Monday, 17 March 2014

தமிழிலக்கணம்- 1 (இரட்டைக்கிளவி)

"சலசல சலசல இரட்டைக் கிளவி தகதக தகதக இரட்டைக் கிளவி
உண்டல்லோ தமிழில் உண்டல்லோ
பிரித்து வைத்தல் நியாயம் இல்லை பிரித்துப் பார்த்தால் பொருளும் இல்லை
இரண்டல்லோ இரண்டும் ஒன்றல்லோ"













'இப்படி ஜீன்ஸ் படத்துல வர மாறி சொன்ன தமிழ் இலக்கணம் எவ்ளோ நல்லா இருக்கும்!!! இப்படி நினைக்கறவங்களுக்கு கொஞ்சம் எளிமயா நியாபகம் வச்சுக்க சுலபமா ஒரு பகுதி எழுதுன என்னனு நினைச்சு தான்' இதை எழுத ஆரம்பித்துள்ளேன்.

இலக்கணம் ஐந்து வகைப்படும் என்று தொடங்கினால், இந்த புள்ள ஆறாவது தமிழ் இலக்கணத்த அப்படியே எழுதுது என்று தோன்றிவிடும்.

அப்பொழுது எங்கிருந்து தொடங்கலாம்??
இரட்டைக்கிளவில இருந்தே ஆரம்பிக்கலாம்.
இரட்டைக்கிளவி என்னனு எங்களுக்குத் தெரியாதா?? இத எழுதறதுக்கு ஒரு தொடரா?? என்று கடியாகாதீர்கள். எங்கிருந்தாவது தொடங்க வேண்டும். எடுத்ததும் "ஒன்றிய வஞ்சித்தளை", "கொண்டுகூட்டு பொருட்கோள்" என்று தொடங்கினால் இது ஒத்துவராதுபா என்று பலரும் படிக்கமாட்டார்கள். அதனால் தான், தெரிந்த இடத்தில் இருந்து தொடங்கலாம் என்று இரட்டைக் கிளவியில் தொடங்குகிறேன்.

இரட்டைக் கிளவி:

"சல சல" இது தாங்க இரட்டைக்கிளவி. "சல" க்கு பொருள் இல்லை. இப்படி இரண்டு பொருள் இல்லாத சொற்கள் சேர்ந்து வருவது தான் இரட்டைக்கிளவி. (கிளவியா? அது யாரு? பக்கத்து வீட்டு பாட்டியா? என்று கேட்காதீர்கள். இந்த கிளவிக்கு சொல் எனப் பொருள். கிளவி- சொல்). ஆக பொருள் இல்லாத இரண்டு சொற்கள் சேர்ந்து வந்து பொருள் தருவது தான் இரட்டைக்கிளவி. அவற்றை பிரித்தால் பொருள் இல்லை.
இவை வினைக்கு அடைமொழியாய் வரும். அதாவது ஒரு செயலின் தன்மையைக் குறிக்க பயன்படும்.

எடுத்துக்காட்டு:
'பள பள'க்குது புது நோட்டு...
திருதிரு துறுதுறு...
“வழ வழ என உமிழ் அமுது கொழ கொழ என ஒழிகி விழ”- இது என்ன படப் பாட்டுடா என்று யோசிக்காதீர்கள். இது திருப்புகழ் பாட்டு.
(அப்ப அப்ப கொஞ்சம் இலக்கியத்தையும் சேர்த்துகலாம்.)

"இரட்டைக் கிளவி யிரட்டிற்பிரிந் திசையா.". இது நன்னூல் சூத்திரம்.

இங்கு ஒரு ஐயம் (சந்தேகம்) எழலாம்.
"துடி துடித்து போனான்"- இதில் துடித்து என்பதற்கு தனியே பொருள் உண்டு தானே. பின் இது எப்படி இரட்டைக் கிளவி??? ஆனால் முன்னால் உள்ள 'துடி' என்பதற்கு இங்கு  தனியே பொருள் இல்லை. மேலும் இது வினைக்கு அடைமொழியாக வருகிறது. அதனால் இது இரட்டைக் கிளவி.

இன்னும் கொஞ்ச இலக்கியச் சான்றுகள்:

"திடு திடு என நுழைவதன் முன் எதிர் முடுகி அவர்களொடு”-திருப்புகழ்.
"மினுகுமினு கெனுமுடல மறமுறுகி நெகிழ்வுறவும்" -திருப்புகழ்.
"நெறிவு கலகலென வாசம் வீசுகுழ" - திருப்புகழ்.
"சலசல மும்மதம் பொழிய” - சீவக சிந்தாமணி
“கலகல, கூஉந்துணை யல்லால்” -நாலடியார்
“குறுகுறு நடந்துஞ் சிறுகை நீட்டியும்” - புறநானூறு
“வற்றிய வோலை கலகலக்கும்” -நாலடியார்.

பி.கு: இலக்கண நாட்டம், அறிவு இவை உடையவர்களுக்கும், இலக்கணம் படிக்க விருப்பமுள்ளவர்களுக்கும் பொதுவாகவே இந்தத் தொடரை எழுதுகிறேன். முழு மூச்சாக மொத்த இலக்கணப் படுதியையும் எழுதிவிட வேண்டும் என்ற அவாவில் எழுதுகிறேன். எப்படியெல்லாம் தமிழை எளிமையாக கற்றுக்கொடுத்திருக்கலாம் என்று நான் எண்ணினேனோ அப்படியெல்லாம் இந்தத் தொடரை எழுதத் திட்டமிட்டுள்ளேன்.
தொடர்ந்து படியுங்கள். பிழைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். கேள்விகள் இருந்தால் கேளுங்கள்.
நன்றி
சுபாசினி.




Sunday, 16 March 2014

வைதல் பாடல்

வீட்டில் திட்டுவதில் கூட பாரம்பரியம் இருக்கத் தானே செய்கிறது!!!

இது கொஞ்சம் ஓவர்னு நினைக்காதீர்கள். உண்மை தான்...

இது என்ன புதுசா, நடவுப்பாட்டு ஏற்றப்பாட்டு போல வைதல் பாட்டா??

அப்படிக் கூட வைத்துக்கொள்ளலாம்.
அதற்காக ஊர்க்குழாய் அடியில் சண்டை போட்டுக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட வரிகளில் பாரம்பரியமா என்று எண்ண வேண்டாம். (அதில் கூட பாரம்பரியம் இருக்கலாம்)..

நம் அம்மா திட்டும் வரிகளில் கொஞ்சம் ஊர்ப் பழக்கமும், குடும்ப வசனங்களும் இருக்கத் தான் செய்கின்றன.
பல வரிகள் என் அம்மாச்சியிடம் இருந்து ஜீனில் வந்தவை தான்... யோசித்துப் பார்த்தால் உங்கள் வீட்டிலும் இப்படியாக ரெடிமேட் வசனங்கள் இருப்பதை கவனித்திருப்பீர்கள்.

என் அம்மா கோபம் வந்தால் "புள்ளை இல்லாட்டி போகுதுனு சுருக்குட்டுத் தூக்கிட்டு ஏனோ செத்துப் போச்சுனு சொல்லிடுவேன்" என்பார். சின்ன வயதில் இந்த வசனம் எனக்கு திகிலூட்டப் போதுமானதாக இருந்தது. "போலீஸ் சம்சாரமா இருந்திட்டு அம்மாக்கு போலீஸ் கொலை கேசுல பிடிச்சுடுவாங்கனு பயம் அம்மாக்கு கொஞ்சம் கூட இல்லயா" என்று சந்தேகம் வர என் அப்பாவிடம் சென்று " சுருக்குட்டு தூக்குனா போஸ்ட் மார்டம் ரிப்போர்ட்ல கண்டு பிடிக்க முடியாத டாடி" என்று கேட்டேன். (நாலவது படிக்கற என் பொன்னுக்கு எவ்வளவு அறிவு என்று எண்ணி) அவர் சிரித்துவிட்டு "கண்டு பிடிச்சடலாம்" என்றார். அன்றிலிருந்து என் அம்மா அதை சொல்வதை குறைத்துக் கொண்டார். இது ஏதோ என் அம்மா சொல்லும் வசனம் தான் என்ரு நினைத்துக்கொண்டேன். பிற்பாடு தான் தெரிந்தது என் பக்கத்துவீட்டு அண்ணாவின் (அவருக்கே இப்பொழுது குழந்தை உள்ளது) இதை விட பரிதாபம். "அவங்க அம்மா கதவை சாத்தி சேலைய சாரத்துல போட்டு, அவன அண்டா மேல ஏத்தி 'சுருக்கு போடட்டுமானு கேட்டா' அவன் அழுதுட்டே இருந்தான், அப்பறம் அவங்க பெரிமா பெரிப்பா எல்லாம் வந்து அவங்க அம்மாவ திட்டி பையன கூட்டிட்டு போனாங்க" என்று பக்கத்து வீட்டு அத்தை நினைவில் திளைக்கும் போது தான் தெரிகிறது "சுருக்குட்டு தூக்கறது" எங்கள் ஊரின் யுனிவர்சல் டைலாக் என்று. சிலர் அதனை சோதனை செய்து பார்க்கும் அளவு கூட சென்றிருக்கிறார்கள்.

தோசைக்கு சாம்பாரும் தேங்காய் சட்டினியும் வைத்திருக்கும் போது " என்னங் மா!!! புளிச் சட்னி இல்லயா?" என்று கேட்டால் இந்த பதில் தான் கிடைக்கும் "இத விட இல்லைனாலும் நீ எல்லாம் எமன பலகாரம் பண்ணி எதுத்தவூட்ல சங்காரம் பண்ணிடுவ".... இது எங்கள் பாட்டி சொல்லி என் அம்மாவிற்கு தொற்றிக் கொண்ட பழக்கம் தான்.

"உங்கத் திங்கத் தான் செல்லம், ஊடெல்லாம் இரைக்கவுமா செல்லம்???" எந்த பொருளையாவது உடைத்தாலோ கீழே போட்டாலோ வரும் ரெஃப்லெக்டிவ் ரியாக்சன் இது. ஆனால் இவை ஆழம் பொருந்திய வரிகள். இன்று பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு எவ்வளவு செல்லம் தர வேண்டும் என்று உணர்த்தும் வரிகள்.

சின்ன குறும்பு செய்யும் போது எல்லாம் என் அம்மாவும் சித்தியும் " இப்படியே பன்னுன மிளகா பிடிச்சுவிட்டுருவென்" என்பார்கள். அது என்னடா "மிளகாய் பிடிக்கறது" என்று ஆராய்ந்து பார்த்தோமானல்... ஒரு படியிலே (ஆழாக்கில்) அடுப்புத் தனலைப் போட்டு அதன் மேல் மிளகாயை போடுவது.. அந்த மிளகாய் என்ன காரநெடி அடிக்கும்.. அய்யோ சாமி... நல்ல வேளை எங்கள் வீட்டில் படியும் இல்லை, விறகடுப்பும் இல்லை... இதையெல்லாம் படித்துவிட்டு "என்னமா வன்முறைய வளர்க்கறயா" என்று கேட்காதீர்கள். இதெல்லாம் சும்மனாச்சிக்கு குழந்தைகளை பயமுறுத்த சொல்லப்பட்ட பூச்சாண்டிக் கதைகள். எனினும் இவை நாட்டுப்புறப் பாடல் போல் சிற்றூர்களில் பரவிக்கிடந்தன.

பலவும் வழகொழிந்து வரும் நிலையில் இந்த வைதல் பாட்டும் மறந்து கொண்டு தான் வருகிறது. அம்மாக்களும் பாட்டிகளும் கொஞ்சம் குறைத்துக் கொண்டார்கள். நாகரிகம் கருதியோ, மனநிலையாக குழந்தைகளை இத்தகைய வசனம் பாதிக்கும் என்று எண்ணியோ, இல்லை புது வசனம் ஒன்று கிடைத்தோ, நாளை நான் என் பிள்ளைகளை "Mind what you are doing" என்ற ரேஞ்சுக்கு குறைத்துவிடக்கூடும். என்ன சொல்லுங்கள், சும்மனாச்சிக்கு பயம்காட்ட சொல்லப்படும் இத்தகைய வரிகள் என்றுமே மணம் வீசுகின்றன தான்.

பி.கு.: உங்கள் வீட்டிலும் இப்படியாக இருக்கும் பாரம்பாரிய வைதல் பாடல்கள் பற்றி நிச்சயம் பின்னூட்டம் இடுங்கள். நன்றி.

Saturday, 15 March 2014

கண்ணதாசன் எடுத்தாண்ட நளவெண்பாப் பாடல்

"நான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் " என்று தொடங்கும் கண்ணதாசனின் பாடல் வரிகளைக் கேட்டிருக்கிறீர்களா???

"நீ வருகின்ற வழிமீது யார் உன்னைக் கண்டார்?
உன் வளை கொஞ்சும் கைமீது பரிசென்ன தந்தார்?
உன் மலர்க்கூந்தல் அலைபாய அவர் என்ன சொன்னார்?
உன் வடிவான இதழ்மீது சுவை என்ன தந்தார்?" இப்படியாக தலைவன் பாட அதற்கு பின்வருமாறு தலைவி பதிலுரைப்பாள்

"பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத
நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற"















அடேங்கப்பா! முகத்தை மலர்னு நெனச்சு வண்டு மோதுச்சா??? என்னமா எழுதியிருகாரு தலைவர் என்று சொல்லத் தோன்றும் வரிகள் அல்லவா இவை.
இதே பொருள் கொண்ட பாடல் ஒன்று நளவெண்பாவில் உள்ளதென்றால் நம்புவீர்களா???

"மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாள்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தளைக் காணென்றான் வேந்து." - (நளவெண்பா)

திருமணம் முடிந்து பின்பு நளன் தமயந்தியை தோட்டத்திற்கு ஒரு நாள் அழைத்துச் செல்கிறேன். அங்கே தான் கண்ட காட்சியை அவளையும் காணச்சொல்கின்றான்.
அங்கே என்ன காட்சி நடக்கிறது தெரியுமா!!!

"பெண் ஒருத்தி மலர்கொய்து கொண்டிருக்கிறாள்; அங்கே மலர்களை மொய்த்துக்கொண்டிருந்த வண்டொன்று அவளது முகத்தை தாமரை மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவள் தன் கைகளால் முகத்தை மறைக்கிறாள்; அப்பொழுதும் அந்த வண்டு அவளது கைகளை காந்தள் மலர் என்று எண்ணி மொய்க்கிறது; பயந்து போன அவளுக்கு வேர்க்கின்றது" இந்தக் காட்சியைக் காண் எங்கின்றான் நளன்.















முகத்தை மலர் என்றதோடு முடித்துக்கொண்டார் கண்ணதாசன். கையையும் மலர் என்றார் புகழேந்தி!!!

பிரித்துப் பொருள் கொள்ளும் முறை:

மங்கை ஒருத்தி மலர் கொய்வாள், வாள் முகத்தைப் பங்கயம் என்று எண்ணிப் படி வண்டைச் செங்கையால் காத்து ஆள, கை மலரைக் காந்தள் எனப் பாய்தலுமே, வேர்த்தளைக் காண் என்றான் வேந்து.

செங்கையை செங்காந்தள் மலர் என்கிறார். கை மலர் என்கிறார்.
பங்கயம்- தாமரை
காந்தள்- செங்காந்தள்
வேந்து- அரசன்.(நளன்)

Sunday, 9 March 2014

தலைவியை உடன் அழைத்துச் செல்லாததற்கு தலைவன் சொல்லும் காரணங்கள்

காதலிய கூட கூட்டிட்டு போறதுக்கு ஆயிரம் காரணம் காதலர்களுக்கு இருக்கும். "போருக்குப் போறேன், ஊருக்குப் போறேன்" இப்படி பல கதைகள் சொல்லுவாங்க. ஆனா இந்தப் பாட்டுல தலைவன் சொல்ற காரணங்கள் கொஞ்சம் சிறுபிள்ளைத் தனமாத்தான் இருக்கு. அடேங்கப்பா!!! தலைவி மேல அவனுக்கு இவ்வளவு அக்கறையா, இல்ல தலைவி அவன் எதைச் சொன்னாலும் நம்புவானு தைரியத்துல தலைவன் சொல்றானானு தெரியல. இல்ல ஒருவேளை அந்த காலத்தில் போகும் வழி அவ்வள்வும் கொடுமையாக் கூட இருந்திருக்கலாம். "தலைவியைக் கூட்டிக்கொண்டு செல்" எனக் கூறும் தோழிக்கு தலைவன் உரைக்கும் பதிலாக அமைந்த அப்பாடல் பின்வருமாறு:

குறுந்தொகை
திணை: பாலை,
பாடியவர்: சிறைக்குடியாந்தையார்

"வேட்டச் செந்நாய் கிளைத்தூண் மிச்சிற்
குளவி மொய்த்த வழுகற் சின்னீர்
வளையுடைக் கைய ளெம்மொ டுணீஇயர்
வருகதில் லம்ம தானே
அளியளோ வளியளெந் நெஞ்சமர்ந் தோளே."

என்பது தலைமகன் கொண்டுதலைப் பிரிதலை மறுத்துத் தானே போகின்றவழி இடைச்சுரத்தின் பொல்லாங்கு கண்டு கூறியது.

(கொண்டுதலைப் பிரிதல் - தலைவியை - உடன்கொண்டு அவள் தமரினின்றும் பிரிதல், பொல்லாங்கு - தீமை.)

அஃதாவது, தலைவியப் பிரியும் தலைவன், தான் போகும் வழியே இடரானது, தன்னால் தலைவியை உடன் அழைத்துச் செல்ல இயலாது என்று தோழிக்கு எடுத்துச் சொல்லும் பாட்டு.














விளக்கம்:

பாலை வழியானது மிகவும் கொடுமையானது. அங்கே நீருக்கு பெரும்பாடு.
வேட்டைக்குச் சென்று திரும்பும் செந்நாய் நீரற்ற சுனையில் குழி தோண்டி கிடைக்கும் நீரில், அது உண்டது போக மிச்சம் உள்ள நீர் தான் கிடைக்கும்.
அதிவும் குளவி மலர்களால் மூடப்பட்டு, அம்மலர்கள் அழுகி வீசும் துர்நாற்றம் உடையதாய் இருக்கும்.
வளையல் அணைந்த கையையுடைய தலைவியை என்னோடு சேர்ந்து எப்படி அந்த நீரைப் பருகச் சொல்வது??
என்னோடு இந்த வழியில் வந்தால் என் மனதில் நிறைந்துள்ள அவள் வருந்தத்தக்கவள் ஆவாள்.

குறிப்பு:










இதில் குளவி என்பது பூச்சியினத்தைக் குறிப்பிடவில்லை. அது ஒரு மலர் வகை. [குளவி - காட்டுமல்லிகை (குறிஞ்சிப். 76,ந.) ]

வேட்டம், சின்னீர் போன்ற சொற்கள் பாலைத் திணையை நன்கு புலப்படுத்துகின்றன.

பாலைநிலத்தில் நீரற்ற சுனையில் தோண்டி அங்குள்ள சிறிதளவாகிய நீரை விலங்கினமும் மக்களும் உண்டல் வழக்கம்; "ஆறுசெல் வம்பலர் சேறுகிளைத் துண்ட, சிறுபல் கேணி" (அகநா. 137: 1-2).


பிரித்துப் படிக்கும் முறை:
வேட்டம் செந்நாய்  கிளைத்தூண் மிச்சில் குளவி மொய்த்த அழுகல் சில் நீர்
வளையுடை கையள் எம்மொடு  உணீயர் தான் வருகதில்,
வந்தால், எம் நெஞ்சு அமர்ந்தோள் அளியளோ, அளியள்.

பதவுரை:
கிளைத்தூண் மிச்சில் - தோண்டி உண்டு எஞ்சியது
அளியள் - மிக இரங்கத் தக்காள்

Sunday, 23 February 2014

தஞ்சை பெரிய கோவிலின் யாளி வரிசை.

ஒவ்வொரு யாளி மீதும் ஒரு வீரன் அமர்ந்திருப்பதைக் காணலாம். இது கற்பனை விலங்கேயாயினும் அசாத்திய கற்பனை தான்.







Friday, 14 February 2014

"நாமளா இருந்தா என்ன பண்ணியிருப்போம்" பதிவுக்கு இட்ட மறுபதிவு. (நியூட்டனின் ஆப்பிள் கதை)

இந்த நியூட்டன் கதை நாங்காம் வகுப்பு ஆங்கில பாடத்தில் முதன்முறையாக வந்தது. அந்த ஆசிரியைப் பெயர் கல்பனா. நன்றாக நினைவிருக்கிறது. "ஆப்பிள் கீழே விழுந்த என்ன பன்னியிருப்பீங்க?" என்று கேட்டுவிட்டு எங்கள் பதிலுக்கு எல்லாம் காத்திருக்கவில்லை, " சாப்பிட்டுருப்பீங்க, அதான் நாம எல்லாம் இப்படி இருக்கோம்" என்று பாடம் நடத்த ஆரம்பித்துவிட்டார். "அடேங்கப்பா.. எனக்கு ஆப்பிளே பிடிக்காது, நான் எப்படி அதை சாப்பிட்டிருப்பேன் என்று சொல்கிறார்கள்" இப்படியாக ஏதோ எண்ணிக்கொண்டிருந்து வகுப்பு ஓடியிருக்கும். இதெல்லாம் நினைவிருக்கிறதா? என்று கேட்க தோன்றும் பலருக்கு. அதற்குக் காரணம் பிற்பாடு நடந்த இந்த கூத்து தான்.

self evaluation பகுதியில் இருந்து மட்டும் தான் கேள்விகள் வரும். அதற்கு முன்னமே ஆசிரியை நடத்த class work நோட்டில் "is was" மாறாமல் எழுதிவைத்துக்கொண்டு அதை அப்படியே விழுங்கி தேர்வில் வாந்தி எடுக்க வேண்டும். இது தானே நடக்கிறது ரொம்ப காலமாக. அந்த முறை தேர்வில், புதிதாக ஒரு கேள்வி வந்திருந்தது. அதற்கு பதில் எழுதாமலேயே அனைவருக்கும் மதிப்பெண். நான் மட்டும் சொந்தமாக ஏதோ எழுதிவைக்க, "அது self evaluation ல இல்லனு கூட உனக்கு தெரியல, வர வர நீ ஒழுங்காப் படிக்கறது இல்ல சுபாஷினி" என்று தொடங்கி திட்டி தீர்த்து, பக்கத்து வகுப்பு ஆசிரியையிடம் "பாருங்க இவள, இப்பவே கதை எழுதற எங்க போய் படிச்சு மார்க் வாங்கி உருப்பட போற" என்ற அளவுக்கு அசிங்கப்படுத்திவிட்டார். அது எனது படிக்கத் தகுதியில்லாத் தனத்தின் வெளிப்பாடகவே கருதப்பட்டது. ஒரு அவமானம் சின்னமாகவே என் மனதில் பதிந்துவிட்டது. பத்தாம் வகுப்பில் ஒருமுறை அந்த ஆசிரியைப் பார்த்த போது கூட இதை சொல்லி சிரித்தார். இப்பொழுது பார்த்தால் சொல்லலாம். நானும் "மக்கப்" செய்து 1161 மதிப்பெண் எடுத்தேன் என்று.

இந்த நிகழ்வுகளை நினைவூட்டியது மதி அவர்களின் பின்வரும் பதிவு.
http://sunshinesignatures.blogspot.in/2014/01/blog-post_26.html#comment-form

Tuesday, 4 February 2014

சுடச்சுடரும் பொன்!!!

ஒருவருக்கு துன்பம் மேல் துன்பம் வர வர அவர்கள் தங்கள் நற்தன்மையை மேன்மேலும் காட்டுவர் என்னும் பொருளிலும், எப்பொழுதும் நல்ல ஒழுக்கத்துடன் இருப்பவருக்கு சூடு மேல் சூடாய் துன்பம் வரும் என்னும் பொருளிலும் இந்த சொற்றொடரைக் கொள்ளலாம். எவ்வாறாயினும் சூடு தான் பொன்னை மிளிரச் செய்கிறது. அது போல் துன்பத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த உவமை பின்வரும் திருக்குறளில் காணப்படுகிறது.

"சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடுந் துன்பஞ்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு. (குறள்-267)."