Wednesday, 22 November 2017

சங்க இலக்கியக் காதல்- தேடல்

அவன்: Heatset காணோம் தேடித்தானு சொன்னேனே! கிடைச்சுதா?
அவள்: அதுவா? தரையை உடைத்துக் கொண்டும் புகுந்திருக்காது, சுவற்றை ஊடுருவியும் போயிருக்காது, காலதர் வழி வெளியேவும் குதித்திருக்காது. வீட்டில் ஒவ்வொரு அங்குலமாய் நீங்கள் தேடினால் கிடைக்காமலா போய்விடும்?
அவன்: கவித கவித! ஆமாம் இந்த எங்கிருந்து சுட்ட? குறுந்தொகையா?
அவள்: ஆமாம்! எப்படி சரியா சொன்ன?
அவன்: இது கூடத் தெரியாதா? நீ மட்டுந்தான் குறுந்தொகையெல்லாம் படிச்சிருக்கியா? நாங்கெல்லாம் படிக்க மாட்டோமா என்ன?

அவள்: பார்ரா! சரி அது என்ன பாட்டு?
அவன்: இப்படி பொசுக்குனு கேட்டா? மறந்திடுச்சு. 400 பாட்டையுமா மானப்பாடம் செஞ்சு வைக்க முடியும்? எங்க ஐம்பதாவது பாட்டு என்னனு நீ சொல்லு பார்ப்போம்.
அவள்: எனக்குத் தெரியாது சாமி. நீங்க தான் ஏதோ படிச்சேனு சொன்னீங்க. சரி பாட்டோட பொருளாச்சும் சொல்லு.
அவன்: ஒரு நாள் கணவன் எதையோ தேடிட்டு இருந்தானாம். அப்ப தலைவிய கூப்பிட்டானாம். உடனே அவளும் தண்ணீ சேந்தறத விட்டுட்டு ஓடி வந்து அதைத் தேடிக்கொடுத்தாளாம். அந்த வாளியோ அவ விட்டுட்டு போன இடத்துலயே இருந்துச்சாம். அந்தக் கதை தானே?
அவள்: வாளிய கிணத்து மேட்டுல விட்டுட்டு போனா அங்கயே தான் இருக்கும். ஆமாம் நான் சொன்ன பொருளுக்கும் இந்தக் கதைக்கு என்ன சம்பந்தம்.
அவன்: சம்பந்தப்படுத்திக்கிட்டேன். அப்படி ஓடி வந்தவ தேடும் போது கணவனுக்கு போர் அடிக்கக் கூடாதுனு ஒரு பாட்டு பாடுனா. அந்தப் பாட்டு தான் இது.

அவள்: அடப்பாவி! வள்ளுவன் வாசுகி கதை, வெள்ளிவிதீயார் கதையெல்லாம் சேர்த்து புதுக் கதை சொல்லிட்டு இருக்கியே!
அவன்: அடப்போடி! நீ தமிழரின் மறைக்கப்பட்ட வரலாறு, தமிழனின் மூழ்கிப் போன வரலாறு அப்படினு எல்லாம் உலா வருகிற கதையெல்லாம் படிச்சது இல்லையா? போன தடவ குறுந்தொகை பாட்டு விளாக்கம் எழுதுன தானே? எத்தனை பேர் படிச்சாங்க?
அவள்: நூறு பேர் இருக்கும்.
அவன்: தெரியுமே! பத விளக்கம், அருஞ்சொற்பொருள் அப்படி இப்படினு மொக்கைய போட்டுருப்ப. நான் சொல்ற மாதிரி செய். இந்த மாதிரி நாலு கதைய சேர்த்து "தெரியுமா உங்களுக்கு! தமிழனாய் இருந்தால் சேர் செய்யவும்" அந்த மாதிரி எதாச்சும் எழுதி, இடையில உன் குறுந்தொகை விளக்கத்தை சேர்த்து எழுது. அப்புறம் பார் எத்தனை பேர் படிக்கறாங்கனு.
அவள்: (சிரித்துவிட்டு) சரி சாமி. இனிமேல் அப்படியே செய்கிறேன்!

அவன்: சரி சரி. அது என்ன பாட்டு? அந்த அம்மா எதை தேடுனாங்க. ஊசியா நூலா?
அவள்: கணவன்.
அவன்: என்னது கணவனையா? மேல சொல்லு. நில்லு நில்லு. கூட ஒரு பின்னணி இசை வச்சுருப்பியே. அதை மொதல்ல பாடு.
அவள்: "கண்கள் இரண்டும் இனி உம்மைக் கண்டு பேசுமோ... காலம் இனிமேல் நம்மை ஒன்றாய்க் கொண்டு சேர்க்குமோ"
அவன்: ரொம்ப பழையா பாட்டா இருக்கும் போல. என்ன படம்.
அவள்: மன்னாதி மன்னன். அச்சம் என்பது மடமையடா பாட்டு வருமே அந்தப் படம்.
அவன்: ஓ!

அவள்: இந்தப் பாட்டுலையும் கணவனைக் காணாத அந்த அம்மா எப்படி எல்லாம் தேடுவேன்னு பாடியிருப்பாங்க. அதே போலத் தான் குறுந்தொகைல வெள்ளிவீதியாரும் இந்தப்பாட்டுல தன் கணவனைத் தேடுனதைப் பற்றி எழுதியிருப்பாங்க.
"என் தலைவன் எங்கே சென்றிருப்பான். நிலத்தைத் தோண்டி உள்ளேயும் புகுந்திருக்க முடியாது. வானத்தைத் தாண்டி வெளியேயும் சென்றிருக்க முடியாது. கடலைக் காலாலும் கடந்திருக்க முடியாது. அப்படியென்றால் ஒவ்வொரு நாடாக, நாட்டில் உள்ள ஒவ்வொரு ஊராக, வீடு வீடாகத் தேடினால் கிடைத்துவிடுவான் தானே?" அப்படினு ரொம்ப அப்பாவியா எழுதியிருக்காங்க.

அவன்: "தேடிக் கிடைப்பதில்லை என்று தெரிந்த ஒரு பொருளைத் தேடிப் பார்பதென்று மெய் தேடல் தொடங்கியதே!" பாவம். இப்பவா இருந்த "காணவில்லை"நு முகநூலில் ஒரு பதிவு போட்டு தேடலாம். அப்ப அதெல்லாம் முடியாதே. அவங்க கணவரைத் தான் தேடுனாங்களா? சும்மா கவிதைக்காக எழுதியிருக்க மாட்டாங்களா. கேட்கவே ரொம்ப வருத்தமா இருக்கே.
அவள்: அவங்க கணவனைத் தேடி அலைந்ததா அகநானூற்றிலையும் பாடல்கள் இருக்கு. ஆதிமந்தி மாதிரி இவங்களும் கணவனைத் தேடி அலைந்திருக்காங்க. "கணையாழி இங்கே மணவாளன் அங்கே
காணாமல் நானும் உயிர் வாழ்வதெங்கே" அப்படி பாடிட்டே கணவனைத் தேடி அலைந்த பெண்கள் இருக்கத் தான் செய்யுறாங்க.
அவன்: ம்ம்ம். அவங்க கொண்டது மட்டுந்தான் காதலா என்ன? கணவன் தொலைத்த headset தேடி அலைந்து கண்டுபிடித்த பெண்களும் இருக்கிறார்கள். அவர்களின் காதல் இன்னும் மேன்மையானது. தெரியாதா உனக்கு?
அவள்: ???

பாடல்: குறுந்தொகை 130

நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரிற்
கெடுநரும் உளரோநம் காதலோரே. 

பாடியவர்: வெள்ளிவீதியார்
கூற்று – 1: பிரிவிடை அழிந்த (வருந்திய) தலைமகளைத் தோழி வற்புறுத்தியது. ”நீ அவர் பிரிந்தரென்று ஆற்றாயாகின்றது என்னை? யான் அவர் உள்வழி அறிந்து தூதுவிட்டுக் கொணர்வேன். நின் ஆற்றாமை நீங்குக”, எனத் தோழி தலைமகளை ஆற்றுவித்தது.

கூற்று – 2: தோழி தூது விடுவாளாகத் தலைமகள் தனது ஆற்றாமையாற் கூறியதூஉமாம்.

விளக்கம்:
இப்பாடல் எளிய தமிழில் இன்றும் நாம் வாசித்துப் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தமையால் பதவுரையையும் செய்யுள் விளக்கமும் தேவையில்லை என்று நினைக்கிறேன்.

மன்னாதி மன்னன் படபாட்டுக்கும் இதுக்கும் இன்னொரு தொடர்பு கூட இருக்கிறது. தூது போகவா என்று கேட்கும் தோழிக்கு தலைவி சொல்லும் பதில் தான் இந்தப் பாடல். "சேதி சொல்லும் யாரும் தூது செல்லக் காணேன்" என்று வருகிற வரிகளை இந்தப் பாட்டின் தலைவி சொல்லாமல் மனதிற்குள் குமுறும் வரிகளாய் இட்டுக் கேளுங்களேன்! " எங்க நீ தூது போறேன்னு தான் சொல்லுற. ஆனா சேதி மட்டுந்தான் சொல்ற. எல்லாரும் இப்படித் தான்." என்று பொருந்துவதாகவே வரும்.

சுபா

Wednesday, 8 November 2017

ஆருடம்-ஆரூடம் தென் அமெரிக்க பழங்குடியினரின் சொல்லும் தமிழ்ச்சொல்லும்

எக்குவடோர்(Ecuador) பெரு பகுதிகளில் வாழும் தென் அமெரிக்கப் பழங்குடிகளில் ஒன்று சூவார் (Shuar). அம்மக்களிடையே ஓர் நம்பிக்கை உண்டு. அவர்களை இறைவழிபாடே அற்ற அரக்கர்கர்கள் என்று ஐரோப்பியர்கள் நினைத்தார்கள். ஆனால் அம்மக்களின் நம்பிக்கை காடுகளைவிட்டு வெகுதொலைவில் வாழும் நகரவாசிகளால் புரிந்துகொள்ள முடியாத ஒன்று.

அவர்கள் ஓர் ஆன்மா(Spirit) இருப்பதாகக் கருதுகிறார்கள். எப்படித் தமிழின் அறம் என்ற சொல்லையும், வடமொழியின் தர்மம் என்ற சொல்லையும் அச்சொற்களோடு சேர்ந்து வரும் கருத்தியலையும் பிறமொழிகளில் அப்படியே மொழிபெயர்க்க முடியாதோ மொழிபெயர்த்தாலும் அதன் முழுப்பொருள் விளங்கும்படி சொல்லவியலாதோ அது போலத் தான் அவர்களது இந்த நம்பிக்கையும். ஆன்மா, Spirit என்றெல்லாம் மொழிபெயர்க்கலாம் ஆனால் அம்மக்கள் புரிந்துகொள்ளும் அதே பொருளிலும், நம்பிக்கையிலும், கருத்தியலிலும் அதனை நம்மால் உள்வாங்கிக் கொள்ள முடியாது.

இந்தக் கடவுளுக்கு நிகரான ஒன்றை நாம் ஒருவாறு புரிந்துகொள்ள முயலலாம். அதற்கு மனித உருவும் இல்லை, அது மனிதனும் இல்லை. அதுவே காட்டை இணைக்கும், காக்கும் புள்ளி என நம்புகிறார்கள். மனிதன், அனகோண்டா, யாகுவார் என அனைத்திலும் அந்த சக்தி நிறைந்திருக்கிறது என்கிறார்கள். கிட்டத்தட்ட நமது இயக்கி (இசக்கி) வழிபாடு போல. தமிழரிடத்தே இருக்கும் பெண்தெய்வ வழிபாடும், முனியடித்தல் போன்ற நம்பிக்கைகளுக்கும் இணையான ஒன்று இது.

இதனைத் தேடி அலைந்து அதன் ஆற்றலைப் பெற்றுக் கொள்ளுதல் என்பது அவர்களது வாழ்வில் இன்றியமையாத ஒன்று. அப்படிப் பெற்றால் தான் அந்தக் காட்டில் தங்களால் உயிரோடு இருக்க முடியும், அதுவே தங்களைக் காக்கும், இறப்பிற்கு பின்னும் அதனுடையே தான் கலக்க வேண்டும் என்று நம்புகிறார்கள். அனகோண்டா, யாகுவார் என எல்லாமே அது தான் என்கிறார்கள். சரி எப்படி அதனைத் தேடுகிறார்கள் என்று பார்த்தால் பல வழிகளில் தேடல் நடக்கிறது.

சரி அதற்கென்ன இப்பொழுது என்கிறீர்களா? அந்த ஆற்றலின் ஆன்மாவின் இயக்கத்தின் பெயர் ஆருடம். ஆங்கிலத்தில் இப்படி இருந்தாலும் அவர்களின் மூல மொழியின் பலுக்கலானது ஏறுடம் என்பதைப் போன்று இருக்கின்றது. (ஆங்கிலத்தில் றகரமில்லை என்பதனால் அவர்கள் ஆருடம் என்பது போல ஒலிக்கிறார்கள்) ஆ, ஏ என்ற இரு உச்சரிப்புக்கு இடையே அமைந்த ஒன்று.

இதை எப்படிக் கண்டடைகிறார்கள் தெரியுமா? காட்சிகளின் மூலம். ஆமாம் ஆருடம் காட்சியளிக்கிறான். வயது வந்த மகனை புயல் நாளில் தந்தை ஆருடத்தைக் கண்டு (உணர்ந்து) அதனிடமிருந்து ஆற்றலைப் பெறச்சொல்கிறார். மகனும் ஈட்டியோடு செல்கிறேன், ஆருடம் வந்தால் அதன் முன் எதிர்த்து அஞ்சாதவனாய் நிற்கிறான், அதன் ஆற்றலைப் பெருகிறான். அன்று அதனை எதிர்த்து நில்லாமல் விட்டால் அவனுக்கு அழிவு தான் என நம்புகிறார்கள். இது கிட்டத்தட்ட நமது ஊரில் நாம் கேள்விப்படும் முனியடித்தல் போல இருக்கிறதல்லவா?

சிலர் ஓர் அருவிக்கு சென்று அங்கு சில செடிகளை உண்டு பிறகு ஆருடத்தின் காட்சிக்காக காத்திருக்கிறார்கள். ஐயவுசுக்கா சாமான் பற்றி எல்லாம் கேள்விப் பட்டிருப்பீர்கள். அதன் மூலமும் காட்சிகள் காணக்கிடைக்கிறது அவர்களுக்கு. இந்த செயலினை ஏற்றம் என்றே சொல்கிறார்கள். ஆருடனும் ஏறி வந்து காட்சிகளைத் தருகிறான். அந்தக் காட்சிகளே கூட ஆருடம் தான். பாம்புகளும் யகுவார்களும் இன்னும் பல காட்டோடு தொடர்புடைய காட்சிகளுமாய் வரும் அந்த ஆற்றலின் வெளிப்பாடே இந்த ஆருடம்.

தமிழில் இந்த ஆரூடம் என்னும் சொல்லுக்கு ஏறுயது என்றும் பொருள். இதுவொரு வகையான சோதிடம் தான். ஆனால் தொடக்கத்தில் எந்த வகையான கணிப்புகள் இதில் இடம்பெற்றது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஏறி வந்து குறிப்புகள் தந்திருக்க வேண்டும், இல்லையேல் குறி கேட்டவர்கள் ஏறிச்சென்று குறி கேட்டிருக்க வேண்டும். ஆனால் எது ஏறி வந்தது, இல்லை எதில் ஏறிச்சென்றார்கள் என்ற தகவல்கள் எல்லாம் இல்லை. தமிழில் ஏறுதல் என்பதன் அடியில் பொருளில் பிறந்தது தான் ஆரூடம் என்று இராம்கி ஐயா அவர் கட்டுரை ஒன்றில் குறிப்பிடுகிறார்.















பி.கு: எப்படி இந்த இரு சொற்களுக்கும் அவை நுட்பமாய் உணர்த்தும் பொருளுக்கும் தொடர்பிருக்கிறது என நான் அறியேன். ஞாலத்தின் முதல்மொழி தமிழ் என்று சொல்பவர்களுக்கு கொம்பு சீவி விடவும் நான் இதையெழுதவில்லை. தமிழின் சொற்களை எப்படி வேண்டுமானாலும் வளைத்துப் பொருளைக் கொணர்ந்து பிறமொழிச்சொற்களுக்கு பொருத்திக் காட்ட முடியும். அதை இங்கு இணைய வெளியில் பலரும் செய்கிறார்கள். நான் இங்கு அதைச் செய்யவில்லை. இருக்கும் சொல்லையும் அதன் பொருளையும் பின்புலத்தையும் அப்படியே கொடுத்திருக்கிறேன். அவ்வளவே!

http://agarathi.com/word/%E0%AE%86%E0%AE%B0%E0%AF%82%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D
http://www.minelinks.com/ecuador/arutam_1.html
http://valavu.blogspot.in/2006/11/blog-post.html

சங்க இலக்கியக் காதல் - மோர்க்குழம்பு

சமையற்கட்டில் அவள் கையைக் கழுவிவிட்டு தன் ஆடையிலேயே கையைத் துடைக்கிறாள்.

அவன்: ஏய்! இது என்ன புதுப் பழக்கம். கழுவிட்டு வேற துணில தானே கையைத் துடைப்ப!
அவள்: புதுப்பழக்கமா? இது தான் நம்ம பாரம்பரியம். அவங்க அவங்க சமைச்சுட்டே கையை போட்டுருக்குற துணியில தான் துடைப்பாங்களாம். நான் இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா முன்னேறிட்டு இருக்கேன். நம்ம முன்னோர் ஒன்னும் முட்டாள் இல்லைங்க.
அவன்: அடிப்பாவி! விட்ட நீ செஞ்ச தப்ப மறைக்க சங்க இலக்கியத்துலையே இதப்பத்தி பாடியிருக்காங்கனு சொல்லுவ போல.
அவள்: ஆமாம். சங்க இலக்கியத்துல பாட்டு இருக்கே!
அவன்: இதையெல்லாமா பாடியிருக்காங்க? அடிச்சுவிடு அடிச்சுவிடு!
அவள்: அட உண்மையா தான்.
அவன்: பாட்டை சொல்லு பார்ப்போம்.

அவள்: லா லா லா.. லாலா லா லா லா...
அவன்: ஏய்! சங்க இலக்கியப் பாட்டைப் பாட சொன்னா நீ என்ன சூரிய வம்சம் படப்பாட்டை பாடுற!
அவள்: என்ன அவசரம்? பின்னணி இசையோட ஆரம்பிக்கிறேன். அந்தப் படத்துல வந்த இட்லி உப்புமா காட்சி நியாபகம் இருக்கா?
அவன்: என்னது? அந்தக்காலத்துல இட்லி உப்புமா எல்லாம் செஞ்சாங்கனு மட்டும் சொல்லிடாத. என் சின்ன நெஞ்சு பிஞ்சு பிஞ்சு உடைஞ்சு போயிடும்.
அவள்: (சிரித்துவிட்டு) இல்ல, இல்ல. சங்க இலக்கியத்துல மோர்க்குழம்பா மாத்திட்டாங்க.
அவன்: என்னது மோர்க்குழம்பா? ஐயோ அதிர்ச்சிக்கு மேல அதிர்ச்சியக் கொடுக்குறாளே! போதும்! இத்தோட நிப்பாட்டிட்டு பாட்டை சொல்லு.

அவள்: சூரியவம்சம் படத்துல வர்ரது போலத் தான். சரத்குமார்-தேவயானி போல நம்ம தலைவனோடு தலைவி உடன்போகிவிடுகிறாள்.
அவன்: யூ மீன் ஓடிப்போதல்? அருமை அருமை. மேல சொல்லு.
அவள்: அந்த சூரியவம்சம் தேவையானி போலவே நம்ம தலைவியும் நல்ல செல்வாக்கான வீட்டில் பிறந்து வளார்ந்தவள். வீட்டு வேலை எதுவும் செய்யத் தெரியாதவள். ஆனால் இப்பொழுது தலைவனோடு தனியே வாழ்கிறாள். அந்தப் படத்தில் வரும் அப்பாவைப் போலவே தலைவின் அம்மாவுக்கும் ஒரே வருத்தம். " ஐயோ பொண்ணு என்ன செய்யுறாளோ! எப்படி துன்பப்படுறாளோனு" ஒரே கவலை தான் அவளோட அம்மாவிற்கு.
அவன்: அடிப்பாவி! அப்படியே சந்தடி சாக்குல உன் கதையை உள்ள கொண்டுவரியே.
அவள்: கதை கேப்பியா மாட்டியா? எல்லாக் காலத்துலையும் அம்மா பொண்ணுனா அப்படித் தான். அதுவும் மாறவேயில்லை.
அவன்: சரி சரி. மேல சொல்லு.

அவள்: இப்படி அவள் அம்மா புலம்பிக் கொண்டு இருக்கும் போது தலைவியின் ஊருக்குப் போய்விட்டு வந்த செவிலித்தாய் தலைவியைப் பற்றி சொல்கிறாள். தேவயானியின் அப்பா இட்லி உப்புமா சாப்பிட்டுவிட்டு வந்து "உன் பொண்ணு என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா?" என்று பெருமையாகச்சொல்வாரே! அதே போன்ற காட்சி தான் இதுவும்.
செவிலித்தாய் சொல்கிறாள் " அட நீ ஏன் புலம்பிட்டே இருக்க. உன் பொண்ணு அங்க என்னமா குடும்பம் நடத்துறா தெரியுமா? அன்னைக்கு அப்படித் தான் மோர்குழம்பு சமைத்திருந்தாள். எங்க நேரம் ஆகிடுமோனு தயிரைப் பிசைந்துவிட்டு அந்தக் கையைக் கூட கழுவாம அப்படியே அதை ஆடையில துடைச்சிக்கிட்டு, அவள் கணவனுக்கு மோர்க்குழம்பு செய்து கொடுத்தான். அவனோ அது புளிப்பாய் இருந்தாலும் " இனிமையா இருக்கே!" என்று சொல்லிக் கொண்டே சாப்பிட்டான்"
அவன்: அவன் ரொம்ப நல்லவன்னு நினைக்கிறேன். நல்லா இல்லாத சோறக் கூட ரொம்ப நல்லா இருக்குனு சாப்பிட்டுருக்கான். காதலுக்கு கண்ணு மட்டுந்தான் இல்லைனு நினைச்சேன்.
அவள்: சரி சரி. கதை முடிஞ்சுருச்சு. கதையில சொல்லாத அடுத்த காட்சியை சொல்லவா?
அவன்: என்ன?
அவள்: சாப்பிட்டுவிட்டு தலைவன் பாத்திரங்களையும் கழுவி வைத்துவிட்டு அன்பு மனைவியிடம் சொல்கிறான் " அன்பே! இனி தினமும் நானே உனக்கு உதவி செய்கிறேன்"
அவன்: போச்சுடா. கதை கேட்டது ஒரு குத்தமா???
...................................


பாடல்: குறுந்தொகை 167
முளிதயிர் பிசைந்த காந்தண் மெல்விரல்
கழுவுறு கலிங்கங் கழாஅ துடீஇக்
குவளை யுண்கண் குய்ப்புகை கழுமத்
தான்றுழந் தட்ட தீம்புளிப் பாகர்
இனிதெனக் கணவ னுண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன் றொண்ணுதல் முகனே. 
திணை: முல்லை.
பாடியவர்: கூடலூர் கிழார்
கூற்று: கடிநகர்ச் சென்ற செவிலித்தாய் நற்றாய்க்கு உரைத்தது. 

பதவுரை:
கடிநகர் - தலைவனும் தலைவியும் மணம்புரிந்து கொண்டு இல்லறம் நடத்தும் மனை.
கலிங்கம்- ஆடை
குய் புகை- தாளிப்பினது புகை.


விளக்கம்:
காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் தலைவிக் கட்டித் தயிரைப் பிசைந்துவிட்டு அதனைத் தன் ஆடையில் துடைத்துக் கொண்டும், துடைத்த ஆடையைத் துவைக்காமல் உடுத்திக் கொண்டும், குவளை மலர் போன்ற அவள் கண்களில் தாளித்த புகை அடித்திருந்தாலும் அவள் தானே துழாவிச்சமைத்த புளித்த மோர்க்குழம்பை அவளது கணவன் "இனிமை இனிமை" என்று சொல்லிக் கொண்டு சாப்பிடுவதைப் பார்த்து அவள் முகம் மலர்ந்திருக்கிறது.



Tuesday, 17 October 2017

சங்க இலக்கியக் காதல் - ஒரு முன்னோட்டம்

சங்க காலத்திலும் காதலர்களுக்கு வாழ்க்கை அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.

தலைவியும் தலைவனும் காண்கிறார்கள், களிக்கிறார்கள். ஆனால் களித்திருந்த காலங்களிலும் கூடத் தலைவி "திக் திக்" என்றே இருக்கிறாள். எங்கே அவன் விட்டுவிட்டுப் போய்விடுவானோ என்ற பயம் மிகுதியாகவே இருக்கிறது. புலம்பித் தீர்க்கிறாள். இருவரும் பழகுவது ஊருக்குத் தெரிந்து அவர்கள் பங்கிற்கு கண்டதையும் பேசுகிறாள். தலைவிக்கு மேலும் பயமும் கவலையும் அதிகரிக்கிறது.

தலைவனிடம் நேரே கேட்கக் கூட பயமும் தயக்கமும் அவளுக்கு இருக்கிறது. அதனால் தோழியும் அவளும் தலைவன் காதில் விழும்படி சாடை மாடையாக காதல், திருமணம், ஊரார் பேச்சு என்றெல்லாம் கதைக்கிறார்கள். தலைவன் திரும்பி வரவேயில்லை என்றால் குருகையும் கூழையையும் சாட்சிக்கு வருவார்கள் என்று பிதற்றுகிறாள்.

ஒருவேளை தலைவன் திருமணத்திற்கு இசைந்தாலும் அதன் பிறகு இன்னும் சிக்கல்கள் தான். அந்தக் காலத்திலும் காதல் பட அப்பாக்கள் தான் அதிகம் போல. தலைவியை சிறை வைக்கிறார்கள், காதலை எதிர்க்கிறார்கள். தலைவனுக்கோ திருமணத்திற்கு பொருள் வேண்டும். பொருள் ஈட்டச் செல்கின்றான். அப்பொழுது தலைவிக்கு பயம் இன்னும் கூடிக் கொண்டே போகிறது. தலைவனின் பிரிவு, அவன் வருவான என்ற பயம், வீட்டுக்காவல், ஊரார் பேச்சு என்று தாங்க முடியாமல் உடல் மெலிந்து போகிறாள்.

தலைவன் வந்துவிட்டாலும் பெற்றோர் ஒன்றும் ஏற்பதாயில்லை. வேறு வழியில்லாமல் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். தோழி உதவுகிறாள். அட உடன்போக்கு என்ன அவ்வளவு எளிதாகவா இருக்கிறது, போகிற வழியெல்லாம் சிக்கல் தான்.

ஒரு வழியாக தலைவனுடன் வாழத் தொடங்குகிறாள். அப்பாடா என்று இருக்கலாம் என்று பார்த்தால் தலைவன் பரத்தி வீட்டிற்குப் போகிறான். மீண்டும் புலம்பல் தொடங்குகிறது. எல்லாம் முடித்து மக்கட்செல்வம் வரும் போது தலைவி தாயாகும் போது அவளது மகள் உடன்போக்கு மேற்கொள்கிறார்கள். அப்பொழுதும் மகளை நினைத்துப் புலம்புகிறாள்.

தலைவனின் வாழ்க்கை கொஞ்சம் வேறு மாதிரி. இப்பொழுது இருப்பது போலத் தான். தலைவியைப் பார்க்கிறான், காதலிக்கிறான். தலைவியும் ஏற்றால் களவொழுக்கும், இல்லையேல் " ஏத்துக்குவியா இல்லைனா கைய அறுத்துக்குவா" என்று கேட்கிறான். இல்லை இல்லை. அப்பொழுது கையை அறுக்கும் பழக்கம் இல்லை. அதனால் மடலேறுகிறான். ஊருக்கே இவனின் ஒருதலைக் காதல் தெரிய வருகிறது. ஊர் அவனை மட்டுமா பேசும் அவளையும் சேர்த்தே பேசும். தலைவிக்கு அப்பொழுதும் சிக்கல் தான், அதனால் வீட்டில் பிரச்சனை வேறு.

தலைவனும் தலைவியும் பார்த்தவுடன் தலைவியை வீட்டுக் காவலில் வைக்கிறார்கள். தலைவி வர முடியவில்லை என்று சொல்ல வந்த தோழியிடம் " அவள வர சொல்லுறியா இல்ல போலீச கூப்பிடவா" என்று கேட்கிறான் தலைவன். ஆமாம் தலைவி வரவில்லையென்றால் அரசனிடம் முறையிடுவேன் என்கிறேன்.

தலைவியும் அவனும் திருமணம் புரிந்து கொள்ள முடிவு செய்து பொருளீட்டச் சென்றால் அங்கும் அவனுக்குத் தலைவியின் நினைப்பு தான்.

2000 ஆண்டுகள் ஆனாலும் காதல் மட்டும் இன்று இருப்பது போலவே இருக்கிறது. காதலி காதலை ஏற்க மாட்டாள், விட்டுவிடுவாள் என்ற நினைப்பு வரும் போதே காதலன் தடாலடி முடிவெடுத்து தலைவியை சிக்கலில் மாட்டிவிட நினைக்கிறேன். ஆனால் தலைவியோ தோழியிடமும் பறவைகளிடமும் புலம்பிக் காலத்தைக் கழிக்கிறாள். இன்றும் இதே நிலை தானே..

Wednesday, 4 October 2017

கூப்பரின் புறாவடி - Cooper's Hawk

Cooper's Hawk
கூப்பரின் புறாவடி
இப்பருந்தை கூப்பரின் புறாவடி என்றழைக்கலாம் என்பது என் எண்ணம். எப்படி மொசலடி, புறாவடி போன்ற பெயர்கள் பருந்துகளைக் குறிக்க நம் வட்டார மொழி வழக்கில் பயன்படுகின்றன என்று முன்பொரு முறை எழுதியிருந்தேன்.
(http://isainirai.blogspot.com/2017/03/2.html) அதன்படி இதனையும் புறாவடி என்று அழைக்கலாம். பறவையியலாளர் வில்லியம் கூப்பரை (William C Cooper) போற்றும் விதமாக இப்பருந்துக்கு கூப்பரின் பெயர் இடப்பட்டதால் இதனை முறையே கூப்பரின் புறாவடி எனலாம்.
ஏன் புறாவடி?
ஆடோபான் அவர் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "It passes along in a silent gliding manner, with a swiftness even superior to that of the Wild pigeon (Passenger Pigeon). In the Southern states it was known by the name Great Pigeon Hawk". அமெரிக்கக் காட்டுப்புறாவை விட சிறப்பாய் பறந்து அதனை எளிதாய் வேட்டையாடும் திறன் கொண்ட பறவை இது. அதனை வட அமெரிக்காவின் தென் பகுதிகளில் Great Pigeon Hawk என்றே அழைத்திருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட நம் புறாவடி போன்ற ஒரு பெயர் தான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு Passenger Pigeon என சொல்லப்படும் உருவத்தில் பெரியதாய் இருக்கும் காட்டுப்புறாகளை வேட்டையாடிய பருந்து இது. ஆனால் அப்புறாக்கள் அழிந்து போகவே இது தற்பொழுதும் பெரும்பாலும் புலம்பும் புறாக்களை இரையாய்க் கொள்கிறது.
முன்னர் காடுகளிலே காணப்பட்ட இப்பருந்து இன்று காட்டுகளின் ஓரங்களிலும், சில சமயம் மரங்கள் அடர்ந்த நகர்ப்புறங்களிலுமே காணப்படுகிறது. இதனைக் காட்டுவாழ் கொன்றுண்ணி என்று வகைப்படுத்துதலே தவறோ என்கிறார் Pete Dunne. அவரது முந்தைய நூல்களில் இதனைக் காட்டுவாழ் கொன்றுண்ணி என்று வகைப்படுத்திய அவரே அதை தவறு என்கிறார். இன்று தன் முக்கிய இரை, காடுகளில் வாழ்ந்த காட்டுப்புறாவிலிருந்து நகர்புறங்களில் வாழும் புலம்பும் புறாவுக்கு மாறவே, முன்னர் காடுகளில் இருந்த இப்பறவையும் இடம்பெயர்ந்திருக்கிறது என்கிறார். இரையின் பரம்பலே கொன்றுண்ணிகளின் பரம்பலையும் நிர்ணயிக்கின்றன.
எப்படியானாலும் இது அன்றும் இன்றும் புறாவடி தான். புறாவடி என்று அழைப்பதன் மூலம் பறவை ஆர்வலர்களுக்கு இதன் முக்கிய இரை பற்றியும், அதன் வேட்டை முறை பற்றியும் விளக்காமலேயே எளிதாய் புரியும். அமெரிக்க வாழ் பறவையார்வலர்களுக்கு இதன் இரை புலம்பும் புறா என்பதும், அதன் பரம்பல் என்ன என்பதும் கூட சொல்லாமலேயே தெரிந்துவிடும். அதனாலேயே இப்பெயர் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
இப்படம் அமெரிக்கத் தலை நகரில், கட்டிடங்களுக்கு இடையே மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் எடுக்கப்பட்டது.
Cooper's Hawk
கூப்பரின் புறாவடி














Jan 21-2017
Smithsonian's National Zoo, DC.

Thursday, 28 September 2017

Bald Eagle- வெண்டலைக் கழுகு.

Bald Eagle- வெண்டலைக் கழுகு.
Haliaeetus leucocephalus

அமெரிக்கரிக்கர்கள் ஆங்கிலத்தில் இதைச் சொட்டைக்கழுகு என்று அழைக்கிறார்கள். வெந்நிறமாய் இருக்கும் அதன் தலை சொட்டை போன்று தோன்றுவதால் அதனை இப்படி அழைக்கிறார்கள். தமிழில் இதனை வெண்டலைக் கழுகு என்றே அழைக்கலாம் என நினைக்கிறேன்.

இதுவொரு மலங்கழுகு. அதாவது கழுகளிலியே மிகப்பெரிய வகைக் கழுகு. இது Fish Eagle வகையைச் சேர்ந்தவொரு கழுகு. இதன் முக்கிய உணவு மீன் என்றாலும் மற்றவற்றையும் உண்ணும்.

அமெரிக்கா வரும்போதே பார்த்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில் இருந்த பறவையிது. பார்ப்பதற்காக அடித்துப்பிடித்து மேரிலாந்திம் டெலாவர் தீபகற்பத்தில் இருக்கும் "BlackWater Wildlife Refuge" சென்றோம். அங்கு இதற்கும் விராலடிப்பானிற்கும் (Osprey) 'Raptor Cam' என்று சொல்லப்படும் இரையாடிப் பறவைகளின் கூடுகளை நேரடி ஒலிபரப்பு செய்யும் வசதியிருக்கிறது. அதனால் எப்படியும் வெண்டலையைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் பார்க்க முடியவில்லை. அங்கு சந்தித்த ஓர் அமெரிக்கப் பறவை ஆர்வலர் தம்பதியினர் எங்களுக்கு வேறு எங்கு பார்க்க முடியும் என்று சொன்னார்கள்.

அடுத்த சில நாட்களிலேயே அடித்துப்பிடித்து அவர்கள் சொன்ன கானோவிங்கோ அணைக்கு (Conowingo Dam) சென்றால் அங்கே திரும்பிய இடமெல்லாம் வெண்டலைகள் தான். 17 கழுகுகளை அன்று பார்த்தோம். அங்கிருந்த இன்னொரு பறவையாளர் சொன்னார் " இது என்ன பிரமாதம், நவம்பர் மாதம் வாருங்கள். கனடாவில் இருந்து வலசை வரும் வெண்டலைகளும் இங்கே இருக்கும். நூற்றுக்கும் அதிகமானவை மீன் வேட்டை செய்வதைப் பார்க்கலாம்" என்றார். ஆம், உலகெங்கும் இருந்து எண்ணற்ற புகைப்படக்காரர்கள் அந்த அணைக்கு நவம்பரில் படையெடுத்து வருவார்களாம். நவம்பரில் சென்று பார்த்துவிட்டு மேலும் அதைப் பற்றி எழுதுகிறேன்.

அமெரிக்காவின் தேசியப்பறவை என்பதால் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு அமெரிக்கப் பறவை இது எனலாம். சாமானிய அமெரிக்கர்கள் இதனைத் தங்கள் சின்னமாகக் கொள்வதில் பெருமிதங்கொண்டாலும், பறவைகளில் ஆர்வம் மிகுந்த அமெரிக்கர்கள் இதனை சின்னம் என்று சொல்லும் போதே முகம்சுழிக்கத் தான் செய்கிறார்கள். காரணம் கேட்டால் "Moral values" அற்ற பறவையைப் போய் சின்னமாகக் கொள்வதா என்றும் வருத்தமும் தெரிவிப்பார்கள்.

ஆம், இதன் செயல்கள் நாம் நற்பழக்கம் என்று போதிப்பவைக்கு எதிரானவை. இவை இரையாடுவதை விட இரையைத் திருடுவதை அதிகம் விரும்புவ. விராலடிப்பான் மிகுந்த சிரமத்திற்குப் பின்பு பிடித்து வரும் மீங்களை இவை தங்கள் உடல்பலத்தை வைத்து வழிப்பறி செய்து விடும். சில சமயங்களில் அவற்றின் கூட்டில் இருந்து திருடுவது, கூட்டையே திருடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடும். ஆனால் அதன் குணம் அது என்று மனிதர்களின் கருத்தியல்களை அதன் மீது ஏற்றாமல் இரசித்துவிட்டுப் போக வேண்டும் நாம்.

இவை நீண்ட காலம் வாழ்பவை. 28 வருடம் வரை வாழ்ந்த கழுகுகளும் உண்டு. அதே போல இவற்றின் கூடுகளும் புகழ்பெற்றவை. புளோரிடாவில் இருக்கும் ஒரு வெண்டலைக் கூடு 10 அடி அகலமும், 20 அடி ஆளமும் இருக்கிறது. ஓகாயோவில் இருக்கும் ஒரு வெண்டலைக் கூடு 34 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. அந்தக்கூட்டின் எடை மட்டும் இரண்டு மெட்ரிக் டன், அதாவது 2000 கிலோ.

அமெரிக்க நண்பர்கள் பூங்காக்களுக்குச் செல்லும் போது அடிக்கடி மேலே பாருங்கள், வெண்டலை பறந்தால் எளிதாய் இனங்காண முடியும்.

Bald Eagle -Connowingo Dam, Maryland

Wednesday, 27 September 2017

மலை (மல) - பெரிய என்னும் மற்றொரு பொருள்.

மலை (பேச்சு வழக்கில் மல) என்னும் முன்னொட்டிற்கு மா என்னும் உரிச்சொல் போலவும் ஆளப்படுகிறது. மலை என்பதும் உரிச்சொல் தான் என்பது என் எண்ணம்.

சிறுவயதில் மலைப்பாம்பு என்று கேட்கும் போதெல்லாம் அதை மலையில் காணப்படும் பாம்பு என்றே நினைத்திருந்தேன். பிறகு தான் தெரிந்தது அது பெரிய பாம்பு என்னும் பொருளிலேயே மலைப்பாம்பு என்னும் பெயர் பெற்றது.

இருளர் இனத்தைச் சேர்ந்தவர் அமெரிக்கர்களுக்கு பாம்பு பிடிப்பதைப் பற்றிச் சொல்லிக் கொடுக்கும் காட்சி.



மலைவேம்பும் அப்படித் தான். அதன் இலைகளும் பூவும் வேம்பை விடப் பெரியதாய் இருக்கும். மா, பெரிய போன்ற பொருளில் மலை- வேம்பு என்னும் பொருளில் மலைவேம்பு எனப்பட்டது.
அதே போன்று இன்னொரு மரவகை மலங்கிலுவை. கிலுவை மரத்தின் இலைகளை விட இதன் இலைகள் பெரியதாய் இருக்கும். அதனால் இது மலங்கிலுவை.
மலைவேம்பு


மலநெல்லிக்கா என்று நாம் அழைக்கும் மலைநெல்லிக்காய் நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிலர் அதைப் பெரிய நெல்லி என்பார்கள்

மலைநெல்லி

பெரிய வகைக் கழுகுகளை மலங்கழுகு என்பார்கள். கருடன் என்று நாம் சொல்வதெல்லாம் பருந்து வகை ( கழுகு கிடையாது).  அவை உருவத்தில் சிறியவை. கழுகு என்பதே பருந்துகள், வல்லூறுகளை விடவும் பெரியது. மலங்கழுகு என்றால் கழுகளில் மிகப்பெரிய கழுகைத் தான் குறிக்கும். பெரியா பாட்டி சொல்லக் கேட்ட பெயர் இது. ஊரில் எப்பொழுதாவது தான் பார்க்க முடியும் என்றார். இராசாளி போன்ற ஒரு பெரிய கழுகைக் குறிக்கத் தான் இது பயன்பட்டிருக்க வேண்டும். White bellied sea Eagle, Black Eagle, Bonelli's Eagle, Indian spotted Eagle  போன்ற பெருங்கழுகுகளைப் பொதுவாகக் குறிக்கவோ இல்லையேல் அவற்றுள் ஒன்றின் பெயராகவோ மலங்கழுகு என்னும் சொல் பயன்பட்டிருக்கிறது.

"மலமாடு மாதிரி வளந்திருக்க" என்பார்கள் ஊர்ப்பக்கம். இதுவுமே மலைமாடு என்னும் குறிப்பிட்ட மாட்டு இரகத்தைக் குறிக்காமல் பெரிய மாடு என்னும் பொருளில் தான் வழங்கப்பட்டிருக்க வேண்டும். காங்கேயம், புளியகுளம் வகைகள் மலைமாடு என்னும் வகையை விட உருவத்தில் பெரியவை. மாட்டு இரகங்களை உவமாயகக் கூறவேண்டும் என்றால் காளையென்றோ, கங்கேய மாடு என்றோ அல்லது அந்த அந்த பகுதியில் இருக்கு இரகங்களை வைத்தோ தான் சொல்லியிருக்க வேண்டும். இது நிச்சயம் மாட்டு இரகத்தைக் குறிக்கவில்லை.

இன்னும் நிறைய சொல்லாடல்களில் மலை என்னும் சொல்லொட்டு இயல்பாய் பயின்று வந்து பெரிய என்னும் பொருள் தருவதைப் பார்க்கலாம். மலம்பூண்டு/மலப்பூண்டு, மலவாழை இப்படி நிறைய சொற்கள் இருக்கின்றன.

மலம்புழா என்னும் ஆற்றின் பெயர் கூட பெரிய புழா ( ஆறு) என்னும் பொருள் பெற்றிருக்கலாம். ( நான் மலையாளம் அறியேன். அதனால் இது ஒரு ஊகமே).

அதேபோல இன்னொன்று மலையில் மட்டுமே காணப்படும் ஆட்டு வகையை மலையாடு என்பதில்லை. மிகத்தெளிவாக பொருள் மயக்கமே வராதது போன்று வரையாடு என்றே சொல்கிறோம். சங்க இலக்கியங்களும் அச்சொல்லாட்சியையே பயன்படுத்துகின்றன. 

மக்கள் பேச்சு வழக்கில் மட்டும் இருக்கும் ( இன்னும் எழுத்தில் ஏற்றப்படாத சொற்களை) சொற்களைப் பார்த்தால் வலிமிகவில்லை. இனமிகலே இருக்கிறது. மலைக்கழுகு இல்லை. மலங்கழுகு, மலம்பூண்டு, மலங்கிளுவை. பேச்சு வழக்கில் மலவேம்பு, மலநெல்லி என இருப்பவை எழுத்திற்கு வரும் போது முறையே மலைவேம்பு மலைநெல்லி என்று எழுதப்பட்டன. எனக்கென்னவோ இவை மிகைதிருத்தம் போலத் தெரிகின்றன. மலம்பாம்பு தான் மிகைதிருத்தப்பட்டு மலைப்பாம்பாகியிருக்க வேண்டும். (இன்றும் கிராமங்களில் எப்படி உச்சரிக்கிறார்கள் என்று உற்று நோக்கினால் மலம்பாம்பு என்று இருக்க வாய்ப்புள்ளது) மலம்புழா என்பதும் பொருந்தி வருகிறது. இன்னும் ஒரு அடி மேலே போய் எனக்குத் தோன்றுவது மல என்பது தான் உரிச்சொல். செல்வா ஐயா ஒருமுறை எழுதியிருந்தது: சிலம்பு ( வளை) என்னும் பொருளின் அடியிலேயே வெற்பு என்பதற்கு அப்பெயர் வந்தது. அதே போல மல- பெரிய என்னும் அடியில் வெற்பு என்பதற்கு மலை என்னும் பெயர் வந்திருக்கலாம். மலையில் இருந்து மல தோன்றாமல், மலவில் இருந்து மலை தோன்றியிருக்கலாம்.

புதிதாய் பறவைகளுக்கு பெயரிடும் நண்பர்கள் Great, large, greater போன்ற ஆங்கிலச் சொற்களை அப்படியே மொழிபெயர்க்காமல் இடத்திற்கு தகுந்தவாறு மலை, மல என்னும் சொற்களையும் பயன்படுத்தலாம்.
கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
(படங்கள் இணையத்தில் இருந்து எடுக்கப்பட்டவை)