Saturday 15 March 2014

கண்ணதாசன் எடுத்தாண்ட நளவெண்பாப் பாடல்

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் " என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறீர்களா???

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" இப்படியாக தலைவன் பாட அதற்கு பின்வருமாறு தலைவி பதிலுரைப்பாள்

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"















அடேங்கப்பா! முகத்தை மலர்னு நெனச்சு வண்டு மோதுச்சா??? என்னமா எழுதியிருகாரு தலைவர் என்று சொல்லத் தோன்றும் வரிகள் அல்லவா இவை.
இதே பொருள் கொண்ட பாடல் ஒன்று நளவெண்பாவில் உள்ளதென்றால் நம்புவீர்களா???

"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." - (நளவெண்பா)

திருமணம் முடிந்து பின்பு நளன் தமயந்தியை தோட்டத்திற்கு ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன். அங்கே தான் கண்ட காட்சியை அவளையும் காணச்சொல்கின்றான்.
அங்கே என்ன காட்சி நடக்கிறது தெரியுமா!!!

"பெண் ஒருத்தி மலர்கொய்து கொண்டிருக்கிறாள்; அங்கே மலர்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டொன்று அவளது முகத்தை தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவள் தன் கைகளால் முகத்தை மறைக்கிறாள்; அப்பொழுதும் அந்த வண்டு அவளது கைகளை காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவளுக்கு வேர்க்கின்றது" இந்தக் காட்சியைக் காண் எங்கின்றான் நளன்.















முகத்தை மலர் என்றதோடு முடித்துக்கொண்டார் கண்ணதாசன். கையையும் மலர் என்றார் புகழேந்தி!!!

பிரித்துப் பொருள் கொள்ளும் முறை:

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள், வாள் முகத்தைப் பங்கயம் என்று எண்ணிப் படி வண்டைச் செங்கையால் காத்து ஆள, கை மலரைக் காந்தள் எனப் பாய்தலுமே, வேர்த்தளைக் காண் என்றான் வேந்து.

செங்கையை செங்காந்தள் மலர் என்கிறார். கை மலர் என்கிறார்.
பங்கயம்- தாமரை
காந்தள்- செங்காந்தள்
வேந்து- அரசன்.(நளன்)

1 comment:

  1. ரசிக்க வைக்கும் விளக்கம்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete