Sunday 16 March 2014

வைதல் பாடல்

வீட்டில் திட்டுவதில் கூட பாரம்பரியம் இருக்கத் தானே செய்கிறது!!!

இது கொஞ்சம் ஓவர்னு நினைக்காதீர்கள். உண்மை தான்...

இது என்ன புதுசா, நடவுப்பாட்டு ஏற்றப்பாட்டு போல வைதல் பாட்டா??

அப்படிக் கூட வைத்துக்கொள்ளலாம்.
அதற்காக ஊர்க்குழாய் அடியில் சண்டை போட்டுக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட வரிகளில் பாரம்பரியமா என்று எண்ண வேண்டாம். (அதில் கூட பாரம்பரியம் இருக்கலாம்)..

நம் அம்மா திட்டும் வரிகளில் கொஞ்சம் ஊர்ப் பழக்கமும், குடும்ப வசனங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
பல வரிகள் என் அம்மாச்சியிடம் இருந்து ஜீனில் வந்தவை தான்... யோசித்துப் பார்த்தால் உங்கள் வீட்டிலும் இப்படியாக ரெடிமேட் வசனங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

என் அம்மா கோபம் வந்தால் "புள்ளை இல்லாட்டி போகுதுனு சுருக்குட்டுத் தூக்கிட்டு ஏனோ செத்துப் போச்சுனு சொல்லிடுவேன்" என்பார். சின்ன வயதில் இந்த வசனம் எனக்கு திகிலூட்டப் போதுமானதாக இருந்தது. "போலீஸ் சம்சாரமா இருந்திட்டு அம்மாக்கு போலீஸ் கொலை கேசுல பிடிச்சுடுவாங்கனு பயம் அம்மாக்கு கொஞ்சம் கூட இல்லயா" என்று சந்தேகம் வர என் அப்பாவிடம் சென்று " சுருக்குட்டு தூக்குனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கண்டு பிடிக்க முடியாத டாடி" என்று கேட்டேன். (நாலவது படிக்கற என் பொன்னுக்கு எவ்வளவு அறிவு என்று எண்ணி) அவர் சிரித்துவிட்டு "கண்டு பிடிச்சடலாம்" என்றார். அன்றிலிருந்து என் அம்மா அதை சொல்வதை குறைத்துக் கொண்டார். இது ஏதோ என் அம்மா சொல்லும் வசனம் தான் என்ரு நினைத்துக்கொண்டேன். பிற்பாடு தான் தெரிந்தது என் பக்கத்துவீட்டு அண்ணாவின் (அவருக்கே இப்பொழுது குழந்தை உள்ளது) இதை விட பரிதாபம். "அவங்க அம்மா கதவை சாத்தி சேலைய சாரத்துல போட்டு, அவன அண்டா மேல ஏத்தி 'சுருக்கு போடட்டுமானு கேட்டா' அவன் அழுதுட்டே இருந்தான், அப்பறம் அவங்க பெரிமா பெரிப்பா எல்லாம் வந்து அவங்க அம்மாவ திட்டி பையன கூட்டிட்டு போனாங்க" என்று பக்கத்து வீட்டு அத்தை நினைவில் திளைக்கும் போது தான் தெரிகிறது "சுருக்குட்டு தூக்கறது" எங்கள் ஊரின் யுனிவர்சல் டைலாக் என்று. சிலர் அதனை சோதனை செய்து பார்க்கும் அளவு கூட சென்றிருக்கிறார்கள்.

தோசைக்கு சாம்பாரும் தேங்காய் சட்டினியும் வைத்திருக்கும் போது " என்னங் மா!!! புளிச் சட்னி இல்லயா?" என்று கேட்டால் இந்த பதில் தான் கிடைக்கும் "இத விட இல்லைனாலும் நீ எல்லாம் எமன பலகாரம் பண்ணி எதுத்தவூட்ல சங்காரம் பண்ணிடுவ".... இது எங்கள் பாட்டி சொல்லி என் அம்மாவிற்கு தொற்றிக் கொண்ட பழக்கம் தான்.

"உங்கத் திங்கத் தான் செல்லம், ஊடெல்லாம் இரைக்கவுமா செல்லம்???" எந்த பொருளையாவது உடைத்தாலோ கீழே போட்டாலோ வரும் ரெஃப்லெக்டிவ் ரியாக்சன் இது. ஆனால் இவை ஆழம் பொருந்திய வரிகள். இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு செல்லம் தர வேண்டும் என்று உணர்த்தும் வரிகள்.

சின்ன குறும்பு செய்யும் போது எல்லாம் என் அம்மாவும் சித்தியும் " இப்படியே பன்னுன மிளகா பிடிச்சுவிட்டுருவென்" என்பார்கள். அது என்னடா "மிளகாய் பிடிக்கறது" என்று ஆராய்ந்து பார்த்தோமானல்... ஒரு படியிலே (ஆழாக்கில்) அடுப்புத் தனலைப் போட்டு அதன் மேல் மிளகாயை போடுவது.. அந்த மிளகாய் என்ன காரநெடி அடிக்கும்.. அய்யோ சாமி... நல்ல வேளை எங்கள் வீட்டில் படியும் இல்லை, விறகடுப்பும் இல்லை... இதையெல்லாம் படித்துவிட்டு "என்னமா வன்முறைய வளர்க்கறயா" என்று கேட்காதீர்கள். இதெல்லாம் சும்மனாச்சிக்கு குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட பூச்சாண்டிக் கதைகள். எனினும் இவை நாட்டுப்புறப் பாடல் போல் சிற்றூர்களில் பரவிக்கிடந்தன.

பலவும் வழகொழிந்து வரும் நிலையில் இந்த வைதல் பாட்டும் மறந்து கொண்டு தான் வருகிறது. அம்மாக்களும் பாட்டிகளும் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். நாகரிகம் கருதியோ, மனநிலையாக குழந்தைகளை இத்தகைய வசனம் பாதிக்கும் என்று எண்ணியோ, இல்லை புது வசனம் ஒன்று கிடைத்தோ, நாளை நான் என் பிள்ளைகளை "Mind what you are doing" என்ற ரேஞ்சுக்கு குறைத்துவிடக்கூடும். என்ன சொல்லுங்கள், சும்மனாச்சிக்கு பயம்காட்ட சொல்லப்படும் இத்தகைய வரிகள் என்றுமே மணம் வீசுகின்றன தான்.

பி.கு.: உங்கள் வீட்டிலும் இப்படியாக இருக்கும் பாரம்பாரிய வைதல் பாடல்கள் பற்றி நிச்சயம் பின்னூட்டம் இடுங்கள். நன்றி.

6 comments:

  1. "உத்திரத்திலே தொங்குற உன் பேச்சு உன்னை சும்மா விடாது...."

    ReplyDelete
  2. ஊருக்கு இளிச்சவாயன் புள்ளயார் கோயில் ஆண்டி...

    ReplyDelete
  3. இந்தச் சொல் வழக்குகளையெல்லாம் ஒருமுறையும் கேட்டதில்லை. இதில் சில வழக்குகள் எனக்குப் புரியவும் இல்லை. "உங்கத் திங்கத் தான் செல்லம்" - இதற்கு என்ன பொருள்? எங்கள் வீட்டில் அதிகப்படியாகத் திட்டிக்கேட்டது "சொல்பேச்சாவது கேக்கணும், இல்ல சுயபுத்தியாவது இருக்கணும்".

    ReplyDelete
    Replies
    1. "உண்பதற்கும், திண்பதற்கும் தான் செல்லம்" அதாவது சாப்பிட விரும்பியதை வாங்கிச் சாப்பிடுவதற்குச் செல்லமுண்டு. ஆனால் அதனை வீணடிப்பதற்குச் செல்லமில்லை.

      Delete
  4. நன்றி. இன்னும் நிறைய வட்டார வழக்குகளை எடுத்து விடுங்கள். நன்றாக இருக்கிறது. கொஞ்சம் பொறுமையாக எழுதுங்கள். அவசரத்தில் அங்கங்கு எழுத்துகள் மாறித் திகைக்க வைக்கின்றன.

    ReplyDelete