Showing posts with label தமிழ்ப்பெயர்கள். Show all posts
Showing posts with label தமிழ்ப்பெயர்கள். Show all posts

Wednesday, 4 October 2017

கூப்பரின் புறாவடி - Cooper's Hawk

Cooper's Hawk
கூப்பரின் புறாவடி
இப்பருந்தை கூப்பரின் புறாவடி என்றழைக்கலாம் என்பது என் எண்ணம். எப்படி மொசலடி, புறாவடி போன்ற பெயர்கள் பருந்துகளைக் குறிக்க நம் வட்டார மொழி வழக்கில் பயன்படுகின்றன என்று முன்பொரு முறை எழுதியிருந்தேன்.
(http://isainirai.blogspot.com/2017/03/2.html) அதன்படி இதனையும் புறாவடி என்று அழைக்கலாம். பறவையியலாளர் வில்லியம் கூப்பரை (William C Cooper) போற்றும் விதமாக இப்பருந்துக்கு கூப்பரின் பெயர் இடப்பட்டதால் இதனை முறையே கூப்பரின் புறாவடி எனலாம்.
ஏன் புறாவடி?
ஆடோபான் அவர் குறிப்பில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். "It passes along in a silent gliding manner, with a swiftness even superior to that of the Wild pigeon (Passenger Pigeon). In the Southern states it was known by the name Great Pigeon Hawk". அமெரிக்கக் காட்டுப்புறாவை விட சிறப்பாய் பறந்து அதனை எளிதாய் வேட்டையாடும் திறன் கொண்ட பறவை இது. அதனை வட அமெரிக்காவின் தென் பகுதிகளில் Great Pigeon Hawk என்றே அழைத்திருக்கிறார்கள். இது கிட்டத்தட்ட நம் புறாவடி போன்ற ஒரு பெயர் தான். இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு Passenger Pigeon என சொல்லப்படும் உருவத்தில் பெரியதாய் இருக்கும் காட்டுப்புறாகளை வேட்டையாடிய பருந்து இது. ஆனால் அப்புறாக்கள் அழிந்து போகவே இது தற்பொழுதும் பெரும்பாலும் புலம்பும் புறாக்களை இரையாய்க் கொள்கிறது.
முன்னர் காடுகளிலே காணப்பட்ட இப்பருந்து இன்று காட்டுகளின் ஓரங்களிலும், சில சமயம் மரங்கள் அடர்ந்த நகர்ப்புறங்களிலுமே காணப்படுகிறது. இதனைக் காட்டுவாழ் கொன்றுண்ணி என்று வகைப்படுத்துதலே தவறோ என்கிறார் Pete Dunne. அவரது முந்தைய நூல்களில் இதனைக் காட்டுவாழ் கொன்றுண்ணி என்று வகைப்படுத்திய அவரே அதை தவறு என்கிறார். இன்று தன் முக்கிய இரை, காடுகளில் வாழ்ந்த காட்டுப்புறாவிலிருந்து நகர்புறங்களில் வாழும் புலம்பும் புறாவுக்கு மாறவே, முன்னர் காடுகளில் இருந்த இப்பறவையும் இடம்பெயர்ந்திருக்கிறது என்கிறார். இரையின் பரம்பலே கொன்றுண்ணிகளின் பரம்பலையும் நிர்ணயிக்கின்றன.
எப்படியானாலும் இது அன்றும் இன்றும் புறாவடி தான். புறாவடி என்று அழைப்பதன் மூலம் பறவை ஆர்வலர்களுக்கு இதன் முக்கிய இரை பற்றியும், அதன் வேட்டை முறை பற்றியும் விளக்காமலேயே எளிதாய் புரியும். அமெரிக்க வாழ் பறவையார்வலர்களுக்கு இதன் இரை புலம்பும் புறா என்பதும், அதன் பரம்பல் என்ன என்பதும் கூட சொல்லாமலேயே தெரிந்துவிடும். அதனாலேயே இப்பெயர் பொருத்தமானது எனக் கருதுகிறேன்.
இப்படம் அமெரிக்கத் தலை நகரில், கட்டிடங்களுக்கு இடையே மரங்கள் நிறைந்த ஓரிடத்தில் எடுக்கப்பட்டது.
Cooper's Hawk
கூப்பரின் புறாவடி














Jan 21-2017
Smithsonian's National Zoo, DC.

Thursday, 28 September 2017

Bald Eagle- வெண்டலைக் கழுகு.

Bald Eagle- வெண்டலைக் கழுகு.
Haliaeetus leucocephalus

அமெரிக்கரிக்கர்கள் ஆங்கிலத்தில் இதைச் சொட்டைக்கழுகு என்று அழைக்கிறார்கள். வெந்நிறமாய் இருக்கும் அதன் தலை சொட்டை போன்று தோன்றுவதால் அதனை இப்படி அழைக்கிறார்கள். தமிழில் இதனை வெண்டலைக் கழுகு என்றே அழைக்கலாம் என நினைக்கிறேன்.

இதுவொரு மலங்கழுகு. அதாவது கழுகளிலியே மிகப்பெரிய வகைக் கழுகு. இது Fish Eagle வகையைச் சேர்ந்தவொரு கழுகு. இதன் முக்கிய உணவு மீன் என்றாலும் மற்றவற்றையும் உண்ணும்.

அமெரிக்கா வரும்போதே பார்த்தே ஆக வேண்டும் என்ற பட்டியலில் இருந்த பறவையிது. பார்ப்பதற்காக அடித்துப்பிடித்து மேரிலாந்திம் டெலாவர் தீபகற்பத்தில் இருக்கும் "BlackWater Wildlife Refuge" சென்றோம். அங்கு இதற்கும் விராலடிப்பானிற்கும் (Osprey) 'Raptor Cam' என்று சொல்லப்படும் இரையாடிப் பறவைகளின் கூடுகளை நேரடி ஒலிபரப்பு செய்யும் வசதியிருக்கிறது. அதனால் எப்படியும் வெண்டலையைப் பார்த்துவிடலாம் என்று நினைத்தோம். ஆனால் பார்க்க முடியவில்லை. அங்கு சந்தித்த ஓர் அமெரிக்கப் பறவை ஆர்வலர் தம்பதியினர் எங்களுக்கு வேறு எங்கு பார்க்க முடியும் என்று சொன்னார்கள்.

அடுத்த சில நாட்களிலேயே அடித்துப்பிடித்து அவர்கள் சொன்ன கானோவிங்கோ அணைக்கு (Conowingo Dam) சென்றால் அங்கே திரும்பிய இடமெல்லாம் வெண்டலைகள் தான். 17 கழுகுகளை அன்று பார்த்தோம். அங்கிருந்த இன்னொரு பறவையாளர் சொன்னார் " இது என்ன பிரமாதம், நவம்பர் மாதம் வாருங்கள். கனடாவில் இருந்து வலசை வரும் வெண்டலைகளும் இங்கே இருக்கும். நூற்றுக்கும் அதிகமானவை மீன் வேட்டை செய்வதைப் பார்க்கலாம்" என்றார். ஆம், உலகெங்கும் இருந்து எண்ணற்ற புகைப்படக்காரர்கள் அந்த அணைக்கு நவம்பரில் படையெடுத்து வருவார்களாம். நவம்பரில் சென்று பார்த்துவிட்டு மேலும் அதைப் பற்றி எழுதுகிறேன்.

அமெரிக்காவின் தேசியப்பறவை என்பதால் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒரு அமெரிக்கப் பறவை இது எனலாம். சாமானிய அமெரிக்கர்கள் இதனைத் தங்கள் சின்னமாகக் கொள்வதில் பெருமிதங்கொண்டாலும், பறவைகளில் ஆர்வம் மிகுந்த அமெரிக்கர்கள் இதனை சின்னம் என்று சொல்லும் போதே முகம்சுழிக்கத் தான் செய்கிறார்கள். காரணம் கேட்டால் "Moral values" அற்ற பறவையைப் போய் சின்னமாகக் கொள்வதா என்றும் வருத்தமும் தெரிவிப்பார்கள்.

ஆம், இதன் செயல்கள் நாம் நற்பழக்கம் என்று போதிப்பவைக்கு எதிரானவை. இவை இரையாடுவதை விட இரையைத் திருடுவதை அதிகம் விரும்புவ. விராலடிப்பான் மிகுந்த சிரமத்திற்குப் பின்பு பிடித்து வரும் மீங்களை இவை தங்கள் உடல்பலத்தை வைத்து வழிப்பறி செய்து விடும். சில சமயங்களில் அவற்றின் கூட்டில் இருந்து திருடுவது, கூட்டையே திருடுவது போன்ற செயல்களிலும் ஈடுபடும். ஆனால் அதன் குணம் அது என்று மனிதர்களின் கருத்தியல்களை அதன் மீது ஏற்றாமல் இரசித்துவிட்டுப் போக வேண்டும் நாம்.

இவை நீண்ட காலம் வாழ்பவை. 28 வருடம் வரை வாழ்ந்த கழுகுகளும் உண்டு. அதே போல இவற்றின் கூடுகளும் புகழ்பெற்றவை. புளோரிடாவில் இருக்கும் ஒரு வெண்டலைக் கூடு 10 அடி அகலமும், 20 அடி ஆளமும் இருக்கிறது. ஓகாயோவில் இருக்கும் ஒரு வெண்டலைக் கூடு 34 ஆண்டுகளுக்கு மேலாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. அந்தக்கூட்டின் எடை மட்டும் இரண்டு மெட்ரிக் டன், அதாவது 2000 கிலோ.

அமெரிக்க நண்பர்கள் பூங்காக்களுக்குச் செல்லும் போது அடிக்கடி மேலே பாருங்கள், வெண்டலை பறந்தால் எளிதாய் இனங்காண முடியும்.

Bald Eagle -Connowingo Dam, Maryland

Wednesday, 29 March 2017

மொசலடி (பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள்) - 2

இரண்டாடுகளுக்கு முன்பு நத்தமண்டலம் என்னும் பாம்பைப் பற்றி ஊருக்குள் பலரிடமும் கேட்டுக்கொண்டிருந்தேன். அப்பொழுது என் மாமாவுடன் மாமா சொன்னது இது தான். " முன்பெல்லாம் நத்தமண்டலம் அடிக்கடி வரும். இப்பெல்லாம் அதைக் காணோம். மொசலடி, வரிச்சாளினு வேட்டையாடிகளும் வர்ரது இல்லை. கோழி பத்துக்குஞ்சு பொறிக்கும். மொசலடி தூக்கிடும்னு கண்டா விரட்டுவோம். இப்ப மொசலடியும் காணோம், கோழியும் நாலு அஞ்சு குஞ்சு தான் பொறிக்குது. அன்னைக்கு மொசலடி கிட்ட தப்புன குஞ்சுகளை விட இன்னைக்கு பொறிக்கற குஞ்சுகளே குறைவு தான்" என்றார். அது என்ன மொசலடி என்று கேட்கத் தொடங்கிய போது எனது வாழ்வில் பறவைகள் நோக்கும் படலம் தொடங்கியது. அது வரை எனக்குத் தெரிந்த பறவைகளில் எனது மாமா சொன்னதைப் போன்று எந்தப்பறவையும் இல்லை. அதனால் மொசலடியைத் தேடத்தொடங்கினேன்.

அப்பாவிடம் கேட்டால் " தெரியும் பார்த்திருக்கேன் என்றார்", அம்மா "ஓ! அந்த வார்த்தை தெரியுமே" என்றார். சென்ற தலைமுறையில் யாரிடம் கேட்டாலும் மொசலடி தெரியவில்லை என்றாலும் அச்சொல் பரிச்சயமானது என்பதாகவே பதிலுரைத்தனர். எப்படி ஊருக்குள் மொசலடி என்னும் சொல்லையே அதுவரை கேட்காமல் போனேன் என்று வியப்பாய் இருந்தது. பறவைகள் பார்க்கத் தொடங்கிய பிறகு இது என்ன பறவை என்று எளிதாய் தெரிந்துவிட்டது. ஒருமுறை பறவை பார்த்துக்கொண்டிருந்த போது அப்பா என்னிடம் " அதோ பறக்குது பார். அது தான் மொசலடி" என்றார். Black Winged kite என்னும் வேட்டையாடியைத் தான் இப்பெயர் கொண்டு அழைக்கின்றனர். வேறு எந்த இடத்திலும் அப்பருந்துக்கு மொசலடி என்றோ அதற்கு ஒத்த பெயரோ குறிப்பிடப்படவில்லை. இணைய வெளியில் கேட்ட வரையிலும் யாருக்கும் அது என்ன பறவை என்று உறுதியாகத் தெரியவில்லை. அன்று என் அப்பா காட்டிய போது கூட சற்றே ஐயமாகத் தான் இருந்தது, அடிக்கடி பார்க்க முடிகிற பறவை, அப்படியும் எப்படி இந்தப் பெயர் கேள்விப்படாத ஒன்றாக இருந்தது என்று புரியவில்லை. பின்னர் நிறைய முறை ஊரில் பறவைகள் பார்க்கும் போது, சென்ற தலைமுறைக்காரர்கள் எல்லாம் என்னிடம் " அதோ! அங்க மொசலடி பறக்குது பார்" என்பர். பின்னர் தெளிவாகவே மொசலடி என்று அவர்களால் குறிக்கப்பெறுவது Black Winged Kite என்று தெரிந்தது.

Black Winged Kite/ மொசலடி

















பெயர்க்காரணம்:

இன்று தமிழுக்கு மொழிபெயர்க்கப்படும் பெரும்பாலான பறவைகளின் பெயர்கள் அதன் உருவமைப்பையும் நிறத்தையும் பொருத்தே இருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் வழக்கில் இருந்த பல பெயர்கள், இப்படி உருவ அமைப்பைத் தாண்டி அப்பறவையின் (விலங்கின்) பண்பையும் வலிமையையும் காட்டுவதாக அமைந்திருக்கிறது. இது ஒரே நாளில் மொழிபெயர்த்து வழங்கிய பெயராக இருக்க முடியாது, அப்பெயர் மக்கள் வழக்கில் நிலைத்திருக்கிறது என்பதே உண்மை.
மொசலடி - மொசல் + அடி. மொசல் என்றால் முயல். முயலடி என்பதே மொசலடி என்று திரிந்திருக்கிறது. இப்பறவை உருவத்தில் சிறியது. (35-38 செ.மீ, சராசரியான எடை 291கி). மற்ற வேட்டையாடிகளையும் விட மிகச்சிறியது. கிட்டத்தட்ட சொல்ல வேண்டுமானால் ஒரு முயலின் அளவு தான் இருக்கும், முயலை விடவும் எடை மிகக்குறைவாக இருக்கும். தன்னினும் அதிக எடை கொண்ட முயலை ஒரே அடியில் வேட்டையாடும் திறன் கொண்டது. அதனால் மக்கள் வழக்கில் மொசலடி எனப்பட்டது. அன்றைய மக்களின் அளவுகோல்கள் இவை தான் மழையை உழவால் அளந்தனர். பறவையின் வலிமையை அது இரையாடும் இரையைக் கொண்டு அளந்திருக்கின்றனர். இவ்வகையாக பெயரைக்கொண்டே அப்பறவையின் பண்பையும் உருவையும் வலியையும் இணங்காணுதல் அவர்கட்கு எளிதாய் இருந்திருக்கிறது.

இப்பெயர் பலருக்கும் கேள்விப்படாத பெயராக இருக்கலாம். ஆனால் இவ்வகையான பெயர்கள் வழக்கில் இருந்திருக்கின்றன. தஞ்சை வட்டார வழக்கில் சிறிய வேட்டையாடிகளுள் ஒன்றை "பொறாவடி/ பொறாடி" என்று குறிப்பிடுவதாக பறவை ஆர்வலரான நண்பர் பாண்டியன் ஒருமுறை கூறினார். புறா + அடி = புறாவடி என்பது திரிந்து பொறாவடி என்றாகியிருக்கிறது.

Osprey/ விராலடிப்பான்





































அதே போல Osprey எனப்படும் மீன் பிடிக்கும் பறவையை விராலடிப்பான் என்கிறார்கள். இந்த விராலடிப்பான் மீன் வேட்டையாடும் காணொளிகளைப் பார்த்தால் நமக்கு இப்பெயர் அதற்கு எவ்வளவு பொருந்துகிறது என்பது தெரியும். பறந்து கொண்டிருக்கும் போதே தன் இரையான மீனைக் கண்டதும் வேகமாக நீரில் பாய்ந்து இருகால்கள் கொண்டு மீனைப் பிடித்து தண்ணீரில் இருந்து மேலெழும்பிப் பறக்கும். இப்பறவை மற்ற மீன்களை வேட்டையாடினாலும் குறிப்பாக ஏன் விரால் மீனின் பெயரையொட்டி விராலடிப்பான் என்று பெயர் பெற்றது எனத் தெரியவில்லை. ஆனால் இரைகொண்டு பறவைகளுக்கு இதுபோன்ற பெயர் வைக்கும் வழக்கம் பரவலாக இருந்திருக்கிறது. இலக்கியங்கள் எதிலும் மொசலடி/Black Winged kite பற்றிய குறிப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Black Winged Kite/ மொசலடி

















படங்கள்:
1. பறவை ஆர்வலர் அரவிந்த் அமிர்தராஜ் அவர்கள் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Sollinganallur, Chennai)
2. கரீபியத் தீவுகளில் நான் எடுத்த விராலடிப்பானின் படம். (Osprey, CocoCay, The Bahamas)
3. எனது வீட்டுக்கு அருகில் இருக்கும் நல்லதங்காள் ஓடை நீர்தேக்கத்தின் அருகில் நான் எடுத்த மொசலடியின் படம். (Black Winged Kite, Nallathangal Check Dam, Dharapuram (Tiruppur Dt))

Tuesday, 28 March 2017

பறவைகள் விலங்குகள் தாவரங்களின் தமிழ்ப்பெயர்கள் - 1

இக்கட்டுரையில் குற்றம் குறையிருப்பின் குறிப்பிடுங்கள்.

நாம் இன்று மனித வரலாற்றின் ஒரு முக்கிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம் என்றே தோன்றுகிறது. எத்தகைய காலக்கட்டம் என்றால் நாம் பார்த்து வளர்ந்த பறவைகள், விலங்குகள், செடிகள் கூடவே மொழிகளும் அழியும் காலக்கட்டம். பத்தாண்டுகளுக்கு முன் நம்மில் பலரும் சிட்டுக்குருவி அருகிவிடும் என்று கூட நினைத்திருக்க மாட்டோம். ஆனால் இன்று பல இடங்களில் அது அற்றுப்போய்விட்டது. கிட்டத்தட்ட பல உயிரனங்கள் நமது பகுதிகளில் அற்றுப்போய் சில ஆண்டுகள் கழித்துத் தான் அவை அற்றுப்போய்விட்டன என்றே நமக்குத் தெரியும். பறவைகள் பற்றி, ஊர்வன பற்றி பேசும் போது பலரும் " ஆமா பா.. கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி எங்க வீட்டுக்கு அடிக்கடி கீறிப்பிள்ளையெல்லாம் வரும். இப்ப அத பார்த்தே ஏழெட்டு வருசம் ஆச்சு" என்பார்கள். நீங்களும் கூட சிந்திக்கலாம், கடைசியாக நீங்கள் உங்கள் வீட்டருகில் ஓணானை என்று பார்த்தீர்கள் என்று. நாளையும் அவற்றைப் பார்ப்போமா? தெரியவில்லை. ஆனாலும் நாம் சில பறவைகளையும் விலங்குகளையும் அதிகமாகப் பார்க்கத்தொடங்கிவிட்டோம். புறாக்கள்.. எலிகள்... தெரு நாய்கள்... இது உயிர்கள் அழியும் காலக்கட்டம் என்பதை விட "பல்லுயிர்த் தன்மை" அழியும் காலக்கட்டம் என்பதே சரி. நிற்க..

நாம் இன்று நமது மொழியின் முக்கியமானதொரு காலக்கட்டத்தில் இருக்கின்றோம் என்றே எனக்குத் தோன்றுகிறது. எத்தகைய காலக்கட்டம் என்றால் நாம் கேட்டுப் பழகிய சொற்கள் பலவும் அழியும் காலக்கட்டம். சில ஆண்டுகளுக்கு முன் உங்கள் வீட்டில் குளியலறையை நீங்கள் வேறேதேனும் சொல் கூறி வழங்கியிருக்கலாம், காட்டாக, நாங்கள் "பொடக்காலி" என்றோம். உண்மையில் இது தமிழில் தமிழ் இலக்கண மரபையொட்டித் தோன்றிய ஒரு சொல். எவ்வளவு நாட்களாக வழக்கில் இருந்தது என்று தெரியாது. ஆனால் இன்று இல்லை. அது எப்படி வழக்கொழிந்து போனது என்றும் தெரியாது. ஆனால் அது நாகரிகம் கருதி "Bathroom" ஆகி, பின்னர் மொழிப்பற்று கருதி "குளியலறை" ஆகிவிட்டது. இப்படியே போனால் ஆயிரம் நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்த சொற்கள் சுவடில்லாமல் அழிந்து போய்விடுமே.

பேராசிரியர் செ.இரா. செல்வக்குமார் ஐயா ஒருமுறை எழுதியதாவது "பாலூட்டி விலங்குகள் 5,416 உள்ளன. உலகில் ஏறத்தாழ 7000 மொழிகள் உள்ளன... அப்படி அவை இரண்டையும் சுட்டிக்காட்ட ஏதும் உட்பொருள் உள்ளதா எனக் கேட்டால். In the next century or so only about some 100-200 languages would survive, it is said. Even among mammals the numbers can be decimated. I just wanted to point out that these (languages and mammals) are only in just a few thousands and they may dwindle down to a few hundreds (both mammals and human languages). Speakers of each language is a community, just like each mammal with its members. When a language dies, it is like a mammal species had become extinct. Rats may be 7 billion but if all the animals on the planet are only just rats, imagine how it would be. If the only flower on planet earth is rose imagine how it would be. Language diversity, animal and plant diversities are all vital. " அவர் அழிந்து வரும் பாலூட்டிகளையும் மொழிகளையும் ஒப்புமை படுத்தியிருந்தார். இதே போன்றதொரு ஒப்புமையை நான் நமது மொழிச் சொற்களுக்கும் நம் மொழி வழங்கி வரும் பகுதிகளுள் வாழும், வாழ்ந்த உயிர்களுக்கும் ஏற்றிக்கூற நினைக்கிறேன்.

நமது மொழியில், நமது மொழி வழக்கில் இருக்கும் பகுதிகளில் வாழும் உயிரனங்களுக்கெல்லாம் பெயரிருக்கும். பெயரென்றால் சும்மா நாம் இட்டுவிடுவதான பெயர்கள் அல்ல. அவை பல நூற்றாண்டுகள் கழிந்த போதும் மக்கள் வழக்கில் வேரூன்றியவை. சங்க இலக்கியங்களில் வரும் பல விலங்குகளின் பெயர்கள் இன்றும் அவ்வாறே வழக்கில் இருக்கின்றன. இது பல பில்லியன் ஆண்டுகளாக இருக்கும் உயிர்களின் தொடர்ச்சியைப் போன்றதொரு தொடர்ச்சி. "இவ்வளவு நாட்கள் வழக்கில் இருந்த சொற்கள் இப்பொழுது மட்டும் எப்படி வழக்கொழியும்? மக்கள் வழக்கில் நில்லாமல் போகும் சொற்களைப் பற்றி ஏன் கவலைப்பட வேண்டும்?" என்று கேட்கலாம். பல பில்லியன் ஆண்டுகள் கோலோச்சிக்கொண்டிருந்த உயிரினங்கள் இன்று மனிதனின் வளர்ச்சி மோகத்தால் அழிந்து வருகின்றன. அதற்குக் காரணம் அவை வாழத் தகுதியற்றவை - தக்கது தானே பிழைக்கும் - என்ற காரணம் அல்ல. மனிதனின் மடத்தனம். அதே போலத் தான் இச்சொற்களும், தமிழர்களின் பிறமொழி மோகத்தாலும், வளர்ச்சி, மொழி மேன்மை பெருகிறது என்ற காரணங்களாலும்அழிந்து வருகின்றன. எப்படி இன்று விட்டால் பல்லுயிர்களை நாளை நாமே நினைத்தாலும் மீட்டெடுக்க முடியாதோ அதே போல இன்று விட்டால் இச்சொற்களைப் பேசுவோர் இல்லாமல் அது அருகி அழிந்துவிடும், மீட்க இயலாது.

இப்படி தமிழ்மொழிச்சொற்களையும் உயிரனங்களையும் ஒப்புமை படுத்த முக்கியக் காரணம், உயிரனங்களுக்கான தமிழ்ப்பெயர் தான். மற்ற சொற்களைக் காட்டிலும் இச்சொற்கள் விரைவாக அழியக் காரணம் அவ்வுயிரினங்களும் அழிவதே. முன்னர் எல்லாம் உயிர்வேலிகள் இருக்கும். அவற்றில் பல செடிகொடிகள் இருந்தன. இன்று உயிர்வேலிகளே அற்றுப்போகும் நிலையில் அவ்வேலியில் இருந்த செடிகளின் பெயர்கள் மட்டும் எப்படி நம் வழக்கில் நிலைத்திருக்க முடியும். மீறிப்போனால் பிரண்டை, மொடக்கத்தான் என்று இரண்டு மூன்று செடிகளின் பெயர்களை நம்மால் சொல்லவியலும். மீதமிருந்தவை? அவற்றின் பெயர்கள்? அதில் சில செடிகளைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் கிடைக்கின்றன. இரண்டாயிரம் ஆண்டு மொழித்தொடர்ச்சி, பல பில்லியன் ஆண்டுகள் உயிர்த்தொடர்ச்சி, இன்று எல்லாமும் நம் கண் முன்னே அழிந்து கொண்டிருக்கின்றன.

வேதனை என்னவென்றால், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இலக்கண நூலில் தான் வாழும் நிலம் பற்றியும் எந்த எந்த நிலங்களில் எந்த எந்த பறவைகள் வாழும் என்றும் எழுதி வைக்கப்பட்ட ஒரு மொழியில், நூற்றுக்கும் மேற்பட்ட பூக்களின் பெயர்களைத் தொகுத்து வைக்கப்பட்ட ஒரு மொழியில், அகவாழ்க்கை புறவாழ்க்கை என்று எல்லாவற்றையும் குறிக்கும் போது சுற்றி வாழும் காட்டுயிர்களைப் பற்றியும் சேர்த்து எழுதி வைத்தவர்களின் மொழியில் இன்று அச்சொற்கள் அழிவது தான்.  நான் கேட்டறிந்த சில சொற்களையேனும் பதிந்து வைக்க வேண்டும், பின்வரும் சங்கதிகள் படித்துத் தெரிந்துகொள்ளட்டும் என்று தான் சிலவற்றை சேகரித்து எழுதுகிறேன். உங்களுக்குத் தெரிந்தவற்றையும் பதிவிடுங்கள்..

(எனக்குத் தெரிந்த பறவைகள் விலங்குகளின் தமிழ்ப்பெயர்கள் பற்றி இவ்விழையில் தொடர்ந்து எழுதுகிறேன். ).

Saturday, 2 January 2016

கிட்டி - கொங்கு வட்டாரச்சொற்கள்

கிட்டி.
ஆடு கழுத்தில் கட்டப்பட்டிருக்கும் குச்சியின் பெயர் கிட்டி என்பதாகும்.
குறும்பு செய்யும் ஆடுகள் பட்டியைத்தாண்டுவதைத் தடுப்பதற்கு கட்டப்படுவது தான் இந்தக்கிட்டி. வேலியிலுள்ள சிறிய குறுகிய வழியில் ஆட்டால் வெளியில் வரமுடியாமல் இக்கிட்டியானது தடுத்துவிடும்.
இயந்திரங்களில் உலக்கையை உருளையில் இருந்து வெளிவராமல் தடுக்கும் உறுப்புகளுக்கு இப்பெயர் வைக்கலாம் அல்லவா?















இச்சொல்லின் மூலம் தெரியவில்லை. ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கும் குச்சிகளுக்கு கிட்டியெனப்பெயர் இருக்கலாம். கிடுகிட்டி என்றொரு இசைக்கருவியிருக்கிறது, அதில் இரு இசைக்கருவிகளை ஒன்றாக இணைத்து கட்டியிருப்பர். படம் கீழே:
(படம்: இணையம்)
எலி பிடிக்கும் பொறி ஒன்றினுக்கும் கிட்டி எனப்பெயருண்டு. அப்பொறியிலும் இரண்டு குச்சிகள் இணைத்துக்கட்டப்பட்டிருக்கும். அதைப்பற்றி தி இந்துவில் வெளியான செய்தியையும் படத்தையும் கிழே காண்க.
இணைப்பு

Monday, 19 October 2015

சிலப்பதிகாரமும் குழந்தைகள் பெயர்களும்

சிலப்பதிகார நூலில் வரும் சொற்களையும் சொற்றொடர்களையும் வைத்து அமைக்கக்கூடிய பெயர்களை இங்கு தொகுத்துள்ளேன். விரும்பினால் தங்கள் குழந்தைக்கு இதில் ஏதேனுமொன்றை பெயராக சூட்டலாம். 

கண்ணகி
மாதவி
கோவலன்
திங்கள் செங்கதிர் திகழொளி பொழில் நன்மொழி வடிவேல் பஃறுளி தென்னவன் முதல்வன் பெருவளன் தென்னன் மாமறை காவிரி கண்மணி கொற்றவன் வெங்கதிர் வேந்தன் முல்லை குறிஞ்சி கோமான் பூங்கொடி அண்ணல் பொய்கை வெண்ணிலா பணிமொழி பாவை வேங்கை பூம்பொழில் மேரு இமயம் புகழுடை வடிவு மதி செவ்வேள் நித்திலம் கோதை அருந்ததி செம்பியன் கயமலர் மயன் ஆம்பல் தாமரை தாழை சண்பகம் தென்றல் வேனில் கதிர் மல்லிகை கோமான் சுடர் மஞ்ஞை அன்னம் பசுங்கிளி யாழ் குழல் அமிழ்து அகில் முத்து மணி அருள் கவி சித்திரன் எழினி பூங்கோதை பசும்பொன் விரிகதிர் அணிநிலா வெண்பிறை மேகலை சந்தனம் செழுமலர் பைந்தளிர் சந்தரம் திலகம் பால்நிழல் பூவிலை வெந்திறல் வெற்றி வெற்றிவேந்தன் திருமாவளவன் அவந்தி மரகதம் அரசு பண்யாழ் நன்மொழி திருமகள் செழும்பதி செழும்பரிதி பாரதி உமை இமயவன் செம்பொன் காந்தள் கரிகால்வளவன் மரகதமணி மணிக்காந்தள் வளன் வெண்மதி நிறைமதி நறுமலர் திருமொழி முழுமதி சோலைமயில் இளநகை வெய்யோன் பூங்கானல் நித்திலம் கதிரவன் புதுமதி நிறைநிலா செவ்வழி விளரி யாழ் யாழிசை வஞ்சி இளவேனில் மாரன் குயிலோன் மதுரம் கீதம் செங்கோல் வசந்தம் ஆயிழை செந்தாமரை வளவேல் மென்பூ மாலதி இளங்கொடி தேவந்தி மணிவண்ணன் பன்மலர் இலவந்திகை எயில் செம்மல் பொய்கை கடல்வளன் செங்கயல் ஒளியோன் இசைமொழி மேகலை நீலி வேங்கை அகமலர் பகலொளி பாற்கதிர் பைந்தளிர் பானிலா பார்மகள் கௌசிகன் தீதிலன் செழியன் பொற்கொடி மேலினி வெண்மழை செம்பொன் தகைமலர் நகுல் மாதரி செங்கயல் மெய்மொழி குழலி ஞாயில் கவின் அசோதை நம்பி கருண்மொழி பூங்கோதை வேம்பன் இந்திரன் இளங்கோ நாவலன் பாரரசு மாயவன் ஆயவன் வாழ்வேந்தன் பொன்னன் கோச்சேரன் வளவஞ்சி வாசுகி வானவன் பொழிகதிர் மறவேல் செம்பொற்கொடி கோப்பெருந்தேவி பொன்னி செழியன் கோமகள் மாமகள் நாமகள் வார்த்திகன் கார்த்திகை சங்கமன் பரதன் நெடுஞ்செழியன் எழில் சரவணம் வேலன் வெற்பன் மலைமகள் இமயவரம்பன் வினைஞர் சஞ்சயன் பாலகுமரன் கனகன் விசயன் உத்தரன் செங்குட்டுவன் சீவகர் இளவரசு நெடுமதி மீமிசை தண்மதி மகரக்கொடி உமையவள் உமையொருபாகன் அகப்பா பேரிசை ஆயிழை மேலும் தமிழ்ப்படுத்தப்பட்ட பெயர்களை பின்வரும் செய்யுள் வரிகளில் காணலாம். விசித்திரன் உருத்திரன் பைரவன் சித்திரன் சிங்கன் றுனுத்தரன் சிவேதன் அறிவன் அறவோன் அறிவுவரம்பு இகந்தோன் செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன்
தரும முதல்வன் தலைவன் தருமன் பொருளன் புனிதன் புராணன் புலவன் சினவரன் தேவன் சிவகதி நாயகன் பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன் தத்துவன் சாதுவன் சாரணன் காரணன் சித்தன் பெரியவன் செம்மல் திகழ்ஒளி இறைவன் குரவன் இயல்குணன் எம்கோன் குறைவில் புகழோன் குணப்பெருங் கோமான் சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் அங்கம் பயந்தோன் அருகன் அருள்முனி பண்ணவன் எண்குணன் பாத்தில் பழம்பொருள் விண்ணவன் வேத முதல்வன்....

Sunday, 24 August 2014

குழந்தைகளுக்கான தமிழ்ப்பெயர்கள் - 1

உறவினர்களின் குழந்தைகளுக்குப்பெயர் தேடிய போது எழுதிவைத்த பெயர்கள். ( புலவர்கள், மன்னர்கள் பெயர்களும், பூக்கள் பெயரும், உவமைத்தொடர்களும் இன்னும் பிறவும் இதில் அடங்கும். )

1. அமிழ்து
2. அமிழ்தினி
3. அமிழ்தன்
4. அதியன் (புலவர் பெயர்)
5. அனிச்சம் (பூப்பெயர்)
6. அஞ்சான்
7. அமுதக்கனல்
8. அலையொலி
9. அமுதமொழி
10. அம்மூவன் (புலவர் பெயர்)


















தொடர்ந்து எழுதுகிறேன்....


படத்திலுள்ள குழந்தை - நண்பர் கவின் அவர்களின் குழந்தை. 

Sunday, 20 July 2014

உங்கள் குழந்தைக்குத் தமிழ்ப்பெயர்தான் சூட்டுகிறீர்களா?

சமீபத்தில் என் உறவினர் ஒருவர் தன் மகனுக்குச் சூட்ட ஒரு நல்லதமிழ்ப் பெயர் கேட்டிருந்தார். ஆனால் அவர் போட்ட "CONDITION"ல் ஒன்று பெயர் "அன்" என்று முடியக்கூடாது. அதற்கு அவர் கூறிய காரணம் "அன்ல முடிஞ்ச மரியாதய இருக்காது". எனக்குப் புரியவேயில்லை. ஆண்பாற்பெயர்கள் அன் விகுதிகொண்டுமுடிவதும், பெண்பாற்பெயர்கள் ஆள் விகுதிகொண்டு முடிவதும் இயல்புதானே. இதில் என்ன மரியாதைக்குறைவு இருக்கிறது? ஒருமுறை என் தோழி கட்டுரைப்போட்டி ஒன்றில் தீரன் சின்னமலைக்குப் பதிலாகத் தீரர் சின்னமலை என்று எழுதியிருந்தாள். தீரன் என்றால் மரியாதையாக இராது என்ற எண்ணத்தில் எழுதியிருந்தாள். தமிழாசிரியை அவளிடம் "அது ஆவரின் அடைமொழி, அன் விகுதிகொண்டு ஆண்பாற்பெயர்கள் முடிவதில்லை தவறில்லையென்று கூறினார். இந்த நிகழ்வு தான் என் நினைவிற்கு வந்தது. இது தெரியாமலேயே தமிழ்மக்கள் தமிழ்ப்பெயர்கள் தேடுகிறார்களா? மற்றொரு உறவினர் தன் மகளுக்குத் தமிழ்ப்பெயர் வேண்டுமென்று கேட்டார். தேடி ஒரு பட்டியல் போட்டுக்கொடுத்தால் வடமொழிப்பெயர் என்று பெயர்வைத்திருந்தார். கேட்டால் அது தமிழ்ப்பெயர்தானே என்றார். என்ன பதில் சொல்வது? இன்னும் சிலர் தமிழ்ப்பெயர்களை "க்,த்,ப்" போன்ற பெய்யெழுத்துகள் கொண்டுமுடிக்கின்றனர். இவ்வெழுத்துக்கள் மொழிக்குக் கடையாக வாராவென்று படித்த நினைவு. பிறகு அழைக்கும் போது அந்தப்பெயரின் ஒரு உகரத்தைச் சேர்த்து அழைப்பார்கள். காரணம் விளிச்சொல்லை அந்த எழுத்துக்களைக் கொண்டு முடிப்பது கடினம். இன்னும் ஒருவர் வஞ்சியம்மனை வழிபடுவதால் தன் குழந்தைக்கு "வஞ்சித்" எனப் பெயரிட்டிருந்தார். உண்மையிலேயே இவர்களுக்கு இதன் பொருள் தெரியவில்லையா இல்லை இதுதான் trend என நினைத்துவைக்கிறார்களாத் தெரியவில்லை. இணையத்தில் தேடினால் அதைவிடக்கொடுமை. வடமொழிப்பெயர்களையெல்லாம் தமிழ்ப்பெயர்ப் பட்டியலில் காட்டுகிறது. கிரந்தயெழுத்துக்கள் சேர்த்தபெயரையும் அவர்கள் தமிழில் சேர்த்ததுதான் வேதனையாகயிருக்கிறது. உங்கள் குழந்தை உங்கள் விருப்பம்போல் பெயர்வைத்துக்கொள்ளுங்கள், ஆனால் வைத்தபெயரையெல்லாம் தமிழ்ப்பெயரென்று சொல்லாதீர்கள்.