Sunday 9 March 2014

தலைவியை உடன் அழைத்துச் செல்லாததற்கு தலைவன் சொல்லும் காரணங்கள்

காதலிய கூட கூட்டிட்டு போறதுக்கு ஆயிரம் காரணம் காதலர்களுக்கு இருக்கும். "போருக்குப் போறேன், ஊருக்குப் போறேன்" இப்படி பல கதைகள் சொல்லுவாங்க. ஆனா இந்தப் பாட்டுல தலைவன் சொல்ற காரணங்கள் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாத்தான் இருக்கு. அடேங்கப்பா!!! தலைவி மேல அவனுக்கு இவ்வளவு அக்கறையா, இல்ல தலைவி அவன் எதைச் சொன்னாலும் நம்புவானு தைரியத்துல தலைவன் சொல்றானானு தெரியல. இல்ல ஒருவேளை அந்த காலத்தில் போகும் வழி அவ்வள்வும் கொடுமையாக் கூட இருந்திருக்கலாம். "தலைவியைக் கூட்டிக்கொண்டு செல்" எனக் கூறும் தோழிக்கு தலைவன் உரைக்கும் பதிலாக அமைந்த அப்பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை
திணை: பாலை,
பாடியவர்: சிறைக்குடியாந்தையார்

"வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே."

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

(கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல், பொல்லாங்கு - தீமை.)

அஃதாவது, தலைவியப் பிரியும் தலைவன், தான் போகும் வழியே இடரானது, தன்னால் தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது என்று தோழிக்கு எடுத்துச் சொல்லும் பாட்டு.














விளக்கம்:

பாலை வழியானது மிகவும் கொடுமையானது. அங்கே நீருக்கு பெரும்பாடு.
வேட்டைக்குச் சென்று திரும்பும் செந்நாய் நீரற்ற சுனையில் குழி தோண்டி கிடைக்கும் நீரில், அது உண்டது போக மிச்சம் உள்ள நீர் தான் கிடைக்கும்.
அதிவும் குளவி மலர்களால் மூடப்பட்டு, அம்மலர்கள் அழுகி வீசும் துர்நாற்றம் உடையதாய் இருக்கும்.
வளையல் அணைந்த கையையுடைய தலைவியை என்னோடு சேர்ந்து எப்படி அந்த நீரைப் பருகச் சொல்வது??
என்னோடு இந்த வழியில் வந்தால் என் மனதில் நிறைந்துள்ள அவள் வருந்தத்தக்கவள் ஆவாள்.

குறிப்பு:










இதில் குளவி என்பது பூச்சியினத்தைக் குறிப்பிடவில்லை. அது ஒரு மலர் வகை. [குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) ]

வேட்டம், சின்னீர் போன்ற சொற்கள் பாலைத் திணையை நன்கு புலப்படுத்துகின்றன.

பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2).


பிரித்துப் படிக்கும் முறை:
வேட்டம் செந்நாய்  கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளையுடை கையள் எம்மொடு  உணீயர் தான் வருகதில்,
வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் அளியளோ, அளியள்.

பதவுரை:
கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியது
அளியள் - மிக இரங்கத் தக்காள்

2 comments:

  1. அருமை... ரசிக்க வைக்கும் விளக்கம்...

    ReplyDelete
  2. This article actually bought my tamil class in front of me, where i learnt this!!! Nice one..

    ReplyDelete