"எங்கபா.. நேத்து மழை பெஞ்சுது.. ஓரொழவு மழையாச்சும் பெய்யும்னு பார்த்தா.. வந்த மழை வாசலைக் கூட நனைக்கலையே பா.."
இப்படி பேசி நீங்கள் கேட்டதுண்டா?
அது என்ன ஓரொழவு மழை?
சிலர் அதற்கு கொடுக்கும் விளக்கம் இப்படியாக அமையும்..
" மழைத்தண்ணி நேரே வேறு எந்த பொருள் மீதும் விழாமல், ஓர் பெரிய செக்கையோ உரலையோ நிறைக்குமானால் அது தான் ஓர் அளவு மழை"
நான் பல நாள் இப்படித் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். யாரோ ஒருவர் ஊரில் இருந்த செக்கைக் காட்டி இக்கதையை என்னிடம் சொன்னதாக நினைவு.. பிறகு ஒரு நாள் என் அம்மா என்னிடம் திருத்தமாக அது தவறு என்று சொன்னார்.
" அது ஓர் அளவு மழையில்லை. ஓர் உழவு மழை. மழை பெய்து முடித்த பிறகு, நிலத்தை உழும் போது ஏர்க்கால் இறங்கும் அளவு பூமி நனைந்திருந்தால் அது ஓர் உழவு மழை".
இப்படித் தான் மழையின் அளவைக் குறித்திருக்கிறார்கள். அது பின்னால் ஓரொழவு என்று ஓரளவு என்று திரிந்திருக்கிறது..
இதில் நோக்க வேண்டியது என்னவென்றால் இன்று ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு ஒன்றை மொழிபெயர்க்கும் பலரும் "ஒரு" என்ற சொல்லை "ஓர்" என்ற சொல்லுக்குப் பதிலாகப் பயன்படுத்துவது எப்படி நம் மரபு மொழிக்கு சற்றும் ஒத்துப்போகாமல் அன்னியமாய் இருக்கிறது என்று.
பிற்சேர்க்கை:
வாசல் நனைக்கும் மழை, வாசத்தண்ணி வெளிய போகும் அளவு மழை, உழவு மழை, காட்டுத் தண்ணி வெளிய போகும் அளவு மழை - என்ற வழக்காடல்களும் உண்டு.
மழையை ஒட்டிய வழக்காடல்கள் பற்றி இந்து நாளிதழில் ஓர் தொடர் வந்தது.