Sunday 12 August 2018

மேற்கை ஏற்காதே! வீழும் சூரியனே!

தீடிரென்று மதன் கார்க்கியின் பாடல் வரிகள் மீது எனக்குக் காதல் பெருக்கெடுக்கிறது.
பாகுபலியில் வரும் 'மேற்கை ஏற்காதே!' பாடலைப் படத்திலும் பின்னர் அதன் காணொளியை சிலமுறையும் பார்த்திருக்கிறேன். ஆனால் அப்பொழுது அப்பாடல் பிடிக்கவில்லை. பாடல் செந்தமிழாயும், காட்சி இந்தி மயமாயும் இருந்ததால் கொஞ்சமும் ஒத்துப்போகவில்லை என்று மனதிற்குப் பிடிக்கவில்லை.
இரண்டு நாட்களாக அப்பாடலின் வரியை மட்டும் கேட்டால் அவ்வளவு அழகான வரிகள். அநியாயமாக ஒரு நல்ல பாடல் அப்படத்தில் வீணடிக்கப்பட்டுவிட்டதே என்று தோன்றியது. கார்க்கியின் கவிதை மீது காதல் பெருக்கெடுக்க அப்பாடல் மட்டும் காரணமில்லை. அதன் தெலுங்கு வடிவத்தைக் கேட்டுப் பார்த்தேன். நுணுக்கமாய் கார்க்கி பாடலில் செய்திருக்கும் மாற்றமே அதற்குக் காரணம்.
தெலுங்குப் பாடலோ மன்னனைப் பார்த்து அடிமையாய் இருக்கும் மக்கள் பாடுவது போல இருக்கிறது. ஆனால் தமிழிலோ தலைவனைப் பார்த்து மக்கள் வாழ்த்துவது போல இருக்கிறது. 'கடவுளைப் போல எங்களைக் காப்பவன்' என்னும் வரிக்குப் பதிலாக 'மழையெனப் பெய்யய்யா!' என்று மாற்றியிருக்கிறார். மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் என்று பாடிய தமிழ்ப்புலவர் வழி நின்றல்லவா பாடியிருக்கிறார். 'என் மன்னன் நீயே' எனும்படி வரும் வரியைக் கூட 'என் சிந்தை நீயே' என்று மாற்றிவிட்டார்.
முதல் வரி சொல்லவே வேண்டும். மறைந்துவிட்ட சூரியனை எழச்செய்யும் தெலுங்கு வரிக்கு மாற்றாய் 'மேற்கை ஏற்காதே வீழும் சூரியனே' என்று பாடியிருக்கிறார். அப்பாவையும், மகனையும் கூட ஐயா என்றழைப்பர். இப்பாடல் முழுக்க தலைவனை உரிமையாய் பாசத்தோடு அமைந்த வரிகள் தான்.
இப்பொழுது புரிகிறது ஏன் இப்பாடல் அக்காட்சி அமைப்புக்கு ஒவ்வவில்லை என்று. பிற்போக்குத்தனமான பாடலுக்கு முற்போக்கான வரிகள். சொல்லுங்கள் கார்க்கி எந்தத் தலைவனை மனதில் நினைத்து நீங்கள் எழுதிய பாடல் இது? நிச்சயம் பாகுபலி இல்லை.

No comments:

Post a Comment