Showing posts with label குறுந்தொகை. Show all posts
Showing posts with label குறுந்தொகை. Show all posts

Thursday, 7 December 2017

சங்க இலக்கியக் காதல் - புதரும் குருகும் காதலர்களும்

தலைவனும் தலைவியும் காதலிக்கிறார்கள். தலைவன் திரும்பத் தலைவியைப் பார்க்க வரவில்லை. புலம்பத் தொடங்குகிறாள் தலைவி. "ஐயோ. சாட்சிக்கு கூட யாரும் இல்லையே. அன்னைக்கு ஒரு குருகு பார்த்துச்சே. அதுக்கு தெரியும் நாங்க காதலிச்சது" என்பாள். ஆமாங்க பள்ளியில் படித்த கபிலரின் பாடல் தான்.
குறுந்தொகை 25:
யாரு மில்லைத் தானே கள்வன்தானது பொய்ப்பின் யானெவன் செய்கோதினைத்தா ளன்ன சிறுபசுங் காலஒழுகுநீ ராரல் பார்க்கும்குருகு முண்டுதான் மணந்த ஞான்றே.
குறிஞ்சி - தலைவி கூற்று
கூற்று: வரைவு நீட்டித்தவிடத்துத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது.
பாடியவர்: கபிலர்
விளக்கம்:
அன்று வேறு யாருமே இல்லை. அவன் மட்டும் தான் இருந்தான்,  கள்வனும் அவன் தான் ( குற்றம் சாட்டப்பட்டவன்). அவன் பொய் சொல்லிவிட்டால் நான் என்ன செய்வேன். நாங்கள் மணந்த அன்று ஒரு குருகு மட்டுமே இருந்தது.
"அதுக்கு இப்ப என்ன? அதான் பள்ளிக்கூடத்தில் படிச்சது தானே" என்கிறீர்களா?
ஆம். இந்தப் பாடலைப் படிக்கும் போது பள்ளியில் என் மனக்கண் முன் விரிந்த காட்சி இப்படி இருக்கும் : பிரபலப் பத்திரிக்கைகளில் வரும் அந்தக் காலத் தலைவிகளைப் போல இந்தத் தலைவியும் ஓர் தடாகத்தின் அருகில் அமைந்த மரத்தின் நிழலில் அமர்ந்திருப்பாள். நீரின் அருகே ஓர் குருகோ கொக்கோ நாரையோ நிற்கும், நீரில் இரண்டு தாமரை இருக்கும். மற்றபடி அது வால்பேப்பர் படம் போல பளிச்சென்று இருக்கும்.
ஆனால் இன்று அந்தப் பாடலைப் படிக்கும் போது கண்முன் விரியும் காட்சி வேறு.

ஏன் குருகுகள்? கிளியோ மயிலோ குயிலோ சாட்சிக்கு வராதா? இல்லை அவர்கள் சந்தித்த இடங்களில் அப்பறவைகள் இல்லையா?
பொதுவாக இந்தக் குருகுகள் புதர்களுக்கு இடையே இருக்கும், காண்பதற்கு அரிதான இடத்தில் மறைந்து இருக்கும். நிற்க. இப்பொழுது பாட்டை நோக்குங்கள். அன்றைய தலைவனும் தலைவியும் இப்படி யாரும் இல்லா புதர்கள் நிறைந்த பகுதிகளில் (புதர்களிலும்) தான் சந்தித்திருக்கிறார்கள்.
இன்னொன்று குருகுகள் எப்படி மறைந்து மறைந்து பயந்து பயந்து வாழ்கிறதோ தலைவனும் தலைவியும் அப்படித் தான் மறைந்து பயந்து காதலித்திருக்கிறார்கள். அதனால் தான் அவளுக்கு குருகின் நினைவு வருகிறது.

பசுவிற்கே நீதி வழங்கிய சோழன் கதை இருக்கிறதே, சரி இழுத்து பிடித்து அந்தக் குருகை சாட்சி சொல்ல அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்தால் அங்கு தான் சிக்கல். குருகுகளால் தொண்டை வளையில் இருந்து எந்த ஒலியும் எழுப்ப முடியாது, சாட்சியும் சொல்லாது. அது மௌனமாக அவர்கள் காதலித்தைப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்பொழுது தெரிகிறது அந்தத் தலைவியின் நிலை என்னவென்று.

4 மணி நேரக் கதையை நாலே வரியில் நச்சென்று சொல்லிவிட்டுப் போகிறார் புலவர்.
திடீரென்று ஏனோ வெள்ளோடு பறவைகள் சரணாலயத்தில் பார்த்த காதல் புறாக்களின் நினைவு வருகிறது. 2000 வருடங்களாக எத்தனை காதலர்களை வெள்ளோட்டுக் குளம் பார்த்திருக்கும்.
#சங்கஇலக்கியக்காதல்
#அன்றும்இன்றும்

Monday, 13 February 2017

இம்மையிலும் மறுமையிலும் நீயே!

காலங்கள் எவ்வளவு சென்றாலும், தலைவனிடம் (காதலன்/கணவன்) தலைவி மாறாமல் சொல்லும் வசனம் இது "எத்தனை பிறவி எடுத்தாலும் நீயும் நானும் சேர்ந்தே இருக்கனும்". அது ஏன் தான் இதைச்சொல்வதில் தலைவிகளுக்கு அவ்வளவு பேரின்பமோ தெரியவில்லை. இதோ விருமாண்டி படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்.

"உன் கூட நான் கூடி இருந்திட
எனக்கு ஜென்மம் ஒன்னு போதுமா
நூறு சென்மம் வேணும் அத கேட்குறேன் சாமிய

என்ன கேட்குற சாமிய?
நூறு சென்மம் உன் கூட போதுமா?
நூறு சென்மம் நமக்கு போதுமா
வேற வரம் ஏதும் கேட்போமா
சாகா வரம் கேட்போம் அந்த சாமிய அந்த சாமிய"

இதுவாவது பரவாயில்லை, சாகா வரம் கேட்டு தன்னுடன் இருக்க விரும்பும் தலைவனோடு நூறு சென்மம் வேண்டும் என்கிறாள். சங்ககாலத்தில் தலைவிகள் அதற்கும் ஒருபடி மேலே சென்றிருக்கிறார்கள்.

தலைவனை தலைவி விளிக்கிறாள். எப்படி? " அணிலின் பல்லைப் போன்ற முட்களைக் கொண்ட கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையுடைய தலைவனே!"

"கண்ணா! கணவா!" என்று அழைக்காமல் இப்படியாக தலைவி சுற்றி வளைத்து என்ன சொல்ல வருகிறாள்?
என்ன தான் கூரிய முட்களை கொண்டிருந்தாலும் அழகிய பூக்களையும் உடையது இந்தக் கழிமுள்ளிச்செடி. அது போலவே, என்ன தான் வெளித் தோற்றத்தில் காதல் இல்லாதவராகத் தோன்றினாலும் உள்ளத்திலே அவள் மீது பேரன்பு கொண்டவன் அவளது தலைவன் என்று சொல்ல விளைந்து சுற்றி வளைக்கிறாள் தலைவி.

தலைவனிடம் அவள் கேட்பது ஒன்று தான் " இந்தப் பிறவி முடிந்து மறுபிறவியே எடுத்தாலும், நீ தான் என் கணவன், உன் உள்ளத்தில் வாழ்பவள் நானாக மட்டும் தான் இருப்பேன்". சுருக்கமாக "எத்தனை பிறவி எடுத்தாலும், உனக்கு நான், எனக்கு நீ". இங்கு அலைப்பாயுதே படப்பாடல் ஒன்று நினைவிற்கு வருகிறது.

"உன் உள்ளம் நான் காண என் ஆயுள் போதாது
என் அன்பை நான் சொல்ல உன் காலம் போதாது
கொண்டாலும் கொன்றாலும் என் சொந்தம் நீதானே
நின்றாலும் சென்றாலும் உன் சொந்தம் நான் தானே"

இதோ தலைவி இப்படியாக உருகும் குறுந்தொகைப்பாடல் இது தான்.


குறுந்தொகை  49,  அம்மூவனார், நெய்தற் திணை – தலைவி சொன்னது

அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து
மணிக்கேழ் அன்ன மாநீர்ச் சேர்ப்ப!
இம்மை மாறி மறுமை ஆயினும்,
நீ ஆகியர் என் கணவனை,
யான் ஆகியர் நின் நெஞ்சு நேர்பவளே.

பதவுரை:
அணில் பல் அன்ன - அணிலின் பல்லினைப் போன்ற
கொங்கு- தேன்
முண்டகம் - கழிமுள்ளிச்செடி.
கேழ்- கோடு
மாநீர் - கடல்
இம்மை மறுமை - இப்பிறப்பும் அடுத்த பிறப்பும்.

விளக்கம்:
அணிலின் பற்களைப் போன்ற முட்களை உடைய கழிமுள்ளிச்செடிகளைக் கொண்ட கடற்கரையையும், மணிகள் எழுப்பும் நீலவண்ணக்கோடுகளை ஒத்த நீலவண்ணக்கடலையும் கொண்ட நாட்டுத் தலைவனே! இப்பிறவி முடிந்து அடுத்த பிறவி எடுத்தாலும் நீ தான் என் கணவன், நான் தான் உன் நெஞ்சில் வாழ்பவள். (இங்கு கடலும் கடல் சார்ந்த நிலமும் குறிப்பிடப்பட்டுள்ளதால் இது நெய்தல் நிலமெனக் கொள்க)

ஆனால் இதில் நோக்க வேண்டியது என்ன தெரியுமா? இத்தகைய தலைவியை விடுத்து பரத்தியர் வீடு சென்று திரும்புகிறான் தலைவன், அதையும் தாண்டி அவனைக் காதலிக்கிறாள் தலைவி. (இந்த கெட்ட பசங்கள காதலிக்கிற பொண்ணுங்க அப்பவே இருந்துருக்காங்க போல). யார் கண்டது வீடு திரும்பிய கணவன் மேல் கோபத்தில் இருந்த தலைவி " பார்த்து நடந்துக்கோ, நான் மட்டும் தான் உன் நெஞ்சுல குடியிருக்கனும்" என்று கோபமாக சொன்னாளோ என்னவோ தெரியவில்லை...