன்றிரண்டு பெண்கள் மட்டும் உங்கள் கண்களை உருத்துகின்றனர் என்றால் உங்களுக்கு ஏதோ " selective meme creating and sharing syndrome" ஆக இருக்கக்கூடும்.
காதல் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதியரை சாலையில் வைத்து வெட்டுகிறார்கள், அந்தப்பெண் கதறி அழுகிறாள். அன்று பலரும் சொன்ன வார்த்தை " அவங்க குடும்ப பிரச்சனை. அந்தப் பொண்ணு பெத்தவங்க பேச்சைக் கேட்கனும்ல. அவங்க பொண்ணு அவங்க என்னமோ செய்யட்டும், அதைப்பற்றி நாம என்ன சொல்ல" என்று அடுத்தவர்களின் குடும்ப விவகாரங்களில் தலையிடாத உத்தமர்கள் எல்லாம் ஏதோ அந்தப்பெண்கள் உங்களிடம் வந்து உங்கள் காசில் வாங்கிக்கொடுக்க சொன்னது போல குமுறுகிறீர்கள். அவர்கள் பெற்றோர் அவர்கள் பாடு என்று போக வேண்டியது தானே. உடனே இவர்கள் எல்லாம் மற்ற பெண்களுக்கு தவறான எடுத்துக்காட்டுகள் இல்லையா என்று கிளம்பாதீர்கள்.. மேலே சொன்னதை மீண்டும் படியுங்கள். பல திரைப்படங்களில் சித்தரிக்கப்பட்டதில் இல்லாத எடுத்துக்காட்டா இந்த நீயா நானாவில் இருக்கிறது?
"நல்ல பையன்" வேண்டும் என்று அவர்கள் யாரும் சொல்லவில்லை என்று சிலர் நொந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியின் போக்கே முழுக்க முழுக்க உறவுகள் தாண்டி, கற்பனையில் மிதப்பதைப் போல திருமணம் எவ்வளவு ஆடம்பரமாக இருக்க வேண்டும் என்பதாக நகர்கிறது. இது அந்த ஓட்டத்திற்காகவே எடுக்கப்பட்ட நிகழ்ச்சி, இதில் பையனின் குண நலங்கள் பற்றியெல்லாம் எப்படி வரும்?
மேலும் இந்த நல்ல பையன் வேண்டும் என்று கேட்டிருக்கலாம் என்று சொல்பவர்கள் "நல்ல பையன்" வேண்டும் என்று சொல்லும் பெண்களுக்கு வேறு சாதி, வேறு மதம், வேறு நாடு, வேறு மொழி எல்லாம் கடந்த நல்ல பையனா, இல்லை அதெல்லாம் தவிர்த்த நல்ல பையனா, பெற்றோர் பார்த்து வைக்கும் நல்ல பையனா, காதலிக்கும் நல்ல பையனா, இதெல்லாம் பெற்றோருக்கும் ஒத்துவருமா என்று விளக்கமாக Disclaimer போட்டு சொல்லிவிட்டால் "நல்ல பையன்" கேட்கும் பெண்களுக்கு வசதியாக இருக்கும்.
இந்த மாதிரி பெண்கள் கேட்பதால் தான் "பல ஆண்களுக்கு பெண் கிடைக்கவில்லை, திருமணம் ஆகவில்லை" என்று யாரும் நினைத்துவிட வேண்டும். Chennai Pasanga Daஅட்மின் போன்ற சென்ற தலைமுறை மக்களுள் சிலர் பெண்பிள்ளைகளைக் கருவில் கொன்றதாலும், கள்ளிப்பால் ஊற்றிக்கொன்றதாலும் தான் இன்று திருமணத்திற்கு பெண்கள் கிடைப்பதில்லை.
கடைசியாக, நீயா நானா இயக்குனருக்கு! Zee Tamil தொலைக்காட்சியில் வரும் ஒரு நிகழ்ச்சியைப் போல அடுத்தவர்கள் குடும்பங்களை குடைந்து குதறி இப்படி நிகழ்ச்சி எடுத்து சில பெண்களைத் தரைகுறைவாகக் காட்டி TRP ஏற்றாமல் கொஞ்சம் நல்ல நிகழ்ச்சிகளை இயக்கி வழங்குங்கள்.
பி.கு: நான் இந்த பெண்களை தரகுறைவாக எழுதும் மீமி இயக்குனர்களுக்கும் அதைப் பகிர்பவர்களுக்கும் மட்டும் தாங்க எழுதுனேன், மற்றபடி எனக்கு நாச்சியார் திருமொழி பிடிங்குங்க.

No comments:

Post a Comment